விடுதலைப் போரில் பெணகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலைப் போரில் பெணகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 பிப்ரவரி, 2015

தமிழகத்தில் எழுந்த வீராங்கனைகள்

விடுதலைப்போரில் பெண்கள் - 19

                                                  
                                                                                                    -
               1919 ஆண்டு ''இந்திய அரசுச் சட்டம் -1919'' பிரிடிஷ் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இது  இந்தியாவில் சில அரசியல் மாற்றங்களை கொண்டு வந்தது. இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு சில வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யவும் இச்சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் அவர்கள் அதில் திருப்தி அடையவில்லை என்பது வேறுவிஷயம். பிரிடிஷ் அரசின் இந்தியத் துறைச்செயலர் எட்வின் மோண்டெகு மற்றும் இந்திய வைசுராய் கெம்ஸ்ஃபோர்ட் பிரபு ஆகியோரின் பரிந்துரைகளான மோண்டெகு - கெம்சுஃபோர்ட் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த இச்சட்டம் இயற்றப்பட்டது.
               
     இச்சட்டம், இந்தியாவில் மத்திய அளவிலும் மாகாண அளவிலும் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரித்தானிய ஆளுனர் அல்லது வைசுராயின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. அதுவரை ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக் கூடிய சட்ட மன்றம் விரிவு படுத்த்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது. ஆனால் எல்லாம் ஒரு கட்டுக்குள்தான்.

  நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் விரிவுபடுத்தப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்களுள் ஒரு பகுதியினரை நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய மேலவையாக மாநிலங்களவை உருவாக்கபப்ட்டது. மன்னர் அரசுகளுக்கு (சமஸ்தானங்கள்) மாநிலங்களவையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. 1919-29 வரை பத்து ஆண்டுகளுக்கு இந்த புதிய ஆட்சிமுறை நடைமுறையிலிருக்குமென்றும் அதன்பின்னர் அதன் செயல்பாட்டை ஆராய ஒரு குழு அமைக்கபபடு மென்றும் தீர்மானிக்கபப்ட்டது. அதாவது தங்களுக்கு ஒத்துவந்தால் சரி இல்லையேல் வேறு ஒரு சட்டம் அறிமுகமாகும் என்துதான் இதற்கு அர்த்தம். இப்புதிய ஆட்சிமுறையின் கீழ் 1920 ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

               இச்சட்டம் தமிழகத்தில் நீதிக்கட்சி போன்ற கட்சிகளால் வரவேற்கப்பட்டது. ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை; தேர்தல்களிலும் பங்கு கொள்ள மறுத்துவிட்டது. இதனால் இந்த தேர்தலில் தமிழகத்தில் நீதிக்கட்சி ஆட்சியை அமைத்தது. இந்த பின்னணியில்தான் விடுதலைப் போரட்டம் தொடர்ந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல தேசபக்தர்கள் கடுமையான அடக்குமுறைகளை தொடர்ந்து சந்தித்து வந்தனர். குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் பெருமளவில் போராட்டக் களத்தி இறங்கிய காலமாய் அது இருந்தது.  

   அடிப்படைவாத கருத்துக்கள் மேலோங்கிய சமூக கட்டுப்பாட்டின் எல்லைகள் ஒரு வரம்புக்குள் பெண்களை அடைத்து மூடியது. ஆனால் வீடுகளில் அடைப்பட்டுக் கிடந்த தமிழக பெண்களை விடுதலைப் போரும், அன்றைய அரசியலும் வீதிக்கு அழைத்து வந்தது. அன்னிபெசன்ட் அம்மையார் காங்கிரஸின் ஆதரவோடு சென்னையில் துவக்கிய ஹோம்ரூல் (சுயஆட்சி) இயக்கத்தில் பலர் பங்கெடுத்தனர்.  பிரிடிஷ் அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்கியதால் அன்னிபெசட் சிறை வைக்கப்பட்டார். இந்த சம்பவம் ஏராளமான பெண்களை இவர் இயக்கத்தில் சேருமாறு தூண்டியது. அதில் குறிப்பிடத் தக்கவர் பம்பாய் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த மாணவி சிவகாமு அம்மா ஆவார். தான் மருத்துவராகி நாட்டிற்கு சேவை செய்வதைவிட விடுதலைப் போராட்டத்தின் மூலம் ஏராளமான தேச சேவை செய்ய முடியமென்றுணர்ந்தார். 

   அதனால் தனது மருத்துவ படிப்பை விட்டுவிட்டு 1917-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வந்தார். அப்போது அன்னிபெசன்ட்  கைதினை கண்டித்து சென்னையைச் சேர்ந்த சுமார் 300 பெண்கள் திருமதி டாரதி ஜீன ராசதாஸா தலைமையில் பொதுக் கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில் சிவகாமு அம்மாள் வீர உரையாற்றினார். அதைத் தொடர்ந்து அன்னிபெசன்ட் அம்மையார் படமும் சுயஆட்சி கொடியும் கையில் ஏந்தி கடுமையான அடக்குமுறைகளையும், தடை உத்தரவையும் மீறி பெண்கள் ஊர்வலமாகச் சென்றார்கள். பின்னர் அவர்  விடுதலை பெற்று சென்னை வந்தபோது ஏராளமான பெண்கள் அவரை சூழ்ந்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

               புதிய ஆட்சிமுறையின் கீழ் முதன்முறையாக தேர்தல்கள் நடத்தப்பட்ட அதே 1920 ஆம் ஆண்டுதான் காந்தியின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் துவங்கியது. அப்போது தமிழகத்தில் நீதிகட்சி ஆட்சி அமைந்தது. சட்டமன்றத்தில் பிராமணர் அல்லாதாருக்கான இட ஒதுக்கீடு, இந்து அறநிலையத் துறை, தேவதாசி முறை ஒழிப்பு, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டம், தொடர் வண்டியில் பிரமாணர்களின் தனி உரிமை பறிப்பு, கல்லூரிகளில் பிராமணர் அல்லாதார் இட ஒதுக்கீடு, பெண்ணகளுக்கு சொத்துரிமை போன்ற முற்போக்கு திட்டங்களை நீதிக்கட்சி ஆட்சி அறிவித்தாலும் தேசியம், தேசிய விடுதலை போன்ற கோஷங்களுக்கு பின்னால்தான் மக்கள் திரண்டனர். 

              பிருமாண்டமமாக நடந்த ஒத்துழையாமை போராட்டத்தின் அடிப்படை சத்தியம், அகிம்சை, சாத்வீக எதிர்ப்பு என காந்தி அறிவித்தார். இதனால்தான் காந்தியடிகள் இப்போராடங்களில் பெருமளவில் பெண்கள் கலந்து கொள்வதை விரும்பினார். அதற்காக பெண்கள் நாடு முழுவதும் திரட்டப்பட்டனர், பின்பு திரண்டனர்.  அந்நியத் துணிகளைப் புறக்கணித்தல், அத்துணிக் கடைகள் மற்றும் மதுபானக்கடைகள் இவற்றை மறியல் செய்தல், கதர் துணி நெய்தல் போன்ற செயல்களில் பெண்கள் உற்சாகத்துடன் தொடர்ந்து ஈடுபட்டார்கள். ஒத்துழையாமை இயக்கத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது மதுபான கடைகள் மறியலாகும். தமிழகத்தில் இப்போராட்டத்தை தந்தை பெரியார் முன்னின்று நடத்தினார். போராட்டம் வெற்றிகரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்தபோது சென்னை அரசு அவரையும் மற்றும் பல தொண்டர்களையும் கைது செய்து சிறையிலடைத்தது.
          
     ஆனால் போராட்டம் அதன் பின்தான் உச்சத்தை அடைந்தது. தந்தை பெரியாரின் மனைவி நாகம்மாளும், தந்தை பெரியாரின் சகோதரி கண்ணம்மாளும் மறியல் போராட்டத்தை ஈரோட்டில் தொடர்ந்து நடத்தினர். நூற்றுகணக்கானவர்கள் தினமும் இப்போராடத்தில் கலந்துக்கொண்டனர். இப்போராட்டத்தை நிறுத்திவிடலாமா என்று காங்கிரஸார் காந்தியடிகளிடம் கேட்டபோது, அவர் உண்மையான மனதுடன் சொன்னார் ""கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்தி விடுவது என்பது என் கையில் இல்லை, அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் தான் இருக்கிறது"" அந்த இரு பெண்களின் தலைமையில் நடந்த போராட்டம் அவ்வுளவு தீவிரமாக இருந்தது.

               இந்த ஒத்துழையாமை இயக்கத்தின் மற்றொரு அம்சம், கதர் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் அந்நியத் துணிகளைப் புறக்கணித்து அரசுக்கு  நஷ்டத்தை உருவாக்குவது. இந்த கதர் விற்பனையை மிகச் சிறப்புடன் நிறைவேற்றியவர் மதுரையைச் சேர்ந்த பத்மாசனி அம்மாள் ஆவார். இவரது கணவர் ஸ்ரீனிவாச வரதன் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு கைதானவுடன் அவர் நடத்தி வந்த பாரத ஆசிரமத்தை திறம்பட நடத்தியதோடு, கதர் விற்கவும், பெண்களை காங்கிரஸ் அங்கத்தினராகச் சேர்க்கவும், பொதுக் கூட்டங்களில் பேசவும் அயராது உழைத்தார். நகைகளை அணிவதை தவிர்த்தார். ஒரு வேளை சாப்பாடு, அதுவும் தனக்கு சாப்பாட்டிற்கு தேவையான வசதியிருந்தும் காலையிலெழுந்து நூல்நூற்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டுதான் சாப்பிடுவார். மாலையில் வீடு வீடாகச் சென்று கதர் விற்பார். கதர் நெய்வதும், விற்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய செயல்களாக இருந்த நேரத்தில்தான் இந்த தீரச்செயலைச் செய்தார். 

  அரசின் ஆணையை மீறி அரசாங்க பதவியிலிருப்பவர்களாயிருந்தாலும் கண்டிப்பாக ஒரு கெஜம் துணியாவது வாங்கும்படி செய்து விடுவார். பெண்களை ஒரு முழம் ரவிக்கைத் துணியாவது வாங்கும்படி தூண்டுவார். 1857-ஆம் ஆண்டு புரட்சி வீரர்களின் சரித்திரங்களை உணர்ச்சியுடன் எடுத்துச் சொல்லி கூட்டத்தி இருப்போரை எழுச்சியிற செய்யும் உரைவீச்சாளராய் திகழ்ந்தார். ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றி தமிழ் மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியதோடு ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்களை காங்கிரஸ் உறுப்பினர்களாகவும் ஆக்கினார்.

               கதர் உற்பத்தியை பெருக்க வேண்டுமென்று 1924-ஆம் ஆண்டில் இவ்வம்மையாரும் மேலும் தாயம்மாள், திருமதி. ஜோஸப், திருமதி. சுந்தரமையங்கார், சுப்புலட்சுமி அம்மாள், டி.வி.எஸ். சௌந்தரம் ஆகிய பெண்களும் காங்கிரஸின் உதவியால் மதுரையில் "சகோதரிகள் சங்கம்" என்ற அமைப்பை நிறுவினார். அச்சங்கத்தில் வெள்ளிக்கிழமை தோறும் சுமார் முப்பது பெண்கள் இரண்டு மணிநேரம் நூல் நூர்பார்கள். அவர்களுக்கு வேண்டிய ராட்டினமும் பஞ்சும் தேசியப் பள்ளிக்கூடத்திலிருந்து கொடுக்கப்பட்டு வந்தது. இவர்களுடன் தாயாரம்மாள், சீதையம்மாள், முனியம்மாள், டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் ஆகியோரும் பணி புரிந்தனர். பல தேசியம் சம்பந்தமான செய்திகளையும் இவர்கள் விவாதித்தார்கள். இங்கு வரும் பெண்களுக்கும் ராட்டின பயிற்சி அளித்ததோடு அவர்களுக்கு கல்வியும் கற்றுக் கொடுத்தனர். போராட்ட காலங்களில் ஈடுபட்ட பெண்களுக்கு பெருத்த ஊக்கமளித்தது இச்சங்கம். அந்நியத் துணிகளைப் புறக்கணிப்பதற்கு இவர்கள் தொண்டு மிகவும் உதவியது.

               இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த ஒத்துழையாமை இயக்கம் உண்மையில் ஒரு கட்டத்தில் மிகவும் எழுட்சியை உருவாக்கியது. இந்திய நாடே எழுந்து நின்றது. பல இடங்களில் காவல்துறையினர் அடித்தால் திருப்பி அடிக்க மக்கள் தயாரானார்கள். அதன் உச்சம்தான் சொளரி சொளரா எனும் இடத்தில் காவல் நிலையம் கொளுத்தப்பட்டது. இதையே காரணமாக வைத்து காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கததை வாபஸ் வாங்கினார். இது போராட்டத்தில் ஈடுபட்ட லட்சக்கணகான மக்களை சோர்வுற செய்தது, கோபப்பட செய்தது, காந்தியின் மீதும் காங்கிரஸ் மீது நம்பிக்கையின்மையை விதைத்தது. இவ்வியக்கத்தில் ஈடுபட்ட பல பெண்கள் வேறு திசையில் போராடத்தை முன்னெடுக்கதுவங்கியதும் நடந்தது.

               ஆயுதமேந்திய போராடங்களிலும், சாத்வீக போராடங்களிலும், சமூக சீர்திருத்த போராங்களிலும், உழைப்பாளி மக்களின் உரிமைப் போராட்டங்களிலும் எப்போதும் பெண்கள் சலைத்தவர்கள் அல்ல என்பதை நிருபிக்க இன்னும் பல வீராங்கனைகளை நாம் சந்திக்க இருக்கிறோம்.

(தொடரும்)

ஜானகி: மலேஷியாவில் உருவான புயல்

விடுதலைப்போரில் பெண்கள் - 18
         



                                                                                                                             
               1931 ஆம் ஆண்டு, மார்ச்சில் காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானதும் காந்தி பின் வருமாறு அறிவித்தார்: ''ஒரு காலம் கடந்துச் சென்றுவிட்டது, புதியகாலம் தொடங்கிவிட்டது. சட்ட மறுப்பு இயக்கமும், சிறை செல்வதும் அல்லது நேரடி நடவடிக்கையும் உடன்பாட்டிற்கு முன்பு பின்பற்றப்பட வேண்டிய முறையாக இருந்தது. அதன் பிறகு விவாதமும் பேச்சு வார்த்தையும் அதனிடத்தை எடுத்துக்கொண்டன"''.  இதைவிட தெளிவாக குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் சொன்னார் ''நேரடி நடவடிக்கையின் சாயல் கொண்ட அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள், விவாதங்கள், பேரங்கள் மூலம் பெற்றுவிடலாம். சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்தி வைத்ததன் மூலம் இபொழுது நாம் ஒழுங்கு கட்டுப்பாடு  கொண்ட கீழ்ப்படிதல் என்ற காலகட்டத்துள் வந்துள்ளோம்.'' ( இந்தியாவில் பிரிடிஷ் ஆட்சி 1919 - 1947. பக் 34)

               1946 பிப்ரவரி 15  மவுன்பேட்டனுக்கு முன்பு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த வேவல் தனது நாட்குறிப்பில் இப்படி எழுதியுள்ளார். '' அது ஒரு எச்சரிக்கை நாளாக இருந்தது: சுற்றுலா நாளாக இல்லை. இந்திய தேசிய ராணுவத்திடம் சரணடைவதைப் பற்றி கூறிய போர்ட்டரை பார்த்தேன். அஞ்சல் துறை வேலைநிறுத்தம் தொடர்பாக பெவூரைச் சந்தித்தேன். இந்திய விமானப்படைக் கலகம் தொடர்பாக கார் அவர்களைச் சந்தித்தேன். இரயில்வே வேலைநிறுத்தம் தொடர்பாக கிரிபின், கான்ரன் ஸ்மித் ஆகியோரை சந்தித்தேன். இறுதியாக இவை எல்லாவற்றுக்கும் உட்சபச்சச் சோகமாக பம்பாய் இராயல் இந்தியக் கலகத்தைப் பற்றியும், இந்திய தேசிய இராணுவம் தொடர்பான வழக்கு விசாரணை குறித்தும் தலைமை தளபதியைச் சந்தித்தேன்'' ( இந்தியாவில் பிரிடிஷ் ஆட்சி 1919 - 1947., பக் 399.)

               மகாத்தமா காந்தியின் நிலைபாடு எப்படி யதார்த்ததிற்கு மாறாக இருந்தது என அவர் அறிவித்த 14 ஆண்டுகள் கழித்து வேல்ஸ் நாட்குறிப்பு எளிதாய் புரிய வைத்திருக்கும். உண்மை நிலையும் அதுதான். கன்னத்தை திருப்பி காட்ட இருந்த கூட்டத்திற்கு நிகராக, திருப்பித் தக்கவும் பெருங்கூட்டம் தயாராக இருந்தது. காங்கிரசும் காந்தியும் மட்டும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் பாதயை தீர்மாணிக்கவில்லை. இந்தியாவின் விடுதலை போராட்ட பாதைகள் பல்வேறு தடங்களில் பயணித்தது. காங்கிரஸ் கட்சி, புரட்சிகர கம்யூனிஸ்டுகள், தீவிர புரட்சிகர அமைப்புகள், சுபாஷ் பாபுவின் இந்திய தேசிய ரணுவம்இஸ்லாமிய அமைப்புகள், சமூக விடுதலை, சாதிய ஒடுக்குமுறை, பெண் விடுதலை இல்லாத விடுதலை எங்களுக்கு வேண்டாம் என்ற சீர்த்திருத்த அமைப்புகள், நிலத்திற்கான தெலுங்கானா போராட்டம் என பலவடிவங்களில் பிரிடிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற சூழல் தேசத்தில் இருந்தது.    

               இந்திய தேசிய ராணுவம் அமைத்த சுபாஷ் சந்திர போஸ் அதன் யுத்த தந்திர வடிவமைப்பிலும், போராட்ட திட்டமிடலிலும், அணி திரட்டலிலும் இருந்தார். அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் திரண்டனர். மலேஷியாவில் இருந்த இந்தியர்களைச் சந்தித்து இந்தியாவின் விடுதலைக்குத் தங்களால் இயன்றதை வழங்குமாறு கேட்டுக் கொள்ள விரிவான சுற்றுபயணம் மேற்கொண்டார். அங்கு அவர் சென்ற இடமெல்லாம் இந்தியர்கள் திரண்டனர். அவர் பேசிய இடங்களிலெல்லாம் தமிழர்கள் தங்கள் வீடுகளில் இருந்த நகைகளை எல்லாம் எடுத்துக் கொடுத்தனர் அப்போது அங்கிருந்த ஒரு இளம் பெண் உடனே சற்றும் தாமதிக்காமல் தான் அணிந்திருந்த தங்கக் கம்மல்களைக் கழற்றிக் கொடுத்தார், அப்படி அந்த இளம் பெண் தனது நகைகளை கொடுத்திட அவருக்கான ஒரு அரசியல் பின்னணி இருந்தது. இளம் வயதில் பெருமைமிகு அரசியல் பின்னணியுடன் இருந்த அந்த பெண்ணின் பெயர் ஜானகி ஆதி நாகப்பன்.

                              1946 ஆகஸ்ட் மாதம் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது அது இந்தியாவின் சுதந்திரத்திற் காகவும், இந்திய தேசிய இராணுவத்திற்காகவும், சிறைக்குச் சென்றவர்களை மீட்பதற்காகவும் சேவை செய்ய பிறந்த கட்சியாகவே இருந்தது. மலேசிய இந்தியர்களை வழிநடத்த ஓர் அரசியல் அமைப்புத் தேவை என்று அப்போதைய சுதந்திரப் போராளிகள் முடிவு எடுத்தனர். எனவே அப்போது மிகச்சிறந்த வாய்ப்பாக கிடைத்த இந்தியத் தேசிய இராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றுவது என முடிவு செய்தனர். அத்தகைய தேசப்பற்றுமிக்க மலேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இளம் வயதிலேயே இணைத்துக் கொண்டவர் ஜானகி.

               அதன் விளைவாக தனது நகைகளை மட்டுமல்ல தனது வாழ்வையும் இந்திய தேசிய ராணுவத்திற்கு அர்ப்பணிக்க அவர் தயாரானார். அவருடைய குடும்பத்தில் இருந்த யாரும் இதை விரும்பவில்லை. இந்திய விடுதலையை விரும்பினார்கள். ஆனால் அதற்காக தனது குடும்பத்திலிருந்து ஒருவரை அதுவும் இளம் பெண்ணை அனுப்ப அவர்கள் விரும்பவில்லை. அவரது குடும்பத்தில் பலமான எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, ஜானகி தந்தையாருக்கு இது மொத்தமாய் பிடிக்கவில்லை. ஜானகி ஆதி நாகப்பன் பிடிவாதமாக இருந்து இறுதியில் பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற்றார்.

               இந்திய தேசிய இராணுவத்தில் முதன்முதலில் சேர்ந்த மலேஷியப் பெண்களில் ஜானகியும் ஒருவர். ஆனால் அவர்களுள் அவர் மிக முக்கியமான ஆளுமை நிறைந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர். முதல் நாள் படையில் கொடுக்கப்பட்ட உணவைப் பார்த்து ஜானகி மிரண்டு போநது மட்டுமல்ல, கண்கள் கலங்கவும் செய்தார். ஆனால் மனம் கலங்கவில்லை. ஜானகி போர்ப்படையின் கடுமையான விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், நெறி முறைகளுக்கும் தன்னை முழுமையாக உட்படுத்திக்கொண்டார். வலி மிகுந்த வாழ்க்கை அது. ஆனால் மனவைலிமை அவரை எழுச்சியுற செய்தது. எதற்கும் ஈடு கொடுக்க முடியும் என நம்பினார். இராணுவ வாழ்வில் தொடக்க காலத்தில் மிகவும் அவதியுற்றாலும், அவர் சோர்ந்துவிடவில்லை.

`              1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் நடைபெற்ற ம.இ.கா. அமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட டான்ஸ்ரீ ஆதி நாகப்பனுக்கும் இவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. போர்க்களம் காதலை எப்போதும் புறம்தள்ளியதில்லை. போர்க்களத்தில் இரு இதயங்கள் அன்பு கொண்டன. அது காதலாய் மலர்ந்தது. தோழமைகள் புடைசூழ, எதிகாலம் கடுமாயான சவால்கள் நிறைந்தது எனத்தெறிந்தே  இருவரும் 1949 இல் திருமணம் செய்துக்கொண்டனர்.

               காலப் போக்கில் இராணுவ வாழ்க்கை ஜானகியிடம் குழந்தைப் போல பழகிப்போனது. அவரது அர்பணிப்பும், தேச பக்தியும், மக்கள்: மீதான அன்பும் ராணுவத்தில் இருந்த அனைவரையும் ஈர்த்தது. படை அதிகாரிகளுக்கான முக்கிய தேர்வில் ஜானகி முதல் நிலையில் தேர்ச்சிப் பெற்றார். அதன் விளைவாக பின்னர், இந்திய தேசிய இராணுவத்தின் முதல் பெண்கள் படைப் பிரிவான ஜான்சி ராணிப் ரெஜிமெண்டில் துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். ஜான்சிராணிக்கு ஒரு ஜல்காரிபாய் போல கேப்டன் லட்சுமிக்கு பின்பலமாய் இவர் களமாடினார். .

               பெண்கள் ஆயுதம் ஏந்திய ஜான்சி ராணிப் படைக்குத் துணைத் தளபதியாகப் பதவி ஏற்ற ஜானகி ஆதி நாகப்பன், பர்மா-இந்தியா போர் முனையிற் போரில் ஈடுபட்டார். போர்களம் மேலும் உறுதிக்கொள்ளச் செய்தது. கடுமையான தாக்குலில் காயம் அடைந்து குணம் அடைந்தார். விடுதலைக்கு பின்னாளில் அவர் ஜான்சி ராணிப் படையைப் பற்றி அனுபவ குறிப்புகளை கொண்டு ஒரு நூலையும் எழுதியுள்ளார்

               இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அவரின் அரிய சேவைகளைப் பாராட்டி இந்திய அரசாங்கம் மிகவும் தாமதாமக பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. 1997ஆம் ஆண்டுதான் இவ்விருது கொடுக்கப்பட்டது. இந்தியாவின் பத்மஸ்ரீ விருதைப் பெறும் முதல் மலேசியர் எனும் பெருமையும் இவரையே சாரும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜானகி ஆதி நாகப்பன் சமூக பொதுச் சேவைகளிற் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். இன்னொமொரு முக்கியமான தகவல் 1946ஆம் ஆண்டு, மலேசிய இந்திய காங்கிரசின் முதற் தலைவர் ஜான் திவியுடன் இணைந்து மலேசிய இந்திய காங்கிரஸ் அமைப்பை உருவாக்கியவரும் இவரே.
               மலேசிய இந்திய காங்கிரஸ் சார்பில் மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக 1980 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். அந்தப் பதவியை 1986 ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் வகித்தார். விடுதலைக்கு பின்பு மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவையில் இடம் பெற்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண்மணி இவர்தான். அவரது காதல் கனவன் டான்ஸ்ரீ ஆதி நாகப்பனின் அரசியல் ஈடுபாட்டிற்கும் பொதுப் பணிகளுக்கும் தொடக்க காலத்தில் இருந்து பேருதவியாக ஆத்மபலமாய் இருந்து வந்தார். இவருடைய கணவரின் பெயரில் ஆண்டுதோறும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது. மலேசியாவில் மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு அந்த விருது வழங்கப்படுகிறது. விடுதலைக்கு பின்பு பல ஆண்டுகள் மக்கள் சேவையில் தன்னை அற்பணித்துக்கொண்ட கேப்டன் லட்சுமியின் பரம்பரை இவர் என நிருபனம் செய்த இவரைப்போல இன்னும் பலரை சந்திக்கலாம்.

                                                                                                                             (தொடரும்)

செவ்வாய், 29 ஜூலை, 2014

விமல் சர்தேசாய்: சரியான பாதையை தேர்ந்தெடுத்தவர்

விடுதலைப் போரில் பெண்கள் - 16


கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தியத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்!

கண்ட தில்லை கேட்ட தில்லை
சண்டை யிந்த மாதரி
பண்டு செய்த புண்ணி யந்தான்
பலித்த தேநாம் பார்த்திட!

காந்தி யென்ற சாந்த மூர்த்தி
தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்த ருக்குள் தீமை குன்ற 
வாய்ந்த தெய்வ மார்க்கமே.

நாமக்கல் கவிஞரின் இக்கருத்தை கொண்ட பாடகள் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு வார்த்தகளில் தேசம் எங்கும் எதிரொலிந்த நேரம் அது. சக்திவாந்த, சம்பிரதாயமற்ற எதிர்ப்பு போராட்டமான சத்தியாகிரகம் மாணவர்களை, இளய பட்டாளத்தை வசீகரித்த உலைக்களமாய் தேசம் இருந்தது. 

14 வயதில் சிறையை நோக்கி...
காந்தி என்ற எளிய மனிதன் தேசத்தின் ஆன்மாவை அகிம்சை வழியில் போராட தூண்டி அதில் வெற்றியும் அடைந்திருந்தார். அவரிச்சுற்றி எப்போது நூற்றுக்கணக்கில் அண்களும் பெண்களுமாய் எளிய மனிதர்கள் குழுமிருந்தனர். அவர் போராட்டத்திற்கு நிதி கேட்டால் தங்கள் உடம்பில் இருந்த குண்டுமணி தங்கத்தையும் அவரிடம் தாரைவார்த்தனர். அன்று அவரைச்சுற்றி இருந்த கூட்டத்தில் 14 வயது நிறம்பிய விமல் என்ற மாணவியும் ஒருவர். காந்தியை சந்தித்த அந்த தருனம் அவளது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தன்னுடைய குடும்ப சூழல் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்கும் என்பதால் அந்த இளம் மாணவி காங்கிரசின் சேவை அமைப்பான சேவதளத்தில் காந்தியை சந்தித்த அன்றே தன்னை இணைத்துக்கொன்டார். 

அச்சமயத்தில்தான் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சத்தியாகிரகப் போராட்டத்தை துவங்கி இருந்தது. அப்போது காதராடை உடுத்துவது தங்களின் உணர்வின் வெளிப்பாடு என தேசபக்தர்கள் உணர்வுப்பூர்வமாக நம்பினர். எனவே விமலும் அவரது தோழிகளும் பள்ளிக்கு வெள்ளை நிறத்திலான கதர் ஆடைகளையே உடுத்திச் சென்றனர். 

   சேவாதளத் தொண்டரான விமலுக்கும் அவரது தோழர்களுக்கும் வெளிநாட்டு துணிகளை விற்கும் கடைகளுக்கு முன்பு மறியல் செய்யும் பணித் தரப்பட்டது. இவர்கள் செல்லும போது கடைக்காரர்கள் கடையை மூடிவிடுவார்கள். காவல்துறையினர் போராட்டகரர்களை அப்புறப்படுத்தியதும் மீண்டும் திறப்பார்கள். இவர்களுக்கு பாடம் நடத்திட எண்ணிய விமல் தனது நண்பர்களுடன் திடீரென அறிவிப்பு இல்லாமல் காரில் சென்று கடைகளை மறித்தார். காவல்துறை இவர்களை வளைத்து பிடித்து கைது செய்தது. சுற்றிலும் மக்கள் திரண்டு இவர்கள் செல்லும் காவல்துறை வாகணத்தின் மீது மலர்த்தூவி வாழ்த்தினர். நீதிமன்றத்தில்  ஆங்கில நீதிபதி இவர்களை சிறுமிகள்தானே என்று ஏளனதுடன் மன்னிப்பு கேட்டால் விட்டுவிடுவதாக கூறினார். ஆனால் விமல் சொன்னார் "நாங்கள் செய்தது பெருமைக்குரிய செயல், நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார். கோபமடைந்த நீதிபதி இவரையும் இவரது சகோதரி குசும் உள்ளிட்ட பலரையும் பூனாவில் உள்ள எரவாடா சிறையில் அடைத்தார். அங்கு எற்கனவே சரோஜினி நாயுடு, கமலாதேவி சட்டோபாத்யாயா போன்றவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். ஆறு மாத சிறைவாசத்திற்கு பின்பு 1931ல் காந்தி-இர்வின் ஒப்பந்தம் போடப்பட்ட பின்பு ஆறுமாத சிரைவாசத்துடன் விமல் வெளியே வந்தார்.

விமல் கைதானபோது செய்தித்தாள்களில் அது முக்கிய செய்தியாக வந்திருந்தது. பொதுவாக அனைத்து செய்திதாள்களும் இப்படி செய்தியை வெளியிட்டன "கைதான சேவாதள தொண்டர்களில் மிகவும் சிறிய வயதுடையவர் 14 வயதான விமல் சர்தேசாய். அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது." 14 வயதில் தேசத்தின் மீது அக்கறைக் கொண்ட, ஆங்கிலேயனிடம் மன்னிப்பை கேட்டு சுதந்திரமாய் திரிவதைவிட சிறைச்சாலையே மேல் என முடிவெடுத்த அந்த 14 வயது மாணவியின் பின்னணி என்ன...

மாற்றத்தை நோக்கிய பின்னணி...
மகாராஸ்டிர மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள பிரதானவல்லி என்ற மிகவும் பின்தங்கிய கிராமத்தில் அனந்த சர்தேசாய் - மாலதி தம்பதியினருக்கு 1915 ஆம் ஆண்டு மூத்த குழந்தையாக விமல் பிறந்தார். இவருக்கு பின் இரண்டு தம்பிகளும் ஒரு தங்கையும் பிறந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான அதேசமயம் சமூக சீர்திருத்த முற்போக்கமான குடும்பமாய் அது திகழ்ந்தது. விமலுக்கு 10 வயதாகும் போது அவரது தந்தை மரணமடைந்தார். குடும்பததை பராமரித்து குழந்தைகளை படிக்கவைக்கும் பொறுப்பை விமலின் மாமா கணேஷ் சர்தேசாய் ஏற்றுக்கொண்டார். விமல் தனது மாமாவுடன் பம்பாய் சென்றுவிட்டார். மெட்ரிகுலேஷன் படிக்கும் போது பூனா அருகிலுள்ள ஹிங்கானி என்ற இடத்திலுள்ள கார்வே ஆசிரமத்திற்கு விமலை அவரது மாமா அனுப்பி வைத்தார்.
     இந்த சூழலில்தான் அவர் சத்தியாகிரக போராளியாக உருமாறினார்.  ஆனால் தான் அறிவிக்கும் போராட்டத்தின் உச்சத்தில் அதை வாபஸ் வாங்கும் பழக்கம் கொண்ட காந்தி சத்தியாகிரக போராட்டத்தையும் வாபஸ் வாங்கினார். இதனால் தேசபக்தர்கள் கடுமையான சோர்வை அடைந்தனர். விமல் கடுமையான ஏமாற்றத்துடன் போராட்டத்திற்கான மாற்று வழிகளை தேடினார். அவருக்கு தாமோதர் சாவர்கரை சந்திக்கும் வாய்ப்பு அப்படிதான் கிடைத்தது. வீட்டுச்சிறையில் இருந்த சாவர்கர் 16 வயதுடைய விமலையும் அவரது தோழியையும் பார்த்து பாராட்டியவர் முதலில் கல்வியை முடித்துவிட்டு பிறகு போராட வாருங்கள் எனச்சொன்னார். ஆனாலும் விமலின் மனதில் போரடட உத்வேகம் அலையடித்துக்கொண்டே இருந்தது. தான் கற்ற கல்வியின் பயனாக அவரது உள்ளத்தில் கேள்விகள் எழுதுக்கொண்டே இருந்தது.

காங்கிரஸ் பாதை சரியனதா? உழைக்கும் மக்களின் விடுதலை எந்த அளவு சாத்தியம்? வறுமை, பசி, கல்லாமை, நிலபிரபுத்துவம், சாதியம், மத ரீதியான திரட்டல் இவைகளையெல்லாம் எதித்தும்தானே விடுதலைப்போராட்டம் நடைபெற வேண்டும். ஆனால் காங்கிரஸின் பார்வையில் இவைகள் குறித்தெல்லாம்   தெளிவான பார்வை இல்லையே என்று கருதினார். தேசச்சுதந்திரம் என்பது வெறும் விடுதலை என்ற வார்த்தையோடு மட்டும் இணைக்கப்பட்டதல்ல, அதையும் தாண்டி உழைப்பாளி மக்கள் விடுதலையோடு பின்னிப்பினைந்தது என்று கருதினார். இந்த சிந்தனை அவரை இயல்பாகவே மார்க்சியத்தின்பால் ஈர்த்தது.

அதன் பிறகான அவர் வாழ்க்கையில் சிறந்த கல்வியாளராக, புகழ்பெற்ற திரைப்பட நடிகையாக, உழைப்பாளி மக்களின் போராளியாக, விடுதலைக்கான முழு அர்த்தத்தை புரிந்த விடுதலை வீரராக பரிணமித்தது ஆச்சரியமான பக்கங்கள்தான்.
(பயணம் தொடரும்) 

வாழ்வின் இறுதிவரை சுடர்விட்டெறிந்த தீபம் கேப்டன் லட்சுமி.

விடுதலைப் போரில் பெண்கள் - 15


சரோஜினி நாயுடுவின் சகோதரியான சுஹாசினி லட்சுமிக்கு எட்கர் ஸ்னோவின் சீன வானில் சிவப்பு நட்சத்திரம் என்ற புத்தகத்தை கொடுத்தார். அதுமுதல் லட்சுமியின் சிந்தனையின் நிறம் மாறத்து வங்கியது, வாழ்வின் பாதையும்தான். அந்த பாதை தேசம், மக்கள், உண்மையான மாற்று கொள்கை, போராட்டம் என்ற சிந்தனைகளை உள்வாங்கியதாக இருந்தது. ஆனால் அதற்கு முன் அவர் பல தடைகளை கடக்கவேண்டி இருந்தது. 

1938 ஆம் ஆண்டு லட்சுமி மருத்துவ படிப்பின் இறுதியாண்டு படித்த போது ஒரு விமான ஓட்டியை காதலித்து திருமணம் செய்தார். அன்பை சுமக்கவேண்டிய வயதில் பிரச்சனைகளை சந்திக்கவேண்டி வந்தது. முரண்பாடுகளின் குவியலாக, கருத்துக்கள் ஒத்துப்போகாத திருமணமாய் அது முடிந்தது. அவர்களால் இணைந்து வாழ முடியவில்லை. கசப்பான சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. விடுபட விரும்பிய நிமிடங்களை தேடிய வாழ்வு அது. பிரிடிஷ் இராணுவ பணிக்கு மருத்துவர்களை தேடிக்கொண்டிருந்த அந்த சமயத்தை தனது சுய வாழ்வின் விடுதலைக்காக மாற்றிக்கொண்டார். இரண்டாண்டுகள் மட்டுமே தொடர்ந்த அந்த வாழ்வு 1940ல் லட்சுமி இராணுவ மருத்துவராய் சிங்கப்பூர் செல்லும் வரைதான் தொடந்தது.

தனது 26வது வயதில் சிங்கப்பூர் வந்தடைந்தார் லட்சுமி. அங்கு கேரளத்து நண்பர் ஒருவரின் மருத்துவமணையில் மருத்துவராய் பணிபுரிய துவங்கினார். இதற்கிடையாக பல சம்பவங்கள் உலகம் முழுவதும் நடந்தேறியது. பாசிச சக்திகள் கை மேலோங்கி உலகை அச்சுறுத்திக்கொண்டிருந்தது. இந்தியாவில் விடுதலை போராட்டம் தொடர்ந்து நடந்துக்கொண்டிருந்தது. லட்சுமி சிங்கப்பூர் வந்த சில மாதங்களில் ஒரு பரபரப்பான செய்தி வந்தது, கல்கத்தாவில் கப்பல் மூலம் சுபாஷ் சந்திர போஸ் ஜெர்மனிக்கு தப்பிவிட்டார் என்ற செய்திதான் அது.

1941 ஆம் ஆண்டு ஜப்பான் சிங்கப்பூரை தாக்கியது. குண்டுகளுடன் துண்டு பிரசுரங்களையும் ஜப்பானியர்கள் வீசினர். அதில் ""நேசபடைகள் சரணடைய வேண்டும் என இருந்தது. பிரிடிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போர் இதுவெனவும், ஒத்துழைத்தால் இந்திய விடுதலைக்கு உதவப்படும்"" எனவும் அதில் எழுதியிருந்தது. ஜபானின் ராணுவர் அதிக அளவு சூழ்ந்ததால் பிரிடிஷ் இந்தியப்படைக்கு சரணடைவதைதவிர வேறுவழியில்லை. சரணடைந்த படையணிகளில் மோஹன்சிங் தலைமை வகித்த பஞ்சாப் ரெஜிமெண்டும் ஒன்று. அதன் ஜப்பானியர் தலைமையகத்தில் ராஷ்பிஹாரி போஸை சந்தித்தார். இருவரும் ஜப்பானிய அதிகாரி ஃபியூஜிராவை சந்திக்க அனுப்பப்பட்டனர். பின் ஜப்பானியர்கள் உதவியுடன் இந்திய தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டது. இதில்தான் நேதாஜி பின்னர் இணைந்தார். அதன் தலைமை பொறுப்பேற்றார். 

1943ல் ஜப்பான் பிரதமர் டோஜோவை சந்தித்து 6 மணி நேரம் விவாத்தித்து இந்திய விடுதலையை வேண்டிய உதவிகளை இந்திய தேசிய இராணுவத்திற்கு பெற்று வந்தார். இரணுவ படையணிகள் அமைக்கப்பட்டது. இதன் பிறகான சந்திப்புதான் நேதாஜியுடனான லட்சுமியின் சந்திப்பு. அவர் வாழ்க்கையை மாற்றிப்போட்ட சந்திப்பு. ""அந்நிய ஒடுக்குமுறையுடன் பெண்கள் சமூக  ஒடுக்குமுறையையும் அல்லவா சேர்ந்து சுமக்கவேண்டியுள்ளது? பெண்கள் ஆண்களுக்கு இணையான உரிமைகள் கிடைக்காதவரை, நாடு முன்னேறாது. விடுதலை பெற்ற ஒரு நாட்டில் சாதி, மத, பாலின அடிப்படையிலான பாரபட்சமோ, ஒடுகுமுறையோ இருக்கக்கூடாது"" இவைகளைதான் நேதாஜி லட்சுமியிடம் பேசிய சாரம்.

அடுத்த நாள் லட்சுமி தான் புதிதாக துவங்கியிருந்த கிளினிக்கை மூடிவிட்டு களத்தில் இறங்கினார். பெண்களை ராணுவத்தில் சேர்த்தக கடுமையாக உழைத்தார். மூன்று நான்கு தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த குடும்பத்து பெண்கள்தான் அப்படையணியின் முதுகெலும்பாக விளங்கினர். அந்த கல்விகற்ற சுந்தந்திட உணர்வு மிக்க பெண்களை அதிகாரிகளாக கொண்டு இந்திய வரலாற்றில் முதல் பெண்கள் படை பிரிவான ஜான்சிராணி படைபிரிவு உருவாக்கப்பட்டது. அதன் கேப்டன் லட்சுமி, அவருக்கு அடுத்த கமாண்டெண்ட் ஜானகி தேவர்.

1943 அக்டோபருக்குள் 1500 பெண்களை வைத்து பயிற்சியளிக்க முகாம் ஏற்பாடு செய்யும் அளவும் இப்படை விரிவானது. பர்மா, ரங்கூனிலிருந்து இன்னொரு ரெஜிமென்ட் தயாரானது. அதிலிருந்த பெண்கள் அனைவரும் வங்க மொழி பேசுவோர். படையணியில் தினசரி கடைபிடிக்கபட்ட அட்டவணையும், கட்டுபாடும், உணவு பழக்கமும் பெண்கள் மீது பிரமிக்கதக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பெண் வீரர்கள் பயிற்சியும், பொது நிர்வாகத்தையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு கேப்டன் லட்சுமியுடையது. அனைத்து திட்டங்களையும் விவாதிப்பது, நேதாஜி வெளிநாட்டு பிரமுகர்களை சந்திக்கும் போது உடனிருப்பது ஆகியவை அவரது முக்கிய பணிகளாக இருந்தது.

ஆனால் பாசிசபடைகளின் ஆதரவுடன் இந்திய தேசிய இராணுவம் செயலாற்றியதை பற்றி கேப்டன் லட்சுமிக்குள் கடுமையான விவாதங்கள் நடந்துதான் வந்தது. யூதர்களை ஹிட்லர் நடத்திய விதம் குறித்தும், அவரது உதவி இல்லாமல் பிரிடிஷ்காரர்களை நம்மை மட்டுமே நம்பி தோற்கடிக்க வெண்டும் எனவும், பாசிச கோட்பாடுகளை உதறிதள்ளி நமக்கான கோட்பாட்டை நாமே உருவாக்க வேண்டுமெனவும் நினத்தார். இந்திய விடுதலைக்கு ஜப்பான் உதவி புரிவதாக மனதார நம்பி இ.தே.இராணுவம் செயலபட்ட காலம் அது.

1944 மார்ச் மாதம் இந்த இராணுவப்படை முதலில் ரயிலிலும் பின்னர் மோட்டர் படகிலும் பர்மாவை நோக்கிச்சென்றது. சாகசம் நிறைந்த பயணம் அது. பிரிடிஷ் இந்தியாவின் வடகிழக்கு  பகுதியில் ஐ.என்.ஏவும் ஜப்பானின் படையும் சேர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு நடந்த பயணம் அது. தினமும் 10 முதல் 15 கிலோமீட்டர் நடந்து காட்டில் பயணம். ஆங்காங்கே குண்டுகள் விழும், பலர் காயம்படுவர் இருப்பினும் பயணம் தொடரும். 1944 மார்ச் முதல் ஜூன் வரை இராணுவம் பர்மாவில் இருந்தது. அப்போது நிறைய பேர் குண்டுகளால் தாக்கப்பட்டனர். ஜான்சிராணி படையணியை சேர்ந்த பெண்கள் நர்சுகளாக பணிபுரிந்தனர். 1945 மார்ச் மாதம் இம்பாலாவுக்குள் படை நுழையும் தருணத்தில் படை பின்வாங்குவது என முடிவெடுக்கப்பட்டது. காரணம் உலகப்போர் சோவியத் யூனியனின் தீரம் மிகுந்த மகத்தான செம்படையால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

பின்வாங்கப்பட்ட படையில் இருந்த பர்மாகாரர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மற்றவர்கள் முதலில் தாய்லாந்திற்கும் பின்னர் மலேசியாவுக்கும் அழைத்துச் சென்றார் நேதாஜி. சிங்கப்பூர் பெண்கள் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். நேதாஜி சைகோன் சென்றுவிட்டார். 1945 ஆகஸ்ட் மாதம் அவர் டோக்கியோ சென்ற போது விமாணம் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார். 

பர்மாவின் காடுகளில் இருந்த கேப்டன் லட்சுமி பிரிடிஷ் ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு ரங்கூனில் ஒருமாதம் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். அவரை காண ஐ.என்.ஏ முன்னால் வீரர்கள் வருவார்கள். இவர்கள் ஒன்று திரண்டு 1945 அக்டோபரில் ரங்கூனில் ஒரு மாநாடு நடத்தினர். இச்செய்தியை கேள்விபட்ட பிரிடிஷ் இந்திய அரசு கேப்டன் லட்சுமியை 1945 அக்டோபர் முதல் 1946 மார்ச் வரை மலையில் சிறைகைதியாய் வைத்திருந்து பின்னர் இந்தியாவுக்கு அனுப்பியது.

1947ல் இந்தியா விடுதலை அடைந்தது. கேப்டன் லட்சுமி போன்றவர்களுக்கு இது மகிழ்வும் துக்கமும் கலந்த ஒரு சம்பவமாய்தான் இருந்தது. ஏனெனில் நாட்டின் பிரிவினை அவரக்ளை துக்கமுற செய்தது. இதற்கு காரணம் காங்கிரஸ் என அவர்கள் உறுதியாக நம்பினார்கள். லட்சுமி கம்யூனிஸ்டுகளுடன் இனைந்து செயலாற்ற விருப்பம் கொண்டார். ஆனால் அக்கடிசியில் ஒரு சிலர் இவர்களை பாசிச சக்தியின் கையாட்களாக பார்தனர். 1947ல் கேப்டன் லட்சுமி கர்னல் பிரேம் குமார் சைகலை மணந்தார். 1946ல் ஐ.என்.ஏவின் குற்றம்சாட்டப்பட்ட மூன்று முக்கிய நபர்களில் அவரும் ஒருவர். லாகூரிலிருந்து இவர்கள் கான்பூருக்கு குடிபெயர்ந்தனர். அங்கு கேப்டன் லட்சுமி தனது மருத்துவ பணியை முழுவீச்சில் துவங்கினார். பாகிதானிலிருந்து அகதிகள் வந்தவண்ணமிருந்தனர். இந்து முலிம் என வித்தியாசம் பாராமல் அனைவருக்கும் அவர் சேவை செய்தார். இத்தம்பதிக்கு சுபாஷினி, அனிசா என்ற இரு மகள்கள் பிறந்தனர். 

அவரது நோயாளிகள் பெரும்பாலும் உழைக்கும் மக்கள், பஞ்சாலை தொழிலாளிகள், அகதிகளாகவே இருந்தனர். வங்கதேச போரின் போது மெற்குவங்கத்தில் குவிந்த அகதிகள் மீண்டும் கேப்டனை அரசியல் வாழ்வுக்கு அழைந்து வந்தனர். மார்க்சிய இயக்கத்தின் மகத்தான தலைவர் ஜோதிபாசு அழைப்பை ஏற்று அங்குள்ள அகதிகளுக்கு மருத்துவ உதவி செய்ய மெற்குவங்க விரைந்தார் கேப்டன். அங்கு மக்கள் நிவாரண குழுக்களுடன் பொகாய்காவ் என்ற இடத்தில் ஐந்து வாரங்கள் தங்கி உதவினார். எல்லை தாண்டி முக்தி வாஹினி தொண்டர்களுக்கு உதவினார். அப்போதுதான் அவர் தன்னை மக்களுக்கு அளப்பறிய தியாகங்களை செய்து போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டார். 

தனது 57வது வயதில் ஒரு சரியான இயக்கத்தில் தன்னை இனைத்துக்கொண்ட மனநிறைவு அவருக்கு வந்தது. 1981ல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அமைப்பு மாநாட்டில் அகில இந்திய துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984ல் இந்திராகாந்தி படுகொலையை தொடர்ந்து நடந்த சீக்கிய மக்கள் மீதான படுகொலைகளின் போது வீதியில் இறங்கி அவர்களை பாதுகாக்க நின்றார். அவர் இருந்த பகுதியில் ஒரு சீக்கியரும் தாக்கப்படவில்லை என்பதிலிருந்து அவரது தீவிர போராட்டத்தை அறியமுடியும். 1984ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விஷ வாயு கசிவால் பாதிகப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவரது மருத்துவ குழு அங்கு சென்று பணியாற்றியது. எனது அவரது போராட்ட வாழ்க்கை நெடியது. 

2002 ஆம் ஆண்டு இந்திய நாட்டு ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்து போட்டியிட்டார். முதுமையை வென்ற போராளியாய் ஜொலித்தார். அதுதான் கேப்டன் லட்சுமி. 
காலம் அவரையும் நம்மிடமிருந்து பிரித்து அழைந்துச்சென்றது. அவரின் வாழ்வில் நாம் கற்க வேண்டிய ஏராளமான பாடங்களை விட்டுச்சென்றார். அவர் மரணமடைந்த போது ஒரு மாதப்பத்திரிக்கை அவருக்கு கீழ்கண்டவாறு அஞ்சலி செலுத்தியது.

""23.07.2012 அன்று கேப்டன் லட்சுமி சேஹல் காலமானபோது இந்திய விடுதலைப் போராட்டத்திலும் அதன் பிறகான இந்திய அரசியல் களத்திலும் பெண்கள் பங்கேற்பின் ஒளிமிக்க அத்தியாயம் ஒன்று முடிவுபெற்றது. லட்சியத்தின் மீதான அரசியல் பணியையும் தொழில் சார்ந்த மருத்துவப் பணியையும் தன் சமூகத்தின் மேம்பாட்டிற்காக அர்ப் பணித்து வாழ்ந்த அவரது பூதவுடல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் ஆய்வுக்காக வழங்கப்பட்டது சாலப் பொருத்தமே.""  
(இன்னும் போராளிகளை சந்திகலாம்)
         
விடுதலைப் போரில் பெண்கள் - 14

கேப்டன் லட்சுமி: பெண்கள் பங்கேற்பின் ஒளிமிகுந்த அத்தியாயம்

விடுதலைப் போரில் பெண்கள் - 14


கத்தியின்றி ரத்தமின்றி மயிலிறகு நீவ பெற்ற அகிம்சை சுந்ததிரம் இது, இப்படிதான் பலர் இப்போதும் பேசிக்கொன்டிருக்கிறார்கள். ஆனால், செய்! அல்லது செத்துமடி!! என காந்தியடிகளையே பேசவைத்த சூழலை தீவிர தேசபக்தர்கள் உருவாக்கினார்கள் என்ற வரலாற்றை புறம்தள்ளுகிறார்கள். 1942 ஆம் ஆண்டு உலக போரின் யதார்த்த நிலைமையையும், அது சோவியத் மீது பாசிச சக்திகள் கைவைத்தவுடன் மக்கள் யுத்தமாக மாறியதையும் கணக்கில் கொள்ளாமல் காங்கிரஸ் பேரியக்கம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தது. இதனைத்தொடர்ந்து கடுமையான அடக்கு முறைகளை தேசம் சந்தித்தது. அது விடுதலைப் போரில் நிசப்த சூழலை உருவாக்கிய தருனமாய் மாறிய உண்மை எங்கும் பதியப்படவில்லை. ஆனால் வரலாறு எனும் கால பெருநதி எப்போதும் தேங்கி நிற்பதில்லை. தேச விடுதலைப் போராட்டம் மற்றொரு திசை வழியை நோக்கி நடக்க துவக்கியது. அந்த திசைவழி வெற்றி அடையவில்லை எனினும் அந்த பாதையின் தியாகங்களை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதுதான் இந்திய தேசிய இராணுவம்.
1943 ஜூலை 5 தேதி அந்த மகத்தான இருவரின் சந்திப்பு நடந்தது. ஆறு மணி நேரம் நடந்த அந்த சந்திப்பு இந்திய வரலாற்றின் முக்கியமான சந்திப்பாக இருந்தது. சந்தித்த அந்த இருவரில் ஒருவர் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் மகத்தான ஆளுமையான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மற்றொருவர் 29 வயது நிறம்பிய மருத்துவ பட்டம் பெற்ற யுவதி. 



எப்போது இந்த சந்திப்பு நடந்தது?
இந்திய தேசிய ரணுவத் தலைமையை நேதாஜியிடம் ராஷ்பிஹாரி போஸ் ஒப்படைத்த (இவர் புரட்சிகரச் சிந்தனை கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர். 1911இல் வைசிராயாக இருந்த ஹார்டிங் பிரபுமீது வெடிகுண்டு வீசிவிட்டுத் தப்பி ஜப்பான் சென்று அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்டவர்.)  அந்த பிருமாண்டமான கூட்டத்தில் சுபாஷ் பேசினார். "உங்கள் ரத்தத்தை எனக்கு தாருங்கள், நான் உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்" அந்த மந்திர உரையை கேட்ட கூட்டத்தில் ஒருத்தியார் அந்த யுவதி நின்றிருந்தார். மகத்தான தலைவன் பேசிய சில தினங்களில் இந்த சந்திப்பு நடந்தது. அந்த இளம் பெண் மருத்துவர் சுபாஷிடம் சொன்னார் "எனது இறுதிச்சொட்டு ரத்தம் இந்த பூமியை தழுவும் வரை போரிட நான் தயார். என்னைப்போன்ற இளம் பெண்கள் தேசத்திற்காக தியாகம் செய்ய முன்வரவேண்டும் என்றீர்களே நேதாஜி, நான் இந்த தேசத்திற்கு என்னையே தத்தம் செய்ய தயாராக வந்திருக்கிறேன். என்னை உங்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்வீர்களா? என்றார். 
நேதாஜியை புருவம் உயர்த்தி பார்க்க வைத்த அந்த இளம் பெண்ணின் பெயர் லட்சுமி. 


இந்திய வரலாற்றில் கேப்டன் லெட்சுமி என புகழ்பெற்ற, சாதாரண மக்கள் மீது அன்பும், அசாத்திய வீரமும், மதிநுட்ப அரசியல் அறிவும் பெற்ற உதாரண பெண் அவர். ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல்  பெண்கள் இராணுவப் படையாகக் கருதப்படும் ஜான்சிரணி லெஜிமென்டின் கேப்டன். இந்தியாவின் சுதந்திர அரசு 1943- & 1945 இல் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டது. அதன் தலைநகர் அந்தமான் தீவில் உள்ள போர்ட்பிளேர் நகரம். வெளிநாட்டுத் தலைநகரங்கள் ரங்கூன், சிங்கப்பூர். நாடு கடந்த இந்திய அரசின் அமைச்சரவையில் சுபாஷ் சந்திரபோஸ்  பிரதமர், எஸ். ஏ. ஐயர் மத்திய ஒலிபரப்பு அமைச்சர், தளபதி ஏ.சி. சாட்டர்ஜி  மத்திய நிதி அமைச்சர், இதில் இருந்த ஒரே பெண் நிர்வாகி கேப்டன் லட்சுமி மட்டுமே. அத்தகைய மேன்மை மிகுந்த பெண்கள் பங்கேற்பின் ஒளிமிக்க அத்தியாயமான லட்சுமியின் பூர்வீகம் என்ன? இந்த தியக உணர்வும், வீரமும் உருவாகிய பின்னணி என்ன?


பின்னணி என்ன?  
கேப்டன் லட்சுமி 1914 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 அன்று சுவாமிநாதன்-அம்மு ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்தவர். மேலும் அமெரிக்காவில் வானியல்துறையில் முனைவர் பட்டமும், சிறந்த கணிதவியல் நிபுணர் என்ற தகுதியும் பெற்றவர். அத்துடன் குற்றவியல் வழக்கறிஞர் என்ற பெருமதிப்பும் பெற்றவர். தாய் அம்மு சுவாமிநாதன் கேரளா மாநிலம், பாலக்காட்டில் சமூக சேவகராக இருந்தவர். குட்டி மாலு அம்மா என்ற இவரது மற்றொரு குடும்ப உறுப்பினரும் விடுதலைப் போராட்டத் தியாகியாக இருந்தவர். இளம் வயதிலேயே நாட்டு விடுதலை, சமுதாய சமத்துவம் ஆகிய இலட்சியங்கள் லட்சுமியின் மனதில் இடம்பெற இந்த பின்னணி துவக்க விதைகளை விதைத்தது?



அவரது இளைமை பருவம் கேரளாவில் உள்ள அவரது பாட்டியின் வீட்டில்தான் அதிகம் கழிந்தது. அங்குதான் அவர் அவவரது வாழ்வில் தீண்டாமைக்கு எதிரான முதல் பாடத்தை கற்றார். கேரளாவில் அப்போது தலித்துகள் தீண்டதகாதவர்களாக மட்டுமல்ல, அணுகக் கூடாதவர்களாகவும் இருந்தனர். லட்சுமி வசித்த வீட்டின் அருகில் உள்ள காடுகளிலிருந்து தம்புரனே என்று குரல் மட்டும் கேட்கும். உடன் அங்கு யாரிடமாவது உப்பும் சாதமும் கொடுத்தனுப்பப்படும். பதிலாக அங்கிருந்து முடையும் கூடைகளில் நிறைய காட்டுப் பழங்களை அனுப்பி விடுவார்கள். தீண்டதகாதவர்கள் கொடுக்கும் அப்பழங்கள் மட்டும் தீண்டதக்கதக மாறுவது எப்படி எந்த சிந்தனை அந்த இளம் லட்சுமிக்கு எழுந்தது. அந்தக் குரலுக்கு உரியவர்களை லட்சுமி பார்த்ததில்லை ஆனால் அவர்களை பார்க்கும் ஆர்வம் அவருக்கு இருந்தது. தனது பாட்டியிடம் அவர்கள் யார்? அவர்களை ஏன் வீட்டிற்கு அருகில் பார்க்க முடியவில்லை என்று தனது பாட்டியிடம் லட்சுமி கேட்டார். அதற்கு அவர் பாட்டி அந்த ஆதிவாசிகளையும் அவர்களது குழந்தைகளையும் பார்த்தால் நீங்கள் குருடாகிவிடுவீர்கள் என்று பதிலளித்தார். 



ஆனால் இந்த பதில் லட்சுமிக்கு பிடித்தமானதாக இல்லை. ஒருநாள் மலையடிவாரத்திற்கு சென்று அங்கே மூடாத மார்பில் அழகிய மணிகளால் அலங்கரித்து நின்று கொண்டிருந்த ஆதிவாசி பெண்ணின் கையை பிடித்துக்கொண்டார். லட்சுமியின் பாட்டி தண்டனை தருவார் என்று பயந்த அந்தப் பெண் அழத்தொடங்கிவிட்டார். அவளை தன்னுடைய நட்பாக்கி தினமும் அவளை தனது வீட்டிற்கு அழைத்துச்செல்வதை வாடிக்கையாகினார். அவரது பாட்டி முதலில் கடுமையாக எதிர்த்தார். ஆனால் லட்சுமியின் மாமா ஒரு காந்தியவாதி. அவர் சொன்னார் "நாம் யாரையும் தீண்டாதவர்களாக கருதக்கூடாது, நமது வீட்டை அனைவருக்காகவும் திறந்துவைக்கும் காலம் வந்துவிட்டது". இது இளம் லட்சுமியின் மனதில் ஆழப்படிந்தது. தனது தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றியும் பெற்றார்.
கல்வி நிலையத்தில்...



    சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் லட்சுமியின் கல்வி துவங்கியது. பின்னர் அரசு பள்ளிக்கு மாறினார். 1930ல் எஸ்.எஸ்.எல்.சி முடித்தார்ர். பள்ளியில் லட்சுமி உளிட்ட பல மாணவிகள் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கையால் நூல் நூற்று தயாரித்த கதர் ஆடைகளையே அணியத்துவங்கினர். 


    தேசிய இயக்கம், சமூக சீர்திருத்தம், குழந்தை திருமணம் ஆகியவை குறித்தெல்லாம் தனது வீட்டில் நடக்கும் விவாதங்களையே  அவரது பள்ளியிலும் நடந்தது அவருக்கு மகிழ்ச்சியளித்தது. அவரது தேசிய உணர்வு கொண்ட வீட்டுச்சூழல் பெருமையை கொடுத்தது. அவரது தாயார் அம்மு சுவாமிநாதன் மாதர் அமைப்பில் ஈடுபட்டவர் மட்டுமல்ல அவரது வீட்டில் இருந்த அந்நிய துணிகளை ரோட்டில் எரித்த ஒரு தீவிர தேசபக்த தொண்டரும் ஆவார். லட்சுமியை கூட்டங்களுக்கு அழைத்துச்செல்வார். இப்படியாக இளம் லட்சுமி தேசம் குறித்த புரிதலுக்கு வந்து சேர்ந்தார்.


    லட்சுமியின் தந்தை சுவாமிநாதன் அன்று புகழ்பெற்ற வழக்க்றிஞராக இருந்தார். அச்சமயத்தில் இந்தியாவில் மைனராக இருந்த ஜமீன்தார்களை பிரிடிஷ் அரசு வார்டன்களை நியமித்து இருந்தது. கடம்பூர் ஜமீன் தனது ஆங்கில வார்டனை சுட்டுவிட்டார். அந்த வழக்கு சுவாமிநாதனிடம் வந்தது. அவர் அந்த வழக்கில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி அடைந்தார். இந்தனால் இவர்கள் குடும்பத்திற்கு நல்ல மரியாதை உயர்ந்தது. ஆனால் அவரது ஆங்கிலேய நண்பர்கள் இவருடன் பழகுவதில் வேறுபாட்டை காட்ட துவக்கினர். லட்சுமியின் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் உனது தந்தை செய்தது சரியல்ல என வாதிட்டனர். இப்படியான சில நிகழ்வுகள் அவரது வாழ்வில் நடந்தது.



    1930ல் சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் உயர் படிப்புக்காக லட்சுமி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்த கல்லூரியின் முதல்வர் ஜமீந்தார் சுட்டுக்கொன்ற ஆங்கிலேயரின் தங்கைதான். எனவே கண்டிபாக தனக்கு அக்கல்லூரியில் இடம் கிடைக்காது என நினைத்தார். ஆனால் லட்சுமியின் மதிப்பெண்கள் சிறப்பாக இருந்ததும், அந்த பெண்மணியின் நேர்மையான செயலபாடும் இவருக்கு அக்கல்லூரியில் இடத்தை உறுதி செய்தது.  



    அங்கும் அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை தீவிர காங்கிர இளைஞர் அணியில் இணைந்தார்.  இவ்வணிக்கு பிற்காலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக விளங்கிய பி. இராமமூர்த்தி தலைவராக இருந்தார். லட்சுமியின் பார்வை தேசம் முழுவதும் இருந்தது. அச்சமயத்தில் மாவீரன் பகத்சிங்க் கைது செய்யபட்டு அந்த வழக்கு உலகம் முழுவதும் பேசப்பட்டது. அந்த வீர இளைஞனுக்காக, அவனது வழக்குக்காக மக்களிடன் நிதி வசூல் செய்யப்பட்டது. கேப்டன் லட்சுமி பகத்சிங் வழக்குக்காக அவரது கல்லூரியில் மாணவர்களிடம் நிதி திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டார். அதே 1930-ம் ஆண்டில் அறப்போராட்டத்தில் மறியலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதும் சிறையில் இருந்தார்.   



    காங்கிரஸ் நிகழ்வுகளில் பங்கேற்றாலும் தன்னை ஒரு காங்கிரஸ்காரராக எப்போதும் லட்சுமி நினைத்ததில்லை. விடுதலைப் போராட்ட ஆதரவாளாராக மட்டுமே நினைத்துக்கொண்டார். அனைத்து அகிம்சை சத்தியாகிரகங்களும், போராட்டங்களும் தடியடியில் முடிவுற்றது அவருக்கு உவர்ப்பானதாக இல்லை. லட்சுமி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போதுதான் முதன் முதலாக கம்யூனிசக் கோட்பாடுகளை எதிர்க்கொண்டார். பல ஆண்டுகள் ஜெர்மனியில் வசித்துவந்த, புரட்சிச் சிந்தனைகொன்ட, சரோஜினி நாயுடுவின் சகோதரியான சுஹாசினி லட்சுமியை சந்தித்தார். அவர் லட்சுமிக்கு எட்கர் ஸ்னோவின் சீன வானில் சிவப்பு நட்சத்திரம் என்ற புத்தகத்தை கொடுத்தார். அதுமுதல் லட்சுமியின் சிந்தனையின் நிறம் மாறத்து வங்கியது, வாழ்வின் பாதையும்தான்...
    (புதிய பாதை தடத்தை சந்திக்கலாம்)