cpim லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cpim லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 டிசம்பர், 2024

செங்கொடி இயக்கத்தின் பாரம்பரிய தளம் கடலூர் மாவட்டம்

 

தியாகிகள் ஸ்துபி பின்னணி

கடலூர் மாவட்ட செங்கொடி இயக்க வரலாறு என்பது தங்கள் வாழ்வை இவ்வியக்கத்திற்காகத் தியாகம் செய்த தியாக சீலர்களான   பல்லாயிரம் தோழர்களின் வரலாற்றின் தொகுப்பே. தலைமுறை  தலைமுறையாய் செங்கொடியைக் காத்து வரும் இந்த தோழர்களின் உழைப்பில்தான், மக்களுக்காக எதையுமே எதிர்பார்க்காமல் உழைக்கும் அந்த மகத்தானவர்களின் வியர்வையில்தான் இன்று கடலூர் மாவட்டத்தில் கம்பீரமாய் பறக்கிறது செங்கொடி!

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட உழைப்பாளி மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இம்மாவட்டத்தில் இருதரப்பு மக்கள் மக்களையும் மோதவிட்டு, அதனால் ஆதாயம் அடையும் சக்திகள் தொடர்ந்து கலவரங்களை உருவாக்குவது கடந்த நூற்றாண்டு வரலாறு. ஆனால் செங்கொடி இயக்கம் தன் தோற்றத்திலிருந்தே இம்மாவட்டத்தில் இருதரப்பு மக்களின் ஒற்றுமைக்காகத் தொடர்ந்து களமாடி வருகிறது. ஒற்றுமையை வலியுறுத்தும் அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் பக்கம் சமரசம் இல்லாமல் உறுதியோடு நின்றதுதான் அதன் வீரம் மிக்க வரலாறு.

 

71 ஆண்டுகளுக்கு விதைக்கப்பட்ட விதை  

 

தமிழ்நாட்டில் மொத்தம் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் பெயர் தென்னாற்காடு மாவட்டம்  என்று இருந்தது.பிறகு கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம், புதுச்சேரி மாநிலம் எனப் பிரிந்து நிற்கும் ஒன்றுபட்ட தென்னார்காடு மாவட்டத்தின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு சிதம்பரம் நகரில் 1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்றது அப்போது கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 120 ஆகும். கட்சி பிளவுக்குப் பின்னர் 1975 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் 100 கிளைகளும் சற்றொப்ப 1000 கட்சி உறுப்பினர்களும், ஆயிரங்களில் வர்க்க வெகுஜன அமைப்பின் உறுப்பினர்களும் இருந்தனர். ஆனால் இன்று சுமார் 1000 கிளைகளும், 10,000 கட்சி உறுப்பினர்களும், லட்சக்கணக்கில் வர்க்க, வெகுஜன உறுப்பினர்களும் உயர்ந்திருக்கிறார்கள்.

 பி சி ஜோஷி கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட, மும்பை நகரில் 1943 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அகில இந்திய மாநாட்டில் தமிழகத்திலிருந்து இராமமூர்த்தி சி. எஸ். சுப்ரமணியம், மோகன் குமாரமங்கலம், சி.கோவிந்தராஜன், கே.ரமணி உட்பட 8 பேர் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர். இதில் சி.கோவிந்தராஜன் கடலூர் மாவட்ட ஸ்தாபக தலைவர்களில் ஒருவர். 1949 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் அகில இந்தியச் சமாதான கவுன்சில் மாநாடு நடைபெற்றது.  தென்னார்காடு மாவட மாதர் சங்கத் தலைவராக இருந்த ஷாஜாதி அதில் பிரதிநிதியாக கலந்துகொண்டார். 

மார்க்சிஸ்ட் கட்சி உதயமாகிறது...

1964 ஆம் ஆண்டு துவக்கத்தில் கும்பகோணத்தில் நடைபெற்ற கட்சியின் மாகாண கவுன்சில் கூட்டத்தில் பெரும் தத்துவார்த்த மோதல் நடைபெற்றது. கட்சியின் வர்க்கக்கூட்டு என்ற போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.இராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன். என்.சங்கரையா. ஏ.பாலசுப்ரமணியம், வி.பி.சிந்தன், கே.ரமணி, சி.கோவிந்தராஜன் மற்றும் எஸ்.நடராஜன் உள்ளிட்ட 29 கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதில் சி.கோவிந்தராஜன் மற்றும் எஸ்.நடராஜன்  ஆகியோர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் பொருட்டு மதுரையில் அதே ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 தேதிகளில் தமிழ்நாடு மாநில கம்யூனிஸ்ட் இணைப்பு கூட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது.  இது 54 தோழர்களை கொண்ட ஒரு மாநில இணைப்பு குழுவை உருவாக்கியது. இந்தக் குழுவில் தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து சி.கோவிந்தராஜன், எஸ்.நடராஜன், கே.வேணுகோபால்,  டி.பி.கோவிந்தன் மற்றும் டி.ஆர்.விஸ்வநாதன் ஆகிய ஐந்து தோழர்கள் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து கட்சியின் தென்னார்க்காடு மாவட்ட மாநாடு 1964 செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கடலூரில் சிறப்பாக நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் மாவட்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.  எஸ்.நடராஜன் கட்சியின் மாவட்ட செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவசர நிலை காலத்தில்

1975 ஜூன் மாதம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பிரச்சாரம் செய்தது. நெய்வேலி, சிதம்பரம், புதுவை, நெல்லிக்குப்பம், கடலூர் விழுப்புரம், விருத்தாசலம், பெண்ணாடம், தேவபாண்டலம், பண்ருட்டி போன்ற இடங்களில் 50-க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்கள் நடத்தி, தென்னார்காடு மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் தீரத்தோடு அடக்குமுறையை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தது.

1976 ஜனவரி 30 ஆம் தேதி அன்று தமிழக திமுக அரசாங்கத்தை மத்திய காங்கிரஸ் அரசு கலைத்து. கடுமையான அடக்குமுறையை ஏவியது  தமிழகத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். சிறைச்சாலைகள் எங்கும் மரண ஓலம் கேட்டது. தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி ஏற்பட்ட பிறகு, தென்னார்காடு மாவட்டத்தில் தோழர்கள் எஸ்.நடராஜன், சி.கோவிந்தராஜன் இருவர் மீதும் மிசா சட்டத்தின் கீழ் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தோழர் எஸ்.நடராஜன் ஒரு மாதத்திற்கு பின் கைது செய்யப்பட்டார்.

தோழர் கே திருவேங்கடம் மிசாவின் கீழ் கைது செய்யப்பட்டார். நெய்வேலியில் தோழர் கே.சிவதாஸ் கைது செய்யப்பட்டு 15 தினங்கள் காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். தோழர் சி.கோவிந்தராஜன் தலைமறைவாக இருந்து செயல்பட்டார். நெல்லிக்குப்பத்தில் தோழர்கள் அமீர், லாசர், தயாளன் மூவரும் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர். நடுவீரப்பட்டு நான்கு தோழர்கள் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.

கட்சி பணிகளைத் தொடர்ந்து எடுத்துச்செல்ல, இக்கொடுமைகளுக்கு எதிராக மக்களைத் திரட்ட கட்சியின் மாவட்ட குழுவின் முடிவின்படி தோழர்கள் எஸ்.வீரபத்திரன், கே.பாலகிருஷ்ணன் (இன்றைய மாநிலச் செயலாளர்) இருவரும் தலைமறைவாக இருந்து செயல்பட்டனர். செப்டம்பர் மாதம் விருத்தாசலத்தில் வைத்து தோழர் என்.ஆர்.ராமசாமி, துரைசாமி, கோதண்டம் மூவரும் கைது செய்யப்பட்டு மூன்று தினங்கள் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

  நெய்வேலியில் சிஐடியு சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த எஸ்.வீரபத்திரன் வேலை நீக்கம் செய்யப்பட்டதும், சென்னை சிறையில் வைக்கப்பட்டிருந்த தோழர் கே.திருவேங்கடம் அவர்களுக்குக் கண்பார்வை பாதிப்புக்குள்ளானதும் வரலாறாய் நிற்கின்றது..

காவிரி படுகையில் துவங்கி...

காட்டுமன்னார்கோவில் சிதம்பரம் வட்டங்களில் விவசாயிகளை விவசாய தொழிலாளர்களைத் திரட்டுகின்ற போது மிராசுதார்களுடைய, அரசினுடைய கடுமையான அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பல நூறு தோழர்கள் பொய் வழக்கிடு கைது செய்யப்பட்டனர். தடியப்பட்டனர். தலைமறைவாக வாழ்க்கை நடத்தினர். எனினும் செங்கொடி இயக்கம் உழைக்கும் மக்கள் விடுதலைக்கு, கூலி உயர்வுக்கு, குத்தகை உரிமைக்குத் தொடர்ந்து களமாடியது. இந்த போராட்டங்களுக்கு 60 ஆண்டுகள் பாரம்பரியம் உண்டு. பின்பு மெல்ல மெல்ல மாவட்டம் முழுவதும் படர்ந்து சென்றது செங்கொடி.

விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், ஆலை தொழிலாளிகள், பலகலைக்கழக மாணவர்கள், தீரமிக்க இளைஞர்கள், வீரமுடைய பெண்கள் எனப் பல பகுதி மக்கள் அணி திரண்டனர். தமிழகத்தின் மிக உயர்ந்த கல்வி நிலையமான அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதல் தொழிற் சங்கம் துவக்கியதும், அதை அரசுடைமையாக்க 70களில் கோரிக்கை வைத்ததும், 2014ல் அதை அரசுடைமையாக்கியதும் செங்கொடி இயக்கமே!

போராட்டம் தொடர்கிறது...

 காவல் நிலைய கொடுமைகளுக்கு எதிராகத் தமிழக வரலாற்றில் தடம் பதித்த கடலூர் மாவட்ட தோழர்கள், தற்போது உச்ச நீதி மன்றத்திலும் தங்களது சட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பாசிச அபாயத்தை எதிர்த்து, கூட்டு களவாணி கார்ப்ரேட் முதலாளித்துவத்தை எதிர்த்து, செங்கொடி இயக்க புதல்வர்கள் தேசம் முழுவதும் களமாடிக்கொண்டே இருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்திலும் அந்த போராட்டம் தொடர்கிறது.

உலகமயம் உருவாக்கி உள்ள சமூக கொடுமைகளுக்கு எதிராக நெருக்கடிகள் மிகுந்த சூழலில் சாதியின் பெயரால், இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், உருவ வழிப்பாட்டுக்குப் பின்னால் மக்களைப் பிரித்தாலும் நிலையில், உழைக்கும் வர்க்கமாய் மக்களை ஒன்று திரட்ட செங்கொடி இயக்கம் போராடி வருகிறது.

சமூக மாற்றத்திற்கான கோபம் பொதித்த செங்கொடியை முன் தலைமுறையை எங்களிடம் கொடுத்தனர். அதை நாங்கள் பற்றிச் செல்கிறோம். எங்கள் தலைமுறை களமாடும் செங்கொடியை அடுத்த தலைமுறை பற்றி எழும். தமிழக  செங்கொடி இயக்க வரலாற்றில் எப்போதும் கடலூர் மாவட்டம் முன்னணி படையாய் நிற்கும் என்பதைப் பறைசாற்றும் வகையில் 24வது மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது.   

 12.12.2024 அன்று தீக்கதிரில் வெளிவந்த எனது கட்டுரை


 

 


செவ்வாய், 1 அக்டோபர், 2024

சமுத்திரத்தாயின் சரித்திரக் குழந்தை’ சேதுக்கால்வாய் போராட்டமும் தோழர் சீத்தாராம் யெச்சூரியும்!

இறப்பவர்கள் எல்லாம் காலமாவதில்லை. தன் வாழ்நாள் முழுவதும் மனித குலத்தை நேசித்து அதற்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் மட்டுமே காலமாகி நிற்பர். தோழர் சீத்தாராம் யெச்சூரி காலமாகி நிற்கிறார். 

எளிய மக்களுக்கு ஒளிவீசும் தாரகையாக என்றும் ஜொலிப்பார். சமூகத்தில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனையையும் அவர் மிகவும் ஆழமாக புரிந்துகொண்டு அதன் தத்துவ அடிப்படையில் தனது வாதங்களை முன்வைப்பார். சேது கால்வாய் திட்டம் என்ற தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கான வாசலை மதத்தின் பெயரால் மத வெறியர்கள், தடை செய்ய திட்டமிட்டு பிரச்சாரம் செய்தனர். 

“நாம் வணங்கும் ராமபிரான் கட்டிய இப்போதும் கடலுக்கடியில் இருக்கும் ராமர்பாலம் (ராமசேது) சேது சமுத்திரத் திட்டத்தால் உடையும் ஆபத்து உள்ளது; இந்துக்களின் நம்பிக் கையை மத்திய காங்கிரஸ் அரசும், திமுக வும் திட்டமிட்டு அழிக்க பார்க்கிறது’’ என்ற கூப்பாடு எழ ஆரம்பித்தது. ஒரு பக்கம் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சேதுகால்வாய் திட்டத்தை அமலாக்க வேண்டுமென தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது. 

கலாச்சாரம் எனும் ஊடகம் 

அப்போது (2008) சென்னையில் தமுஎகச மாநாட்டில் தோழர் யெச்சூரி “மூட நம்பிக்கைகள், மதவெறி போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு ஊடகமாக கலாச்சாரம் திகழ வேண்டும். இலக்கிய நயத்தை ரசித்துப் போற்றுகிற அதே நேரத்தில், புராணக் கற்பனையையும் வரலாற்று உண்மையையும் பாகுபடுத்தி பார்க்க வேண்டும்.  இன்றைய இலங்கை, இந்தியா உள்பட ஒரே நிலப்பகுதியாக இருந்த காலகட்டம் உண்டு. கடல் மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்துதான் இலங்கை தனித் தீவாகியது. அதற்கு இடையே ஒரு பாலம் இருந்ததாக சொல்வது இனிய புராண கற்பனை. அதையே வரலாற்று உண்மையாகக் கூறி சேது சமுத்திரத் திட்டம் போன்றவற்றை முடக்க முயல்வார்களானால் அதை எதிர்த்துப் போராட வேண்டும்” என முழங்கினார். 

சேதுக் கால்வாய் திட்ட அமலாக்கத்திற்காக வாலிபர் சங்கம் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக அவர் எங்களுடன், பின்னாளில் ஜனாதிபதியாக உயர்ந்த பிரணாப் முகர்ஜியையும் பார்க்க வந்தார். தென்மாவட்டங்களில் நடைபெறும் சாதி மோதல்களின் அடிப்படைக் காரணிகளில் முக்கியமானது வேலையில்லா திண்டாட்டம் என தென்மாவட்ட கலவரங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் குழு குறிப்பிட்டது. அதற்கு சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் முதல் பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்தன.  

சேதுத் திட்டம்... 

இந்திய பெருங்கடல் பகுதியில் இராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளுக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட கடல் பகுதி பாக் நீரிணை என்றும், பாம்பனுக்குப் பிறகான கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதி பாக் கடல் என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் பாக் கடல் பகுதி கப்பல்கள் சென்று வரத் தேவையான ஆழத்தோடு உள்ளது. இதனால் இங்கு கால்வாய் தோண்டத் தேவையில்லை. 

ஆனால், பாக் நீரிணை பகுதியும், அங்கு உள்ள மணற் திட்டுகளும் கப்பல்கள் செல்வதற்கு தேவையான ஆழமில்லாத பகுதிகள். இந்த பாக் நீரிணையையும், மணற் திட்டையும் ஆழப்படுத்தி ஒரு கால்வாய் அமைக்கும் பணியே சேது சமுத்திரத் திட்டமாகும். 

1860-ல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேயரான கேப்டன் ஏ.டி.டெய்லர் பாம்பனுக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை தோண்டும் திட்டத்தை 1863-ல் சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர் வில்லியம் டெனிசன் ஏற்றுக்கொள்கிறார். பின்பு 1872 - ல் சென்னை துறைமுகப் பொறியியலாளர் ராபர்ட்ஸன் ஒப்புதல் தர ஆய்வுப்பணிகள் துவங்கி நடந்து வந்தன. 

அந்த ஆய்வுகளைப் பின் பற்றி, நாடு விடுதலையானபின் 1955-ல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நியமித்த ராமசாமி தலைமையிலான சேது சமுத்திரத் திட்டக் குழு ரூ.998 லட்சம் ரூபாய்க்கான திட்ட மதிப்பீட்டை சமர்ப்பிக்கிறது. நீண்டகாலத்திற்குப் பிறகு 1983-ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது நியமித்த லெட்சுமி நாராயணன் குழு, 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்தை தயாரிக்கிறது. 

2004ல் மத்தியில், இடதுசாரிகள் ஆதரவுடன் திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. புதிய ஆய்வுக்குழு போடப்பட்டது. அப்போது செலவாகும் என திட்டமிடப்பட்ட தொகை 2427 கோடி. 2004 டிசம்பர் 6 ஆம் தேதி சேது சமுத்திர கால்வாய்த் திட்ட நிறுவனம் அமைக்கப்பட்டது. இதன் துவக்கவிழா 2005 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. 

இராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டினத்தில் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. ஆனால் மக்களின் மத நம்பிக்கையை தூண்டி, நீண்டநெடிய மிகப்பெரிய திட்டம் நிறுத்தப்பட்ட நிகழ்வு உலகிலேயே இதுவாகத்தான் இருக்கும். அதற்கு பாஜகவும் இந்து அடிப்படைவாத குழுக்களுமே காரணம். 

இந்நிலையில் தான், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 2007 ஆம் ஆண்டு அன்றைய மாநிலத் தலைவர்களான எஸ்.கே.மகேந்திரன், எஸ்.கண்ணன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஆர்.வேல்முருகன் ஆகியோர் தலைமையில் மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை ஆகிய முனைகளில் துவங்கி பிரம்மாண்டமான சைக்கிள் பேரணி நடத்தியது. 

அடுத்து 2008ஆம் ஆண்டு டிசம்பர் 13 முதல் 28 தேதிவரை ‘வேண்டும் வேலை’ என்ற முழக்கத்துடன் கன்னியாகுமரி, கோவை, இராமேஸ்வரம் ஆகிய முனைகளில் எஸ்.கண்ணன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஆர்.வேல்முருகன் தலைமையில் புறப்பட்ட சைக்கிள் பிரச்சாரம் 3000 கிலோமீட்டர் பய ணித்தும் 600 மையங்களில் பிரச்சாரமும், 100 பொதுக்கூட்டங்களையும் நடத்தியது. இதில் முக்கிய முழக்கமாக சேது சமுத்திர திட்டம் இருந்தது. 

இதன் தொடர்ச்சியாக 2010ஆம் ஆண்டு துவக்கத்தில் சேதுகால்வாய் திட்டத்தை அகில இந்திய கவனஈர்ப்பு இயக்கமாக மாற்றிட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தலைநகர் தில்லியில் 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தமிழகத்திலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தலைநகர் தில்லியை நோக்கி திரண்டனர். அன்றைய மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் கடுமையான மழையிலும் போராட்டம் நடந்தது. போராட்டத்தை முடித்து வைக்க தோழர் சீத்தாராம் யெச்சூரி வருகை தந்தார். 

அவரது வருகையும் உரையும் இளம் பட்டாளத்தை மிகவும் உற்சாகம் அடையச் செய்தது. தோழர் யெச்சூரிதான் அதன் பின் அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு கொடுக்க எங்களை அழைத்துச் சென்றார். வாலிபர் சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர் தபஸ் சின்ஹா, மாநில நிர்வாகிகள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, செ.முத்துகண்ணன், இல.சண்முகசுந்தரம், ஆர்.வேல்முருகன், மீனாட்சி, எஸ்.பாலா உள்ளிட்டோர் சென்றோம். 

அந்த பிரம்மாண்டமான நாடாளுமன்ற கட்டடத்துள் அவருக்கு இருந்த மரியாதை எங்களை சிலிர்க்க வைத்தது. அதுமட்டுமல்ல, அவர் சேதுகால்வாய் திட்டம் குறித்து பிரணாப் முகர்ஜியிடம் விவரித்தது எங்களை ஆச்சரியப்பட வைத்தது. காரணம், அவருக்கு அந்த பிரச்சனையில் இருந்த நுட்பமான ஞானம். ஒரு மனு கொடுக்கும் நிகழ்வாக அதை கருதாமல் அந்த திட்டம் வருவது தமிழகத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உள்ளார்ந்த நேசத்துடன் அவர் விளக்கினார். 

தமிழக வாலிபர் இயக்கம் அவரது நினைவுகளை என்றும் உயர்த்திப் பிடிக்கும்! 

எஸ்.ஜி.ரமேஷ்பாபு 

மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) 

(16.09.2024 தீக்கதிரில்  எனது நினைவஞ்லி கட்டுரை)

சனி, 5 ஜனவரி, 2013

பெண்கள் மீதான பாலியல் கொடூரம் - தனி நபர்களின் பிரச்சனையா?



அதிகரித்துக்கொண்டே இருக்கிறது கொடுமைகள். எங்கும் நிம்மதியாய் நமது சோதரிகள் நடமாட முடியாதோ என்ற அச்சம் அனைவரையும் சூழ்ந்து வருகிறது. நிம்மதி இழந்து தவிக்கும் சமூக மனநிலை மிகவும் பயம் கொள்ள வைக்கிறது. யார் மீதும் நம்பிக்கை வர மறுக்கிறது. பெண்கள் மீதான வன்முறைகள் சமூக பொதுவெளியில் பல விவாதாங்களை பீறிட்டெழ செய்துள்ளது.
- பெண்கள் உடைகள்தான் காரணம் என மத அடிப்படைவாதிகள்  தொடர்ந்து ஓதிக்கொண்டே இருக்கிறார்கள். ஆபாசமாய் இருக்கிறதாம். அதனால் ஆண்களுக்கு காம உணர்வு தூண்டப்படுகிறது என்கிறார்கள். இதைவிட அபத்தம் எதுவும் இருக்க முடியாது! வாச்சாத்தியிலும், திருக்கோவிலூர் இருளரின் நான்கு பெண்மக்களும் இன்னும் இப்படி ஆயிரமாயிரமாய் சூரையடப்பட்ட நமது சகோதரிகள் என்ன ஜீன்சும் டீ சர்ட்டுமா போட்டிருந்தனர்.  ஜீன்சும் டீசர்ட்டும்தான் காரணம் என்றால் பல நாடுகளில் பெண்கள் வாழவே முடியாதே? அங்கெல்லாம் ஆண்கள் இல்லையா? அல்லது இங்கு இருப்பவர்களுக்கு மட்டும்தான் கண்கள்  இருக்கிறதா?

- இந்தியாவில்தான் இப்படி பாரதத்தில் இல்லை என கிறுக்குத்தனமாய் பேசுகிறார் ஆர்.எஸ்.எஸ் பகவத் இந்த டுபாக்கூர் கம்பெனி ஜந்துக்கள் எங்கு வாழ்கிறரக்ள் என தெரியவில்லை. இனி இந்தியாவில் இவர்கள் பா.ஜ.கட்சிக்கு வாக்கு கேட்டு வரமாட்டார்கள் என நம்புவோமாக. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பெண்களை அனுகுவதில் தாலிபான்களுக்கு கொஞ்சமும் சலைத்தவர்கள் இல்லை. எனவே அவரிடம் இதைவிட முற்போக்காக கருத்தை எதிர்பார்ப்பது நமது தவறுதான்.  

- பெண்கள் தங்கள் உடலை மொத்தமாக மறைத்துக்கொள்ள வேண்டும் என உபதேசங்கள் நடக்கிறது. இந்த ஆதினங்கள் கொஞ்ச நாட்களாக நித்தியானந்தாக்களிடம் பழகியதால் வந்த பிரச்சனை இது. இரவு நேரங்களில் தனியாக போகலாமா? ஊர் சுற்றலாமா என போதிக்கின்றனர். இவிங்க கோவிலுக்குள் நடந்த பாலியல் காட்சிகள் உலகம் முழுவது யூ டியூப் ஏறி ஊர் சுற்றியதை மறந்துவிட்டு ஊருக்கு உபதேசம் செய்கின்றனர்.

இவையெல்லாம் இருக்கட்டும் 

அடிப்படையில் தாய்வழி சமூகத்தில் வந்த மனிதகுலம், தேவைக்கு அதிகமாக உபரி தோன்றிய போது சொத்துரிமைக்காக அவளை அடிமைபடுத்தியது. அந்த அடிமைதனத்தை மொழி, கடவுள், சாதி, மதம், இலக்கியம் போன்ற பண்பாட்டு தளத்தில் உறுதி செய்தது. அதனை தொடர்ந்து வந்த முதலாளித்துவம் அதன் உச்ச வளர்ச்சியில் பெண்களை வெறும் சதை பிண்டமாக மாற்றியது.

1990 களில் இந்தியாவில் துவங்கிய உலகமய வெறியாட்டம் தனியார்மயம் தாளாரமயம் என்ற பெயரில் லாபம் மட்டுமே லட்சியமாக கொண்டு சூரையாட துவங்கியது. பெண்களை வெறும் விளம்பர பதுமைகளாக, அவர்களின் அழகு, உடல், நிறம், நடை உடை பாவனை எப்படி இருக்க வேண்டும் என சமூக பொது புத்தியில் பல விழுமியங்களை பதியம் போட்டது. 23 ஆண்டுகால ஏகாதிபத்திய உலகமய விளைவைதான் இன்று நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

குடும்பங்களில் உள்ள ஜனநாயகமற்ற உரவு முறை யாரையும் யாரோடும் விவாதிக்க விடுவதில்லை. அதன் விளைவு பலவழிகளில் வெளிப்படுகிறது. ஆக பிரச்சனை டெல்லி துவங்கி நாடுமு ழுவதும் பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் தனி நபர்கள் மட்டுமல்ல.

இரு பத்தாண்டுகள் இளம் தலைமுறையை சீரழித்த அரசியல் கொள்கைக்கு இதில் பங்கில்லை என தப்பிக்க போகிறோமா? குடும்பதளம், பண்பாட்டுதளம், அரசியல்தளம், பொருளாதாரதளம் என்ற நான்கு தளங்களில் இப்பிரச்சனை தொக்கி நிற்கிறது. நாகரீகம் மிக்க சமூகமாக தம்மை நினைத்துக்கொள்ளும் மனித சமூகம் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து திரண்டெழாமல் விடிவு கிடைக்க போவதில்லை. அதற்காக மக்களை திரட்ட காலம் பிடிக்கும் அதுவரை இருக்கிற சட்ட்டங்களை முழுமையாக செயலாக்குவதிலும், புதிய ஆலோசனைகளை உருவாக்கி குற்றங்களை தடுப்பதும் அவசியம். வீதியில் போராடுகிற மக்களுக்கு வாழ்த்துக்களை சொல்வதில் மட்டும் அர்த்தம் இல்லை அவர்களுடன் கை இணைத்திட முன் நோக்கி செல்வோம்.

நேறையதினம் நீதிபதி வர்மா குழுவிடம் மார்க்சிஸ்ட் கட்சி சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளில்  குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்  கீழே உள்ளது. இவைகளை அரசு பரிசிலனை செய்யலாம்.

1. கூட்டாக வன்புணர்ச்சி, குழந்தைகள் மீதான வன்புணர்ச்சி, கடத்திச் சென்று, அறையில் பூட்டி வைத்து வன் புணர்ச்சி உள்பட கொடூரமான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் அதிகபட்ச தண்டனையாக சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் ஆயுள் தண்டனை விதிக்கப்படவேண்டும்.

2. இதர வன்புணர்ச்சி வழக்குகளில், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படவேண்டும்.

3. மேற்கண்ட இருவகை பாலியல் வன்குற்றங்களிலும், அரசு முன்மொழிந்துள்ள சட்ட மசோதாவில் குறிப்பிடப் பட்டுள்ள குறைந்தபட்ச தண்டனை என்பது அதிகரிக்கப்படவேண்டும். ‘அசாதாரண சூழ்நிலைமைகள்’ என்ற பெயரில் குறைந்தபட்ச தண்டனைக்கும் குறைவாக மேற்கண்ட வழக்குகளில் நீதிமன்றங்களே தண்டனையைக் குறைத்துக்கொள்ள அனுமதி அளிக்கும் எந்த ஒரு விதியும் மேற்கண்ட மசோதாவில் இடம்பெறக்கூடாது.

 4. நீதிமன்றங்களில் பாலியல் வன்குற்றங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் குறிப்பிட்ட கால வரையறை யில் தீர்வுகாணப்படவேண்டும், இதற்காக சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க சட்டத்தில் வழி செய்யப்படவேண்டும்.

5. பாலியல் வன்முறைகள் தொடர்பான அனைத்து வழக்குகளும், மூன்று மாத காலத்திற்குள் தீர்வுகாணப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஒட்டுமொத்த வழக்கின் நடவடிக்கைகளும் முடிய வேண்டும் என்பதால், விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர் மேல்முறையீடு செய்துகொள்ள அனுமதிக்கப்படக்கூடாது.

6. குறிப்பிட்ட காலத்தில் இதுபோன்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது உள்பட சட்டத்தை அமலாக்காத பொது ஊழியர்கள் அவசியம் தண்டனைக்கு உள்ளாக்கப்படவேண்டும். அரசால் முன்மொழியப்பட் டுள்ள மசோதாவில் இது தொடர்பான திருத்தத்தில் குறைந்தபட்ச தண்டனை என்ன என்பது குறிப்பிடப்பட வேண்டும்.

7. பாலியல் வன்முறைக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரண உதவி உள்பட மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் குறித்து சட்டத்தில் அவசியம் வரையறுக்கப்படவேண்டும். 

8. பெண்கள் மீது ஆசிட் வீசி தாக்குவது என்பது ஒரு கடுமையான குற்றமாக கருதப்படவேண்டும். இந்தக் குற்றத்திற்கு குறைந்தபட்ச தண்டனை என்ன என்பது வரையறுக்கப்படவேண்டும். அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படவேண்டும்.

9. பெண்களுக்கு எதிராக பாலியல் வன்குற்றங்களில் ஈடுபடுகிற, 18 வயதுக்கு உட்பட்ட நபர்கள் உள்பட சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டனைக்குள்ளாக்கப்படுவது மற்றும் இத்தகைய குற்றங்களை தடுப்பதற்கான பல்வேறு அரசு அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்கும் விதமாக உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்பது சட்டப்பூர்வமாக்கப்படவேண்டும்.

10. இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் இதர பொருத்தமான சட்டங்களில் பாலியல் வன்முறை தொடர்பான விதிகள், பாதிக்கப்படும் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு (பெண்களுக்கு) நிவாரணம் அளிப்பதாக இருக்கவேண்டும்; இரு தரப்பினருக்கும் பொதுவானதாக இருக்கக்கூடாது என்ற புரிதல்நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மசோதாவில் இணைக்கப்படவேண்டும். 

11. பெண்ணின் உடலை ஒரு நுகர்பொருளாக சித்தரிக்கும் மிகவும் மோசமான, பாலியல் வக்கிரத்தன்மை கொண்ட விளம்பரங்களும், பெண்களை கேவலமாகவும் இழிவாகவும் சித்தரிக்கிற செய்திகளும் ஒளிபரப்பப்படுவதையோ, பிரசுரிக்கப்படுவதையோ தடுக்கும்விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்; இத்தகைய மோசமான கலாச்சாரத்திற்கு எதிரான உணர்வு ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

12. பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் குறித்த பாடம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அனைத்து பாடத்திட்டங்களிலும் கட்டாயமாக்கப்படவேண்டும்; மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளம் ஆண்கள், இளம் பெண்களுக்கு பாலின சமத்துவம் குறித்து போதிக்கும் பாடங்கள் இணைக்கப்படவேண்டும்.