குயிலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குயிலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

மறக்க முடியாத குயிலி என்ற படைத் தளபதி

விடுதலைப் போரில் பெண்கள் - 8


சூரைக்காற்று எழுந்ததால் சூழ்ந்த புயலும், அதனால் எழுந்த கடலின் அலையும் ஓங்கியடித்து ஓய்ந்த கடற்கரையாய் தேசம் கிடந்த 1857 ன் மாபெரும் எழுச்சியின் பாரம்பரியத்தை, அதன் வராற்றை, அதன் நினைவுகளை அசைப்போட ஆயிரமாயிரம் இருந்தது இந்திய மக்களுக்கு..

வேலுநாச்சியை நினைக்கும் எந்த ஒரு வரலாறு ஆசிரியனும் அவளது வெற்றிக்கு அட்சாரம் போட்ட, அல்லது வெள்ளையர்கள் வெல்ல முடியாதவர்கள் அல்ல, ஆங்கிலேயர்கள் அசைக்க முடியாதவர்கள் அல்ல என பாடம் நடத்திய குயிலியின் வரலாற்றை மறக்க முடியாது அல்லது மறைக்க முடியாது. வேலு நாச்சியாரின் போர்ப்படையில் வாள் படை, வளரிப் படை, பெண்கள் படை ஆகிய மூன்றும் பிரதானமானவை. வாள் படைக்கு தலைமை ஏற்றவர் சின்னமருது, வளரிப்படைக்குத் தலைமை ஏற்றவர் பெரிய மருது. பெண்கள் படைக்குத் தலைமையேற்றவர்தான் குயிலி. குயிலி தலைமையிலான பெண்கள் படைக்கு 'உடையாள் பெண்கள் படை' எனப் பெயர் சூட்டியிருந்தார் இராணி வேலு நாச்சியார். 

உடையாள் என்பவள் ஒரு மாடு மேய்க்கும் சிறுமி. அரியாகுறிச்சி அருகில் வேலுநாச்சியார் சென்று திரும்பிய போது எதிரிகள் உடையாளிடம் வேலுநாச்சியார் சென்ற பாதை குறித்துக் கேட்டபொழுது காட்டிக் கொடுக்க மறுத்தாள். ஆகவே, எதிரிகளால் தலை வேறு முண்டம் வேறாக உடையாள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாள். அவள் நினைவாக அப்படை பிரிவுக்கு அவள் பெயர் வந்தது. குயிலி வேலுநாச்சியிடம் வந்தது சுவராசியமான கதையாகும்.

வேலு நாச்சியாரின் போர்ப் பயிற்சிக்கான ஆசிரியர்களில் சிலம்பு வாத்தியார் வெற்றிவேலு மிக முக்கியமானவர். வேலுநாச்சியாரை சிறுவயது முதலே கண்காணித்து வருபவர். வேலுநாச்சியார் தனது கணவருடன் தேனிலவுக்காக மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்றிருந்த சமயத்தில்கூட பாதுகாவலராக அரண்மனையால் அனுப்பப்பட்டவர் வெற்றிவேலு. அதேபோல், தன் கணவரைப் பறிகொடுத்த பிறகு திண்டுக்கல் - விருப்பாச்சி பாளையத்தில் தங்கியிருந்து படை திரட்டிய கால கட்டத்தில் தன் மெய்க்காப்பாளராக வேலுநாச்சியார், சிலம்புவாத்தியார் வெற்றிவேலுவையே நியமித்திருந்தார். இவ்வளவு நம்பிக்கைக்குரியவராக விளங்கிய சிலம்புவாத்தியார் எதிரிகளால் விலை பேசப்பட்டார். வேலு நாச்சியாரின் திட்டங்களை, ஆதரவு சக்திகளை, அன்றாட நிகழ்வுகளை எதிரி களுக்குக் காட்டிக்கொடுத்து வந்தார்.

ஒரு நாள் குயிலியின் தாயார் உடல்நிலை சரியில்லாததால், குயிலி சிவகங்கைக்குச் செல்ல விருந்தார். இதை அறிந்த சிலம்பு வாத்தியார் அவளை அனுகி, பெண்ணே உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?'' என்று கேட்டார். குயிலிக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தும் தெரியாது எனக் கூறினார். எனவே ஒரு கடிதத்தைக் கொடுத்து சிவகங்கை அரண்மனைக்கு அருகிலிருக்கின்ற மல்லாரிராயன் என்பவரிடம் ஒப்படைக்கச் சொன்னார். அன்று இரவு ஓய்வாக இருக்கும் நேரத்தில் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் குயிலி படித்துப் பார்த்தார். வேலுநாச்சியாரின் அன்றாட அசைவுகளையும், அவரை வீழ்த்திட அடுத்து எதிரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் சிலம்பு வாத்தியார் அதில் குறிப்பிட்டிருந்தார்.

நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் ராணியின் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து அவரை குயிலி விரைந்துச் சென்று மகாராணியின் பாதுகாவலனான அவனை படுகொலை செய்தார். சம்பவத்தை அறிந்தா வேலுநாச்சியார் தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார். கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.

இச்சூழலில் சிவகங்கைச் சீமையில் ஆற்காடு நவாப்பும் ஆங்கிலேயரின் கைக்கூலிகளான மல்லாரிராயனும், அவன் தம்பி ரங்கராயனும் குயிலியை மையப்படுத்தி சாதிவெறிக்குத் தூபமிட்டுக்கொண்டிருந்தனர். அதாவது மேல்சாதியைச் சார்ந்த சிலம்பு வாத்தியார் வெற்றிவேலுவை கீழ்சாதிப் பெண்ணான குயிலி குத்திக் கொலை செய்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகமான சக்கிலியர் குலத்தில் பிறந்த குயிலிக்கு ஆதரவாக வேலுநாச்சியார் செயல்பட்டால் நம் சாதி கவுரவம் என்ன ஆவது? தாழ்த்தப்பட்டவர்கள் நம்மை எள்ளி நகையாட மாட்டார்களா? என குயிலியின் செயலுக்கு சாதிய நியாயம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இதைபற்றியெல்லாம் வேலுசாச்சியார் கவலைப்படவில்லை. குயிலியை பெண்கள் படைபிரிவுக்கு தலைவியாக்கி அழகுபார்த்தாள். நாட்கள் கடந்தன. பல ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ஆம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார்.

முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான் மல்லாரி ராயன். ஒரு மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். வேலு நாச்சியாரின் படைகள் வீறு நடைபோட்டன. அடுத்து திருப்புவனத்தில் மல்லாரிராயனின் தம்பி ரங்கராயன் பெரும்படையோடு எதிர்த்து நின்றான். மருது சகோதரர்கள் அவனைத் தவிடு பொடியாக்கினர். அடுத்து வெள்ளைக்கார அதிகாரிகள் மார்டின்ஸ், பிரைட்டன் மற்றும் நவாபின் படைத் தளபதி பூரிகான் தலைமையில் மானாமதுரையில் மாபெரும் படை எதிர்த்து நின்றது. வேலு நாச்சியாரின் பீரங்கிப்படை அதனை விரட்டியது.

வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது. தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தியிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தியிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்த போராளிகளுக்கு இது சோர்வை உருவாக்கினாலும், போற்களத்தில் பின்வாங்கும் முடிவை அவர்கள் யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. என்ன செய்வது? இதுமட்டுமே அவர்கள் சிந்தனையில் இருந்தது...
                                                                                                             (போர் தொடர்கிறது)



புதன், 5 செப்டம்பர், 2012

வேலுநாச்சியார் என்கிற உதாரண வீரம்!


விடுதலைப் போரில் பெண்கள் - 2



1857 ஆம் ஆண்டு வெடித்து துவங்கி இரண்டு ஆண்டுகள் நீடித்த தொடர்ச்சியான கலகங்கள்தான் இந்தியாவின் முதல் விடுதலை போராட்டம் என்று அறியப்பட்டது. வெள்ளையர்கள் இதை சிப்பாய் கலகம் என்று பதிவு செய்தனர். ஆனால் 1700 ஆம் ஆண்டு  இறுதியிலும் 1800ஆம் ஆண்டு  துவக்கத்திலும் தென்னிந்தியாவில் இந்த போராட்டங்களுக்கு இணையாக, எழுச்சி மிகுந்த போராட்டங்கள் நடந்தன.

போராட்டத்திற்கு திட்டமிட்டவர்கள், செயல்படுத்தியவர்கள் மற்றும் பல்வேறு மக்கள் பிரிவை சேர்ந்த தேசபக்தர்கள் தென்னிந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் மட்டுமின்றி நாட்டு விடுதலைக்காக இந்தியா முழுவதும் நடைப்பெற்ற போராட்டங்களின் வரலாற்றிலும் தங்கள் ஆளுமை முத்திரையப் பதித்துவிட்டுச் சென்றனர்.  வீரன் வேலுதம்பி, பழசிராஜா, வேலுநாச்சியார், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் என இவர்களின் பட்டியல் பெரியது. வீரம் நிறைந்த்து. உத்வேகம் கொள்ளச்செய்வது.

இந்த மண்ணிற்காக தங்கள் உயிரையே அர்ப்பனம் செய்த இந்த தேசபக்தர்களின் புகழ்மிக்க வீரச்செயல்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்ற தனித்தனியான வீரசாகசங்களாகவே பலகாலம் கருதப்பட்டு வந்தது. இது சரியான சித்தரிப்பு அல்ல என்பதை பின்பு வந்த ஆய்வுகள் தெரிவித்தன. தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றுடன் மஹாராஸ்டிரத்தையும் உள்ளடக்கிய பகுதி முழுவதும் பரவியிருந்த ஒரு விரிவான இயக்கத்தின் பகுதியாகவே இப்போராட்டங்கள் நடைபெற்றன. பல போராளிகளுக்கு இடையில் இடையிறா தொடர்பு இருந்தது. இந்த கூற்று உண்மையாக இருந்த காரணத்தினால்தான் வேலுநாச்சியாருக்கு ஹைதர் அலியின் படை உதவி கிடைத்தது.   

இந்திய விடுதலைப் போராட்டம் கோடிக்கணக்கான மக்கள் திரளுடன் நடந்தது தொழிற்புரட்சிக்குப்பின் வந்த நவீன அரசியல் காலத்தில்தான். எனினும், மன்னராட்சி காலத்தில்கூட மக்களை வெள்ளையர்களுக்கு எதிராக திரட்டிய சம்பவங்கள் பல நடந்ததுண்டு. அதில் மறக்க முடியாத தடம் பதித்தவர்தான் வேலுநாச்சியார் ஆவார்.

1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் பெண் பேதம் இல்லாமல் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி கல்வி கற்பதிலும் வேலு நாச்சியார் திறமை மிக்கவர்தான். பத்து மொழிகள் தெரியும். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம். தன்னுடைய 16 வது வயதில் 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை திருமணம் செய்துகொண்டார். முத்து வடுகநாதர் என்பவர் சிவகங்கை பாளையத்தை ஆண்ட மன்னர் ஆவார். 1749ல் இவரின் தந்தைய இறந்தவுடன் இவர் சிவகங்கைச் சீமையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். வெள்ளையரை எதிர்த்து விடுதலைக்குரல் கொடுத்த பாளையக்காரர்கள் வரிசையில் இவர் குறிப்பிடத்தக்கவர்.

1752ல் மதுரையை ஆண்ட விசயகுமார நாயக்கர் மீது பிரிட்டிஷ் கும்பெனி கேப்டன் கோப் போர் தொடுத்து மதுரையை கைப்பற்றினர். அதையறிந்த முத்துவடுகநாதர் மதுரை மீது போர் தொடுத்து அங்கிருந்த கேப்டன் கோப்பையும் அவர் படைகளையும் விரட்டியடித்து மீண்டும் விசயகுமார நாயக்கரையே மதுரை மன்னராக பதவி அமர்த்தினார். இதனாலேயே நவாப், பரங்கி மற்றும் கும்பெனி படைகளுக்கு சிவகங்கை மீது கோபமும் தீராப்பகையும் எழுந்தது.

இச்சமயத்தில் கும்பினியர் தலைவனாக லார்டு ஸ்டீகார்ட் என்பவன் பதவியேற்றான். முதல் வேலையாக முத்துவடுகநாதர் சிவகங்கை சார்பாக கும்பினியருக்கு திரை செலுத்த வேண்டும் என்று தூதனுப்பினான். அவனது நோக்கம் எப்படியும் சிவகங்கையை பணியவைக்க வேண்டும் என்பதுதான். அவனது தூதை முத்துவடுகர் மறுத்ததால் கான்சாகிப் மூலம் கொலை மிரட்டலும் விட்டுப்பார்த்தான் டீகார்டு. இரண்டுக்குமே இவர் பணியாததால் 1963ஆம் ஆண்டில் மன்னர் காளையார் கோவிலுக்குச் சென்ற சமயம் பார்த்து சிவகங்கை மீது போர் தொடுத்து சூறையாடினான். இதையறிந்த முத்துவடுகநாதர் கலவரத்தைத் தடுத்து கான்சாகிப்பையும் விரட்டினார்.

இந்த சமயத்தில் வெள்ளைய படை ஒன்று இராமநாதபுரத்தைக் கைப்பற்றியது. இதுவரை சிவகங்கைக்குக் கட்டாத வரியைத் திருப்பித் தறுமாறும் இராமநாதபுரத்தைக் குடக்கூலிக்கு தறுமாறும் செய்திவந்தது. அதற்கு மறுத்து இராமநாதபுரத்தின் மீது படையெடுக்க மறவர் சீமைப் படைகளுடன் சேர்ந்து எதிரிகளின் துப்பாக்கி மற்றும் பீரங்கிப்படை மீது போர் தொடுத்து இராமநாதபுரத்தை மீண்டும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இனிமேல் வடுகநாதரை வெல்ல முடியாது என்றறிந்த பரங்கியர் அன்றிரவே சிவகங்கை மீது இனி போர் தொடுப்பதில்லை என சமாதானம் பேசினர். அதை உண்மையென வடுகநாதர் நம்பினார். சமாதானம் என்று கூறியதால் பாதுகாப்புகளைக் குறைத்து விட்டு இதுவரை இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த 1772 ஜூன் 25 ஆம்தேதி காளையர் கோவிலுக்குச் சென்றுவிட்டார் வடுகநாதர். இதையறிந்த வெள்ளையரக்ள் காளையர் கோவிலுக்கு முத்துவடுகநாதரைக் கொல்ல பான்சோர் என்ற தளபதியின் கீழ் ஒரு படையை அனுப்பியது. கோவிலுக்குச் சென்றதால் ஆயுதம் எடுத்துக் கொள்ளாமல் சென்ற வடுகநாதரை பான்சோர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். வடுகநாதரின் மூத்த மகளும் கொல்லப்பட்டார்.

இந்த சமயத்தில் இந்திய நாடு முழுவதும் ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி ஒரு புதிய சட்டத்தை விதித்திருந்தது. இதனை பயன்படுத்தியே பல நாடுகளை தன்னுடன் இணைத்துக்கொண்டது. இந்த அடிப்படையில் ஆண் வாரிசு இல்லாத சிவகங்கையை தன்னுடன் இணைப்பதாக அறிவித்து ஆக்கிரமித்தது.

கனவன் படுகொலையை தொடர்ந்து வேலுநாச்சியார் நாட்டின் பொறுப்பை ஏற்றார். வெள்ளையரக்ள் தொடர்ந்து போர்தொடுத்ததால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார். வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் நுட்பமானவர். நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலியின் உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். 

கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். வேலு நாச்சியார் வரவில்லையா? என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன், அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். அந்த வீரமங்கையின் உருது மொழித் திறமையையும், அறிவு சாதுர்யத்தையும், விடுதலை வேட்கையையும் கண்டு ஆச்சர்யப்பட்டார் ஹைதர் அலி, அவரிடம் தனது வேதனைகளையும் இலட்சியத்தையும் விளக்கினார் வேலுநாச்சியார். எல்லாவற்றையும் கேட்ட ஹைதர் உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். 

ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார் வீரமங்கை. இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராய பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசி கம்பனி எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் இப்போராட்டத்திற்க்கு தலைமை தாங்கினர்.

1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட ஏற்பாடு செய்தார். கணவன் இறந்த பின்னும் மூட நம்பிக்கைகளை கடைபிடிக்காமல் தனது கழுத்தில் விலைமதிப்புக் கொண்ட திருமாங்கல்யத்தை சுமந்த ராணி, உடையாள் மீதுள்ள பாசத்தால் தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, தலைமையில் படை திரட்டப்பட்டது. விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை வணங்க கூட்டம், கூட்டமாக பெண்கள் வருவது வழக்கம். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டார் வீரமங்கை வேலுநாச்சியார். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், வேலுநாச்சியாரும் அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை.

வெட்டுண்டு விழுந்தார்கள் ,துடித்து உயிர் அடங்கினார்கள். வால்வீச்சில் தப்பித்து பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு நெடுந்தூரம் ஓடினார்கள். சிவகங்கை கோட்டை மீது பறந்த அருவருப்பான ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. சிவகங்கை நாட்டின் கொடி ஏற்றப்பட்டது. வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார். பலகாலம் தொடர்ந்து ஆட்சி நடத்தினார்.

1793ல்  அன்பு நிறைந்த இதயம் கொண்ட வேலு நாச்சியாருக்கு தனது பேத்தியின் மரணத்தால் துயரம் அதிகமானது. அதன் பிறகு விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட, மதிநுட்பம் கொண்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.

அந்த மகத்தான வீரமங்கையின்  இறுதிப்போராட்டத்தின் வெற்றிக்கு வித்திட்ட
மற்றும் ஒரு வீராங்கனை பற்றி நாம் பிறகு பேசலாம். போர்களத்தில் வெற்றிக்காக அவள் தன்னையே அர்ப்பனம் செய்தவள். அவள் பெயர் குயிலி..

-----------------மகளிர் சிந்தனை மாத இதழில் வரும் தொடர் (2012 செப்டம்பர்)  -------------------------------------