Sunday, October 6, 2024

சாம்சங்: முதல்வருக்கு பராசக்தி படத்திலிருந்து ஒரு நினைவூட்டல்

 



ஆர்ப்பாட்டத்தை மறியலாக மாற்றிய காவல்துறை

            ஒரு தொழிற்சாலையில் சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிகழ்வுக்கு எதிராக கடந்த சனிக்கிழமையன்று (2024 அக்டோபர் 5) சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த போராட்டத்தை காவல்துறையினர் மிகவும் கீழ்தரமாக எதிர்கொண்டனர்..

            அந்த தொழிற்சாலை சாம்சங் தொழிற்சாலை. அங்குதான் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான சங்கம் அவைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. சங்கத்தை பதிவு செய்ய  மறுக்கும் அரசின்  ”தொழிலாளர் நல அலுவலர்” அங்குதான் இருக்கிறார். பல நாள் நடக்கும் போராடத்தை கண்டும் காணாமல் இருக்கும் தமிழ அரசின் இந்த  நிலைப்பாட்டை மாற்றிடவும், தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனவும்.  இந்தப் பிரச்சனையில் தமிழ்நாடு முதலமைச்சர்  தலையிட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.       

            மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய  இடதுசாரிக் கட்சிகள் சார்பில்  போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், காவல்துறையினர் அனுமதி  மறுத்துள்ளனர். இத்தனைக்கும் இந்த போராட்டம் தமிழக அரசை கண்டித்தல்ல, ஒரு வெளி நாட்டு நிறுவனத்தை எதிர்த்த போராட்டம்.

            காவல்துறையில் அடக்கு முறையை எதிர்த்தே வளர்ந்த கம்யூனிஸ்டுகள் தடையை மீறி போராட்டக்களத்திற்கு வந்தனர். ஆனால்,  கொடிகள் கட்டவும், நாற்காலிகள் போடவும் அனுமதிக்காமல் காவல்துறையினர் தடுத்தனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களை  கைது செய்து ஆர்ப்பாட்டத்தை மறியல் போராட்டமாக மாற்றினர். ஆம் மறியல் செய்ய காவல்துறைதான் காரணம்.  தேவையற்ற தள்ளு முள்ளு ஏற்பட காவல்துறைதான் காரணம். தேவையற்ற பதட்டத்தை உருவாக்கி தோழர்களை வலுக்கட்டாயமாக  செய்தனர்.

            தமிழகம் அறிந்த தலைவர்களுக்கே, மக்கள் போராளிகளுக்கே இதுதான் நிலமை எனில், போராட்ட களத்தில் உள்ள தொழிலாளர்களை காவல்துறை என்னன்ன செய்யும்? தொழிலாளர்களின் வீடிற்கு சென்று மிரட்டுவது, சங்க நிர்வாகிகள் மனைவிகளை மிரட்டுவது, தொழிற்சங்க தலைவர்களை கைது செய்து எங்கிருக்கிறார்கள் என பல மணி நேரம் சொல்ல மறுப்பது என ஒரு ”சாங்சங் ஆட்சியை” காவல்துறை செய்து வருகிறது.

            எதற்கு காவல்துறைக்கு இத்தனை வன்மம். தமிழக அரசுக்கு தொரியாமல்  அரசியல் கட்சிகளின் மாநில தலைவர்களை காவல்துறை இப்படி கையாளுமா? ஒரு வெளி நாட்டு தனியார் நிறுவனம் அத்துனை செல்வாக்கு படைத்ததா? வாக்களித்த மக்களைவிட சாம் சங் நிறுவனம் தமிழக அரசுக்கு முக்கியமானதா?

என்னதான் பிரச்சினை?

            காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு இந்தியாவில் நொய்டாவிலும் காஞ்சிபுரத்திலும் ஆலைகள் உள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சுமார் 1800க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வாஷிங் மெஷின், குளிர்பதனப் பெட்டி, தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை சாம்சங் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம், இந்நிறுவனத்தில் சி.ஐ.டி.யு (இந்திய தொழிற்சங்க மையம்) சார்பில் சங்கம் தொடங்குவதற்கு தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.

            இதற்கு சாம்சங் இந்தியா நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர்.

            இதற்கிடையில் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில், இரண்டு வழக்குகளை சாம்சங் இந்தியா நிறுவனம் தொடர்ந்துள்ளது. ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும் மற்றொரு வழக்கு காஞ்சிபுரம் கூடுதல் நீதிமன்றத்திலும் தொடரப்பட்டுள்ளது.

தொடரும் போராட்டம்

            இதற்கிடையில், தமிழகம் முழுவதும் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த 1ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் பேரணி நடத்தியுள்ளனர். இவர்களில் 900க்கும் மேற்பட்டோரை விஷ்ணுகாஞ்சி போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே நாளில் சி.ஐ.டி.யு சார்பாக தமிழகம் முழுவது மறியல் போராட்டம் நடத்தியது. அதில் 10 ஆயிரம் பேரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் காவல்துறையால் முற்றுகையிடப்பட்டது.

      அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று உண்ணாவிரத போராட்டத்தையும் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் நடத்தியுள்ளனர். பிறகு 5 ஆம் தேதி சென்னை போரட்டம் அதில் காவல்துறையின் அடக்கு முறை என நாட்கள் செல்கிறது. ஆனால் ஒரு வெளி நாட்டு நிறுவனம், தமிழக அரசுக்கு ஆணை பிறப்பிக்கும் அவலம் தொடர்கிறது.

சட்டம் என்ன சொல்கிறது

            தொழிற்சாலையில் சங்கம் தொடங்குவது என்பது அரசியல் அமைப்புச் சட்டம் 19 (1) (c) இன்படி அடிப்படை உரிமைகளில் ஒன்று,  இந்திய தொழிற்சங்க சட்டம் 1926 இன்படி, தொழிற்சாலையில் ஏழு பேர் இருந்தால் சங்கத்தைப் பதிவு செய்யலாம். தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் எனப் பதவிகளை உருவாக்க வேண்டும். சங்கத்துக்கான துணை விதிகளையும் ஏற்படுத்த வேண்டும். ஆலைகளில் சங்கத்தைத் தொடங்குவது பிரச்னை இல்லை. ஆனால், புதுப்பிக்கும்போது மொத்த தொழிலாளர்களில் 10 சதவீதம் இருக்க வேண்டும் என்று விதி சொல்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் நாட்டின் சட்டங்கள் பொருந்தும். காஞ்சிபுரம் இருப்பது இந்தியாவில். தென் கொரியாவில் இல்லை! சட்டம் தெளிவாக இருந்தாலும் சாம் சங் தெளிவாக இல்லை. ஏனெனில் தமிழக அரசு தொழிலாளர்கள் குறித்த புரிதலோடு இல்லை.

            சங்கம் தொடங்குவதற்கு அரசின் தொழிற்சங்கப் பதிவாளரிடம் கடிதம் கொடுக்க வேண்டும். அதன்பேரில 45 நாட்களுக்குள் அனுமதி கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால் மக்கள் வரி பணத்தில் நடக்கும் தொழிலாளர் நலத்துறை, முதலாளி நலத்துறையாக செயலபடுவதால் அனுமதி கொடுக்க மறுக்கிறது.

       அதைவிட கொடுமை சங்கத்தின் பெயரில் 'சாம்சங்' என்ற பெயர் வரக்கூடாது என அந்நிறுவனம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. என்ன கொடுமை இது?  ஆனால் கொரியாவில் 'நேஷனல் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் எம்ப்ளாயீஸ் யூனியன்' என்ற பெயரில்தான் சங்கம் செயல்படுகிறது. அங்க ஒன்னு இங்க ஒன்னு இதுதான் சாம் சங் கொள்கை.

        சாம்சங் இந்தியா நிறுவனத்தைப் போலவே பண்ணாட்டு நிறூவனங்கள்தான் யமஹா, ஜே.கே.டயர்ஸ், அப்போலோ டயர்ஸ் உள்பட 30க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் அங்கெல்லாம் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் செயலபடுகிறது. ஆனால் அவைகளையும் போராடிதான் பெற முடிந்தது. குறிப்பாக யமஹா நிறுவனத்தில் 55 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்த பிறகே சங்கம் தொடங்க அனுமதி கிடைத்தது.

முதல்வருக்கு  பராசக்தி படத்திலிருந்து ஒரு நினைவூட்டல்

            பிச்சைக்காரர்களை மிகக் கேவலமாக சித்தரித்து நகைச்சுவை செய்கின்றன இன்றையத் தமிழ் சினிமாக்கள். ஆனால் அந்தக் காலத்திலேயே,  பிச்சைக்காரர்களை மரியாதைக்குரியவர்களாக காட்டிய ஓரே படம் பராசக்திதான். அதன் கதை வசனகர்த்தா கலைஞர்.

            ரங்கூனில் இருந்து சிவாஜி கப்பலில் வந்து சென்னையில் இறங்கியவுடன், தன்னிடம் பிச்சை கேட்கும் குரலை, விமர்சிப்பார். அந்த விமர்சனம்கூட பிச்சைக்காரரை குறைசொல்வதாக இல்லாமல், சமூகத்தைகுறை சொல்வதாகதான் இருக்கும். பிறகு எஸ்.எஸ.ஆர்., பிச்சைகாரர்களுக்காக சங்கம் வைத்து அவர்களின் உரிமைக்காக போராடுபவராகவும் வருவார்.

“மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கிறான். உங்களை சொல்லவில்லை…. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்சா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன்.” என்ற வசனம் உழைப்பாளியின் துயரை பேசியது.

            அக்காலத்திற்கு முன்பு துவங்கிய தொழிலாளர்களில் போராட்டம்தான் இந்த வசனங்களை எழுத வைத்தது. தொழிலாளர்கள் உரிமை ஆட்சியாளர்கள் போட்ட பிச்சை அல்ல, அது தொழிலாளர்களின் உதிரத்தில் முளைத்த வீரிய விதை. “அடிப்படை உரிமைக்கான போராட்டத்தை ஒருபோதும் அடக்கு முறையால் ஒடுக்கிவிட முடியாது” என்பதை நினைவில் வையுங்கள்.

 - எஸ்.ஜி.ரமேஷ்பாபு


1 comment:

  1. இங்கு தங்கள் கருத்தை பதிவிடலாம்

    ReplyDelete