இந்திய மாணவர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய மாணவர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

நாவரசு கொலையும் 15 ஆண்டுகால காத்திருப்பும்


இந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய காலத்தில் சிதம்பரத்தில் நாங்கள் நடத்திய போராட்டங்களில் முக்கியமானது நாவரசு படுகொலையை கண்டித்து நடத்திய போராட்டங்கள். 1996 ஆண்டு தீபாவளி முடிந்த ஓரிரு நாட்களில் கொட்டும் மழையின் போது சிதம்பரம் நீதிமன்றத்திற்கு ஜான்டேவிட் அழைத்துவரப்பட்டான். நாங்கள் அவன் வருகைக்காக காத்திருந்தோம் நாங்கள் என்றால் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள் 200 பேர். மழையில் நனைந்தபடி கிட்டதட்ட ஒருமணிநேரம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோம். ராகிங் என்ற கொடூரத்திற்கு முற்றுபுள்ளி வைத்திடு! ஜான்டேவிட்டுக்கு உரிய தண்டனை கொடுத்திடு! இதுவே எங்கள் கோஷ்மாக இருந்தது. காவல்துறை வாகனத்தில் ஜான்டேவிட் வந்து இறங்கியதும் மொத்த்க்கூட்டமும் அவனை நோக்கி முன்னேறினோம். அது காவல்துறைக்கும் எங்களுக்குமான தள்ளுமுள்ளாக மாறியது. 

மீடியாக்களில் செய்தி பரவியதும், சிதம்பரத்தில் உள்ள அனைத்துகட்சி நண்பர்களும் மறுநாள் முதல் நீதிமன்ற வளாகத்தினை சுற்றி திரண்டனர். சிதம்பரத்தின் புகழ்பெற்ற வழக்குரைஞரும், சமீபத்தில் மரணமடைந்த திரு. வெங்கட்ராமன் அவர்கள் ஜான்டேவிட்டுக்கு ஆதரவாக ஆஜரானார். எங்கள் கோபம் அவர் மீது திரும்பியது. அவருக்கு எதிராக நாங்கள் கோஷ்மிடத் துவங்க (கொஞ்சம் வரம்புமீறிய தடித்த வார்த்தைகள் வந்தது. பிறகு வருத்தப்பட்டோம் - அவரும்தான்) அவர் நிலமையை புரிந்துக்கொண்டு அந்த வழக்கிலிருந்து விலகினார். அதற்கு பின்தான் விருதாசல ரெட்டியார் ஜான்டேவிட்டுக்கு ஆதரவாக வழக்காடினார். சிதம்பரம் நீதிமன்றத்திற்கு முன்பாக தொடர்ந்து நாங்கள் ஜான்டேவிட் வரும்போதெல்லாம ஆர்பாட்டத்தை நடத்தினோம். பின்பு வழக்கு கடாலூர் செசன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

சம்பவத்தை செய்திதாள்களின் வழியே நினைவு படுத்திக்கொள்வோம்:
சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி மகன் நாவரசு (17); 1996ம் ஆண்டு, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த நாவரசு, அதே ஆண்டு நவம்பர் 6ம் தேதி, வகுப்பிற்கு சென்றவர் விடுதிக்குத் திரும்பவில்லை. நவம்பர் 7ம் தேதி, சென்னையில் மாநகர பஸ் ஒன்றில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில், தலை, கை, கால்கள் வெட்டி எடுக்கப்பட்ட ஆண் உடல் மட்டும் கிடந்தது. இதுகுறித்து சென்னை மாநகர போலீசார் வழக்கு பதிந்து, கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரித்து வந்தனர். நாவரசு காணாமல் போனது குறித்து அவரது தந்தை பொன்னுசாமி, நவம்பர் 10ம் தேதி கொடுத்த புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நாவரசுவை நவம்பர் 6ம் தேதி மதியம், அதே மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் ஜான் டேவிட் தனது அறைக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்தது. நவம்பர் 11ம் தேதி ஜான் டேவிட், ராஜமன்னார்குடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார், நவம்பர் 18ல் தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், தேர்வு எழுதி விட்டு வந்த நாவரசுவை, ஜான் டேவிட் வழிமறித்து தனது அறைக்கு அழைத்துச் சென்று ராகிங் செய்துள்ளார்.அப்போது, ஜான் டேவிட் தாக்கியதில் நாவரசு மயங்கி விழுந்துள்ளார். அவர் இறந்து விட்டதாகக் கருதிய ஜான் டேவிட், வெளியில் தெரியாமல் இருக்க, தனது படிப்பிற்காக ஆய்வகக் கூடத்தில் பயன்படுத்தும், டிசக்ஷன் கருவிகளை பயன்படுத்தி நாவரசுவின் தலை, கைகள் மற்றும் கால்களை தனித்தனியாக துண்டித்துள்ளார்.

தலையை பாலிதீன் கவரில் சுற்றி, கல்லூரி வளாகத்தில் உள்ள குட்டையில் வீசியுள்ளார். பின்னர் உடலை பாலிதீன் கவரில் சுற்றி, பெரிய சூட்கேசில் அடைத்துள்ளார். அதேபோன்று, கைகள் மற்றும் கால்களை தனியாக, பேக் செய்து, சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிச் சென்றுள்ளார். செல்லும் வழியில், கைகள் மற்றும் கால்களை ஆற்றில் வீசியுள்ளார். உடல் இருந்த சூட்கேசை, சென்னையில் டவுன் பஸ்சில் வைத்துவிட்டு சிதம்பரம் திரும்பி வந்ததும், போலீசார் சந்தேகிக்கவே கோர்ட்டில் சரணடைந்தது தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து, போலீசார் ஏற்கனவே பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர்.

 ஜான் டேவிட் குறிப்பிட்ட அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள குட்டையில் தேடியதில், நாவரசுவின் தலை சிக்கியது; செங்கல்பட்டு அருகே கால்கள் சிக்கின. இதையும், சென்னையில் கண்டெடுக்கப்பட்ட உடலில் இருந்து எடுத்த திசுக்களை ஆய்வு செய்ததில், இறந்தது நாவரசு என்பது உறுதி செய்யப்பட்டது.கல்லூரியில், ராகிங் கொடுமையால் மாணவர் நாவரசு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், உலகளவில் பெரும் பீதியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தியது. ஜான் டேவிட் மீது 1997ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி, கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், அரசு தரப்பில் சிறப்பு வக்கீலாக முன்னாள் நீதிபதி கந்தசாமியும், ஜான் டேவிட் தரப்பில் பிரபல வக்கீல் விருத்தாசலம் ரெட்டியாரும் ஆஜராகி வாதிட்டனர்.

நீதிபதி சிங்காரவேலு முன்னிலையில் நடந்த இந்த வழக்கில், 78 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்; 120 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.வழக்கை விசாரித்த நீதிபதி சிங்காரவேலு, 1998, மார்ச் 11ம் தேதி தீர்ப்பு கூறினார். அதில், ராகிங் காரணமாக நாவரசுவை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், கொலை செய்த தடயங்களை மறைத்ததற்காக மற்றொரு ஆயுள் தண்டைன என, ஜான் டேவிட்டிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அதைத் தொடர்ந்து ஜான் டேவிட், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.கடலூர் செசன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜான் டேவிட், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாததால், ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

உலகமே அச்சுறும் வகையில் நடந்த கொடூர கொலை வழக்கில் கைதான ஜான் டேவிட்டிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஐகோர்ட் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு, டில்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுந்தகம் சர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசுவை கொடூரமான முறையில் கொன்ற, அவரது சீனியர் மாணவர் ஜான் டேவிட்டிற்கு, கடலூர் செஷன்ஸ் கோர்ட் விதித்த இரட்டை ஆயுள் தண்டனை சரியானதே என, தீர்ப்பளித்தது.

ஆக இப்படியக ஒரு கொடூர கொலையை செய்தவன் தண்டனை பெற 15 ஆண்டுகாலம் ஆகியுள்ளது. அதுவும் சென்னை நீதிமன்றம் அவனை விடுதலை செய்ததுதான் உச்சக்கட்ட சோகம். நீதி மன்றங்கள் மீது பல வழக்குகளில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையில் இந்த தீர்ப்பு கொஞ்சம் நம்பிக்கையை விதைக்கிறது. ஆனால் ஒரு உலகறிந்த  கொலைகாரனுக்கு  பதினைந்து ஆண்டுகால தாமதம் கொஞ்சம் ஓவர்தான். நாவரசு மரணத்தை தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் ராகிங் தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அத்துடன் ராகிங் கொடுமைகள் ஒழியவில்லை. தொடர்ந்து ராகிங் கொலைகள் தமிழகத்தில் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. இது ஒரு சமூக உணர்வுடன் சம்பந்தப்பட்டது.
 சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகமிருக்கும் பகுதிகளின் கல்வி நிலையங்களில் ராகிங்கும் அதிகமிருக்கும் என்று சொல்கிறார்கள் சமூக ஆய்வாளர்கள். 1600களில் ஐரோப்பாவிலும் பிற பகுதிகளும் தாழ்ந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு "நாகரீகம் புகட்டும்" வழி என்று அன்றைய ராகிங்கை (பென்னலிசம் என்று அப்போது அழைத்தார்கள்) அர்த்தப்படுத்தினார்கள். எனினும் அது கொலைகளுக்கும் சித்ரவதைக்கும் வழிவகுத்ததால் 1700களில் அதை தடை செய்தார்கள். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டன் பள்ளிக்கூடங்களில் அது மீண்டும் தலை காட்டியது. இந்தியாவில் ராகிங் வேரூன்றுவதற்கு சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உதவியிருக்கின்றன. சமூக மாற்றமே இப்படிபட்ட சம்பவங்களை தடுத்து நிறுத்த நிறந்தர தீர்வு என்பதை இளம் தலைமுறைக்கு உரத்து சொல்ல வேண்டியுள்ளது.