கேப்டன் லட்சுமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேப்டன் லட்சுமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஜூலை, 2014

வாழ்வின் இறுதிவரை சுடர்விட்டெறிந்த தீபம் கேப்டன் லட்சுமி.

விடுதலைப் போரில் பெண்கள் - 15


சரோஜினி நாயுடுவின் சகோதரியான சுஹாசினி லட்சுமிக்கு எட்கர் ஸ்னோவின் சீன வானில் சிவப்பு நட்சத்திரம் என்ற புத்தகத்தை கொடுத்தார். அதுமுதல் லட்சுமியின் சிந்தனையின் நிறம் மாறத்து வங்கியது, வாழ்வின் பாதையும்தான். அந்த பாதை தேசம், மக்கள், உண்மையான மாற்று கொள்கை, போராட்டம் என்ற சிந்தனைகளை உள்வாங்கியதாக இருந்தது. ஆனால் அதற்கு முன் அவர் பல தடைகளை கடக்கவேண்டி இருந்தது. 

1938 ஆம் ஆண்டு லட்சுமி மருத்துவ படிப்பின் இறுதியாண்டு படித்த போது ஒரு விமான ஓட்டியை காதலித்து திருமணம் செய்தார். அன்பை சுமக்கவேண்டிய வயதில் பிரச்சனைகளை சந்திக்கவேண்டி வந்தது. முரண்பாடுகளின் குவியலாக, கருத்துக்கள் ஒத்துப்போகாத திருமணமாய் அது முடிந்தது. அவர்களால் இணைந்து வாழ முடியவில்லை. கசப்பான சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. விடுபட விரும்பிய நிமிடங்களை தேடிய வாழ்வு அது. பிரிடிஷ் இராணுவ பணிக்கு மருத்துவர்களை தேடிக்கொண்டிருந்த அந்த சமயத்தை தனது சுய வாழ்வின் விடுதலைக்காக மாற்றிக்கொண்டார். இரண்டாண்டுகள் மட்டுமே தொடர்ந்த அந்த வாழ்வு 1940ல் லட்சுமி இராணுவ மருத்துவராய் சிங்கப்பூர் செல்லும் வரைதான் தொடந்தது.

தனது 26வது வயதில் சிங்கப்பூர் வந்தடைந்தார் லட்சுமி. அங்கு கேரளத்து நண்பர் ஒருவரின் மருத்துவமணையில் மருத்துவராய் பணிபுரிய துவங்கினார். இதற்கிடையாக பல சம்பவங்கள் உலகம் முழுவதும் நடந்தேறியது. பாசிச சக்திகள் கை மேலோங்கி உலகை அச்சுறுத்திக்கொண்டிருந்தது. இந்தியாவில் விடுதலை போராட்டம் தொடர்ந்து நடந்துக்கொண்டிருந்தது. லட்சுமி சிங்கப்பூர் வந்த சில மாதங்களில் ஒரு பரபரப்பான செய்தி வந்தது, கல்கத்தாவில் கப்பல் மூலம் சுபாஷ் சந்திர போஸ் ஜெர்மனிக்கு தப்பிவிட்டார் என்ற செய்திதான் அது.

1941 ஆம் ஆண்டு ஜப்பான் சிங்கப்பூரை தாக்கியது. குண்டுகளுடன் துண்டு பிரசுரங்களையும் ஜப்பானியர்கள் வீசினர். அதில் ""நேசபடைகள் சரணடைய வேண்டும் என இருந்தது. பிரிடிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போர் இதுவெனவும், ஒத்துழைத்தால் இந்திய விடுதலைக்கு உதவப்படும்"" எனவும் அதில் எழுதியிருந்தது. ஜபானின் ராணுவர் அதிக அளவு சூழ்ந்ததால் பிரிடிஷ் இந்தியப்படைக்கு சரணடைவதைதவிர வேறுவழியில்லை. சரணடைந்த படையணிகளில் மோஹன்சிங் தலைமை வகித்த பஞ்சாப் ரெஜிமெண்டும் ஒன்று. அதன் ஜப்பானியர் தலைமையகத்தில் ராஷ்பிஹாரி போஸை சந்தித்தார். இருவரும் ஜப்பானிய அதிகாரி ஃபியூஜிராவை சந்திக்க அனுப்பப்பட்டனர். பின் ஜப்பானியர்கள் உதவியுடன் இந்திய தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டது. இதில்தான் நேதாஜி பின்னர் இணைந்தார். அதன் தலைமை பொறுப்பேற்றார். 

1943ல் ஜப்பான் பிரதமர் டோஜோவை சந்தித்து 6 மணி நேரம் விவாத்தித்து இந்திய விடுதலையை வேண்டிய உதவிகளை இந்திய தேசிய இராணுவத்திற்கு பெற்று வந்தார். இரணுவ படையணிகள் அமைக்கப்பட்டது. இதன் பிறகான சந்திப்புதான் நேதாஜியுடனான லட்சுமியின் சந்திப்பு. அவர் வாழ்க்கையை மாற்றிப்போட்ட சந்திப்பு. ""அந்நிய ஒடுக்குமுறையுடன் பெண்கள் சமூக  ஒடுக்குமுறையையும் அல்லவா சேர்ந்து சுமக்கவேண்டியுள்ளது? பெண்கள் ஆண்களுக்கு இணையான உரிமைகள் கிடைக்காதவரை, நாடு முன்னேறாது. விடுதலை பெற்ற ஒரு நாட்டில் சாதி, மத, பாலின அடிப்படையிலான பாரபட்சமோ, ஒடுகுமுறையோ இருக்கக்கூடாது"" இவைகளைதான் நேதாஜி லட்சுமியிடம் பேசிய சாரம்.

அடுத்த நாள் லட்சுமி தான் புதிதாக துவங்கியிருந்த கிளினிக்கை மூடிவிட்டு களத்தில் இறங்கினார். பெண்களை ராணுவத்தில் சேர்த்தக கடுமையாக உழைத்தார். மூன்று நான்கு தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த குடும்பத்து பெண்கள்தான் அப்படையணியின் முதுகெலும்பாக விளங்கினர். அந்த கல்விகற்ற சுந்தந்திட உணர்வு மிக்க பெண்களை அதிகாரிகளாக கொண்டு இந்திய வரலாற்றில் முதல் பெண்கள் படை பிரிவான ஜான்சிராணி படைபிரிவு உருவாக்கப்பட்டது. அதன் கேப்டன் லட்சுமி, அவருக்கு அடுத்த கமாண்டெண்ட் ஜானகி தேவர்.

1943 அக்டோபருக்குள் 1500 பெண்களை வைத்து பயிற்சியளிக்க முகாம் ஏற்பாடு செய்யும் அளவும் இப்படை விரிவானது. பர்மா, ரங்கூனிலிருந்து இன்னொரு ரெஜிமென்ட் தயாரானது. அதிலிருந்த பெண்கள் அனைவரும் வங்க மொழி பேசுவோர். படையணியில் தினசரி கடைபிடிக்கபட்ட அட்டவணையும், கட்டுபாடும், உணவு பழக்கமும் பெண்கள் மீது பிரமிக்கதக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பெண் வீரர்கள் பயிற்சியும், பொது நிர்வாகத்தையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு கேப்டன் லட்சுமியுடையது. அனைத்து திட்டங்களையும் விவாதிப்பது, நேதாஜி வெளிநாட்டு பிரமுகர்களை சந்திக்கும் போது உடனிருப்பது ஆகியவை அவரது முக்கிய பணிகளாக இருந்தது.

ஆனால் பாசிசபடைகளின் ஆதரவுடன் இந்திய தேசிய இராணுவம் செயலாற்றியதை பற்றி கேப்டன் லட்சுமிக்குள் கடுமையான விவாதங்கள் நடந்துதான் வந்தது. யூதர்களை ஹிட்லர் நடத்திய விதம் குறித்தும், அவரது உதவி இல்லாமல் பிரிடிஷ்காரர்களை நம்மை மட்டுமே நம்பி தோற்கடிக்க வெண்டும் எனவும், பாசிச கோட்பாடுகளை உதறிதள்ளி நமக்கான கோட்பாட்டை நாமே உருவாக்க வேண்டுமெனவும் நினத்தார். இந்திய விடுதலைக்கு ஜப்பான் உதவி புரிவதாக மனதார நம்பி இ.தே.இராணுவம் செயலபட்ட காலம் அது.

1944 மார்ச் மாதம் இந்த இராணுவப்படை முதலில் ரயிலிலும் பின்னர் மோட்டர் படகிலும் பர்மாவை நோக்கிச்சென்றது. சாகசம் நிறைந்த பயணம் அது. பிரிடிஷ் இந்தியாவின் வடகிழக்கு  பகுதியில் ஐ.என்.ஏவும் ஜப்பானின் படையும் சேர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு நடந்த பயணம் அது. தினமும் 10 முதல் 15 கிலோமீட்டர் நடந்து காட்டில் பயணம். ஆங்காங்கே குண்டுகள் விழும், பலர் காயம்படுவர் இருப்பினும் பயணம் தொடரும். 1944 மார்ச் முதல் ஜூன் வரை இராணுவம் பர்மாவில் இருந்தது. அப்போது நிறைய பேர் குண்டுகளால் தாக்கப்பட்டனர். ஜான்சிராணி படையணியை சேர்ந்த பெண்கள் நர்சுகளாக பணிபுரிந்தனர். 1945 மார்ச் மாதம் இம்பாலாவுக்குள் படை நுழையும் தருணத்தில் படை பின்வாங்குவது என முடிவெடுக்கப்பட்டது. காரணம் உலகப்போர் சோவியத் யூனியனின் தீரம் மிகுந்த மகத்தான செம்படையால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

பின்வாங்கப்பட்ட படையில் இருந்த பர்மாகாரர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மற்றவர்கள் முதலில் தாய்லாந்திற்கும் பின்னர் மலேசியாவுக்கும் அழைத்துச் சென்றார் நேதாஜி. சிங்கப்பூர் பெண்கள் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். நேதாஜி சைகோன் சென்றுவிட்டார். 1945 ஆகஸ்ட் மாதம் அவர் டோக்கியோ சென்ற போது விமாணம் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார். 

பர்மாவின் காடுகளில் இருந்த கேப்டன் லட்சுமி பிரிடிஷ் ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு ரங்கூனில் ஒருமாதம் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். அவரை காண ஐ.என்.ஏ முன்னால் வீரர்கள் வருவார்கள். இவர்கள் ஒன்று திரண்டு 1945 அக்டோபரில் ரங்கூனில் ஒரு மாநாடு நடத்தினர். இச்செய்தியை கேள்விபட்ட பிரிடிஷ் இந்திய அரசு கேப்டன் லட்சுமியை 1945 அக்டோபர் முதல் 1946 மார்ச் வரை மலையில் சிறைகைதியாய் வைத்திருந்து பின்னர் இந்தியாவுக்கு அனுப்பியது.

1947ல் இந்தியா விடுதலை அடைந்தது. கேப்டன் லட்சுமி போன்றவர்களுக்கு இது மகிழ்வும் துக்கமும் கலந்த ஒரு சம்பவமாய்தான் இருந்தது. ஏனெனில் நாட்டின் பிரிவினை அவரக்ளை துக்கமுற செய்தது. இதற்கு காரணம் காங்கிரஸ் என அவர்கள் உறுதியாக நம்பினார்கள். லட்சுமி கம்யூனிஸ்டுகளுடன் இனைந்து செயலாற்ற விருப்பம் கொண்டார். ஆனால் அக்கடிசியில் ஒரு சிலர் இவர்களை பாசிச சக்தியின் கையாட்களாக பார்தனர். 1947ல் கேப்டன் லட்சுமி கர்னல் பிரேம் குமார் சைகலை மணந்தார். 1946ல் ஐ.என்.ஏவின் குற்றம்சாட்டப்பட்ட மூன்று முக்கிய நபர்களில் அவரும் ஒருவர். லாகூரிலிருந்து இவர்கள் கான்பூருக்கு குடிபெயர்ந்தனர். அங்கு கேப்டன் லட்சுமி தனது மருத்துவ பணியை முழுவீச்சில் துவங்கினார். பாகிதானிலிருந்து அகதிகள் வந்தவண்ணமிருந்தனர். இந்து முலிம் என வித்தியாசம் பாராமல் அனைவருக்கும் அவர் சேவை செய்தார். இத்தம்பதிக்கு சுபாஷினி, அனிசா என்ற இரு மகள்கள் பிறந்தனர். 

அவரது நோயாளிகள் பெரும்பாலும் உழைக்கும் மக்கள், பஞ்சாலை தொழிலாளிகள், அகதிகளாகவே இருந்தனர். வங்கதேச போரின் போது மெற்குவங்கத்தில் குவிந்த அகதிகள் மீண்டும் கேப்டனை அரசியல் வாழ்வுக்கு அழைந்து வந்தனர். மார்க்சிய இயக்கத்தின் மகத்தான தலைவர் ஜோதிபாசு அழைப்பை ஏற்று அங்குள்ள அகதிகளுக்கு மருத்துவ உதவி செய்ய மெற்குவங்க விரைந்தார் கேப்டன். அங்கு மக்கள் நிவாரண குழுக்களுடன் பொகாய்காவ் என்ற இடத்தில் ஐந்து வாரங்கள் தங்கி உதவினார். எல்லை தாண்டி முக்தி வாஹினி தொண்டர்களுக்கு உதவினார். அப்போதுதான் அவர் தன்னை மக்களுக்கு அளப்பறிய தியாகங்களை செய்து போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டார். 

தனது 57வது வயதில் ஒரு சரியான இயக்கத்தில் தன்னை இனைத்துக்கொண்ட மனநிறைவு அவருக்கு வந்தது. 1981ல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அமைப்பு மாநாட்டில் அகில இந்திய துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984ல் இந்திராகாந்தி படுகொலையை தொடர்ந்து நடந்த சீக்கிய மக்கள் மீதான படுகொலைகளின் போது வீதியில் இறங்கி அவர்களை பாதுகாக்க நின்றார். அவர் இருந்த பகுதியில் ஒரு சீக்கியரும் தாக்கப்படவில்லை என்பதிலிருந்து அவரது தீவிர போராட்டத்தை அறியமுடியும். 1984ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விஷ வாயு கசிவால் பாதிகப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவரது மருத்துவ குழு அங்கு சென்று பணியாற்றியது. எனது அவரது போராட்ட வாழ்க்கை நெடியது. 

2002 ஆம் ஆண்டு இந்திய நாட்டு ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்து போட்டியிட்டார். முதுமையை வென்ற போராளியாய் ஜொலித்தார். அதுதான் கேப்டன் லட்சுமி. 
காலம் அவரையும் நம்மிடமிருந்து பிரித்து அழைந்துச்சென்றது. அவரின் வாழ்வில் நாம் கற்க வேண்டிய ஏராளமான பாடங்களை விட்டுச்சென்றார். அவர் மரணமடைந்த போது ஒரு மாதப்பத்திரிக்கை அவருக்கு கீழ்கண்டவாறு அஞ்சலி செலுத்தியது.

""23.07.2012 அன்று கேப்டன் லட்சுமி சேஹல் காலமானபோது இந்திய விடுதலைப் போராட்டத்திலும் அதன் பிறகான இந்திய அரசியல் களத்திலும் பெண்கள் பங்கேற்பின் ஒளிமிக்க அத்தியாயம் ஒன்று முடிவுபெற்றது. லட்சியத்தின் மீதான அரசியல் பணியையும் தொழில் சார்ந்த மருத்துவப் பணியையும் தன் சமூகத்தின் மேம்பாட்டிற்காக அர்ப் பணித்து வாழ்ந்த அவரது பூதவுடல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் ஆய்வுக்காக வழங்கப்பட்டது சாலப் பொருத்தமே.""  
(இன்னும் போராளிகளை சந்திகலாம்)
         
விடுதலைப் போரில் பெண்கள் - 14

கேப்டன் லட்சுமி: பெண்கள் பங்கேற்பின் ஒளிமிகுந்த அத்தியாயம்

விடுதலைப் போரில் பெண்கள் - 14


கத்தியின்றி ரத்தமின்றி மயிலிறகு நீவ பெற்ற அகிம்சை சுந்ததிரம் இது, இப்படிதான் பலர் இப்போதும் பேசிக்கொன்டிருக்கிறார்கள். ஆனால், செய்! அல்லது செத்துமடி!! என காந்தியடிகளையே பேசவைத்த சூழலை தீவிர தேசபக்தர்கள் உருவாக்கினார்கள் என்ற வரலாற்றை புறம்தள்ளுகிறார்கள். 1942 ஆம் ஆண்டு உலக போரின் யதார்த்த நிலைமையையும், அது சோவியத் மீது பாசிச சக்திகள் கைவைத்தவுடன் மக்கள் யுத்தமாக மாறியதையும் கணக்கில் கொள்ளாமல் காங்கிரஸ் பேரியக்கம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தது. இதனைத்தொடர்ந்து கடுமையான அடக்கு முறைகளை தேசம் சந்தித்தது. அது விடுதலைப் போரில் நிசப்த சூழலை உருவாக்கிய தருனமாய் மாறிய உண்மை எங்கும் பதியப்படவில்லை. ஆனால் வரலாறு எனும் கால பெருநதி எப்போதும் தேங்கி நிற்பதில்லை. தேச விடுதலைப் போராட்டம் மற்றொரு திசை வழியை நோக்கி நடக்க துவக்கியது. அந்த திசைவழி வெற்றி அடையவில்லை எனினும் அந்த பாதையின் தியாகங்களை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதுதான் இந்திய தேசிய இராணுவம்.
1943 ஜூலை 5 தேதி அந்த மகத்தான இருவரின் சந்திப்பு நடந்தது. ஆறு மணி நேரம் நடந்த அந்த சந்திப்பு இந்திய வரலாற்றின் முக்கியமான சந்திப்பாக இருந்தது. சந்தித்த அந்த இருவரில் ஒருவர் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் மகத்தான ஆளுமையான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மற்றொருவர் 29 வயது நிறம்பிய மருத்துவ பட்டம் பெற்ற யுவதி. 



எப்போது இந்த சந்திப்பு நடந்தது?
இந்திய தேசிய ரணுவத் தலைமையை நேதாஜியிடம் ராஷ்பிஹாரி போஸ் ஒப்படைத்த (இவர் புரட்சிகரச் சிந்தனை கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர். 1911இல் வைசிராயாக இருந்த ஹார்டிங் பிரபுமீது வெடிகுண்டு வீசிவிட்டுத் தப்பி ஜப்பான் சென்று அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்டவர்.)  அந்த பிருமாண்டமான கூட்டத்தில் சுபாஷ் பேசினார். "உங்கள் ரத்தத்தை எனக்கு தாருங்கள், நான் உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்" அந்த மந்திர உரையை கேட்ட கூட்டத்தில் ஒருத்தியார் அந்த யுவதி நின்றிருந்தார். மகத்தான தலைவன் பேசிய சில தினங்களில் இந்த சந்திப்பு நடந்தது. அந்த இளம் பெண் மருத்துவர் சுபாஷிடம் சொன்னார் "எனது இறுதிச்சொட்டு ரத்தம் இந்த பூமியை தழுவும் வரை போரிட நான் தயார். என்னைப்போன்ற இளம் பெண்கள் தேசத்திற்காக தியாகம் செய்ய முன்வரவேண்டும் என்றீர்களே நேதாஜி, நான் இந்த தேசத்திற்கு என்னையே தத்தம் செய்ய தயாராக வந்திருக்கிறேன். என்னை உங்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்வீர்களா? என்றார். 
நேதாஜியை புருவம் உயர்த்தி பார்க்க வைத்த அந்த இளம் பெண்ணின் பெயர் லட்சுமி. 


இந்திய வரலாற்றில் கேப்டன் லெட்சுமி என புகழ்பெற்ற, சாதாரண மக்கள் மீது அன்பும், அசாத்திய வீரமும், மதிநுட்ப அரசியல் அறிவும் பெற்ற உதாரண பெண் அவர். ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல்  பெண்கள் இராணுவப் படையாகக் கருதப்படும் ஜான்சிரணி லெஜிமென்டின் கேப்டன். இந்தியாவின் சுதந்திர அரசு 1943- & 1945 இல் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டது. அதன் தலைநகர் அந்தமான் தீவில் உள்ள போர்ட்பிளேர் நகரம். வெளிநாட்டுத் தலைநகரங்கள் ரங்கூன், சிங்கப்பூர். நாடு கடந்த இந்திய அரசின் அமைச்சரவையில் சுபாஷ் சந்திரபோஸ்  பிரதமர், எஸ். ஏ. ஐயர் மத்திய ஒலிபரப்பு அமைச்சர், தளபதி ஏ.சி. சாட்டர்ஜி  மத்திய நிதி அமைச்சர், இதில் இருந்த ஒரே பெண் நிர்வாகி கேப்டன் லட்சுமி மட்டுமே. அத்தகைய மேன்மை மிகுந்த பெண்கள் பங்கேற்பின் ஒளிமிக்க அத்தியாயமான லட்சுமியின் பூர்வீகம் என்ன? இந்த தியக உணர்வும், வீரமும் உருவாகிய பின்னணி என்ன?


பின்னணி என்ன?  
கேப்டன் லட்சுமி 1914 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 அன்று சுவாமிநாதன்-அம்மு ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்தவர். மேலும் அமெரிக்காவில் வானியல்துறையில் முனைவர் பட்டமும், சிறந்த கணிதவியல் நிபுணர் என்ற தகுதியும் பெற்றவர். அத்துடன் குற்றவியல் வழக்கறிஞர் என்ற பெருமதிப்பும் பெற்றவர். தாய் அம்மு சுவாமிநாதன் கேரளா மாநிலம், பாலக்காட்டில் சமூக சேவகராக இருந்தவர். குட்டி மாலு அம்மா என்ற இவரது மற்றொரு குடும்ப உறுப்பினரும் விடுதலைப் போராட்டத் தியாகியாக இருந்தவர். இளம் வயதிலேயே நாட்டு விடுதலை, சமுதாய சமத்துவம் ஆகிய இலட்சியங்கள் லட்சுமியின் மனதில் இடம்பெற இந்த பின்னணி துவக்க விதைகளை விதைத்தது?



அவரது இளைமை பருவம் கேரளாவில் உள்ள அவரது பாட்டியின் வீட்டில்தான் அதிகம் கழிந்தது. அங்குதான் அவர் அவவரது வாழ்வில் தீண்டாமைக்கு எதிரான முதல் பாடத்தை கற்றார். கேரளாவில் அப்போது தலித்துகள் தீண்டதகாதவர்களாக மட்டுமல்ல, அணுகக் கூடாதவர்களாகவும் இருந்தனர். லட்சுமி வசித்த வீட்டின் அருகில் உள்ள காடுகளிலிருந்து தம்புரனே என்று குரல் மட்டும் கேட்கும். உடன் அங்கு யாரிடமாவது உப்பும் சாதமும் கொடுத்தனுப்பப்படும். பதிலாக அங்கிருந்து முடையும் கூடைகளில் நிறைய காட்டுப் பழங்களை அனுப்பி விடுவார்கள். தீண்டதகாதவர்கள் கொடுக்கும் அப்பழங்கள் மட்டும் தீண்டதக்கதக மாறுவது எப்படி எந்த சிந்தனை அந்த இளம் லட்சுமிக்கு எழுந்தது. அந்தக் குரலுக்கு உரியவர்களை லட்சுமி பார்த்ததில்லை ஆனால் அவர்களை பார்க்கும் ஆர்வம் அவருக்கு இருந்தது. தனது பாட்டியிடம் அவர்கள் யார்? அவர்களை ஏன் வீட்டிற்கு அருகில் பார்க்க முடியவில்லை என்று தனது பாட்டியிடம் லட்சுமி கேட்டார். அதற்கு அவர் பாட்டி அந்த ஆதிவாசிகளையும் அவர்களது குழந்தைகளையும் பார்த்தால் நீங்கள் குருடாகிவிடுவீர்கள் என்று பதிலளித்தார். 



ஆனால் இந்த பதில் லட்சுமிக்கு பிடித்தமானதாக இல்லை. ஒருநாள் மலையடிவாரத்திற்கு சென்று அங்கே மூடாத மார்பில் அழகிய மணிகளால் அலங்கரித்து நின்று கொண்டிருந்த ஆதிவாசி பெண்ணின் கையை பிடித்துக்கொண்டார். லட்சுமியின் பாட்டி தண்டனை தருவார் என்று பயந்த அந்தப் பெண் அழத்தொடங்கிவிட்டார். அவளை தன்னுடைய நட்பாக்கி தினமும் அவளை தனது வீட்டிற்கு அழைத்துச்செல்வதை வாடிக்கையாகினார். அவரது பாட்டி முதலில் கடுமையாக எதிர்த்தார். ஆனால் லட்சுமியின் மாமா ஒரு காந்தியவாதி. அவர் சொன்னார் "நாம் யாரையும் தீண்டாதவர்களாக கருதக்கூடாது, நமது வீட்டை அனைவருக்காகவும் திறந்துவைக்கும் காலம் வந்துவிட்டது". இது இளம் லட்சுமியின் மனதில் ஆழப்படிந்தது. தனது தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றியும் பெற்றார்.
கல்வி நிலையத்தில்...



    சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் லட்சுமியின் கல்வி துவங்கியது. பின்னர் அரசு பள்ளிக்கு மாறினார். 1930ல் எஸ்.எஸ்.எல்.சி முடித்தார்ர். பள்ளியில் லட்சுமி உளிட்ட பல மாணவிகள் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கையால் நூல் நூற்று தயாரித்த கதர் ஆடைகளையே அணியத்துவங்கினர். 


    தேசிய இயக்கம், சமூக சீர்திருத்தம், குழந்தை திருமணம் ஆகியவை குறித்தெல்லாம் தனது வீட்டில் நடக்கும் விவாதங்களையே  அவரது பள்ளியிலும் நடந்தது அவருக்கு மகிழ்ச்சியளித்தது. அவரது தேசிய உணர்வு கொண்ட வீட்டுச்சூழல் பெருமையை கொடுத்தது. அவரது தாயார் அம்மு சுவாமிநாதன் மாதர் அமைப்பில் ஈடுபட்டவர் மட்டுமல்ல அவரது வீட்டில் இருந்த அந்நிய துணிகளை ரோட்டில் எரித்த ஒரு தீவிர தேசபக்த தொண்டரும் ஆவார். லட்சுமியை கூட்டங்களுக்கு அழைத்துச்செல்வார். இப்படியாக இளம் லட்சுமி தேசம் குறித்த புரிதலுக்கு வந்து சேர்ந்தார்.


    லட்சுமியின் தந்தை சுவாமிநாதன் அன்று புகழ்பெற்ற வழக்க்றிஞராக இருந்தார். அச்சமயத்தில் இந்தியாவில் மைனராக இருந்த ஜமீன்தார்களை பிரிடிஷ் அரசு வார்டன்களை நியமித்து இருந்தது. கடம்பூர் ஜமீன் தனது ஆங்கில வார்டனை சுட்டுவிட்டார். அந்த வழக்கு சுவாமிநாதனிடம் வந்தது. அவர் அந்த வழக்கில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி அடைந்தார். இந்தனால் இவர்கள் குடும்பத்திற்கு நல்ல மரியாதை உயர்ந்தது. ஆனால் அவரது ஆங்கிலேய நண்பர்கள் இவருடன் பழகுவதில் வேறுபாட்டை காட்ட துவக்கினர். லட்சுமியின் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் உனது தந்தை செய்தது சரியல்ல என வாதிட்டனர். இப்படியான சில நிகழ்வுகள் அவரது வாழ்வில் நடந்தது.



    1930ல் சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் உயர் படிப்புக்காக லட்சுமி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்த கல்லூரியின் முதல்வர் ஜமீந்தார் சுட்டுக்கொன்ற ஆங்கிலேயரின் தங்கைதான். எனவே கண்டிபாக தனக்கு அக்கல்லூரியில் இடம் கிடைக்காது என நினைத்தார். ஆனால் லட்சுமியின் மதிப்பெண்கள் சிறப்பாக இருந்ததும், அந்த பெண்மணியின் நேர்மையான செயலபாடும் இவருக்கு அக்கல்லூரியில் இடத்தை உறுதி செய்தது.  



    அங்கும் அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை தீவிர காங்கிர இளைஞர் அணியில் இணைந்தார்.  இவ்வணிக்கு பிற்காலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக விளங்கிய பி. இராமமூர்த்தி தலைவராக இருந்தார். லட்சுமியின் பார்வை தேசம் முழுவதும் இருந்தது. அச்சமயத்தில் மாவீரன் பகத்சிங்க் கைது செய்யபட்டு அந்த வழக்கு உலகம் முழுவதும் பேசப்பட்டது. அந்த வீர இளைஞனுக்காக, அவனது வழக்குக்காக மக்களிடன் நிதி வசூல் செய்யப்பட்டது. கேப்டன் லட்சுமி பகத்சிங் வழக்குக்காக அவரது கல்லூரியில் மாணவர்களிடம் நிதி திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டார். அதே 1930-ம் ஆண்டில் அறப்போராட்டத்தில் மறியலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதும் சிறையில் இருந்தார்.   



    காங்கிரஸ் நிகழ்வுகளில் பங்கேற்றாலும் தன்னை ஒரு காங்கிரஸ்காரராக எப்போதும் லட்சுமி நினைத்ததில்லை. விடுதலைப் போராட்ட ஆதரவாளாராக மட்டுமே நினைத்துக்கொண்டார். அனைத்து அகிம்சை சத்தியாகிரகங்களும், போராட்டங்களும் தடியடியில் முடிவுற்றது அவருக்கு உவர்ப்பானதாக இல்லை. லட்சுமி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போதுதான் முதன் முதலாக கம்யூனிசக் கோட்பாடுகளை எதிர்க்கொண்டார். பல ஆண்டுகள் ஜெர்மனியில் வசித்துவந்த, புரட்சிச் சிந்தனைகொன்ட, சரோஜினி நாயுடுவின் சகோதரியான சுஹாசினி லட்சுமியை சந்தித்தார். அவர் லட்சுமிக்கு எட்கர் ஸ்னோவின் சீன வானில் சிவப்பு நட்சத்திரம் என்ற புத்தகத்தை கொடுத்தார். அதுமுதல் லட்சுமியின் சிந்தனையின் நிறம் மாறத்து வங்கியது, வாழ்வின் பாதையும்தான்...
    (புதிய பாதை தடத்தை சந்திக்கலாம்)