வாச்சாத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாச்சாத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

வாச்சாத்தி வழக்கு : வேட்டை நாய்களுக்கு தீர்ப்பு


வாச்சாத்தி வழக்கில் தீர்ப்பு ; கோபம் அடங்கவில்லை சொந்தங்களே!

அது மறக்க முடியாத 1992ஆம் ஆண்டு. காவி வெறியர்கள் பாபர் மசூதி இடிக்கும் முன் நடந்த காக்கி வெறி காவல்துறை செய்த கொடூர கதை இது. வீரப்பனை பிடிக்க துப்பில்லாத அல்லது அவனிடம் எச்சில் எலும்புகளை பொறுக்கிய காவல்துறையின் கொடூர தாண்டவம் இது. வீரப்பனை பிடிக்க அமைக்கபட்ட அதிரடி படையின் அட்டகாசம் இது. 

தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி மலைவாழ் மக்கள் சந்தன மரங்களை கடத்துவதாக வந்த புகாரின் மீது வனத்துறையைச் சார்ந்த அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டு 269 பேர் கொண்ட கூட்டுக்குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டு அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் பலரை பாலியல் பலாத்காரம் செய்து வன்கொடுமைக்கு ஆளாக்கினர். அவர்களின் வீடுகள் நொறுக்கப்பட்டு, உடைமைகள் சூறையாடப்பட்டன. ஆண்கள் 15 பேர், குழந்தைகள் 28 பேர், பெண்கள் 90 பேர் என 133 பேரை கைது செய்து பொய்வழக்கு புனைந்தனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வாச்சாத்தி கிராம மலைவாழ் மக்கள் கொடுத்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை.

இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் பாலியல் வன்கொடுமைக்கும், பல்வேறு பாதிப்புகளுக்கும் ஆளாகி நிராயுதபாணியாக நின்ற வாச்சாத்தி கிராம மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து விபரம் அறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கடுமையான போராட்டங்களை, மறியல்களை, உண்ணாநிலை அறப்போராட்டங்களை  நடத்தியது. விவசாய சங்க தலைவர்கள் பி.சண்முகம், பி.டெல்லிபாபு (எம்.எல்.ஏ), கே.பாலகிருஷ்ணன்  (எம்.எல்.ஏ) (இவர்கள் தற்போதுதான் எம்.எல்.ஏ அப்போதல்ல) ஆகியோர்தொடர்ந்து அம்மக்களுக்கு ஆதரவாக நின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்நீதிவிசாரணை கோரி நீதிமன்றம் சென்றது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அரூர் காவல்துறையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 1993இல் சிபிஐ விசாரணை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளர் மறைந்த தோழர் ஏ. நல்லசிவன் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் 1995ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு குற்றவாளிகள் 269 பேர் கைது செய்ப்பட்டனர். 

கடந்த 19 ஆண்டுகாலமாக தொடர்ந்து அம்மக்ககளுடன் நின்று விடாப்பிடியாக வழக்கை சந்தித்தது சி.பி.எம். கடுமையான மிரட்டல்கள் கோடிக்கணக்கில் பணம் தருகிறோம் என ஆசை வார்த்தைகள் என சகலவித கபட நாடகங்களையும் குற்றவாளிகள் மெற்கொண்டனர் ஆனால் அந்த போராளிகள் அவற்றை தூக்கி எரிந்தனர். 19 ஆண்டுகாலம் நடைபெற்ற இவ்வழக்கில் இன்று தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் 29.09.11 அன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் இக்காலத்தில் இறந்தவர்கள் 54 பேர் போக மீதமுள்ள வனத்துறை அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டு 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் மண்டல வனப்பாதுகாவலர் ஹரிகிருஷ்ணன் முதல் குற்றவாளி எனவும், 11 பேர் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டோருக்கான தண்டனை விவரத்தை நீதிபதி குமரகுரு அறிவித்துள்ளார்.

ஐஎப்எஸ் அதிகாரியான ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோருக்குத் தண்டனை விவரம் வெளியாகியுள்ளது. ஹரிகிருஷ்ணனுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்துள்ளது. இதுவரை அறிவித்துள்ள தண்டனை விவரம்: 12 பேருக்கு தலா 17 ஆண்டு சிறைத் தண்டனை. 5 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை மற்றும் ரூ. 2000 அபராதம். 150 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை. 70 பேருக்கு தலா ஓராண்டு சிறை மற்றும் ரூ. 1000 அபராதம்

சாதாரண பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்த காரணத்தால்தான் குறைந்த அளவிலான தண்டனை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இல்லையெனில் இன்னும் கடுமையாக தீர்ப்பு வந்திருக்கும். 269 பேர் மீதும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பலர் மீது பாலியல் பலாத்காரத்திற்காக 376வது பிரிவின் கீழும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதேபோல ஆதாரங்களை மறைத்தது தொடர்பாக ஐஎப்எஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், தாக்கிக் காயப்படுத்தியது, சட்டவிரோதமாக அடைத்து வைத்தது ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

கொடூரமான குற்றங்களை செய்துவிட்டு 19 ஆண்டுகள் தண்டனையிலிருந்து தப்பித்த இந்த கொடூரரக்ள் இப்போது தீர்ப்பின் முன்னால் நிற்கின்றனர். இவர்கள் மேல்முறையீட்டை செய்து இன்னூம் காலம் கடத்துவார்கள். காலம் இவர்கள் தீர்ப்பை எழுதும். அல்லலுற்று அழுத கண்ணீர் இவர்களை தண்டித்தே தீரும். இல்லையெனில் அம்மக்களுடன் இணைந்து செங்கொடி இயக்கம் தீர்ப்பை வாங்கித்தரும்.