போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 நவம்பர், 2015

போராட்டப் புயல் வீசிய இரவு...


மெல்லிய தூறல்கள் விழுந்துக் கொண்டிருந்த வெள்ளியன்று இரவு (13.11.2015) 8 மணிக்கு கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அந்தப் போராட்டம் துவங்கியது. எந்த அறிவிப்பும் இல்லாமல் துவங்கிய போராட்டம் அது. வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த எங்கள் குழுவின் மொத்த கோபத்தின் வெளிப்பாடு அந்த போராட்டம். இயற்கை பேரிடரின் துயரத்தை அரசாங்கம் மட்டும் எதிர்கொள்ள முடியாது என்ற புரிதலுடன்தான் போராட்டத்தில் அமர்ந்தோம். ஆனால் அதிகாரிகளின் அலட்சியமும், அரசாங்கத்தின் மெத்தனமும்தான் நாங்கள் இரவு நேரத்தில் போராட்டம் துவங்க காரணமாகியது. மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற இதுவே காரணமாகும். சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் தீபாவளிக்கு முதல் நாளே நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மழையும் புயலும்முடிந்த பிறகுதான் மாவட்டத்தின் மொத்த பாதிப்பும் தெரியவந்தது. உயிர் சேதம், பயிர்கள் சேதம், வாழை, கரும்பு, முல்லை உள்ளிட்ட விளை பொருட்களின் சேதம், மின்சாரம் அடியோடு துண்டிப்பு, குடிநீர் இல்லாமல் தவிப்பு என மக்கள் நரக வேதனையை அனுபவிக்க துவங்கினர்.

நூற்றுக்கணக்கான குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து உணவு மிகப்பெரிய பிரச்சனையானது. ஆனால் நிவாரண பணிகளோ ஆமை வேகத்தில்தான் நடந்தது. ஆனால் உடனடியாக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு இயல்பு நிலையை உருவாக்கியது போல நாடகமாடத் துவங்கியது. கடலூர் மாவட்டத்திற்கு ஐந்து மந்திரிகள் வந்தனர். பிரச்சனையே அதுதான். எல்லா அதிகாரிகளும் அவர்கள் பின்னால் அணிவகுக்க துவங்கிவிட்டனர். குறிப்பாக எதிர்கட்சிகள் இருக்கும் தொகுதிகள் புறம்தள்ளப்பட்டது. சிதம்பரம் தொகுதியில் குறிப்பாக பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 13ம் தேதி இரவு வரை யாருக்கும் ஒரு உணவு பொட்டலம் கூட வழங்கப்படவில்லை. 11ம் தேதி இரவு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கரிகுப்பம் கிராமத்தில் இருளர் வாழும் பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது, உடனடியாக அங்குஉணவு பொட்டலங்களை அனுப்புங்கள் என கூறியதும் அவர் உடனடியாக அனுப்புவதாக சொன்னார் ஆனால் 13ம் தேதி இரவு வரை அங்கு எந்த உதவியும் போகவில்லை.

13ம் தேதிவரை த.சோ.பேட்டை இருளர்கள் குடியிருப்பு, சோத்து கொல்லை, செஞ்சேரி, மடுவங்கரை, பெரியமதகு, நஞ்சைமகத்து வாழ்க்கை உள்ளிட்ட கிராமங்களுக்கு ஒரு சொட்டு குடிநீர்கூட கிடைக்கவில்லை அதாவது 5 தினங்களாக. மேலும் நாங்கள் சென்ற 16 கிராமங்கள் இன்னும் இருளில்தான் மூழ்கி உள்ளது. மண்டபம் கிராம மக்கள் வேறு வழியில்லாமல் போராடிய போது சிதம்பரம் காவல்துறை அவர்களை கடுமையாக தாக்கியது. ஒரு மாற்று திறனாளி ஓட வழியில்லாமல் கடுமையாக தாக்கப்பட்டார். இவைகள் உருவாக்கிய கோபம்தான் 13ம் தேதி இரவு போராட்டமாக மாறியது.போராட்டம் துவங்கியதும் வழக்கம் போல காவல்துறையினர் பாய்ந்து வந்து நின்று கொண்டனர்.

அதிகாரிகள் வந்தனர். எந்தவித உதவியும் இல்லாத குறிப்பிட்ட கிராமங் களுக்கு உதவிகள் கிடைக்கும் வரை இங்கிருந்து எழுந்து செல்லமாட்டோம் என கூறிவிட்டோம். நேரம் கடந்துக்கொண்டே இருந்தது. அதிகாரிகள் மாறி மாறி சட்டமன்ற உறுப்பினரிடம் பேசினர். காலையில் நிவாரண பணிகளை செய்து விடுகிறோம் அவர் ஒரே வார்த்தையில் மறுத்துவிட்டார். முடியாது!

உடன் அசுர வேகத்தில் பணிகள்துவங்கியது. இரவு 11 மணிக்கு உணவு பொட்டலங்கள் தயாராகி கிராமங்களுக்கு சென்றது. டேங்கர் வண்டிகளில் இரு கிராமங்களுக்கு குடிநீர் சென்றது. அரிசி மூட்டைகள் அரசு வண்டியில் வந்து இறங்கி கிராமங்களுக்கு சென்றது. அலட்சியமாக மக்களை கவனித்த வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டார். உடனடியாக ஒரு சிறப்பு அதிகாரி பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு நியமிக்கப்பட்டார். இனி முழு நிவாரணபணிகளையும் அவரே கவனிப்பார் என உத்தரவு வந்தது. அதன்பிறகுதான் 11.30 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்களும் போராட்டத்தை முடித்துக்கொண்டோம். 

அதே நாளில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த மாதர் சங்கத் தோழர்கள் பண்ருட்டி பெரியகாட்டுபாளையம், சின்ன காட்டுபாளைம், மேட்டுக்குப்பம் பகுதியில் நிவாரண பணிகளில் ஏற்பட்ட பாரபட்சத்தை கண் டித்து மக்களுடன் மறியலில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட அந்த போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு 957 குடும்பத்தார்களுக்கு ரூபாய் 47.08,500 (சுமார் ஐந்து லட்சம்) நிதியை பெற்றுக்கொடுத்தனர். ஆளும் கட்சியினரின் நிவாரண உதவி பாரபட்சம் மேலும் போராட்டங்களை கடலூர் மாவட்டத்தில் அதிகப்படுத்தவே செய்யும். இதோ இந்த பதிவை எழுதி கொண்டிருக்கும் போது கரிகுப்பம் கிராமத்தின் இருளர் குடியிருப்பிலிருந்து தொலைபேசி அழைப்பு.. “தோழர் நாங்க இருளர் காலனியிலிருந்து பேசுறோம்.. வீடுகளை சுத்தி நின்ன தண்ணியில விழுந்து மூணு வயசு கொழந்த செத்து போச்சு, உடனே வாங்க தோழர்... காலையில செத்து போச்சுயாருமே வரல..” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அங்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

----- 15.11.2015 அன்றைய தீக்கதிரில் வந்த பதிவு-----

புதன், 12 மார்ச், 2014

களத்தில் மட்டுமல்ல வாழ்விலும் போராடியவர்: சரோஜினி



விடுதலைப்போரில் பெண்கள் - 12



ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்திய நிர்வாகத்தை மொத்தமாக கைக்கொண்டதும் இந்தியாவின் நிர்வாக அமைபில் பல மாறுதல்களை செய்தனர். குறிப்பாக தங்களுக்கு ஏற்ற ஒரு வர்க்கத்தை உருவாக்க கல்வி அமைப்பில் பல புதிய திட்டங்களைக் கொண்டு வந்தனர். இதன் பயனாக இந்தியாவில் குறிப்பிட்ட வர்க்கத்தினர் கல்வி பெறும் வாய்ப்பை அடைந்தனர். ஆனால் அவர்கள் கொடுத்த கல்வி அவர்களுக்கு எதிராக திரும்பியது மட்டுமல்ல மற்றொரு உபவிளைவாக இந்திய நாட்டின் பெண்களையும் போராட்ட களத்திற்கு அழைத்து வந்ததுதான் சுவராசியம்.

அன்னி பெசண்ட் அம்மையார் அன்னிய நாட்டில் பிறந்து இந்திய நாட்டு விடுதலைக்கு போராடினார். ஆனால், இந்திய மண்ணில் ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்மணி தந்த கல்வியை பயன்படுத்தி தனது தேசத்திற்காக மட்டுமல்லாது பெண் விடுதலை, பெண் சுதந்திரத்திற்காகவும் போராடினார். சென்ற நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் இவரது செயல்பாடுகள் அசாத்தியமானது.

1879 பிப்ரவரி 13-ம் தேதி பிறந்த சரோஜினி பிறப்பால் நாயுடு அல்ல.அவரது தந்தை ஒரு வங்காளி பிராமணர். அவர் பெயர் டாக்டர் அகோரநாத் சட்டோபாத்தியாயா. பெரிய கல்வியாளர். விஞ்ஞானத்திலும் உயர் கல்வி கற்றவர்.அன்றைய நிஜாம் சமஸ்தானத்துக்கு வந்து (ஹைதராபாத்) ஒரு கல்லூரியை நிறுவியவர். இதனால் சரோஜினியின் இளம் பருவம் ஹைதராபாத்தில் சுற்றித் திரிந்தது.
 
இவருடன் பிறந்தவர்கள் மூன்று  பெண்கள், மூன்று ஆண் குழந்தைகள், வசதியான குடும்பம். படிப்பில் எப்போதும் சரோஜினி முதல் இடத்தில் இருந்தார். சிறு வயதிலேயே  கவிதை எழுதும் ஆர்வம் இருந்தது. இது அவரை மற்றவர்கள் மத்தியில் வேறுபடுத்தி காட்டியது. கொஞ்ச நாள்தான் ஹைதராபாத் படிப்பு தொடர்ந்தது. அவரது தந்தை சிறந்த கல்வியை அளித்துவந்த சென்னைக்கு சென்றால் சரோஜினி படிப்பில் மேலும் சிறக்கலாமென அவரை சென்னைக்கு அனுப்ப முடிவு செய்தார். 

அந்த இளம் வயதிலேயே தனியாக ரயிலேற்றி சென்னைக்கு அனுப்பி விட்டார். சிறப்பாக படித்து பன்னிரெண்டாம் வயதிலேயே மெட்ரிகுலேஷன் தேர்வெழுதி வெற்றிகண்டார். மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்தார். ஆகவே அவரை மேல் படிப்புக்கு இங்கிலாந்துக்கு அனுப்பினார் அவரது தந்தை.

1895-ம் வருடம் லண்டனில் கிங்ஸ் கல்லூரியில் கணிதம் படிக்கச் சேர்ந்தார்.தந்தையின் விருப்பம் அது. ஆனால் கணிதத்தைவிட கவிதைகளில் அவரது கவனம் சென்றது.கவிதைகளில் சமூக கருத்துக்கள் மேலோங்கி நின்றன. எனவே அவரது நண்பர்களான ஆங்கில எழுத்தாளர்களும், கவிஞர்களும் அவரது கவிதைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டு வர உதவி செய்தார்கள்.அவரது எழுத்து திறமை கொட்டும் அருவியைப்போல மடைதிறந்து வந்தது.  
 1898-ல் சரோஜினிக்கு உடல் நிலை சரியில்லாமல் தனது படிப்பை தொடர முடியாமல் ஹைதராபாத்துக்கு திரும்பினார்.சரோஜினியின் தந்தைக்கு மகளின் விருப்பம் புரிந்தது.அவரது கவிதைகளை ஆதரித்தார். அச்சமயம் ஹைதராபாத்தில் வசித்து வந்த மேஜர் கோவிந்தசாமி நாயுடு என்பவரின் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. நாயுடு, பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே திருமணமாகி, மிக இளம் வயதில் மனைவியை இழந்தவர். தொழில் முறையில் அவர் ஒரு டாக்டர். 

உயர்சாதியினரான சரோஜினி குடும்பம் இக்காதலை ஏற்கவில்லை.அன்றைய தேதியில் இதனைத் தன் தனியொருவரின் பிரச்சினையாகப் பார்க்காமல், ஒட்டுமொத்த சமூகப் பிரச்சனை ஒன்றின் ஒரு எடுத்துக்காட்டாகக் கொண்டார் சரோஜினி. கேவலம், சாதியை முன்னிட்டு காதலை நிராகரிப்பதா என அடங்க மறுத்தார். சாதி மறுப்பு திருமணத்தில் உறுதியாக நின்றார். அவரது தந்தை அவரது விருப்பத்துக்குக் குறுக்கே நிற்கவில்லை.எனவே அந்த சாதி மறுப்பு திருமணம் அவரது தந்தையின் ஒப்புதலுடன் நடந்தது

1885ல் மேல்தட்டு வர்க்கத்தினர் நலனுக்காகவும், எழுந்து வந்த சுதந்திர தாகத்தை தனிய வைக்கவும் மனு கொடுக்கும் இயக்கமாக துவங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர் கொடுத்த கல்வியினாலும், விடுதலை தேசம் குறித்த கனவுகளாலும் விழிப்புணர்வு கொண்ட இளைஞர்கள் கையில் வந்திருந்தது.இதன் விளைவாக   தேசம், சுதந்திர தாகம் கொண்டு தவித்த தருணமாய் இருந்தது. பெண்களும் களத்தில் இறங்க வாய்ப்புகள் அழைத்தது. அன்னிபெசண்ட் அதற்கு வழிகாட்டியாக இருந்தார். 

ஆக அத்தகைய சூழலில் தனது மக்களுக்கும் நாட்டுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உணர்ச்சி மேலோங்கியது. இதன் காரணமாய் கணவரையும், பிறந்த இரு குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு தன்னை புரிந்துக்கொண்ட கணவனை விடுத்து, குழந்தையை பிரிந்து பம்பாய்க்கு ரயிலேறினார். தேசம் அழைத்தபோது தனது குடும்பத்தையும், கைக்குழந்தையையும் பிரியும் தியாக உள்ளம் அவருக்கு வாய்த்திருந்தது. பொழுதெல்லாம் எம் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ நாங்கள் சாகவோ என விடுதலை கீதம் இசைத்த எட்டையபுரத்தானைப் போல தமது எழுச்சிமிக்கக் கவிதைகளின் மூலம் மக்கள் மத்தியில் சுதந்திரக் கனவை ஊதி வளர்த்தார். பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, முகமதலி ஜின்னா போன்ற தலைவர்களுடன் பழக வாய்ப்பு கிடைத்தது. அன்னிபெசண்ட் இந்தியா வந்து அப்போதுதான் ஹோம்ரூல் இயக்க பணிகளை துவக்கியிருந்ததும் சரோஜினிக்கு உற்சாகத்தை கொடுத்தது. தில்லையாடி வள்ளியம்மையின் தீரமிக்க போராட்டத்தால் கவரப்பட்ட காந்தியடிகள் தென்னாப்ரிக்கா, இந்தியர் விடுதலை போராட்டத்தில் பங்கேற்று இந்தியா திரும்பிய சமயம் அது. மீண்டும் அங்கே பிரச்சனைகள் எழுந்த போது தனது சார்பாக சரோஜினியைதான் அங்கு அனுப்பி வைத்தார். 

மீண்டும் இந்தியா வந்த சரோஜினி காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளர் பணியை மேற்கொண்டார். தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் அவர் மேற்கொண்ட அயராத சுற்றுப் பயணங்களும், எழுச்சியுடன் அவர் ஆற்றிய உரைகளும் சுதந்திரப் போராட்ட சரித்திரத்தில் மிக முக்கியமான அத்தியாயங்கள். அதுமட்டுமல்ல காங்கிரசின் செயற்குழு உறுப்பினராக, அக்கட்சியின் தலைவராக ஒவ்வொரு காலக் கட்டத்தில் ஒவ்வொரு பொறுப்பை ஏற்று திறம்பட செயலாற்றினார். அவர் பொதுவாழ்வில் இறங்கிய பின்பு நடந்த போராட்டங்களில் எல்லாம் பங்கேற்றது மட்டுமல்ல, அன்றைய பெண்களின் மனசாட்சியை தட்டி எழுப்பினார். விடுதலைபோரில் சுடர் விடும் ஒளியாக, இந்திய பெண்களின் போராட்ட கலங்கரை விளக்காக உத்வேகம் ஊட்டினார். 

பல பத்தாண்டு போராட்டத்தில் ஆயிரமாயிரம் மக்களின் உதிரத்தில் விடுதலைப் பிறந்தது. இந்திய தேசம் சுதந்திரமடைந்த பிறகு இந்தியாவின் முதல் பெண் கவர்னராக சரோஜினி நியமிக்கப்பட்டார். அதுவும் அன்று மாபெரும் மாநிலமாக இருந்த ஐக்கிய மாகாணத்துக்கு (இன்றைய உத்தரபிரதேசம்) நியமிக்கப்பட்டது அவரது நிர்வாக திறமைக்கு ஒரு சிறந்த உதாராணமாக இருந்தது. அவர் பலவிதங்களில் ஒரு முன்னோடிப் பெண்மணி. தமது சுய வாழ்வில், சமூக வெளியில் உறுதியுடன் போரிட்டு சாதித்தவர். பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்று பேசுவதுமட்டும் விடுதலைக்கு மார்க்கமில்லை, நமது சுதந்திரம் நம்மிடம்தான் இருக்கிறது. அதுவும் வீதியில் போராடமல் கிடைக்காது என்று தனது வாழ்வால் நிருபித்தவர் சரோஜினி. வாழ்க்கை முழுவதும் போராட்ட களத்தில் இருந்த சரோஜினி தமது 70அம் வயதில் 1949 மார்ச் 2-ம் தேதி காலமானார். விடுதலைப்போரில் ஈடுபட்ட பெண் போராளிகளின் வரிசையில் எப்போதும் மறக்க முடியாத இடத்தில் நிறைந்திருப்பார் சரோஜினி.

திங்கள், 7 நவம்பர், 2011

நவம்பர் புரட்சியும் வால் ஸ்டிரீட் போராட்டமும்







செப்டம்பர் மாதம்தான் அது நடந்தது. உலகம் அதிர்ந்து பார்த்த, யாரும் நெருங்க முடியாது என யூகிக்கப்பட்ட அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட இரட்டைகோபுர தாக்குதல். அது நடந்து 10 ஆண்டுகள் வேகமாய் ஓடிவிட்டது. இதோ 2011 மீண்டும் அதே செப்டம்பரில் அமெரிக்காவின் தலைவலி துவங்கியுள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகம் யாருக்காக படுகொலைகளை உகலம் முழுவதும் செய்து வருகிறதோ அந்த முதலாளிகளின் தலைமையகமான வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவேம் என்று பேர்க்குரல் எழுப்புகிறார்கள் அமெரிக்க மக்கள். 

செப்டம்பரில் சிலநூறு போராளிகள் துவங்கியப் போராட்டம் இரண்டு மாதங்களில் பல்லாயிரக் கணக்கான மக்களை வீதியில் இறக்கியுள்ளது. இரட்டைக் கோபுர தாக்குதலுக்கூட அதிராதா அமெரிக்க "வால் ஸ்டிரீட் நம் வாழ்க்கையைக் கைப்பற்றியதால், நாம் வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம்" என மக்கள் போராடுவதை பார்த்து பதறி துடிக்கிறது. எங்களுக்கு வேலை இல்லை. குடியிருக்க வாடகை வீடு இல்லை. தண்ணீர் வரி கட்ட முடியாததால், குடிநீரும் ரேஷன்தான். நாங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். எங்கள் உடல் உழைப்பை, அதன் மூலம் கிடைத்த பணம், வசதிகளை எல்லாம் வர்த்தக, தொழில், நிதி நிறுவன பணமுதலைகள் ஆக்ரமித்துக்கொண்டு, எங்களை அடிமையாக்கி விட்டன. மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசு. ஆனால், பட்ஜெட்டில் வரி போடுவது, மானியத்தை ரத்து செய்வதெல்லாம் அதன் பின்னால் உள்ள இந்த பண முதலைகள் நிர்ணயிக்கின்றனர். ஓட்டு போட்டு அரசை தேர்ந்தெடுப்பது நாங்கள் ஆனால், ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களை கையில் போட்டு ஆதிக்கம் செலுத்தி நாட்டை நடத்துவது இந்த பண முதலைகளா? எங்களுக்கு சமத்துவம் வேண்டும்; அமெரிக்காவில் உள்ள எல்லா வளங்களை, பணத்தை, வசதியை ஒரு சதவீத பண முதலைகள் அனுபவிக்க, 99 சதவீதம் அப்பாவி மக்கள் ஒதுக்கப்படுவதா? நாகரிக அடிமை வாழ்க்கையை அனுபவிப்பதா? விடமாட்டோம் இனி.எங்கள் வாழ்க்கையை நீங்கள் முடக்கினீர்கள் இதோ உங்களை நாங்கள் முடக்க வருகிறோம் என அணிதிரண்டுள்ளனர்.

  அமெரிக்காவில் 10 கோடி மக்கள் வறுமையில் தவிக்கிறார்கள். 5 கேடிப்பேருக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. 2.5 கேடிப் பேருக்கு வேலை இல்லை. இருப்பினும் பணக்காரர்களுக்கு வரிவிலக்கு தாராளமாக வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் குடியரசுக்கட்சியும் ஜனநாயகக் கட்சியும் பெயர்கள்தான் வேற்றுமையுடையவை அவை இரண்டும் முதலாளிகளின் கைக்கூலி கட்சிகள்தான். அவர்களின் நிதியால்தான் இவர்கள் மாறிமாறி ஆட்சியை பிடிக்கின்றனர். ஆகவேதான் வால் ஸ்டிரீட் முற்றுகையை வர்க்கப்பேர் என்று புரிந்துக்கொண்டு ஆட்சியாளர்கள் அலறுகின்றனர். முதலாளித்துவப் பெருளாதாரத்தை வீழ்த்துவதற்கு நடக்கும் உலகு தழுவிய கம்யூனிஸ்டு சதி என்று அச்சுறுத்துகின்றனர். பாக்ஸ் நியூஸ் என்ற தெலைக்காட்சி வால் ஸ்டிரீட்டை எது தாக்குகிறதே அதுதான் உலகின் முதன்மை அபாயம் என அறிவிக்கிறது.

வர்க்க போர் என்ற சொல்லாடல் ஏன் உலக முதலாளிகளை, அல்லது ஏகாதிபத்திய சக்திகளை ஏன்அச்சுறுத்துகிறது?? அதுதான் நவம்பர் புரட்சியின் வெற்றி. 

நவம்பர் 7- உழைக்கும் வர்க்கத்தின் பெருமையை, வலிமையை இந்த பூவுலகம் உணர்ந்த நாள். அன்றுதான் ரஷ்ய தேசத்தில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ஒரு புதிய அரசு முறை அமைந்தது. ஆஹா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி என்று மகாகவி பாரதி பாடிய புரட்சி. இந்த உலகை தங்கள் உழைப்பால் உருவாக்கிய தொழிலாளர்கள் மனித தன்மையில்லாமல் சுரண்டப்பட்டனர். பாட்டாளிகளின் உழைப்பை முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் ஒட்டச்சுரண்டினர். மாமேதை லெனின் தலைமையில் தொழிலாளி வர்க்கப் புரட்சி ஜாரின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டியது. 

இந்தப்புரட்சியைத் தொடர்ந்து சோவியத் யூனியன் என்ற அதுவரை உலகம் கண்டிராத புதிய அரசுமுறை அமைந்தது. உழைக்கும் மக்களின் உதிரத்தை குடித்து கொள்ளையடித்து சேர்க்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன. தொழிற்சாலைகள் அனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளிகளிடமே விடப்பட்டது.அதுவரை இருந்த வாழ்க்கை முறை முற்றிலும் மாறியது. மக்கள் ஆட்சியாளர்களை சந்திக்கும் முறை மாறி அரசு மக்களை சந்தித்தது. மக்கள் வாழ்க்கை முன்னுக்கு நிறுத்தப்பட்டு அவர்களுக்கான வாழ்க்கை உத்திரவாதம் செய்யப்பட்டது. அதனால்தான் முதலாளித்துவ நாடுகளில் கூட தவிர்க்க இயலாமல் சில சலுகைகளை தொழிலாளர்களுக்கு முதலாளிகள் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சேமநல அரசு என்ற சொல்லாடல் இதன் பின்தான் வந்தது.

சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அமைப்பு முறைக்கு பின்னடைவு ஏற்பட்டபோது, இனி சோசலிசத்திற்கு எதிர்காலம் இல்லை என்றனர். ஆனால் இன்றைக்கு அமெரிக்காவிலேயே தொழிலாளர்கள் போராடுகிறார்கள். இதன் கதிர்வீச்சு ஐரோப்பிய கண்டத்தையும் கடந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஏற்கனவே பிரிட்டன், பிரான்சு,  கிரீஸ், ஸ்பெயின், பேர்த்துகல், இத்தாலி என்று கடந்த 3 ஆண்டுகளாக தாவிப்பரவும் போராட்டம் இஸ்லாமிய நாடுகளிலும் பற்றியுள்ளது. 

பின்லேடனுடன் ஆயுதம் சுமந்த எகிப்து இளைஞர்கள் ஆயுதங்களை தூர எரிந்து உழைப்பதற்கு வேலை கொடு! பசித்தவனுக்கு உணவு கொடு என போராட்டகளத்தில் குதித்தனர். இருப்பவருக்கும் இல்லாதவருக்குமான போராட்டம் உலக அரங்கில் உக்கிரமாக நடந்து வருகிறது. இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கை செயல்படுத்தப்பட்டபிறகு தொழிலாளர்களைச் சுரண்டுவது அதிகரித்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் நம்நாட்டுச் செல்வங்களை கொள்ளையடிப்பதோடு தொழிலாளர்களின் உரிமைகளையும் ஒடுக்க முயல்கின்றன.

இப்போது நம்முன் ஒரே கேள்விதான் முன் நிற்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளை இந்திய அரசாங்கம் கடைபிடிக்கிறது. மக்களை கொள்ளையடிக்கிறது. அமெரிக்க மக்கள் சுரண்டலுக்கு எதிராக அணிதிரண்டு நிற்கின்றனர். போராடுகின்றனர். இந்திய அரசு அமெரிக்க அரசை பார்க்கிற போது, இந்திய மக்கள் அமெரிக்க மக்களை பார்க்க வேண்டாமா? அவர்கள் போராடுகின்றனர். நாம் என்ன செய்யப்போகிறோம்?