வியாழன், 21 மே, 2026

2026 தேர்தல்: இரு துருவம் மூன்று துருவமாக மாறியது மட்டுமே மாற்றமா?

 


நடந்து முடிந்துள்ள தமிழகச் சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய தடம் பதித்துள்ளது. 1967 முதல் தமிழகத்தை ஆண்டு வந்த திராவிட இயக்கங்களின் ஆட்சிகளுக்கு இப்போது ஒரு இடைவேளை வந்துள்ளது. .வெ.க வெற்றியை ஏதோ விசிலடிச்சான் பிஞ்சுகள் / மாணவர்கள் விபரம் இல்லாமல் ஆதரித்தால் வந்தது எனப் பலர் கடந்து செல்ல நினைக்கின்றனர். 60 ஆண்டுகள் கடந்து இரு துருவ ஆட்சி முடிவுக்கு வந்து மூன்று துருவ அரசியல் துவங்கி உள்ளது. அதுவும் எந்த வித அமைப்பு ரீதியான கட்டமைப்பும் முழுமையாக இல்லாமல், வாக்கு சாவடிகள் முகவர்கள் இல்லாமல், வேட்பாளர்கள் யாரென்றே தெரியாமல், வீடுவீடாக வாக்கு சேகரிக்காமல் ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்தது விபரமாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

திமுக ஆட்சியைப் பிடித்த பின்னணி என்ன?

1967 வெற்றிக்கு வித்திட்டவர்கள் யார் என்ற வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் பல சுவராசியமான தகவல்கள் கிடைக்கும்

 1. 1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழக மாணவர்களைப் பெரிய அளவில் அரசியல் இயக்கங்களுடன் இணைத்தது. இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் தெருக்களில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான மனநிலையை உருவாக்கின.  

2. 1967 தேர்தலின் போது கிராமம் முதல் நகரம் வரை இளைஞர்கள் சைக்கிள் ஊர்வலங்கள், தெருக்கூட்டங்கள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் போன்ற வழிகளில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். அக்காலத்தில் சமூக ஊடகங்கள் இல்லாததால் இளைஞர்களின் நேரடி பங்கேற்பு மிகவும் முக்கியமாக இருந்தது.  

3. சமூக நீதி, சாதி எதிர்ப்பு, தமிழர் அடையாளம், மாநில உரிமை போன்ற புதிய அரசியல் மொழியை அதன் கருத்துகளை மாணவர் மற்றும் இளைஞர் குழுக்கள் மக்களிடம் கொண்டு சென்றனர்

 4. அண்ணா அவர்களின் எளிய பேச்சு நடை, தமிழ் உணர்வு, மேடைப் பேச்சுகள் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன

 5. கல்லூரிகள் அரசியல் விவாத மையங்களானது பல கல்லூரிகளில் மாணவர் அமைப்புகள் உருவாகி, அங்கிருந்து திமுகவுக்கு ஆதரவான கருத்துகள் பரவின

6. எல்லாவற்றையும் தாண்டி வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற திமுகவின் முழக்கம் பிராந்திய முதலாளிகளை திமுகவின் பக்கம் திருப்பியது.

1967 வெற்றி என்பது திமுகவின் வெற்றி மட்டுமல்ல; மாணவர் எழுச்சி, மொழி உரிமைப் போராட்டம், இளைஞர் இயக்கம் ஆகியவை ஒன்றிணைந்து உருவாக்கிய அரசியல் மாற்றமாகவும் பார்க்கப்படுகிறது. இது தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக்க கருதப்படுகிறது

அது வெறும் தேர்தல் பிரச்சார ஆதரவு மட்டுமல்ல; சமூக, மொழி, அரசியல் போராட்டங்களின் தொடர்ச்சியாக உருவான சக்தியாகும். முழுக்க முழுக்க இளைய பட்டாளமே இதை சாத்தியப்படுத்தியது. திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு 138 தொகுதிகளை வென்றது. அதன் வாக்கு சதவிகிதம் சுமார் 40.8% ஆகும். 1977 ஆம் ஆண்டு அதிமுக 200 தொகுதிகளில் போட்டியிட்டு 130 தொகுதிகளை வென்றது. அதன் வாக்கு சதவிகிதம் சுமார் 30.4% ஆகும்.

2026ல் நடந்தது என்ன?

சென்னை, காஞ்சிபுரம், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, அரியலூர், சிவகங்கை ஆகிய 11 மாவட்டங்களில் திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதுவும் திராவிட இயக்கத்தை அரசியல் பாதையில் திருப்பிய அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மண்ணில் இரண்டு கழகங்களும் அவர்கள் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஒரு இடம்கூட பிடிக்கமுடியவில்லை என்பது சுவராசியம்தான். பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தில் திமுக ஒரு தொகுதியும் கைப்பற்றவில்லை என்பது கூடுதல் தகவல்.


சரி த.வெ.க எல்லா மாவட்டங்களிலும் வென்றுவிட்டாதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. கன்னியாகுமரி, தென்காசி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், நீலகிரி, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் த.வெ.க ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. தனிப்பட்ட கட்சிகளாக விஜய் கட்சி 1,72,26,209 வாக்குகள் (34.92), திமுக 1,19,29,144 வாக்குகள் (24.19), அதிமுக 1,04,62,146 வாக்குகள் (21.21) பெற்றுள்ளன. வாக்களித்த ஒட்டு மொத்த வாக்காளர்களில் சுமார் 65 சதமானவர்கள் விஜய் கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இன்னொரு கோணமும் உள்ளது. திமுக அரசு வேண்டாம் என சுமார் 76 சதமானவர்களும், அதிமுக வேண்டாம் என சுமார் 79 சதமான வாக்காளர்களும் இந்த இருவரும் வேண்டாம் என சுமார் 55 சதமான வாக்காளர்களும் வாக்களித்து உள்ளனர்.

1949 ஆண்டு துவக்கப்பட்ட திமுக 18 ஆண்டுகள் போராடி 1967 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது. 1953 ஆண்டு திமுகவில் இணைந்த எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு அதிமுகவைத் துவக்கி 5 ஆண்டுகளில் 1977 ஆண்டு ஆட்சியைப் பிடித்தார். ஆனால் 2024 ஆம் ஆண்டு கட்சியைத் துவக்கிய ஜோசப் விஜய் இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தார்.

சமூக வலைத்தளங்கள் மட்டுமே த.வெ.க வெற்றியை சாத்தியப்படுத்தியதா?

தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்களில் சுமார் 2.38 கோடி பேர் 18–40 வயதுக்கு பட்டவர்கள். இவர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதால் அவர்கள்தான் த.வெ.க ஆட்சியை அமைத்ததாக ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இதுவே முழு உண்மை இல்லை.

1. 59 ஆண்டுகளாக நடந்துவந்த திராவிட இயக்க ஆட்சிகளில் பல முன்னேற்றங்கள் இருப்பினும், ஊழல் மயமான நிர்வாக சீர்கேடுகளும், எல்லா பக்கங்களிலும் புரையோடிப்போன லஞ்சமும் இளைய சமூகத்தை அசூசை கொள்ளச் செய்தது. மக்களை ஊழல் மயமாக்க வாக்கு அளிக்க பணம் கொடுப்பது புதிய பரிணாமத்தை தொட்டுள்ளது. அதாவது தாங்கள் அடிக்கும் கொள்ளையில் மக்களை பங்குதாரராக மாற்றுவதுதான் வாக்கிற்குப் பணம் கொடுப்பது.

2. வேலையின்மை, பாதுகாப்பற்ற பணிச்சூழல், புலம் பெயர்ந்து வேலைக்குச் செல்லும் அவலம். நிரந்தர பணிகள் முற்றிலும் அழிப்பு, எல்லாவற்றிலும் ஒப்பந்த முறை என்பதெல்லாம் இளம் தலைமுறையின் எதிர்காலம் குறித்த கேள்வியை உருவாக்கியது.

3. ஒப்பீட்டளவில் அரசின் சுகாதாரத்துறை மேம்பட்டது என்றாலும் மருத்துவ மபியாக்கள் கொள்ளை உச்சக்கட்டம் என்பதும் தமிழகத்தில்தான். தனியார் மருத்துவமனைகளில் கொள்ளை சொல்லி மாளாது. இவையெல்லாம் நீண்ட நாட்களாக மனதில் உழன்று வரும் பிரச்சினைகள்.

4. சமூகத்தை அரசியல் மயப்படுத்தும் சூழலை முற்றிலும் அழித்தது மிக முக்கிய காரணம். கல்லூரிகளின் மாணவர் பேரவை தேர்தல்களை நிறுத்தியது, அவர்களை அரசியலிலிருந்து முற்றிலும் அந்நியப்படுத்தியது. இது போதாதென பள்ளிகளில் விளையாட்டு, ஓவியம், நீதி போதனை, கைவினை வகுப்புகள் முற்றிலும் நீக்கப்பட்டது. மதிப்பெண் மட்டுமே கல்வி எனவே படிப்பை தவிர வேறெந்த கவனமும் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என டியூஷன் கலாச்சாரத்தை வளர்த்தது.

5. செய்தி தாள்கள் படிக்கும் பழக்கமற்ற இளம் பட்டாளம் இணையமே வாழ்க்கை என வாழத்துவங்கி இரு பத்தாண்டுகள் ஆகிறது. இணையத்தில் ஒவ்வொரு அலைபேசியும் ஒரு ஊடகமாக மாறியது. கார்ப்ரேட்டுகள் தங்களது லாபத்திற்காக புது புது யுக்திகளை உருவாக்கிக்கொண்டே வந்தனர். ரீல்ஸ் வரை வந்துள்ள இணைய உலகம் சாதி, மத, இன குழுக்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. கட்டற்ற காம காட்சிகள் இலவசமாக கிடைக்கும் சூழலில் சமூக ஒழுங்குகள் எல்லாம் கேள்விக்குறிக்கு உள்ளாகி இருக்கிறது.

6. அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாமல், கள்ள சந்தையில் விற்கப்படும் சாராய போத்தல்களும், பள்ளி கல்லூரி வரை விரித்து பரந்துள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும் பெற்றோர்களை அதிர வைத்துள்ளது.

7. அமைப்புகள், போராட்ட வரலாறுகள், தியாகங்கள் எதுவும் அறிந்திடாத ஒரு பெருந்திரள் கூட்டம், இந்த மோசமான சூழலை மாற்ற ஒரு நாயகன் தேவைப்படுகிறான் என்று நம்புகிறது. அதைத்தான் உலகமயம் தொடர்ந்து போதிக்கிறது. நபர்கள் மாறினால் வாழ் நிலை மாறும் எனவே கொள்கை, கோட்பாடு எல்லாம் தேவையில்லை. இத்தனை ஆண்டுகள் நீங்கள் என்ன செய்து கிழித்துவிட்டீர்கள், அவர் வந்து ஆட்சி செய்யட்டுமே என்ற மனநிலை ஆழமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இவையெல்லாம் இனைந்ததுதான் இந்த மாற்றம்.

பொய்களின் உலகத்திலிருந்து த.வெ.க வெளிவரவேண்டும்:

உண்மையில் அமைச்சரவையில் 7 பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 4 பெண்களும் அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பாராட்டுக்குரியதுதான். ஆனால் த.வெ.க கட்சியின் இணையக் கூட்டம் கட்டமைக்கும் பொய்யான உலகம் தனி உலகமாக உருவாகி வருகிறது.

தமிழக தேர்தல் வரலாற்றில் அதிகமான பொதுத்தொகுதியில் பட்டியலினத்தவரை த.வெ.க நிறுத்தியது (26 தொகுதி என சிலர் பதிவு செய்துள்ளனர்) என ஒரு பொய்யை கட்டமைத்தனர். ஆனால் உண்மையில் சங்கராபுரம் என்ற ஒரு பொதுத் தொகுதியில் மட்டும்தான் த.வெ.க தலித் வேட்பாளரை நிறுத்தியது. அவரும் தோல்வி அடைந்தார். ஆனால் நாம் தமிழர் கட்சி 8 தலித்துகளை பொதுத் தொகுதியில் நிறுத்தியது அதில் ஒருவர் எஸ்.டி (பழனி தொகுதி) அனைவரும் தோல்வி அடைந்தனர். பொது தொகுதியில் நின்று வென்ற ஒரே தலித் வேட்பாளர் மேலூர் தொகுதி விஸ்வநாதன் (காங்கிரஸ்) மட்டும்தான். உண்மை இப்படி இருக்க மீண்டும் மீண்டும் த.வெ.கவினர் இந்த பொய்யைப் பரப்பி வருகின்றனர்.

அடுத்து த.வெ.க வேட்பாளர்கள் மிகவும் ஏழைகள். இதுவரை திமுக/அதிமுக கோடீசுவரர்களை மட்டுமே நிறுத்தின. தேர்தல் வரலாற்றில் முதன் முதலாக மிகவும் எளிய குடும்பத்தை சேர்ந்தவர்களை த.வெ.கதான் நிறுத்தியது என்று பதிவுகளை இணையம் முழுவதும் பரப்பினர். ஆட்டோ ஓட்டுநர் என்று ஒருவரையும், காலில் செருப்பில்லாதவர் என்று ஒருவரையும், அடுத்த வேலை உணவுக்கு வழியில்லை என்று ஒருவரையும் பின்னணி இசையுடன் அறிமுகம் செய்தனர். உண்மை என்ன த.வெ.க நிறுத்திய வேட்பாளர்களில் 74 வேட்பாளர்கள் கோடீசுவர வேட்பாளர்கள்.

அதேபோல கல்வி தகுதி குறித்து த.வெ.கவினர் பரப்பும் செய்திகளும் மிகவும் மோசமானவை. யாரும் அவர்களது கல்வித் தகுதி குறித்து கேள்வி எழுப்பாத சூழலில் பலரும் தங்களை மருத்துவர்கள் என்றும் மெத்தப் படித்த மேதாவிகள் எனவும் காட்டிக்கொள்ள மிகவும் முயற்சி செய்து அம்பலப்பட்டு நிற்கின்றனர். இதன் உச்சம் தமிழக கல்வி அமைச்சர் த.வெ.க இணைய தளத்தில் தான் பி.டெக் படித்ததாகப் பதிவேற்றம் செய்ததுதான். ஆனால் அவர் உண்மையில் அவர் படித்தது பி.ஏ தான். இன்னும் நிறையச் சொல்லிக்கொண்டே செல்ல முடியும் நமது நோக்கம் இப்படியெல்லாம் பொய் உலகில் மக்களைத் தள்ளாமல் நேர்மையாக அரசாள வேண்டும் என்பதே!

முதலாளித்துவத்திற்கு முதலாளித்துவம் மாற்றல்ல..

புதிய அரசு என்ன செய்யப் போகிறது? பொறுத்துத்தான் பார்க்க முடியும். ஆனால் ஒன்று இன்று உள்ள சமூகச் சூழலை, கார்ப்ரேட் அரசியலை, நில குவியலை ஒரு கீற்று கூட இவர்களால் மாற்ற முடியாது என அறுதியிட்டுக் கூறமுடியும். திமுக மற்றும் அதிமுகவை விட கவர்ச்சியான பல திட்டங்களை அறிவித்ததிலிருந்தே இவற்றைப் புரிந்துகொள்ள முடியும். உண்மையான மாற்றின் அடிப்படை என்ன?

சாதிவாரி சமூக பொருளாதார கணக்கெடுப்பு 2011ன் படி தமிழக கிராமங்களில் 73 சதமான மக்களிடம் நிலம் கிடையாது. நில ஏகபோகத்தைத் தகர்க்கும் முழுமையான நில சீர்திருத்தம் என்பது அடிப்படைத் தேவையாகும். இதனைச் சாதிப்பதன் மூலம்தான் கிராமங்களில் நில உடமை அடிப்படையில் ஆதிக்க சக்திகளாக விளங்கும் பணக்கார ஆளும் வர்க்கங்களின் பிடியை தளர்த்த முடியும். விவசாயத்தில் உற்பத்தி சக்திகள் வேகமாகவும் ஜனநாயகத் தன்மையுடனும் வளர முடியும். சாதி ஆதிக்க சக்திகளைத் தகர்க்கவும் இது மிகவும் அவசியமான நடவடிக்கை. உள்நாட்டு சந்தை விரிவடையவும் ஊரகப்பகுதிகளில் வேலை வாய்ப்பு பெருகவும் இது அவசியம்.

மொத்த சமூகத்தையும் உயர்த்தும் இந்த துவக்கட்ட பணியை எந்த முதலாளித்துவ அரசும் செய்திடாது. அதற்கு புது அரசும் விதி விலக்கல்ல. அவர்களது தேர்தல் அறிக்கையில் இது குறித்து ஒரு எழுத்தும் கிடையாது. அதை நாம் எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் ஒன்று சோசலிசம் ஒன்றுதான் முதலாளித்துவத்திற்கு மாற்று அதை நோக்கி தமிழக மக்களை திரட்டுவதுதான் நிரந்தர தீர்வின் ஒரே வழி!


- எஸ்.ஜி.ரமேஷ்பாபு



புதன், 7 ஜனவரி, 2026

அமெரிக்க ஆதிக்கம்: தவிர்க்க முடியாத சிதைவு

 


 

 2025-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில், வெனிசுலாவின் மக்கள் தொகை சுமார் 2.85 கோடியாகும். இது சுமார் 8.1 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது குறைவானது. ஆனால் நிலப்பரப்பில், வெனிசுலா சுமார் 9,16,445 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நாடு; இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பை விட ஏறத்தாழ ஏழு மடங்கு பெரியது.

வளங்களின் அடிப்படையில் வெனிசுலா உலகின் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாகும். குறிப்பாக எண்ணெய் வளத்தில், உலகின் முதன்மை நாடாக வெனிசுலா திகழ்கிறது. அதனைத் தொடர்ந்து சவுதி அரேபியா, ஈரான், கனடா, ஈராக் போன்ற நாடுகள் வரிசையில் உள்ளன.

வரலாற்றுப் பின்னணி

வெனிசுலா தென் அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு. ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பு, இங்கு கரீப், அரவாக் போன்ற பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். வாஸ்கோடகாமா இந்தியாவின் கள்ளிக்கோட்டையில் காலடி வைத்த அதே ஆண்டான 1498-ல், கிறிஸ்டோபர் கொலம்பஸ் வெனிசுலா கடற்கரையை அடைந்தார்.

பின்னர் ஸ்பெயின் வெனிசுலாவை கைப்பற்றி, சுமார் 300 ஆண்டுகள் காலனிய ஆட்சியை நடத்தியது. இந்த காலகட்டத்தில் அங்கிருந்த உள்ளூர் மக்கள் அடக்குமுறைகளுக்கும், வளச் சுரண்டலுக்கும் உள்ளானார்கள்.

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லத்தீன் அமெரிக்க விடுதலை இயக்கங்கள் தீவிரமடைந்தன. சைமன் போலிவார் தலைமையில் நடந்த போராட்டங்களின் விளைவாக, 1811-ல் வெனிசுலா சுதந்திரம் அறிவித்தது; 1821ல் ஸ்பெயின் ஆட்சி முற்றாக முடிவடைந்தது.

சுதந்திரத்திற்கு பிறகு நாடு நீண்ட காலம் ராணுவ ஆட்சிகளையும் அரசியல் நிலையற்ற தன்மையையும் அனுபவித்தது. 20-ஆம் நூற்றாண்டில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பு வெனிசுலாவின் பொருளாதாரத்தை மாற்றியது. எண்ணெய் வருவாய் நாட்டை வளமாக்கினாலும், அதில் ஏற்பட்டமிகையான சார்பு பின்னர் பல சிக்கல்களை உருவாக்கியது.

1999-ல் ஹ்யூகோ சாவேஸ் ஆட்சிக்கு வந்து, சோசலிச் சீர்திருத்தங்களையும் மக்கள் நலத் திட்டங்களையும் முன்னெடுத்தார். அவருக்குப் பிறகு நிக்கோலஸ் மதுரோ ஆட்சி காலத்தில், எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு தடைகள் காரணமாக நாடு பெரும் பொருளாதார–அரசியல் நெருக்கடியில் சிக்கியது.

வெனிசுலாவை வேட்டையாட அமெரிக்க ஏகாதிபத்தியம் நேரம் பார்த்துக் காத்திருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், தனியார்மய–தாராளமயக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடிய முன்னாள் அதிபர் ஹ்யூகோ சாவேஸ் ஆட்சிக் காலத்திலேயே, அந்த நாட்டை குறிவைத்தது அமெரிக்கா.

சோசலிச் திருப்பமும் வெளிநாட்டு அழுத்தங்களும்

1999-ல் ஹ்யூகோ சாவேஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், சோசலிச் சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் நலக் கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம், வளங்களின் மீதான அரசின் கட்டுப்பாடு வலுப்படுத்தப்பட்டது. இந்த நிலைப்பாடு, அமெரிக்க தலைமையிலான மேற்கத்திய நாடுகளின் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சாவேஸ் மறைவுக்குப் பிறகு, நிக்கோலஸ் மதுரோ ஆட்சிக் காலத்தில் எண்ணெய் விலை வீழ்ச்சி, வெளிநாட்டு பொருளாதாரத் தடைகள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக, வெனிசுலா கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. இந்த நெருக்கடிகள் வெறும் உள்நாட்டு நிர்வாகத் தவறுகளின் விளைவாக மட்டும் அல்ல; வெளிப்புற அரசியல்–பொருளாதார தலையீடுகளின் தாக்கத்தையும் பிரதிபலிக்கின்றன.

போதைப் பொருள் அரசியல்:

நிக்கோலஸ் மதுரோவை போதைப் பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனாக அமெரிக்கா தொடர்ந்து சித்தரித்து வந்தது. அவர்மீது அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. 2020-ஆம் ஆண்டிலிருந்து அதிபர் மதுரோ மீது அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.

அவரைப் பிடிக்க 5 கோடி டாலர் பரிசுத்தொகையும் அமெரிக்கா அறிவித்திருந்தது. ஈராகில் அணு ஆயுதங்கள் உள்ளன என்று தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து, அதிபர் சாதாம் உசேனை அவர்களது நீதிமன்றத்தில் நிறுத்தி தூக்கிலிட்ட நிகழ்வை மீண்டும் அமல்படுத்த அமெரிக்க ஓநாய் துடிக்கிறது.

உண்மையில் போதைப் பொருள்களின் மையம் எது?  

தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா, 1970–90களில் உலகின் முக்கிய கோகைன் உற்பத்தி மற்றும் கடத்தல் மையமாக இருந்தது. கோகா செடி வளர ஏற்ற புவியியல் அமைப்பும் காலநிலையும் அங்கு உள்ளது.

மேலும் கிராமப்புறங்களில் நிலவும் வறுமை, வேலை இல்லாமை, அரசின் பலவீனம், உள்நாட்டு ஆயுதக் குழுக்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பெரிய சந்தைகள் ஆகியவை போதைப் பொருள் வர்த்தகத்துக்கு காரணங்களாக உள்ளன. மெடெலின் கார்டெல் (பாப்லோ எஸ்கோபார்), காலி கார்டெல் போன்ற போதைப் பொருள் குழுக்களின் அட்டகாசங்களை இபோதும் இணையத்தில் தேடிப் படிக்கலாம்.

இந்தக் குழுக்கள் கோகைன் உற்பத்தி, சர்வதேச கடத்தல், அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையின்மீது தாக்கம், கொலை, குண்டுவெடிப்பு, பயங்கரம், FARC, ELN போன்ற ஆயுதக் குழுக்கள், போதைப் பொருள் பணத்தில் ஆயுதங்கள் வாங்கி அரசுக்கு எதிரான போராட்டங்கள் என 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் உள்நாட்டு போருக்குக் காரணமாக உள்ளன.

இதற்கு முழுக்க முழுக்க அமெரிக்க ஆதரவு உள்ளது. ஆனால் குற்றவாளியாக வெனிசுலா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை அமெரிக்கா சித்தரிக்கிறது.

எண்ணெய் அரசியல்:

தென் அமெரிக்க நாடான வெனிசுலா உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு. உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் 18% வெனிசுலாவில் உள்ளது. அமெரிக்காவிடம் சுமார் 4% மட்டுமே உள்ளது.

வெனிசுலாவில் 303 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது; அமெரிக்காவில் 55 பில்லியன் பீப்பாய் மட்டுமே உள்ளது. ஆனால் ஏற்றுமதியில் அமெரிக்கா ஆண்டுக்கு 125 பில்லியன் டாலர் மதிப்பில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது; வெனிசுலா வெறும் 4 பில்லியன் டாலர் மட்டுமே ஏற்றுமதி செய்கிறது.

2007-ல் அதிபர் சாவேஸ், எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பெரும் பங்கை வழங்க வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வந்தார். இதை ஏற்க மறுத்த அமெரிக்க நிறுவனங்கள் பல, வெனிசுலாவை விட்டு வெளியேறின. அதன்பின்னர் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு, வெனிசுலாவின் வளர்ச்சி முடக்கப்பட்டது.

எண்ணெய் வளம் இருந்தும், உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக வெனிசுலா இருப்பதற்கு அந்த நாட்டின் மக்கள் அல்லது ஆட்சியாளர்கள் காரணம் அல்ல; முழுக்க முழுக்க அமெரிக்காதான் காரணம். அதன் உச்சகட்டமாக இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கு வெனிசுலா இரையாகியுள்ளது.

அமெரிக்க ஆதிக்கமும் உலக அரசியலும்

20-ஆம் நூற்றாண்டிலிருந்து, அமெரிக்கா பல நாடுகளில் ராணுவ தலையீடுகள், அரசு மாற்ற முயற்சிகள் மற்றும் மறைமுக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளது. பாதுகாப்பு, ஜனநாயகம், தீவிரவாத எதிர்ப்பு போன்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், எண்ணெய், வணிக ஆதிக்கம் மற்றும் புவியியல் அரசியலே அடிப்படை நோக்கங்களாக விமர்சிக்கப்படுகின்றன.

பிலிப்பைன்ஸ் (1899–1902), கொரியா போர் (1950–1953), வியட்நாம் போர் (1955–1975), கியூபா – பே ஆஃப் பிக்ஸ் (1961), ஈராக் (1991 & 2003), ஆப்கானிஸ்தான் (2001–2021), லிபியா (2011) என அமெரிக்க தலையீடுகள் உலகை நாசப்படுத்தின.

சிலியின் அதிபர் அலெண்டே படுகொலை, பொலிவியக் காடுகளில் சே குவேரா படுகொலை, வெனிசுலா, நிகராகுவா போன்ற நாடுகளில் CIA மூலம் நடந்த அரசு மாற்ற முயற்சிகள் என ஏகாதிபத்திய அமெரிக்கா உலகை நரகமாக்கி வருகிறது. இவை உலகளவில் மனித உயிரிழப்புகள், அகதிகள் பெருக்கம் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளன.

உலக அரசியல் இன்று ஒரு முக்கிய திருப்புமுனையில் நிற்கிறது. ஒரே சக்தியின் ஆதிக்கம் நீடிக்க முடியாத நிலையில், பல்துருவ உலகம் உருவாகி வருகிறது. இந்தச் சூழலில், மனிதநேயம், சமத்துவம் மற்றும் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் சக்திகள் ஒன்றிணைவதே காலத்தின் அவசியமாகிறது. உலகம் முழுவதும் எழும் எதிர்ப்புகள் மட்டுமே அமெரிக்காவை நிறுத்து. இதோ எல்லைகள் கடந்து மனிதகுலத்தை நேசிக்கும் கம்யூனிஸ்டுகளும், சோசலிஸ்டுகளும், மனித நேயம் கொண்ட ஜனநாயக வாதிகளும் எழுந்து நிற்கின்றனர். வலதுசாரிகள் ஒன்று ஆதரிக்கின்றனர், அல்லது மோடியை போல கள்ள மவுனம் காக்கின்றனர்.

உலகம் விடியும். அதுவரை போரிடுவது மனித குலத்தின் கடமை.

 

 - எஸ். ஜி . ரமேஷ்பாபு 

இன்று தீக்கதிரில் வந்துள்ள எனது கட்டுரையின் முழு வடிவம் 

வியாழன், 18 டிசம்பர், 2025

நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காத என்எல்சி

நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காத என்எல்சி

நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 17.12.2025 புதன் கிழமை அன்று முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தைக்குச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் எம். சின்னதுரை, விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் உள்ளிட்ட  10 பிரதிநிதிகளை என்எல்சி அதிகாரிகள் இருக்கையில் அமரச் சொல்லாமல் அவமதித்தனர். இதனால்  கொதிப்படைந்த தலைவர்கள் முற்றுகையைப் தொடரப் போவதாக அறிவிக்கவே, பணிந்த அதி காரிகள் மீண்டும் அழைத்து மரியாதையுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் முத்தரப்புக் கூட்டம் நடத்திப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என எம்.சின்னதுரை எம்.எல்.. வலியுறுத்தினார். அதற்கு ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஆர். ரவிச் சந்திரன், விதொச மாவட்டத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.  

மாவட்டச் செயலாளர்கள் ஆர்.கே. சரவணன் (விவசாயிகள் சங்கம்), எஸ். பிர காஷ் (விதொச) மற்றும்நிர்வாகிகள் ஆர். ராமச்சந்திரன், பி.கர்ப்பினைசெல்வம், டி.கிருஷ்ணன், பி.வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாதிக்கப்பட்ட கிராமங்களின் சார்பில் த. சண்முகம், ஆர். ரவிச்சந்திரன், . சன்னியாசி, சூ.  ராமச்சந்திரன், செல்லதுரை உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதி யில் பெரும் பரபரப்பு நிலவியது.



சரி கோரிக்கைகள்தான் என்ன

எதறக்கு இந்த போராட்டம் ?

1956-ஆம் ஆண்டில் ஒரு பொதுத்துறை நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றிய அரசின் ‘நவரத்தின’ பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்எல்சி இந்தியா லிமிடெட் (NLCIL), இந்தியாவின் மின் உற்பத்தித் துறையின் மிக முக்கியத் தூணாக  விளங்குகிறது. இந்த மகத்தான நிறுவனத்தையும் மோடி அரசு தனியாரிடம் விற்பனை செய்ய துடிப்பது கொடுமை. தொழிலாளி வர்க்கத்தின் தொடர்சியான போராட்டத்தின் விளைவாக இந்த நிறுவனம் பாதுகாக்கப்படுகிறது.

2024-2025 நிதியாண்டிற்கான மொத்த லாபம் ₹10,861.41 கோடி ; மற்றும் நிகர லாபம் ₹2,713.61 கோடி ஆகும். இந்த நிதி வலிமையின் காரணமாக, நிறுவனம் தனது முந்தைய மூன்று ஆண்டுகளின் சராசரி நிகர லாபத்தில் 2% என்ற சட்டப்பூர்வக் கடமையின் அடிப் படையில், ₹48.63 கோடியை கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் கிராம மேம்பாட்டிற்கான கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நடவடிக்கை களுக்காக ஒதுக்கி செலவிடுகிறது.

ஆனால் இந்த மாவட்டத்திற்கும், பாதுக்கப்பட்ட கிராமங்களுக்கு இந்த தொகை எவ்வுளவு உதவுகிறது என்பது மிகப் பெரிய கேள்வி.

பல பத்தாண்டுகளாக என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம், வீடு, மனை கொடுத்த விவசாயிகள், விவசாய தொழிலாளர் தங்களது வாழ்வாதார பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். எளிமையக தீர்க்கப்பட வேண்டிய பல கோரிக்கைகள் இன்னும் தீரக்கபடாமல் உள்ளது.

1956 முதல் சுமார் 37,256 ஏக்கர் நிலத்தை 25,000 குடும்பங்களிடமிருந்து கையகப்படுத்தியுள்ளது. ஆனால், வெறும் 1,827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. இதனால், நிலம் வழங்கிய கிராம  மக்கள் நியாயமான இழப்பீடு, குடும்பத்தில் ஒரு வருக்கு நிரந்தர வேலை மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றக் (Rehabilitation and Resettlement – R & R) கொள்கையை முழுமையாக அமல்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கீழ்க்காணும் 12 அம்ச கோரிக்கைகள் தற்போது முன்னுக்கு உள்ளது :

1. 2000 முதல் 2013 வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சுரங்க இயக்குனர் மற்றும் தமிழக விவசாயத்துறை அமைச்சர் ஆகியோர் நீர் வெளியேறும் வாய்க்கால் வெட்டிய பகுதி உட்பட அனைத்து கிராமங்களுக்கும் கருணைத்தொகை கொடுத்து விடுங்கள் என்று கூறியும் ஒரு சில கிராமங்களுக்கு கொடுத்துவிட்டு மற்ற கிராமங்களுக்கு கொடுக்காமல் இருப்பதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

2. 2013 நில எடுப்பு சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிரந்தர வேலை வழங்க வேண்டும். ஆனால் நிலம் கையகப்படுத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக வேலை வழங்கக்கவில்லை.

1999-2006 வரை நிலம் எடுத்தவர்களுக்கு 25% வேலை வாய்ப்பு, 2007-2013 வரை நிலம் எடுத்தவர்களுக்கு 25% வேலை வாய்ப்பு, 2014 முதல் நிலம் எடுத்தவர்களுக்கு 50% வேலைவாய்ப்பு என்று பிரிக்கின்றார்கள் ஆனால் 90% நிலங்கள் 2013க்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அவர்களுக்கு 25% என்பது நியாயமல்ல. ஆகவே நிலம் கொடுத்தவர்களுக்கு ஒரே சீனியாரிட்டி கடைபிடித்து வேலை வழங்க வேண்டும்.

3. என்.எல்.சியால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு தமிழக விவசாயத்துறை அமைச்சர் மற்றும் சுரங்க இயக்குனர் இழப்பீடு கொடுத்து விடுங்கள் என்று கூறியதின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) அவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு போட்டும் என்எல்சி நிர்வாகம் வழங்க மறுக்கிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த அனைத்து ஆழ்துளை கிணற்றுக்கும் இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் மின் இணைப்பை அவர்கள் கேட்ட இடத்திற்கு உடனடியாக மாற்றி தர வேண்டும்.

4. நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013-ல் வாழ்வாதார தொகை உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்று சொன்ன பிறகும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 2017 முதல் வெறும் ரூபாய் 1,09,500/- மட்டுமே வாழ்வாதார தொகையாக கொடுத்து மக்களை ஏமாற்றி உள்ளனர். ஆகவே இன்றைய மதிப்பீட்டில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ரூபாய் 40,00,000/- லட்சததை வாழ்வாதார நிதியாக அனைவருக்கும் வழங்க வேண்டும்.

5. என்எல்சியால் நிலம் கையகப்படுத்தப்பட்ட கிராமங்களில் உள்ள குத்தகை பயிர் செய்தவர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கும் R&R சட்டம் 30/2013-ல் sec- 3 (1) வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும்.

6. .ஆதனூர், கத்தாழை, மேல் வளையமாதேவி கிராமங்களில் அரசால் கொடுக்கப்பட்ட அனைத்து பட்டாக்களுக்கும் இழப்பீடு மற்றும் மாற்றுமனை உடனடியாக வழங்க வேண்டும் பிள்ளையார் குளத் தெருவில் வீடு கட்டி இருக்கும் அனைவருக்கும் மாற்றுமனை கொடுக்கப்பட வேண்டும்.

7. .ஆதனூரில் ஊராட்சி நிதியால் கட்டப்பட்ட 5 வீடுகளை என்எல்சி நிறுவனம் இடித்து விட்டது. அந்த வீடுகளுக்கான இழப்பீட்டை வழங்கிட வேண்டும்.

8. மும்முடிச் சோழகன் கிராமத்தில் 170 குடும்பங்கள் 2003 மற்றும் 2007 இல் எடுக்கப்பட்டு ஒரு தவணைத் தொகை வெறும் ரூபாய் 2000 மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகை கொடுக்காத காரணத்தால் தற்பொழுது புதிய சட்டத்தின் படி அனைத்து சலுகைகளும் கிடைக்க வேண்டும்.

9. கீழ் வளையமாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வீடு, மனை மற்றும் நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களில் 30 குடும்பங்களுக்கு மாற்றுமனை வழங்கப்படவில்லை, கருணைத்தொகை, வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. முத்துக்கிருஷ்ணாபுரத்தில் ஏழு குடும்பங்களுக்கு இன்றைக்கு கொடுக்கக்கூடிய வீட்டுமனை, வாழ்வாதாரம், வீடு கட்டும் பணம் கொடுத்துள்ளார்கள் அதேபோல் முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வீட்டு மனை 2022-ல் தான் எடுத்துள்ளார்கள். ஆகவே முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்த அனைத்து மக்களுக்கும் வீடு கட்டுவதற்கான தொகை கொடுக்கப்பட வேண்டும் மனைக்கு இன்றைக்கு கொடுக்கக்கூடிய நஷ்ட ஈட்டு தொகை கொடுக்கப்பட வேண்டும்.

10. என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட கம்மாபுரம், விருதாசலம் புவனகிரி, குறிஞ்சிபாடி பகுதியில் அனைத்து வசதிகளும் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும். இப்பகுதிகளை இணைக்கும் மையத்தில் அரசு கல்லூரி மற்று ஒவ்வொரு கிராமத்திலும் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும்.

11. தீர்ப்பு (Award) கொடுப்பதில் பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் வழிகாட்டு மதிப்பு (Guideline Value) மட்டுமே நீதிமன்றத்தில் வைப்பீடு செய்யப்படுகிறது. வழக்கு முடிந்தவுடன் வட்டியுடன் வைப்பீடு செய்த தொகை மட்டுமே கிடைக்கிறது. இழப்பீட்டுத் தொகையில் வழிகாட்டு மதிப்பு போக பாக்கியுள்ள ஆனால் சந்தை மதிப்பீடு தொகையான அதிக இழப்பீடுத் தொகையை என்எல்சி நிர்வாகமே வைத்துக் கொள்கிறது வழக்கு முடிந்தவுடன் அத்தகைக்கு வட்டி ஏதும் கொடுப்பதில்லை. ஆகவே இழப்பீட்டின் மொத்த தொகையும் நீதிமன்றத்தில் வைப்பீடு செய்யப்பட வேண்டும். இதுவரை என்எல்சி நிர்வாகம் வைத்துள்ள தொகைக்கு தீர்ப்பு (Award) தேதியிலிருந்து வட்டியுடன் கொடுக்கப்பட வேண்டும்.

12. நிலம் தொழிற்துறை நோக்கங்களுக்கான சட்டத்தில் கையகப்படுத்தப்படுகிறது. கனிமவள சட்டத்தில் கையகப்படுத்தப்பட வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு ராயல்டி கிடைக்க வாய்ப்புள்ளது.

மேற்கண்ட கோரிக்கைகளுக்காக தொடந்த போராட்டம் நடந்துக்கொண்டு இருக்கிறது.