பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 பிப்ரவரி, 2015

ஜானகி: மலேஷியாவில் உருவான புயல்

விடுதலைப்போரில் பெண்கள் - 18
         



                                                                                                                             
               1931 ஆம் ஆண்டு, மார்ச்சில் காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானதும் காந்தி பின் வருமாறு அறிவித்தார்: ''ஒரு காலம் கடந்துச் சென்றுவிட்டது, புதியகாலம் தொடங்கிவிட்டது. சட்ட மறுப்பு இயக்கமும், சிறை செல்வதும் அல்லது நேரடி நடவடிக்கையும் உடன்பாட்டிற்கு முன்பு பின்பற்றப்பட வேண்டிய முறையாக இருந்தது. அதன் பிறகு விவாதமும் பேச்சு வார்த்தையும் அதனிடத்தை எடுத்துக்கொண்டன"''.  இதைவிட தெளிவாக குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் சொன்னார் ''நேரடி நடவடிக்கையின் சாயல் கொண்ட அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள், விவாதங்கள், பேரங்கள் மூலம் பெற்றுவிடலாம். சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்தி வைத்ததன் மூலம் இபொழுது நாம் ஒழுங்கு கட்டுப்பாடு  கொண்ட கீழ்ப்படிதல் என்ற காலகட்டத்துள் வந்துள்ளோம்.'' ( இந்தியாவில் பிரிடிஷ் ஆட்சி 1919 - 1947. பக் 34)

               1946 பிப்ரவரி 15  மவுன்பேட்டனுக்கு முன்பு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த வேவல் தனது நாட்குறிப்பில் இப்படி எழுதியுள்ளார். '' அது ஒரு எச்சரிக்கை நாளாக இருந்தது: சுற்றுலா நாளாக இல்லை. இந்திய தேசிய ராணுவத்திடம் சரணடைவதைப் பற்றி கூறிய போர்ட்டரை பார்த்தேன். அஞ்சல் துறை வேலைநிறுத்தம் தொடர்பாக பெவூரைச் சந்தித்தேன். இந்திய விமானப்படைக் கலகம் தொடர்பாக கார் அவர்களைச் சந்தித்தேன். இரயில்வே வேலைநிறுத்தம் தொடர்பாக கிரிபின், கான்ரன் ஸ்மித் ஆகியோரை சந்தித்தேன். இறுதியாக இவை எல்லாவற்றுக்கும் உட்சபச்சச் சோகமாக பம்பாய் இராயல் இந்தியக் கலகத்தைப் பற்றியும், இந்திய தேசிய இராணுவம் தொடர்பான வழக்கு விசாரணை குறித்தும் தலைமை தளபதியைச் சந்தித்தேன்'' ( இந்தியாவில் பிரிடிஷ் ஆட்சி 1919 - 1947., பக் 399.)

               மகாத்தமா காந்தியின் நிலைபாடு எப்படி யதார்த்ததிற்கு மாறாக இருந்தது என அவர் அறிவித்த 14 ஆண்டுகள் கழித்து வேல்ஸ் நாட்குறிப்பு எளிதாய் புரிய வைத்திருக்கும். உண்மை நிலையும் அதுதான். கன்னத்தை திருப்பி காட்ட இருந்த கூட்டத்திற்கு நிகராக, திருப்பித் தக்கவும் பெருங்கூட்டம் தயாராக இருந்தது. காங்கிரசும் காந்தியும் மட்டும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் பாதயை தீர்மாணிக்கவில்லை. இந்தியாவின் விடுதலை போராட்ட பாதைகள் பல்வேறு தடங்களில் பயணித்தது. காங்கிரஸ் கட்சி, புரட்சிகர கம்யூனிஸ்டுகள், தீவிர புரட்சிகர அமைப்புகள், சுபாஷ் பாபுவின் இந்திய தேசிய ரணுவம்இஸ்லாமிய அமைப்புகள், சமூக விடுதலை, சாதிய ஒடுக்குமுறை, பெண் விடுதலை இல்லாத விடுதலை எங்களுக்கு வேண்டாம் என்ற சீர்த்திருத்த அமைப்புகள், நிலத்திற்கான தெலுங்கானா போராட்டம் என பலவடிவங்களில் பிரிடிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற சூழல் தேசத்தில் இருந்தது.    

               இந்திய தேசிய ராணுவம் அமைத்த சுபாஷ் சந்திர போஸ் அதன் யுத்த தந்திர வடிவமைப்பிலும், போராட்ட திட்டமிடலிலும், அணி திரட்டலிலும் இருந்தார். அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் திரண்டனர். மலேஷியாவில் இருந்த இந்தியர்களைச் சந்தித்து இந்தியாவின் விடுதலைக்குத் தங்களால் இயன்றதை வழங்குமாறு கேட்டுக் கொள்ள விரிவான சுற்றுபயணம் மேற்கொண்டார். அங்கு அவர் சென்ற இடமெல்லாம் இந்தியர்கள் திரண்டனர். அவர் பேசிய இடங்களிலெல்லாம் தமிழர்கள் தங்கள் வீடுகளில் இருந்த நகைகளை எல்லாம் எடுத்துக் கொடுத்தனர் அப்போது அங்கிருந்த ஒரு இளம் பெண் உடனே சற்றும் தாமதிக்காமல் தான் அணிந்திருந்த தங்கக் கம்மல்களைக் கழற்றிக் கொடுத்தார், அப்படி அந்த இளம் பெண் தனது நகைகளை கொடுத்திட அவருக்கான ஒரு அரசியல் பின்னணி இருந்தது. இளம் வயதில் பெருமைமிகு அரசியல் பின்னணியுடன் இருந்த அந்த பெண்ணின் பெயர் ஜானகி ஆதி நாகப்பன்.

                              1946 ஆகஸ்ட் மாதம் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது அது இந்தியாவின் சுதந்திரத்திற் காகவும், இந்திய தேசிய இராணுவத்திற்காகவும், சிறைக்குச் சென்றவர்களை மீட்பதற்காகவும் சேவை செய்ய பிறந்த கட்சியாகவே இருந்தது. மலேசிய இந்தியர்களை வழிநடத்த ஓர் அரசியல் அமைப்புத் தேவை என்று அப்போதைய சுதந்திரப் போராளிகள் முடிவு எடுத்தனர். எனவே அப்போது மிகச்சிறந்த வாய்ப்பாக கிடைத்த இந்தியத் தேசிய இராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றுவது என முடிவு செய்தனர். அத்தகைய தேசப்பற்றுமிக்க மலேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இளம் வயதிலேயே இணைத்துக் கொண்டவர் ஜானகி.

               அதன் விளைவாக தனது நகைகளை மட்டுமல்ல தனது வாழ்வையும் இந்திய தேசிய ராணுவத்திற்கு அர்ப்பணிக்க அவர் தயாரானார். அவருடைய குடும்பத்தில் இருந்த யாரும் இதை விரும்பவில்லை. இந்திய விடுதலையை விரும்பினார்கள். ஆனால் அதற்காக தனது குடும்பத்திலிருந்து ஒருவரை அதுவும் இளம் பெண்ணை அனுப்ப அவர்கள் விரும்பவில்லை. அவரது குடும்பத்தில் பலமான எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, ஜானகி தந்தையாருக்கு இது மொத்தமாய் பிடிக்கவில்லை. ஜானகி ஆதி நாகப்பன் பிடிவாதமாக இருந்து இறுதியில் பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற்றார்.

               இந்திய தேசிய இராணுவத்தில் முதன்முதலில் சேர்ந்த மலேஷியப் பெண்களில் ஜானகியும் ஒருவர். ஆனால் அவர்களுள் அவர் மிக முக்கியமான ஆளுமை நிறைந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர். முதல் நாள் படையில் கொடுக்கப்பட்ட உணவைப் பார்த்து ஜானகி மிரண்டு போநது மட்டுமல்ல, கண்கள் கலங்கவும் செய்தார். ஆனால் மனம் கலங்கவில்லை. ஜானகி போர்ப்படையின் கடுமையான விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், நெறி முறைகளுக்கும் தன்னை முழுமையாக உட்படுத்திக்கொண்டார். வலி மிகுந்த வாழ்க்கை அது. ஆனால் மனவைலிமை அவரை எழுச்சியுற செய்தது. எதற்கும் ஈடு கொடுக்க முடியும் என நம்பினார். இராணுவ வாழ்வில் தொடக்க காலத்தில் மிகவும் அவதியுற்றாலும், அவர் சோர்ந்துவிடவில்லை.

`              1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் நடைபெற்ற ம.இ.கா. அமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட டான்ஸ்ரீ ஆதி நாகப்பனுக்கும் இவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. போர்க்களம் காதலை எப்போதும் புறம்தள்ளியதில்லை. போர்க்களத்தில் இரு இதயங்கள் அன்பு கொண்டன. அது காதலாய் மலர்ந்தது. தோழமைகள் புடைசூழ, எதிகாலம் கடுமாயான சவால்கள் நிறைந்தது எனத்தெறிந்தே  இருவரும் 1949 இல் திருமணம் செய்துக்கொண்டனர்.

               காலப் போக்கில் இராணுவ வாழ்க்கை ஜானகியிடம் குழந்தைப் போல பழகிப்போனது. அவரது அர்பணிப்பும், தேச பக்தியும், மக்கள்: மீதான அன்பும் ராணுவத்தில் இருந்த அனைவரையும் ஈர்த்தது. படை அதிகாரிகளுக்கான முக்கிய தேர்வில் ஜானகி முதல் நிலையில் தேர்ச்சிப் பெற்றார். அதன் விளைவாக பின்னர், இந்திய தேசிய இராணுவத்தின் முதல் பெண்கள் படைப் பிரிவான ஜான்சி ராணிப் ரெஜிமெண்டில் துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். ஜான்சிராணிக்கு ஒரு ஜல்காரிபாய் போல கேப்டன் லட்சுமிக்கு பின்பலமாய் இவர் களமாடினார். .

               பெண்கள் ஆயுதம் ஏந்திய ஜான்சி ராணிப் படைக்குத் துணைத் தளபதியாகப் பதவி ஏற்ற ஜானகி ஆதி நாகப்பன், பர்மா-இந்தியா போர் முனையிற் போரில் ஈடுபட்டார். போர்களம் மேலும் உறுதிக்கொள்ளச் செய்தது. கடுமையான தாக்குலில் காயம் அடைந்து குணம் அடைந்தார். விடுதலைக்கு பின்னாளில் அவர் ஜான்சி ராணிப் படையைப் பற்றி அனுபவ குறிப்புகளை கொண்டு ஒரு நூலையும் எழுதியுள்ளார்

               இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அவரின் அரிய சேவைகளைப் பாராட்டி இந்திய அரசாங்கம் மிகவும் தாமதாமக பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. 1997ஆம் ஆண்டுதான் இவ்விருது கொடுக்கப்பட்டது. இந்தியாவின் பத்மஸ்ரீ விருதைப் பெறும் முதல் மலேசியர் எனும் பெருமையும் இவரையே சாரும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜானகி ஆதி நாகப்பன் சமூக பொதுச் சேவைகளிற் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். இன்னொமொரு முக்கியமான தகவல் 1946ஆம் ஆண்டு, மலேசிய இந்திய காங்கிரசின் முதற் தலைவர் ஜான் திவியுடன் இணைந்து மலேசிய இந்திய காங்கிரஸ் அமைப்பை உருவாக்கியவரும் இவரே.
               மலேசிய இந்திய காங்கிரஸ் சார்பில் மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக 1980 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். அந்தப் பதவியை 1986 ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் வகித்தார். விடுதலைக்கு பின்பு மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவையில் இடம் பெற்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண்மணி இவர்தான். அவரது காதல் கனவன் டான்ஸ்ரீ ஆதி நாகப்பனின் அரசியல் ஈடுபாட்டிற்கும் பொதுப் பணிகளுக்கும் தொடக்க காலத்தில் இருந்து பேருதவியாக ஆத்மபலமாய் இருந்து வந்தார். இவருடைய கணவரின் பெயரில் ஆண்டுதோறும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது. மலேசியாவில் மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு அந்த விருது வழங்கப்படுகிறது. விடுதலைக்கு பின்பு பல ஆண்டுகள் மக்கள் சேவையில் தன்னை அற்பணித்துக்கொண்ட கேப்டன் லட்சுமியின் பரம்பரை இவர் என நிருபனம் செய்த இவரைப்போல இன்னும் பலரை சந்திக்கலாம்.

                                                                                                                             (தொடரும்)

தேச விடுதலையில் துவங்கி மக்கள் விடுதலை நோக்கி...

விடுதலைப் போரில் பெண்கள் - 17
     
                                                            -
       படிப்பை முடித்த விமல் தம்பி தங்கைகளை பராமரிக்க பம்பாய் ஜார்ஜ் மன்னர் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சமஸ்கிருதம், ஆங்கிலம், மராத்தி மற்றும் வரலாறு போதித்தார். பின்பு கிர்காவில் உள்ள சாரதா ஆசிரமத்தில் கல்வி கற்பித்தார். பின்பு தனது தோழியுடன் வேலைத்தேடி நாக்பூர் வந்தார். அங்கே பிரபல மராத்தி மொழி எழுத்தாளர் வரேர்கர் மூலமாக திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. திரைப்படக் கலைஞராவதில் அவருக்க தயக்கம் இருந்தது. ஆனால் அவரது சகோதரர் சீனுவாசும் நண்பர்களும் ஏற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தினர். சமூகசேவகி வேடம் என்பதால் விமலும் அதை ஏற்றுக்கொண்டர். திறமைமிக்க நாடக நடிகராக அறியப் பட்டிருந்த விமலுக்கு நடிப்புக்கலை ஒன்றும் புதிதல்ல. நடிப்புத் திறனால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரத்துவங்கியது.

       கிட்டத்தட்ட ஆறு படங்களில் நடித்து திறமைமிக்க நடிகை என பெயர்பெற்றார். ஆனால் அவரது மனது நடிப்பைவிட சமூகம் சார்ந்த பிரச்சினைகளிலேயே நாட்டம் கொண்டது. எலோர்க்கும் வாய்க்காத மகத்தான மனநிலை இது. தன்னுடைய சொந்தவாழ்வின் வெற்றியை விட தேச மக்கள் அனைவரின் விடுதலை குறித்துதான் அவரது மனம் ஏங்கியது. அவர் படிக்கும் போது காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டராக இருந்தாலும் மனதில் சமூகம் குறித்து எழுந்த கேள்விகளுக்கு காங்கிரஸ் கட்சியால் பதில் அளிக்க முடியவில்லை. தனது சகோதரரான சீனுவாசுடன் கடுமையான விவாதங்களில் ஈடுபட்டு அதன் விளைவாக கம்யூனிஸ்ட் கட்சி குறித்து அறிந்திருந்தார். பல பொதுவுடைமை குறித்த நூல்களை படிக்கத்துவங்கி இருந்தார். பம்பாயில் அப்போது தொழிலாளர்களின் பிரச்சனைகளில் தொடர்ந்து போராடி வந்த கிர்னி காம்கார் சங்கமும் பி.டி.ரணதிவே உள்ளிட்ட பிரபல கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் பழக்காமானார்கள்.
    
   விடுதலைப் போராட்டத்தில் இளம் வயதில் சிறைக்குச் சென்ற விமல் மனதில் பல்வெறு எண்ணங்கள் அலையாடின விடுதலை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? காலனி ஆதிக்கம் தவிர வறுமை, பசி, கல்லாமை, நிலபிரப்புத்துவம், சாதியம், மதவாதம், தொழிலாளர்களின் கொடூரமான வாழ்வியல் சூழல் இவைகளை என்ன செய்வது? இந்தியா விடுதலை அடைந்துவிடால் இவைகள் தானாக ஒழியும் என்தற்கு எந்த உத்திரவாதமும் இல்லாத சூழலில் விமல் சர்தேசாயின் மனம் மாற்று பாதை குறித்து யோசிக்க துவங்கியது. விடுதலை போரிலும் ஈடுபட்டுக்கொண்டு உழைப்பாளி மக்கள் வாழ்க்கை மேம்படவும் போராடிவந்த கம்யூனிஸ்டு கட்சியின் பக்கம் அவர் இயல்பாக வந்தடைந்தார்.

புகழ்பெற்ற நடிகையாக இருந்த காலகட்டத்தில் 1939 ஆம் ஆண்டு அவர் தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டார். அப்போது இரண்டாம் உகலப்போர் துவங்கியிருந்த சமயம். உலகினை அழிக்கும் யுத்தம் வேண்டாம் என சொன்ன கம்யூனிஸ்டுகள்மீது பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்திருந்தது. அவரது திருமணம் அப்போதுதான் நடந்தது. பிரபல தொழிற்சங்க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான பி.டி.ரணதிவேவையும் அவரது போராட்ட குணநலன்களையும் நன்கு அறிந்த விமலும், விமலின் கலைத்திறன், ஏழைகள் மீதான அன்பு, கட்சியின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவைகளை ரணதிவேவும் அறிந்து மணம் ஒன்றி திருமணம் செய்துக்கொண்டனர். அவர்கள் திருமணம் நடந்த போது ரணதிவே மீது கைது வாரண்ட் இருந்தது. அவர் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். திருமணமான நான்கைந்து தினங்களில் ரணதிவே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

       தொழிற் சங்க பணிகளை கூடுதலாக செய்வதற்காக தனது நடிப்புத் தொழிலை விமல் விட்டுவிடார். பல்லாயிரம் பணம் கிடைக்கும் தொழிலை விடுத்து, தெரு தெருவாக தொழிலாளிகளிடம் உண்டியல் ஏந்தும் வாழ்க்கையை எத்தனைப்பேரால் யோசித்துப்பார்க்க முடியும். அங்குதான் அந்த மகத்தான ஆளுமையின் வெளிப்பாடு இருந்தது. 1940ல் கிர்னி காம்கார் சங்கம் மிகப்பெரிய வேலை நிறுத்தத்திற்கு திட்டமிட்டது. வேலைநிறுத்தம் குறித்த நாட்குறிப்பு எழுதும்பணி விமலிடம் வந்துசேர்ந்தது. பல்வேறு ஆலைகளின் தொழிலாளர்களை சந்திக்கும் வாய்ப்பும் அவர்களின் போராட்ட குணமும் அவரை ஈர்த்தது. கூட்டங்களுக்கு தொழிலாலர்களை திரட்டிட தனது சக தோழர்களுடன் கலைக்குழுவாய் இயங்கவும் செய்தார். 1943ஆம் ஆண்டு இவருடன் அகல்யா ரங்கனேகர், பிரேமா ஓக், அகல்யா பிரபா சாவந்த், பார்வதிபாய் போரே போன்ற பெண் கம்யூனிஸ்டுகள் சேர்ந்து பரேல் மகிளா சங்கத்தை உருவாக்கினர். இச்சங்கத்தின் மூலமாக பிரிடிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தில் பல பெண்களை இணைக்க முடிந்தது.

       ஆனால் இந்திய வரலாற்றில் கம்யூனிஸ்டுகளை போல விடுதலைக்கு முன்பும் பின்பும் வேட்டையாடப்பட்டவர்கள் யாரும் கிடையாது. பிரிட்டிஷ் அரசு கம்யூனிஸ்டுகளை கைது செய்ததையும் கட்சியை தடை செய்ததையும் புரிந்துக் கொள்ளமுடியும். ஏனெனில் ஏகாதிபத்தையத்தை வேரடிமண்ணோடு சாய்ப்பதையே தனது கொள்கையாக கொண்டவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதால். ஆனால் விடுதலைக்கு பின்பு ஆட்சிக்கு வந்த காங்கிரசும் அதையே செய்ததுதான் விசித்திரம். 

    தனது இரண்டு வயது குழந்தையை பிரிந்து சிறைக்கு செல்லும் சூழ்நிலையிலும், 1948-51 கட்சி தடைசெய்யபட்ட காலத்தில் சிறையில் இருந்தபோதும், இந்திய - சீன எல்லைதகராறு வந்தபோதும் சிறையில் வாடினார். தனது பள்ளி பருவத்தில் அந்நிய துணிகளை விற்கும் கடைகளை எதிர்த்து மறியல் செய்து சிறைவாழ்க்கையை துவக்கியவர் அதன் பிறகு பலமுறை சிறைச்சாலையை  சந்தித்தார். விடுதலைக்கு பிறகு இந்திய தொழிலாளர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டார்.

       1960களில் இந்திய தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றியதன் விளைவாக அகில இந்திய தோட்டத் தொழிலாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 ஆண்டு மதுரையில் நடந்த சி.ஐ.டி.யூ மாநாட்டில் அனைத்திந்திய உழைக்கும் பெண்கள் ஒருங்கினைப்புக் குழுவின் கன்வீனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977ல் சி.ஐ.டி.யூ அகில இந்திய செயலாளர்களில் ஒருவராக் உயர்ந்தார். மற்றொரு பக்கம் மாதர் அமைப்பினர் உருவாக்குவதில் மகத்தான பங்களிப்பையும் செய்தார். அனைத்திந்திய ஜனநாயக் மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒரருவராக திகழ்ந்தார். 83 வயதில் அவர் மரணமடையும் தருவாய் வரை உழைப்பாளி மக்கள் குறித்தே சிந்தித்துவந்தார்.

       தேச விடுதலைப்போரில் தனது வாழ்வை துவங்கி உழைக்கும் மக்கள் கைகளில் அதிகாரம் கிடைப்பதே உன்மையான விடுதலை என்பதை உணர்ந்து அதற்காக தன் வழ்நாள் முழுவதும் உழைத்த அந்த விடுதலைப்போராளியை தேசம் என்றும் மறக்காது. 
                                                                   (தொடரும்)

            

செவ்வாய், 29 ஜூலை, 2014

விமல் சர்தேசாய்: சரியான பாதையை தேர்ந்தெடுத்தவர்

விடுதலைப் போரில் பெண்கள் - 16


கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தியத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்!

கண்ட தில்லை கேட்ட தில்லை
சண்டை யிந்த மாதரி
பண்டு செய்த புண்ணி யந்தான்
பலித்த தேநாம் பார்த்திட!

காந்தி யென்ற சாந்த மூர்த்தி
தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்த ருக்குள் தீமை குன்ற 
வாய்ந்த தெய்வ மார்க்கமே.

நாமக்கல் கவிஞரின் இக்கருத்தை கொண்ட பாடகள் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு வார்த்தகளில் தேசம் எங்கும் எதிரொலிந்த நேரம் அது. சக்திவாந்த, சம்பிரதாயமற்ற எதிர்ப்பு போராட்டமான சத்தியாகிரகம் மாணவர்களை, இளய பட்டாளத்தை வசீகரித்த உலைக்களமாய் தேசம் இருந்தது. 

14 வயதில் சிறையை நோக்கி...
காந்தி என்ற எளிய மனிதன் தேசத்தின் ஆன்மாவை அகிம்சை வழியில் போராட தூண்டி அதில் வெற்றியும் அடைந்திருந்தார். அவரிச்சுற்றி எப்போது நூற்றுக்கணக்கில் அண்களும் பெண்களுமாய் எளிய மனிதர்கள் குழுமிருந்தனர். அவர் போராட்டத்திற்கு நிதி கேட்டால் தங்கள் உடம்பில் இருந்த குண்டுமணி தங்கத்தையும் அவரிடம் தாரைவார்த்தனர். அன்று அவரைச்சுற்றி இருந்த கூட்டத்தில் 14 வயது நிறம்பிய விமல் என்ற மாணவியும் ஒருவர். காந்தியை சந்தித்த அந்த தருனம் அவளது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தன்னுடைய குடும்ப சூழல் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்கும் என்பதால் அந்த இளம் மாணவி காங்கிரசின் சேவை அமைப்பான சேவதளத்தில் காந்தியை சந்தித்த அன்றே தன்னை இணைத்துக்கொன்டார். 

அச்சமயத்தில்தான் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சத்தியாகிரகப் போராட்டத்தை துவங்கி இருந்தது. அப்போது காதராடை உடுத்துவது தங்களின் உணர்வின் வெளிப்பாடு என தேசபக்தர்கள் உணர்வுப்பூர்வமாக நம்பினர். எனவே விமலும் அவரது தோழிகளும் பள்ளிக்கு வெள்ளை நிறத்திலான கதர் ஆடைகளையே உடுத்திச் சென்றனர். 

   சேவாதளத் தொண்டரான விமலுக்கும் அவரது தோழர்களுக்கும் வெளிநாட்டு துணிகளை விற்கும் கடைகளுக்கு முன்பு மறியல் செய்யும் பணித் தரப்பட்டது. இவர்கள் செல்லும போது கடைக்காரர்கள் கடையை மூடிவிடுவார்கள். காவல்துறையினர் போராட்டகரர்களை அப்புறப்படுத்தியதும் மீண்டும் திறப்பார்கள். இவர்களுக்கு பாடம் நடத்திட எண்ணிய விமல் தனது நண்பர்களுடன் திடீரென அறிவிப்பு இல்லாமல் காரில் சென்று கடைகளை மறித்தார். காவல்துறை இவர்களை வளைத்து பிடித்து கைது செய்தது. சுற்றிலும் மக்கள் திரண்டு இவர்கள் செல்லும் காவல்துறை வாகணத்தின் மீது மலர்த்தூவி வாழ்த்தினர். நீதிமன்றத்தில்  ஆங்கில நீதிபதி இவர்களை சிறுமிகள்தானே என்று ஏளனதுடன் மன்னிப்பு கேட்டால் விட்டுவிடுவதாக கூறினார். ஆனால் விமல் சொன்னார் "நாங்கள் செய்தது பெருமைக்குரிய செயல், நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார். கோபமடைந்த நீதிபதி இவரையும் இவரது சகோதரி குசும் உள்ளிட்ட பலரையும் பூனாவில் உள்ள எரவாடா சிறையில் அடைத்தார். அங்கு எற்கனவே சரோஜினி நாயுடு, கமலாதேவி சட்டோபாத்யாயா போன்றவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். ஆறு மாத சிறைவாசத்திற்கு பின்பு 1931ல் காந்தி-இர்வின் ஒப்பந்தம் போடப்பட்ட பின்பு ஆறுமாத சிரைவாசத்துடன் விமல் வெளியே வந்தார்.

விமல் கைதானபோது செய்தித்தாள்களில் அது முக்கிய செய்தியாக வந்திருந்தது. பொதுவாக அனைத்து செய்திதாள்களும் இப்படி செய்தியை வெளியிட்டன "கைதான சேவாதள தொண்டர்களில் மிகவும் சிறிய வயதுடையவர் 14 வயதான விமல் சர்தேசாய். அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது." 14 வயதில் தேசத்தின் மீது அக்கறைக் கொண்ட, ஆங்கிலேயனிடம் மன்னிப்பை கேட்டு சுதந்திரமாய் திரிவதைவிட சிறைச்சாலையே மேல் என முடிவெடுத்த அந்த 14 வயது மாணவியின் பின்னணி என்ன...

மாற்றத்தை நோக்கிய பின்னணி...
மகாராஸ்டிர மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள பிரதானவல்லி என்ற மிகவும் பின்தங்கிய கிராமத்தில் அனந்த சர்தேசாய் - மாலதி தம்பதியினருக்கு 1915 ஆம் ஆண்டு மூத்த குழந்தையாக விமல் பிறந்தார். இவருக்கு பின் இரண்டு தம்பிகளும் ஒரு தங்கையும் பிறந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான அதேசமயம் சமூக சீர்திருத்த முற்போக்கமான குடும்பமாய் அது திகழ்ந்தது. விமலுக்கு 10 வயதாகும் போது அவரது தந்தை மரணமடைந்தார். குடும்பததை பராமரித்து குழந்தைகளை படிக்கவைக்கும் பொறுப்பை விமலின் மாமா கணேஷ் சர்தேசாய் ஏற்றுக்கொண்டார். விமல் தனது மாமாவுடன் பம்பாய் சென்றுவிட்டார். மெட்ரிகுலேஷன் படிக்கும் போது பூனா அருகிலுள்ள ஹிங்கானி என்ற இடத்திலுள்ள கார்வே ஆசிரமத்திற்கு விமலை அவரது மாமா அனுப்பி வைத்தார்.
     இந்த சூழலில்தான் அவர் சத்தியாகிரக போராளியாக உருமாறினார்.  ஆனால் தான் அறிவிக்கும் போராட்டத்தின் உச்சத்தில் அதை வாபஸ் வாங்கும் பழக்கம் கொண்ட காந்தி சத்தியாகிரக போராட்டத்தையும் வாபஸ் வாங்கினார். இதனால் தேசபக்தர்கள் கடுமையான சோர்வை அடைந்தனர். விமல் கடுமையான ஏமாற்றத்துடன் போராட்டத்திற்கான மாற்று வழிகளை தேடினார். அவருக்கு தாமோதர் சாவர்கரை சந்திக்கும் வாய்ப்பு அப்படிதான் கிடைத்தது. வீட்டுச்சிறையில் இருந்த சாவர்கர் 16 வயதுடைய விமலையும் அவரது தோழியையும் பார்த்து பாராட்டியவர் முதலில் கல்வியை முடித்துவிட்டு பிறகு போராட வாருங்கள் எனச்சொன்னார். ஆனாலும் விமலின் மனதில் போரடட உத்வேகம் அலையடித்துக்கொண்டே இருந்தது. தான் கற்ற கல்வியின் பயனாக அவரது உள்ளத்தில் கேள்விகள் எழுதுக்கொண்டே இருந்தது.

காங்கிரஸ் பாதை சரியனதா? உழைக்கும் மக்களின் விடுதலை எந்த அளவு சாத்தியம்? வறுமை, பசி, கல்லாமை, நிலபிரபுத்துவம், சாதியம், மத ரீதியான திரட்டல் இவைகளையெல்லாம் எதித்தும்தானே விடுதலைப்போராட்டம் நடைபெற வேண்டும். ஆனால் காங்கிரஸின் பார்வையில் இவைகள் குறித்தெல்லாம்   தெளிவான பார்வை இல்லையே என்று கருதினார். தேசச்சுதந்திரம் என்பது வெறும் விடுதலை என்ற வார்த்தையோடு மட்டும் இணைக்கப்பட்டதல்ல, அதையும் தாண்டி உழைப்பாளி மக்கள் விடுதலையோடு பின்னிப்பினைந்தது என்று கருதினார். இந்த சிந்தனை அவரை இயல்பாகவே மார்க்சியத்தின்பால் ஈர்த்தது.

அதன் பிறகான அவர் வாழ்க்கையில் சிறந்த கல்வியாளராக, புகழ்பெற்ற திரைப்பட நடிகையாக, உழைப்பாளி மக்களின் போராளியாக, விடுதலைக்கான முழு அர்த்தத்தை புரிந்த விடுதலை வீரராக பரிணமித்தது ஆச்சரியமான பக்கங்கள்தான்.
(பயணம் தொடரும்) 

புதன், 12 மார்ச், 2014

களத்தில் மட்டுமல்ல வாழ்விலும் போராடியவர்: சரோஜினி



விடுதலைப்போரில் பெண்கள் - 12



ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்திய நிர்வாகத்தை மொத்தமாக கைக்கொண்டதும் இந்தியாவின் நிர்வாக அமைபில் பல மாறுதல்களை செய்தனர். குறிப்பாக தங்களுக்கு ஏற்ற ஒரு வர்க்கத்தை உருவாக்க கல்வி அமைப்பில் பல புதிய திட்டங்களைக் கொண்டு வந்தனர். இதன் பயனாக இந்தியாவில் குறிப்பிட்ட வர்க்கத்தினர் கல்வி பெறும் வாய்ப்பை அடைந்தனர். ஆனால் அவர்கள் கொடுத்த கல்வி அவர்களுக்கு எதிராக திரும்பியது மட்டுமல்ல மற்றொரு உபவிளைவாக இந்திய நாட்டின் பெண்களையும் போராட்ட களத்திற்கு அழைத்து வந்ததுதான் சுவராசியம்.

அன்னி பெசண்ட் அம்மையார் அன்னிய நாட்டில் பிறந்து இந்திய நாட்டு விடுதலைக்கு போராடினார். ஆனால், இந்திய மண்ணில் ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்மணி தந்த கல்வியை பயன்படுத்தி தனது தேசத்திற்காக மட்டுமல்லாது பெண் விடுதலை, பெண் சுதந்திரத்திற்காகவும் போராடினார். சென்ற நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் இவரது செயல்பாடுகள் அசாத்தியமானது.

1879 பிப்ரவரி 13-ம் தேதி பிறந்த சரோஜினி பிறப்பால் நாயுடு அல்ல.அவரது தந்தை ஒரு வங்காளி பிராமணர். அவர் பெயர் டாக்டர் அகோரநாத் சட்டோபாத்தியாயா. பெரிய கல்வியாளர். விஞ்ஞானத்திலும் உயர் கல்வி கற்றவர்.அன்றைய நிஜாம் சமஸ்தானத்துக்கு வந்து (ஹைதராபாத்) ஒரு கல்லூரியை நிறுவியவர். இதனால் சரோஜினியின் இளம் பருவம் ஹைதராபாத்தில் சுற்றித் திரிந்தது.
 
இவருடன் பிறந்தவர்கள் மூன்று  பெண்கள், மூன்று ஆண் குழந்தைகள், வசதியான குடும்பம். படிப்பில் எப்போதும் சரோஜினி முதல் இடத்தில் இருந்தார். சிறு வயதிலேயே  கவிதை எழுதும் ஆர்வம் இருந்தது. இது அவரை மற்றவர்கள் மத்தியில் வேறுபடுத்தி காட்டியது. கொஞ்ச நாள்தான் ஹைதராபாத் படிப்பு தொடர்ந்தது. அவரது தந்தை சிறந்த கல்வியை அளித்துவந்த சென்னைக்கு சென்றால் சரோஜினி படிப்பில் மேலும் சிறக்கலாமென அவரை சென்னைக்கு அனுப்ப முடிவு செய்தார். 

அந்த இளம் வயதிலேயே தனியாக ரயிலேற்றி சென்னைக்கு அனுப்பி விட்டார். சிறப்பாக படித்து பன்னிரெண்டாம் வயதிலேயே மெட்ரிகுலேஷன் தேர்வெழுதி வெற்றிகண்டார். மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்தார். ஆகவே அவரை மேல் படிப்புக்கு இங்கிலாந்துக்கு அனுப்பினார் அவரது தந்தை.

1895-ம் வருடம் லண்டனில் கிங்ஸ் கல்லூரியில் கணிதம் படிக்கச் சேர்ந்தார்.தந்தையின் விருப்பம் அது. ஆனால் கணிதத்தைவிட கவிதைகளில் அவரது கவனம் சென்றது.கவிதைகளில் சமூக கருத்துக்கள் மேலோங்கி நின்றன. எனவே அவரது நண்பர்களான ஆங்கில எழுத்தாளர்களும், கவிஞர்களும் அவரது கவிதைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டு வர உதவி செய்தார்கள்.அவரது எழுத்து திறமை கொட்டும் அருவியைப்போல மடைதிறந்து வந்தது.  
 1898-ல் சரோஜினிக்கு உடல் நிலை சரியில்லாமல் தனது படிப்பை தொடர முடியாமல் ஹைதராபாத்துக்கு திரும்பினார்.சரோஜினியின் தந்தைக்கு மகளின் விருப்பம் புரிந்தது.அவரது கவிதைகளை ஆதரித்தார். அச்சமயம் ஹைதராபாத்தில் வசித்து வந்த மேஜர் கோவிந்தசாமி நாயுடு என்பவரின் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. நாயுடு, பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே திருமணமாகி, மிக இளம் வயதில் மனைவியை இழந்தவர். தொழில் முறையில் அவர் ஒரு டாக்டர். 

உயர்சாதியினரான சரோஜினி குடும்பம் இக்காதலை ஏற்கவில்லை.அன்றைய தேதியில் இதனைத் தன் தனியொருவரின் பிரச்சினையாகப் பார்க்காமல், ஒட்டுமொத்த சமூகப் பிரச்சனை ஒன்றின் ஒரு எடுத்துக்காட்டாகக் கொண்டார் சரோஜினி. கேவலம், சாதியை முன்னிட்டு காதலை நிராகரிப்பதா என அடங்க மறுத்தார். சாதி மறுப்பு திருமணத்தில் உறுதியாக நின்றார். அவரது தந்தை அவரது விருப்பத்துக்குக் குறுக்கே நிற்கவில்லை.எனவே அந்த சாதி மறுப்பு திருமணம் அவரது தந்தையின் ஒப்புதலுடன் நடந்தது

1885ல் மேல்தட்டு வர்க்கத்தினர் நலனுக்காகவும், எழுந்து வந்த சுதந்திர தாகத்தை தனிய வைக்கவும் மனு கொடுக்கும் இயக்கமாக துவங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர் கொடுத்த கல்வியினாலும், விடுதலை தேசம் குறித்த கனவுகளாலும் விழிப்புணர்வு கொண்ட இளைஞர்கள் கையில் வந்திருந்தது.இதன் விளைவாக   தேசம், சுதந்திர தாகம் கொண்டு தவித்த தருணமாய் இருந்தது. பெண்களும் களத்தில் இறங்க வாய்ப்புகள் அழைத்தது. அன்னிபெசண்ட் அதற்கு வழிகாட்டியாக இருந்தார். 

ஆக அத்தகைய சூழலில் தனது மக்களுக்கும் நாட்டுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உணர்ச்சி மேலோங்கியது. இதன் காரணமாய் கணவரையும், பிறந்த இரு குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு தன்னை புரிந்துக்கொண்ட கணவனை விடுத்து, குழந்தையை பிரிந்து பம்பாய்க்கு ரயிலேறினார். தேசம் அழைத்தபோது தனது குடும்பத்தையும், கைக்குழந்தையையும் பிரியும் தியாக உள்ளம் அவருக்கு வாய்த்திருந்தது. பொழுதெல்லாம் எம் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ நாங்கள் சாகவோ என விடுதலை கீதம் இசைத்த எட்டையபுரத்தானைப் போல தமது எழுச்சிமிக்கக் கவிதைகளின் மூலம் மக்கள் மத்தியில் சுதந்திரக் கனவை ஊதி வளர்த்தார். பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, முகமதலி ஜின்னா போன்ற தலைவர்களுடன் பழக வாய்ப்பு கிடைத்தது. அன்னிபெசண்ட் இந்தியா வந்து அப்போதுதான் ஹோம்ரூல் இயக்க பணிகளை துவக்கியிருந்ததும் சரோஜினிக்கு உற்சாகத்தை கொடுத்தது. தில்லையாடி வள்ளியம்மையின் தீரமிக்க போராட்டத்தால் கவரப்பட்ட காந்தியடிகள் தென்னாப்ரிக்கா, இந்தியர் விடுதலை போராட்டத்தில் பங்கேற்று இந்தியா திரும்பிய சமயம் அது. மீண்டும் அங்கே பிரச்சனைகள் எழுந்த போது தனது சார்பாக சரோஜினியைதான் அங்கு அனுப்பி வைத்தார். 

மீண்டும் இந்தியா வந்த சரோஜினி காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளர் பணியை மேற்கொண்டார். தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் அவர் மேற்கொண்ட அயராத சுற்றுப் பயணங்களும், எழுச்சியுடன் அவர் ஆற்றிய உரைகளும் சுதந்திரப் போராட்ட சரித்திரத்தில் மிக முக்கியமான அத்தியாயங்கள். அதுமட்டுமல்ல காங்கிரசின் செயற்குழு உறுப்பினராக, அக்கட்சியின் தலைவராக ஒவ்வொரு காலக் கட்டத்தில் ஒவ்வொரு பொறுப்பை ஏற்று திறம்பட செயலாற்றினார். அவர் பொதுவாழ்வில் இறங்கிய பின்பு நடந்த போராட்டங்களில் எல்லாம் பங்கேற்றது மட்டுமல்ல, அன்றைய பெண்களின் மனசாட்சியை தட்டி எழுப்பினார். விடுதலைபோரில் சுடர் விடும் ஒளியாக, இந்திய பெண்களின் போராட்ட கலங்கரை விளக்காக உத்வேகம் ஊட்டினார். 

பல பத்தாண்டு போராட்டத்தில் ஆயிரமாயிரம் மக்களின் உதிரத்தில் விடுதலைப் பிறந்தது. இந்திய தேசம் சுதந்திரமடைந்த பிறகு இந்தியாவின் முதல் பெண் கவர்னராக சரோஜினி நியமிக்கப்பட்டார். அதுவும் அன்று மாபெரும் மாநிலமாக இருந்த ஐக்கிய மாகாணத்துக்கு (இன்றைய உத்தரபிரதேசம்) நியமிக்கப்பட்டது அவரது நிர்வாக திறமைக்கு ஒரு சிறந்த உதாராணமாக இருந்தது. அவர் பலவிதங்களில் ஒரு முன்னோடிப் பெண்மணி. தமது சுய வாழ்வில், சமூக வெளியில் உறுதியுடன் போரிட்டு சாதித்தவர். பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்று பேசுவதுமட்டும் விடுதலைக்கு மார்க்கமில்லை, நமது சுதந்திரம் நம்மிடம்தான் இருக்கிறது. அதுவும் வீதியில் போராடமல் கிடைக்காது என்று தனது வாழ்வால் நிருபித்தவர் சரோஜினி. வாழ்க்கை முழுவதும் போராட்ட களத்தில் இருந்த சரோஜினி தமது 70அம் வயதில் 1949 மார்ச் 2-ம் தேதி காலமானார். விடுதலைப்போரில் ஈடுபட்ட பெண் போராளிகளின் வரிசையில் எப்போதும் மறக்க முடியாத இடத்தில் நிறைந்திருப்பார் சரோஜினி.