விடுதலைப் போரில் பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலைப் போரில் பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 அக்டோபர், 2016

அருணா: தோட்டாகளுக்கு மத்தியில் தேசிய கொடியேந்திய வீராங்கனை


விடுதலைப்போரில் பெண்கள் - 22


இந்த தேசத்திற்காக உழைத்தவர்கள் எப்போதுமே தாமதமாதான் கவுரவம் செய்யப்படிருக்கின்றனர். இந்த உதாரணத்தின் ஒரு எடுத்துகாட்டு அருணா. இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட பெருமைமிகு இப்போராளி 87 ஆண்டுகள் இந்த மண்ணின் மக்களை நேசித்த ஒரு உன்னதம் அவர். அவர் இறந்த அடுத்த ஆண்டாண 1997 -ல் தான் அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்திய அரசு அவரை மிக தாமதமாக பாரத்த ரத்தினமாய் ஏற்றுக்கொண்டாலும் அவர் உண்மையில் இந்தியாவின் நவரத்தினாமக தனது வாழ்க்கை மூலமாக ஜொலித்தார்.

1909 ஆம் ஆண்டு இன்று அரியானா மாநிலத்தில் உள்ள கல்காவில் பிறந்தார். வங்க குடும்பத்தில் பிறந்த அவரது தந்தையின் பூர்வீகம் கிழக்கு வங்காளம் ஆகும். அவர்கள் கொல்கத்தாவில் அவரது பணி நிமித்தமாக நிறந்தரமாக தங்கினர். அவரது தந்தை  உபேந்திரநாத் கங்குலி சிறந்த பத்திரிக்கையாளராக திகழ்ந்தார். அருணா லாகூரில் கத்தோலிக்க கிருத்துவ பள்ளியில் கல்வி கற்றார். அவருக்கு கிருத்துவ மதத்தின் மீது அளவிடமுடியாத பற்றுதல் ஏற்பட்டது. படிப்பில் சிறந்த மாணவியாக திகழ்ந்த அவர் ஒரு சமயத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் இறை சேவையிலேயே வாழவை கழிக்க எண்ணினார். ஆனால் அவரது அடுத்த கல்வி நிலையமான நைனீடாவில் உள்ள பிராட்டஸ்டன்ட் அக்கருத்தை மாற்றி அமைத்தது.

அச்சமயம் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை குடும்பத்தில் துவக்கினர் ஆனால் அவர் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. மேலும் உயர் கல்விக்கான படிப்பு செலவை தானே சமாளித்து நிற்பதற்காக ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். அருணாவின் சகோதரி பூர்ணிமா தனது கனவருடன் அலகாபாத்தில் வசித்துவந்தார். கோடை விடுமுறை காலத்தில் அலகாபாத் சென்று சிலகாலம் அருணா தங்கி இருந்தார். அங்குதான் அவர் இலக்கிய ஆர்வமும், அரசியல் வேட்கையும் நிறைந்த போராளியான ஆசாப் அலியை சந்தித்தார். 

இலக்கியம், அரசியல் என துவங்கிய இவர்கள் விவாதம் காதல் என்ற புள்ளியில் சந்தித்தது. இருவரும் மனதார விரும்பினர். ஆனால் குடும்பத்தில் பிரச்சனை மாற்று மதங்களை சார்ந்தவர்கள் என்பதால் மட்டும் வரவில்லை, இருவருக்குமான வயது வித்தியாசம் ஒரு தடையாக சுட்டிக்காட்டப்பட்டது. ஆம் அப்போது ஆசாப் அலிக்கு 41 வயது, அருணாவுக்கு 18 வயது. இருப்பினும் இருவரும் மணம் புரிந்துக்கொண்டனர். லாலா லஜபதிராயை தடியால் அடித்து கொலை செய்த சாண்ட்ரஸை பக்தசிங்க் சுட்டு கொன்ற அதே 1928 ஆம் ஆண்டுதான் அருணா - ஆசாப் அலி இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த சம்பவம் ஏன் இங்கு சுட்டிக்காட்ட படுகிறது எனில், ஆசாப் அலி இந்திய தீவிரவாத இயங்களின் நியாயத்தை தொடர்ந்து கவனித்து வந்தார். கவனித்து வந்தது மட்டுமல்ல பகத்சிங், பி.கே.தத் ஆகியோருக்காக பின்னாளில் வாதடிய வழக்கறிஞரும் இவர்தான்.

இதற்கிடையில் இளம் பெண்ணான அருணாவுக்கு இந்திய அரசியல் செல்லும் பாதை வேதனையை கொடுத்தது. விடுதலை போரில் தானும் முழுமையாக ஈடுபட விரும்பினார். இதற்கு அசாப் அலி மிகவும் உற்சாகம் கொடுத்தார். தன்னுடைய முழு திறமையையும், வாய்புகளையும் பயன்படுத்திக்கொண்டார். ஆசாப் அலி முலீம் லீக்கில் பணியாற்றினாலும் அருணா காங்கிரஸில் பற்று கொண்டு உழைத்தார். கணவரிடமிருந்து உருது மொழி கற்றுக்கொண்டு வங்க மொழிக்கு நிகராக அம்மொழியிலும் மேடையில் சிறப்பாக பேசினார். காங்கிரஸ் சோசலிஸ்டாக அவர் அறியப்பட்டார்.   

காந்தியடிகள், மொளலானா ஆசாத் போன்ற தலைவர்களின் கூட்டங்களில் உத்வேகம் அடைந்த அவர், ஜெயபிரகாஷ் நாராயணன், அச்சுத்பட்டவர்தன், ராம் மனோகர் லோகிய போன்ற சோசலிஸ்ட்  அரசியல் தலைவர்களுடன்தான் போர் கொடி ஏந்தி களம் கண்டார். எதையும் வைராக்கியத்துடன் செய்யும் ஆற்றல் கொண்ட அருணா விடுதலை போரில் தீவிரமாக இறங்கினார். 1930 களில் நடந்த உப்பு சத்தியா கிரகத்தில் ஈடுபட்டு சிறக்கு சென்றார். அவரது கணவரும் கைது செய்யப்படார். பெரும் பேரணிக்கு தலைமையேற்றுச் சென்றதால் அருணா கைது செய்யப்பட்டார். காந்தி - இர்வின் ஒப்பந்தபடி அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யபடாலும்ம் அருணாவை மட்டும் பிரிடிஷ் அரசாங்கம் விடுதலை செய்யவில்லையெனில் அதிலிருந்து அவரது தீவிரத்தை புரிந்துக்கொள்ளலாம். அவரது விடுதலைக்காக கடுமையான போராட்டங்கள் நடந்த பிறகுதான் அவர் விடுதலை செய்யபடார்.

மீண்டும் 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டதில் பங்கு கொண்டு சிறைக்குச் சென்றார். நீதிமன்றம் அவருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தது. அவர் அதை கட்ட மறுத்ததால் சிறை இருப்பது தொடர்ந்தது. இவர் அபாயமானவர் என அறிவித்து அவரை மட்டும் அரசாங்கம் அம்பாலா சிறைக்கு மாற்றியது. 1940ம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்க போராட்டத்திற்கு தேர்ந்தெடுத்த தலைவர்களில் அருணாவும் ஒருவர். இதிலேயும் சிறைக்கு சென்றார். அச்சமயம் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1942 ஆம் ஆண்டு பம்பாயில் துவங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரலாற்று முக்கியதுவம் வாந்த வெள்ளையனே வெளியேறு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. இரவோடு இரவாக அனைத்து தலைவர்களும் கைதுசெய்யப்பட்டனர். அடுத்த நாள் பம்பாயின் புகழ் பெற்ற கோவாலி டேங்க் மைதானத்தில் வெளையனே வெளியேறு இயக்கத்தின் துவக்க நிகழ்ச்சி இருந்தது. எங்கும் பரபரப்பாக இருந்தது, காவல்துறையும், ராணுவம் ஆயுதங்களுடன் சுற்றிலும் நின்றது. இந்த இயக்கத்தை தேசிய கொடியை ஏற்றி வைத்து மொளலானா ஆசாத் துவக்குவதாத அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் முந்நாள் இரவே கைது செய்யப்பட்டிருந்தார். மைதானத்தில் குழப்பம், எபடியும் தேசிய கொடியை ஏற்றுவது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை துவக்குவது என்பது நடக்கத்தான் போகிறது. ஆனால் முதல் அடியை யார் எடுத்து வைப்பது? கவல்துறையும் இராணுவமும் உயர்த்திய தடிகளும், துப்பாகிகளையும் வைத்து குறிபார்த்துக்கொண்டிருந்தது. 

திடீரென வந்தே மாதரம் என்ற முழக்கமும், இன்குலாம் ஜிந்தாபாத் என்ற முழக்கமும் வின்னை முட்டும்மளவு உயர்ந்தது. காரணம் அருணா என்ற வீரமங்கை எதற்கும் அஞ்சாமல் தேசிய கொடியை கம்பீரமாக ஏற்றிக்கொண்டிருந்தார். இதை சற்றும் எதிர்பார்காக காவல்துறையும், இராணுவமும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர், கூட்டம் அசராமல் முழக்கமிட்டது. திடீரென தோட்டாக்கள் சீறிபாய்ந்தது. பலர் சுருண்டு விழுந்து இறந்தனர். அருணாவை அங்கிருந்து தேசபக்தர்கள் தப்பவைத்தனர். அருணாவின் தலைக்கு ஆங்கிலேய அரசு ஐந்தாயிரம் விலைவைத்தது. அன்று தலைமறைவான அந்த வீராங்கனை 1946 ஆம் ஆண்டுதான் வெளியில் வந்தார்.

இந்த தலைமறைவு காலத்தில் அவரது தாயார் மரணமடைந்தார், கணவர் உடல் நலம் குன்றி மருத்துவமணையில் அனுமதிக்கப்படார். அருணாவின் சொத்துக்களை அரசாங்கம் கைப்பற்றியது, கொடுமையான வாழ்க்கை இருப்பினும் மணம் தளராமல் போராட்டங்களில் ஈடுபட்டுக்கோண்டே இருந்தார். சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை அவர் உள்வாங்கி பணியாற்றியது பின்னாளில் நடந்தது.

இந்தியா விடுதலை பெற்றதும் அவர் டெல்லியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைதிக்கான லெனின் விருதை 1975 ஆம் ஆண்டும், சர்வதேச புரிதலுக்கான நேரு விருதை 1991 ஆண்டும் அவர் பெற்றார். 1996 ஆம் ஆண்டு அவர் மரணம் அடையும் வரை மக்களை நேசித்து வந்தார். எல்லா வளங்களும் கொண்ட குடும்பத்தில் பிறந்து, போராட்ட களத்தையே தனது வாழ்க்கையாக மெற்கொண்டு, தனது சொந்த இழப்புகளை பொருட்படுத்தாமல் வாழ்ந்து மறைந்த போராளி அவர். விடுதலைப் போராட்டத்தில் அருணாவை போல மகத்தானவர்கள் நம்முடைய ஈர்ப்பு சக்தியாக விளங்குகின்றனர்.   
(தொடரும்)
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

புதன், 26 ஆகஸ்ட், 2015

தென்னார்காடு மாவட்டத்தின் வேலுநாச்சியார்: அஞ்சலையம்மாள்

விடுதலைப் போரில் பெண்கள் - 20

1920ம் ஆண்டு காந்தியடிகள் துவக்கிய ஒத்துழையாமை இயக்கம் பாதியில் நிறுத்தபட்ட விரக்தி தேசம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது. அதே நேரம் தமிழகத்தில் நீதிக்கட்சி ஒப்பீட்டளவில் பல முற்போக்கான சட்டங்களை கொண்டுப்வந்த பின்னணி இருப்பினும் விடுதலை போராட்டங்கள் ஓய்ந்துவிடவில்லை. தேசத்தின் ஏதோ ஒரு மூளையில் ஏதோ ஒரு வடிவத்தில் விடுதலைகான போராட்டங்கள் நடந்துக்கொண்டுதான் இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் பல முணைகளில் காங்கிரஸ் இயக்கம் மக்களை போராட்டத்தி ஈர்த்துக்கொண்டிருந்தது. அப்போராட்டத்தின் போது மதுரையை சேர்ந்த பத்மாசனி அம்மாளும் கடலூர் அஞ்சலையம்மாளும் 1857ல் நடந்த மாபெரும் எழுட்சியை, அதன் மக்கள் பங்கெடுப்பை, தியாகங்களை சொல்லி மக்களை தூண்டியது வீண்போகவில்லை. 

அது நெருப்பாய் பற்றிடத்தான் செய்தது. சில ஆண்டுகள் கழித்து இதுவே நீல் சிலை சத்தியாக்கிரகத்திற்கு அச்சாணியாய் இருந்தது. அதுமட்டுமல்ல தமிழகத்தின் பல வீராங்கனைகளை உலகிற்கு அடையாளம் காட்டவும் செய்தது. குறிப்பாக அன்றைய தென்னார்காடு மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் ஒரு சாதாரன நெசவு குடும்பத்தில் பிறந்து மிக உயர்ந்த போராளியாக திகழ்ந்த அஞ்சலையம்மாள் முக்கியமானர் ஆவார்.

சாவக்கரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தடை செய்யப்பட்ட ""1857 இந்தியாவில் முதல் சுதந்திரப் போராட்ட வரலாறு"" என்ற புத்தகத்தை, திருமதி டி.வி.எஸ். சௌந்தரம் அவர்கள் அழகு தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இந்த புத்தகம் இருக்கிறது என்று அரசாங்கத்திற்கு தெரிந்தால் உடனே அவர்கள் வீட்டில் சோதனை நடக்கும் நிலைதான் அன்று இருந்தது. அன்னிய ஆட்சியாளர்கள் அந்த அளவு அந்த எழுச்சியை வெறுத்தனர். அப்போராட்டத்தின் நினைவுகளை அழிக்க துடித்தனர். அந்த தகிப்பின் உச்சம் அவர்களுக்கு தொடர்ந்தது. இவைகளை அறிந்தும் மிகவும் துணிச்சலுடன் அப்புத்தகத்தை தமிழில் கொண்டுவந்தார். எவ்வளவோ கஷ்டங்களிருந்தும் தைரியமாகவும், வெற்றிகரமாகவும் இப்புத்தகத்தை பாண்டிச்சேரியிலிருந்து கொண்டு வந்து இவர் எளிய தமிழில் மொழி பெயர்த்து விடுதலைப் போருக்கு உதவினார்.

இப்புத்தகத்தில்தான் அந்த 1857 எழுட்சியை கொடூரமாக அடக்கிய ஆங்கிலேயர்களின் ரத்தம் தோய்ந்த வரலாறு பலருக்கு அறியத்துவங்கியது. இப்புதகத்தை படித்த பின்னர்தான் பல தேசபக்தர்கள் அப்படியான சமபவங்களை வெளியே பேசத்துவங்கினர். குறிப்பாக  1857 புரட்சியின் போது ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் செய்த கொடுமைகள் விவாவதமானது. அந்த நீல் என்கிற கொடூர மனம் படைத்த அதிகாரி இந்திய போராளிகளை கொடூரமாக சுட்டுகொன்றதும், கூட்டங் கூட்டமாய் தூக்கில் தொங்கவிட்டதும், நிராயுதபாணியான தேசபக்தர்கள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தி படுகொலை செய்யப்பட்டது தெரிந்தது. அந்த போராட்டத்தின் போது லக்னோ அருகில் குதிரையிலிருந்து கட்டளையிட்டுக் கொண்டிருந்த நீல் இந்திய போராளிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டான். அவனது படுகொலைகள் செய்த வீரத்தை பாராட்டி, சென்னை மவுன்ட் ரோட்டில் ஆங்கிலேயர்கள் அவனது நினைவாக சிலை வைத்திருந்தனர். இது இந்தியர்களை கடுமையாக எரிச்சல்பட வைத்தது. எனவே இந்த சிலையை அகற்றும் சத்தியாகிரகத்தை துவக்கினர்.

இச்சத்தியாகிரகம் 1927 ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி சென்னை மவுன்ட் ரோட்டிலுள்ள கர்னல் நீலின் சிலையை அகற்றத் தொடங்கப்பட்டது. அக்கொடியவன் சிலையை எப்படியாவது அகற்றிவிட வேண்டுமென்ற தேசபக்தி மேலோங்கியது. உடனே மதுரை ரெ. சிதம்பர பாரதி, ரா. ஸ்ரீநிவாஸ வரதன், பத்மாசனி அம்மாள் ஆகிய மூவரும் போராட்டத்திற்கான திட்டம் வகுத்து, திருநெல்வேலி தேசபக்தரான சுப்பராயலு நாயிடுவையும், இராமநாதபுரம் முகம்மது சாலியாவையும் போராட்டத்தை தொடங்குவதற்கு அனுப்பத் தீர்மானித்தனர். அவர்களுக்கு சென்னை செல்வதற்குரிய செலவை பத்மாசனி அம்மாள் தன் கொலுசை அடகு வைத்து கொடுத்து உதவினார். இருவரும் ஆகஸ்ட் 11-ஆம் நாள் தேசியக்கொடி, பூமாலை, உளி, சம்மட்டி, ஏணி முதலியவற்றுடன் சென்று சிலையை உடைக்க ஆயத்த பணிகளை ஆரம்பித்தனர். சற்றுநேரத்தில் பதறிப்போன ஆங்கிலேய  அவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். 

தடைகள் பல வந்தபோதும் போராட்டம் தொடர்ந்து நடந்தது. பலர் கைதானார்கள். இப்போராட்டத்தின் சிறப்பே தமிழ்நாட்டின் பல பகுதியிலிருந்தும் பெண்கள் வந்து கலந்து கொண்டதாகும். அவர்களில் ஒருவரான சேலம் அங்கச்சி அம்மாள் செப்டம்பர் 1-ஆம் நாள் கழுத்தில் மாலையுடனும் கையில் கோடரியுடனும் போலீசை மீறி சிலையை உடைக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலும், 7 ரூபாய் அபராதமும் விதித்து தண்டிக்கப்பட்டார். 

அப்போதுதான் இப்போராட்டத்தில் கடலூரைச் சேர்ந்த அஞ்சலையம்மாளும் அவர் மகள் அம்மாகண்ணு என்கிற லீலாவதி என்ற 12 வயது சிறுமியும் கலந்துக்கொண்டு செப்டம்பர் 6-ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். அஞ்சலையம்மாளுக்கு 25 ரூபாய் அபதாரமும் அதில் தவறினால் ஒருவார கடுஞ்சிறைத் தண்டனையும் அம்மாகண்ணு என்கிற லீலாவதிக்கு  நான்கு வருடம் குழந்தைகள் இல்லத்தில் வைக்கவேண்டும் என்ற தண்டனையும் விதிக்கப்பட்டது.

1890 ஆம் ஆண்டு கடலூர் முதுநகர் சுண்ணாம்புக்கார தெருவில் ஒரு எளிய வீட்டில் பிறந்தவர் அஞ்சலையம்மாள். திண்ணை பள்ளியில் 5 ஆம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். தனது 31ஆம் வயதில் 1921 ஆம் ஆண்டு விடுதலைப்போராட்டத்தில் இறங்கிய அஞ்சலையம்மாவைத் தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. இவர்பேச்சில் பெண்கள் வசீகரிக்கப்பட்டு தேச பக்தி கொண்டவர்களாகி விடுவார்கள். இவரது போராட்ட குணத்தால்தான் தென்னாற்காடு மாவட்ட வேலுநாச்சியார் என்று மக்கள் செல்லமாக அழைத்தனர். இவரது கணவர் முருகன் இவருக்கு உற்றதுணையாக போராட்டத்தின் நின்றார். போராட்டத்தில் ஈடுபட்டு நிறைமாத கர்பினியாக சிறைக்குச் சென்றவர்க்கு அழகிய ஆண் குழுந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜெயில் வீரன் என பெயரிட்டார். அவர் இப்போது ஜெயவீரனாக வாழ்ந்து வருகிறார். மற்றொரு மகனின் பெயர் காந்தி.

இப்போராட்டத்தில் ஓராண்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டவர் அதன் பின் தனது போராட்டத்தை இன்னும் தீவிரமாக்கினார். 1931 ஆம் ஆண்டு உப்புசத்தியாகிரகத்தில் கடலூர் சிறையில் ஆறு மாதங்கள் அடைக்கப்பட்டார். 1933 மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று மாதம் கடலூர் சிறைக்கு மீண்டும் சென்றார். 1940ம் ஆண்டு தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு முதலில் 6 மாதம் கடலூர் சிறையிலும் பின்பு 18 மாதம் வேலூர் சிறையிலும், பின்பு 8 மாதம் 2 வாரம் பெல்லாரி சிறையிலும் அஞ்சாது இருந்தார். மொத்தம் 4 வருடம் ஐந்து மாதம் அவரது வாழ்க்கை சிறையில் கழிந்தது. இவரும் பத்மாசனி அம்மாளும்தான் சத்தியாகிரகத்தில் முதலில் சிறைபுகுந்த பெண்கள் என்ற சிறப்புக்குறியவர்கள் ஆவார்கள்.

கள்ளுக்கடை இருக்கும் இடங்களில் எல்லாம் துண்டு பிரசுரம் கொடுத்து மறியல் செய்து கைதாவது இவரது இயல்பானது. சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மாநாட்டிற்கு  பெண்கள் படையுடன் ஊர்வலமாய் சென்று சாதனை படைத்தார். கடலூர் ஜில்லா போர்டு உறுப்பினராகவும், மூன்று முறை சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அஞ்சலையம்மாள். அவரது சட்டமன்ற உரைகளில் உழைப்பாளிகள் பிரச்சனைகளை பேசியது குறிப்பிடதக்கது. 1927 ஆம் ஆண்டு இவர் நீல் சிலையை அகற்றக்கோரி துவங்கிய போராட்டம் இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவையால் ராஜாஜி முதலவராக இருந்தத போது 1937 ஆம் ஆண்டு அகற்றப்பட்டு எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இன்று அவரது தலைமுறை மிகவும் சிரமத்தில் கடலூரில் வசித்து வருகின்றனர். 

இப்போதுகூட தமிழக சட்டமறத்தில் அவரை நினைவு கூர்ந்து காங்கிரஸ்காரர்கள் யாரும் பேசவில்லை கம்யூனிஸ்டுகளே அவரது நினைவை போற்றுகின்றனர். இத்தகைய போராளிகளை ஒவ்வொரு மாவட்டமாய் தேடத்துவங்கினார் ஆயிரமாயிரம் அஞ்சலையம்மாக்கள் எழுந்து வருவார்கள்.!
(தொடரும்) 

திங்கள், 11 நவம்பர், 2013

களமாடிய போராளிகளின் முடிவின் துவக்கம்

விடுதலைப் போரில் பெண்கள் - 10 



1857ல் நடந்த எழுச்சிகள் கடுமையாக அடக்கப்பட்டன. கொடூரமான ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் மக்கள் திரளாக இந்த போராட்டங்களில் பங்கேற்றனர். ஆங்கிலேயர்களுக்கு ஆச்சரியம் எதுவெனில் வரி விதித்து மக்களை சுரண்டும் மன்னர்களுக்கு ஆதரவாக மக்கள் களமாடமாட்டார்கள் என அவர்கள் நினைத்தது பொய்த்துப் போனதுதான். ஆனால் அதற்கான காரணங்கள் இருந்தன.

முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் இந்தியா வந்து பதிமூன்று ஆண்டுகள் சுற்றுப்பயணம் செய்த அரபு நாட்டு அறிஞர் அல்பர்னி கங்கை கண்ட சோழபுரம் ஏரியை பார்த்துவிட்டு ''இது போன்ற ஏரியை எம் மக்கள் நினைத்துப் பார்க்கவே முடியாது. பிறகு எப்படி கட்ட முடியும்!'' என அதிசயித்தார். இந்திய மன்னர்கள் அந்த அளவிற்கு நீர் பாசனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பல நீர்த் தேக்கங்களை கட்டி வைத்திருந்தனர். ஆனால், இருந்த நீர்த் தேக்கங்களைப் பராமரிக்கக் கூட எத்தகையதோர் ஏற்பாட்டையும் ஆங்கிலேயர்கள் செய்யவில்லை. 1854 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் நில வரி வசூலில் ஒரு சதவீதம் மட்டுமே நீர் பாசனத்திற்கு செலவிடப்பட்டது.

ஆங்கிலேயர்கள் தாங்கள் கைப்பற்றிய இடங்களில் இந்திய மக்களை கொடூரமாக சுரண்டினர். இவர்களது சுரண்டல் இந்திய மன்னர்களுக்கு சாதகமானது. உதாரணத்திற்கு, இந்திய விவசாயிகள் மிகவும் ஏழையாக்கப்பட்டு தூர தேசத்திற்கு பிழைப்புக்காக அலையும் நிலை உருவானது. 1815ஆம் ஆண்டு சென்னை ஆளுனர் இலங்கை காப்பித் தோட்டத்தில் வேலை செய்ய தொழிலாளர்களை அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை வேண்டியபோது, அந்த மாவட்டத்து மக்கள் மலிவான வாழ்க்கை வழங்கும் சொந்த மண்ணை விட்டு வெளியேற விருப்பமற்றவர்கள் எனவும், இலங்கை அரசு பிரத்தியேக ஊக்கத் திட்டங்கள் மூலமே அவர்களை தாய்நாட்டை விட்டு வெளியெற செய்ய முடியும் எனவும் கடிதம் எழுதினார். ஆனால், அடுத்த 20 ஆண்டுகளில் காலனி அரசின் நிலவரிக் கொள்கையால் ஏற்பட்ட இரு பஞ்சங்கள்  (1833-1843) மற்றும் ஆங்கில அரசின் தலையிடாக் கொள்கை எத்தகைய ஊக்க நடவடிக்கையும் இல்லாமலேயே மக்களை வெளிநாடுகளுக்கு குடியேறச் செய்தது. 1843 துவங்கி அடுத்த இரு பத்தாண்டுகளில் சென்னையிலிருந்து இலங்கைக்கு 14 லட்சத்து 46 ஆயிரத்து 407 நபர்கள் ஒப்பந்தக் கூலிகளாகச் சென்றிருந்தனர்.

இத்தகைய நெருக்கடிகளை கொடுத்து, மக்களைச் சுரண்டிதான் ஆங்கில ஏகாதிபத்தியம் காலனி ஆட்சியை நடத்தியது. எனவே தவிர்க்க முடியாமல் அவர்கள் மீதான கோபம் மக்களுக்கு இருந்தது. இதை மிகச் சரியாக பல மன்னர்கள் பயன்படுத்திக் கொண்டனர். முதல் விடுதலை எழுச்சி என்ற போர்க்களம் ஆங்கிலேயர்களால் நிர்மூலமாக்கப்பட்டதும் 1858 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பேரரசின் கீழ் நாட்டு நிர்வாகம் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களது சுரண்டல் மேலும் மேலும் அதிகமானது.  1858 ஆம் ஆண்டுக்கும் 1900 ஆண்டுக்கும் இடையில் கொடுமையான பஞ்சங்கள் இந்தியாவை ஆட்டிப் படைத்தன. இதில் மூன்று பஞ்சங்கள் மிகவும் கொடுமையானவை. 

1776-78ல் 36 லட்சம் மக்கள் செத்து மடிந்தனர். 1896-97ல் எழுந்த பஞ்சத்தில் 96 லட்சம் மக்கள் மாண்டனர். 1899-1900ல் எழுந்த பஞ்சத்தில் 60 லட்சம் மக்கள் மாண்டனர். இதிலிருந்து, இந்தியாவிலிருந்து செல்வங்களை கொள்ளையடித்து தங்களது நாட்டிற்கு அனுப்புவதை தவிர இந்திய மக்களைப் பற்றி கொஞ்சமும் ஆங்கிலேயர்கள் கவலைப்படவில்லை என்பது விளங்கும். பஞ்சம் என்பது உணவுப் பொருட்கள் இல்லாததால் வந்ததல்ல. ஆட்சியாளர்களின் கொடுமையான கொள்கையால் வந்தது என்பதுதான் உண்மை. 1776-78 பஞ்சம் குறித்து 1881ல் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் ஆய்வின்படி அப்பஞ்சத்தின்போது  5 லட்சம் டன் உணவு தானியங்கள் இருப்பில் இருந்தது. 

இந்திய நாட்டு வளங்களை மொத்தமாக கொள்ளையடித்தது மட்டுமல்ல, மலைச்சரிவில் காப்பி, தேயிலை, சணல் போன்றவற்றை சாகுபடி செய்யும் முறையை அறிமுகம் செய்து, மலைகளில், வனங்களில் காலம் காலமாக வாழ்ந்து வந்த அந்நிலங்களின் சொந்தக்காரர்களான ஆதிவாசிகளை அப்புறப்படுத்தினர். 1865ஆம் ஆண்டு வனப் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. தமது உரிமைகளுக்காகப் போராடிய கோல்கள், சந்தாலியர்கள், பில் இனத்தவர், முண்டா போன்ற ஆதிவாசி மக்களை 1878 குற்றப் பரம்பரை சட்டம் மூலம் முடக்கினர். பலர் அழித்தொழிக்கப்பட்டார்கள். 

ஆனால், இதற்கிடையில் இவர்கள் கொண்டு வந்த கல்வி முறை இந்தியாவில் ஒரு படித்த மேல்தட்டு வர்க்கத்தை உருவாக்கியது. ஆனால், இவர்கள் கொடுத்த கல்வி இந்தியர்கள் மத்தியில் நாட்டு நிலையை அசை போட, வறுமையை ஒப்பிட, மாற்றம் கோரவும் தூண்டியது. அதனால்தான் முதல் விடுதலை போராட்டம் முடிந்து பல ஆண்டுகள் கடந்தும் இந்திய விடுதலை போராட்ட கனல் அணையாமல் அடைகாக்கப்பட்டது.

புரட்சிக்குப் பிறகான பத்தாண்டுகளில் படித்தவர்களிடம், இந்திய தேசிய தலைவர்களிடம் பிரிட்டிஷ் ஆட்சி ஓரளவு மக்களுக்கு நல்லது செய்யும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அனுபவம் வேறு மாதிரியாக இருந்தது. வறுமை சுழன்றடித்தது. இந்தியாவின் வறுமை (1876) என்ற தனது நூலில் தாதாபாய் நௌரோஜி விளக்கி இருந்தார். 1885ல் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. துவக்கத்தில் மனு கொடுக்க மட்டுமே என்றாலும் அது மட்டுமே அவர்களால் கொடுக்க முடியவில்லை. வேறு வழி இல்லாமல் போராட்டங்களையும் துவக்க வேண்டி வந்தது.

"அவன் தனது சக்தியை இழந்துவிட்டான். அவனது ஜீவன் உறிஞ்சப்பட்டுவிட்டது. சொல்லப் போனால் பொருளாதார ரீதியில் அவன் காய்ந்த எலும்புகள் வைக்கப்பட்டுள்ள ஒரு பையை விடக் கீழானவன். அவன் அரை வயிறு சாப்பிடுகிறான். அரை குறையாக உடுத்தியுள்ளான். சிறிதளவு சோறு, நிறைய இலைகள், வேர்கள் இவைதான் அவனது அன்றாட உணவு, சுவையான உணவை அவன் தன் வாழ்நாளில் சாப்பிட்டதேயில்லை. அவன் ஆடைகள் கந்தல்கள். அவனது இருப்பிடம் அழுக்கான சிறு குடிசை. பருவநிலையின் கடுமைகளிலிருந்து அது அவனை காப்பாற்றாது" என சுலப் தைனிக் எனும் வங்கப் பத்திரிக்கை அன்றைய நிலையை படம் பிடித்துள்ளது.

1893ல் பாலகங்காதர திலகர் தேசிய கண்ணோட்டம் எவ்விதம் மாறியது என்பதை படம் பிடித்து காட்டுகிறார். பிரிட்டிஷாரின் ஒழுக்கம், ரயில், தந்தி, சாலைகள், பாலங்கள், பள்ளிகள் ஆகியவற்றைப் பார்த்து மக்கள் எப்படி திகைத்தார்கள் என்று எழுதியுள்ளார். "கலகங்கள் குறைந்தன. மக்கள் அமைதியாக வாழ்ந்தார்கள். கண் தெரியாத ஒருவர் கைக்கம்பில் தங்கத்தை கட்டிக்கொண்டு எப்படி பத்திரமாக காசியிலிருந்து ராமேஸ்வரம் செல்லமுடிகிறது என்றெல்லாம் மக்கள் பேசினார்கள். நாளாக ஆக தங்கம்தான் அரிதானது என்பதை மக்கள் உணர்ந்தார்கள்." 

இந்த நிலையில்தான் இந்தியா இருந்தது. முதல் விடுதலைப் போரில் வீரத்துடன் போராடிய ஆயிரக்கணக்கான பெண்கள் இனி வரும் காலத்திலும் களத்தில் இருக்கத்தான் போகிறார்கள். ஜான்சிராணி, வீரப்பெண் குயிலி, ஜல்காரிபாய், அவந்திபாய், தியாகத்தின் சின்னம் ஹசரத் பேகம் போன்ற போராளிகளைப் பார்த்த தேசம், இன்னும் ஆயிரமாயிரம் வீரத்திலகங்களை பார்க்கத்தான் போகிறது. போர்க்களம் மாறி உள்ளது. படையெடுப்பின் வடிவம் மாறும். ஆனாலும் இந்திய விடுதலைப் போரில் பெண்கள் பங்கெடுப்பு எப்போதும் குறைந்ததில்லை.

(என்ன நடந்தது பிறகு ...)

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

மறக்க முடியாத குயிலி என்ற படைத் தளபதி

விடுதலைப் போரில் பெண்கள் - 8


சூரைக்காற்று எழுந்ததால் சூழ்ந்த புயலும், அதனால் எழுந்த கடலின் அலையும் ஓங்கியடித்து ஓய்ந்த கடற்கரையாய் தேசம் கிடந்த 1857 ன் மாபெரும் எழுச்சியின் பாரம்பரியத்தை, அதன் வராற்றை, அதன் நினைவுகளை அசைப்போட ஆயிரமாயிரம் இருந்தது இந்திய மக்களுக்கு..

வேலுநாச்சியை நினைக்கும் எந்த ஒரு வரலாறு ஆசிரியனும் அவளது வெற்றிக்கு அட்சாரம் போட்ட, அல்லது வெள்ளையர்கள் வெல்ல முடியாதவர்கள் அல்ல, ஆங்கிலேயர்கள் அசைக்க முடியாதவர்கள் அல்ல என பாடம் நடத்திய குயிலியின் வரலாற்றை மறக்க முடியாது அல்லது மறைக்க முடியாது. வேலு நாச்சியாரின் போர்ப்படையில் வாள் படை, வளரிப் படை, பெண்கள் படை ஆகிய மூன்றும் பிரதானமானவை. வாள் படைக்கு தலைமை ஏற்றவர் சின்னமருது, வளரிப்படைக்குத் தலைமை ஏற்றவர் பெரிய மருது. பெண்கள் படைக்குத் தலைமையேற்றவர்தான் குயிலி. குயிலி தலைமையிலான பெண்கள் படைக்கு 'உடையாள் பெண்கள் படை' எனப் பெயர் சூட்டியிருந்தார் இராணி வேலு நாச்சியார். 

உடையாள் என்பவள் ஒரு மாடு மேய்க்கும் சிறுமி. அரியாகுறிச்சி அருகில் வேலுநாச்சியார் சென்று திரும்பிய போது எதிரிகள் உடையாளிடம் வேலுநாச்சியார் சென்ற பாதை குறித்துக் கேட்டபொழுது காட்டிக் கொடுக்க மறுத்தாள். ஆகவே, எதிரிகளால் தலை வேறு முண்டம் வேறாக உடையாள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாள். அவள் நினைவாக அப்படை பிரிவுக்கு அவள் பெயர் வந்தது. குயிலி வேலுநாச்சியிடம் வந்தது சுவராசியமான கதையாகும்.

வேலு நாச்சியாரின் போர்ப் பயிற்சிக்கான ஆசிரியர்களில் சிலம்பு வாத்தியார் வெற்றிவேலு மிக முக்கியமானவர். வேலுநாச்சியாரை சிறுவயது முதலே கண்காணித்து வருபவர். வேலுநாச்சியார் தனது கணவருடன் தேனிலவுக்காக மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்றிருந்த சமயத்தில்கூட பாதுகாவலராக அரண்மனையால் அனுப்பப்பட்டவர் வெற்றிவேலு. அதேபோல், தன் கணவரைப் பறிகொடுத்த பிறகு திண்டுக்கல் - விருப்பாச்சி பாளையத்தில் தங்கியிருந்து படை திரட்டிய கால கட்டத்தில் தன் மெய்க்காப்பாளராக வேலுநாச்சியார், சிலம்புவாத்தியார் வெற்றிவேலுவையே நியமித்திருந்தார். இவ்வளவு நம்பிக்கைக்குரியவராக விளங்கிய சிலம்புவாத்தியார் எதிரிகளால் விலை பேசப்பட்டார். வேலு நாச்சியாரின் திட்டங்களை, ஆதரவு சக்திகளை, அன்றாட நிகழ்வுகளை எதிரி களுக்குக் காட்டிக்கொடுத்து வந்தார்.

ஒரு நாள் குயிலியின் தாயார் உடல்நிலை சரியில்லாததால், குயிலி சிவகங்கைக்குச் செல்ல விருந்தார். இதை அறிந்த சிலம்பு வாத்தியார் அவளை அனுகி, பெண்ணே உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?'' என்று கேட்டார். குயிலிக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தும் தெரியாது எனக் கூறினார். எனவே ஒரு கடிதத்தைக் கொடுத்து சிவகங்கை அரண்மனைக்கு அருகிலிருக்கின்ற மல்லாரிராயன் என்பவரிடம் ஒப்படைக்கச் சொன்னார். அன்று இரவு ஓய்வாக இருக்கும் நேரத்தில் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் குயிலி படித்துப் பார்த்தார். வேலுநாச்சியாரின் அன்றாட அசைவுகளையும், அவரை வீழ்த்திட அடுத்து எதிரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் சிலம்பு வாத்தியார் அதில் குறிப்பிட்டிருந்தார்.

நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் ராணியின் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து அவரை குயிலி விரைந்துச் சென்று மகாராணியின் பாதுகாவலனான அவனை படுகொலை செய்தார். சம்பவத்தை அறிந்தா வேலுநாச்சியார் தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார். கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.

இச்சூழலில் சிவகங்கைச் சீமையில் ஆற்காடு நவாப்பும் ஆங்கிலேயரின் கைக்கூலிகளான மல்லாரிராயனும், அவன் தம்பி ரங்கராயனும் குயிலியை மையப்படுத்தி சாதிவெறிக்குத் தூபமிட்டுக்கொண்டிருந்தனர். அதாவது மேல்சாதியைச் சார்ந்த சிலம்பு வாத்தியார் வெற்றிவேலுவை கீழ்சாதிப் பெண்ணான குயிலி குத்திக் கொலை செய்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகமான சக்கிலியர் குலத்தில் பிறந்த குயிலிக்கு ஆதரவாக வேலுநாச்சியார் செயல்பட்டால் நம் சாதி கவுரவம் என்ன ஆவது? தாழ்த்தப்பட்டவர்கள் நம்மை எள்ளி நகையாட மாட்டார்களா? என குயிலியின் செயலுக்கு சாதிய நியாயம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இதைபற்றியெல்லாம் வேலுசாச்சியார் கவலைப்படவில்லை. குயிலியை பெண்கள் படைபிரிவுக்கு தலைவியாக்கி அழகுபார்த்தாள். நாட்கள் கடந்தன. பல ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ஆம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார்.

முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான் மல்லாரி ராயன். ஒரு மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். வேலு நாச்சியாரின் படைகள் வீறு நடைபோட்டன. அடுத்து திருப்புவனத்தில் மல்லாரிராயனின் தம்பி ரங்கராயன் பெரும்படையோடு எதிர்த்து நின்றான். மருது சகோதரர்கள் அவனைத் தவிடு பொடியாக்கினர். அடுத்து வெள்ளைக்கார அதிகாரிகள் மார்டின்ஸ், பிரைட்டன் மற்றும் நவாபின் படைத் தளபதி பூரிகான் தலைமையில் மானாமதுரையில் மாபெரும் படை எதிர்த்து நின்றது. வேலு நாச்சியாரின் பீரங்கிப்படை அதனை விரட்டியது.

வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது. தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தியிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தியிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்த போராளிகளுக்கு இது சோர்வை உருவாக்கினாலும், போற்களத்தில் பின்வாங்கும் முடிவை அவர்கள் யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. என்ன செய்வது? இதுமட்டுமே அவர்கள் சிந்தனையில் இருந்தது...
                                                                                                             (போர் தொடர்கிறது)



செவ்வாய், 26 மார்ச், 2013

வீழும் வரை போரிடு! விழும்போது விதையாய் விழு!


விடுதலை போரில் பெண்கள் - 5



வீழும் வரை போரிடு! விழும்போது விதையாய் விழு!

இந்தியாவை மெல்ல மெல்ல ஆக்ரமித்த ஆங்கிலேயர்கள் ஒன்று பணத்துடன் ஓய்வெடு அல்லது நாட்டைவிட்டு வெளியேறு என்றனர். இரண்டில் ஒன்றல்ல, ஒன்றில் ஒன்றை தேர்ந்தெடு, இதனால் ஜான்சி ராணி தனது வாழ்வில் முக்கியமான சவாலை சந்திக்கும் காலக்கட்டதில் இருந்தார். பெண்தானே எளிதில் அடக்கிவிடலாம் என்று நினைத்த ஆங்கிலேயர்களை தீரத்துடன் எதிர்த்து நின்ற வீரத்தை பார்த்து மிரண்டனர். நேரடி வாரிசு இல்லாத அரசுகளை தங்கள் ராஜியத்துடன் சேர்த்துக்கொள்வது என்ற ஆங்கிலேயரின் இந்த சதியை எதிர்த்து மற்ற மன்னர்களை அணிதிரட்ட துவங்கினார். மிகவும் தேசபக்தி மிகுந்த மகாராஜா மர்தன் சிங்குடன் தொடர்ந்து விவாதித்து வந்தார். உதாரணமாக அம்மன்னருக்கு அவர் எழுதிய கடிதம் கீழே உள்ளது.

"மகாராஜாதி ராஜ மகாராஜா மர்தன் சிங் பகதூர் ஜூ தேவின் நல்வாழ்வுக்கு மகாராணி லட்சுமிபாய் ஜூ தேவி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார். இங்கு அனைவரும் நலம். தாமோதர் ராவின் தத்து எடுத்தல் குறித்த நடவடிக்கைகளின் முன்னேறம் பற்றி நீங்கள் இங்கு வந்திருந்த சமயத்தில் நாம் பேசிக்கொண்டோம். ஆனால், இந்த தத்தெடுப்பை அங்கீகரிப்பதற்கான எண்ணம் எதுவும், பிரிட்டிஷாருக்கு இருப்பதாக தெரியவில்லை. அந்த அயல்நாட்டவர்கள் யாருக்குமே நண்பர்கள் அல்ல. தால்பேஹத் கோட்டையில் ஏற்கனவே இந்த விஷயம் பற்றி பேசினோம் அல்லவா? புந்தேலா வீரர்களின் தலைவரான உங்களை முழுமையான அளவுக்கு நம்புகிறோம். ஒவ்வொரு முறையும் உங்கள் அறிவுரையை நாடுகிறோம். தயைகூர்ந்து இந்தக் கடிதம் கண்டு மறு மடல் எழுத வேண்டுகிறோம்.(விக்ரம ஆண்டு 1914 முத்திரை)"  

இந்த நேரத்தில் 1857ஆம் ஆண்டு மே 10ம் தேதி இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமாகியது. போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசு மற்றும் பன்றி ஆகியவற்றின் கொழுப்புப் பூசப்பட்டதாகப் பரவிய செய்தியையடுத்தே இக்கிளர்ச்சி ஏற்பட்டுப் பரவத் தொடங்கியது. ஏற்கனவே புழுங்கிக்கொண்டிருந்த இந்திய சிபாய்களுக்கு இது ஒரு சரியான காரணமாய் இருந்தது. இச்சந்தர்ப்பத்தில், ஆங்கிலேயர்கள் இந்தியக் கிளர்ச்சி சம்பந்தமாகவே அதிகம் கவனம் செலுத்தினர். ஜான்சி பற்றி அதிகக் கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக, இராணி இலட்சுமிபாய் தனியாகவே ஜான்சியை ஆட்சி செய்தார். வடமத்திய இந்தியாவிலே ஜான்சி அமைதியான பிரதேசமாக இருந்தமையைக் காட்டுவதற்காகவும் ஜான்சி எந்த விதமான முற்றுகையை எதிர்கொள்வதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதனைத் தெளிவுபடுத்துவதற்காகவும் இராணி இலட்சுமிபாயால் ஹால்டி குங்குமப் பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டது.

1857ம் ஆண்டு ஜூன் மதம் 4ம் தேதிக்குள்  ஆங்காங்கு சிப்பாய்கள் கலவரம் செய்யும் செய்தி சாகர் மற்றும் லலித்பூரில் இருந்த சிப்பாய்களுக்கு எட்டியது. அங்கிருந்த ஆங்கிலேயர்களை கொன்று மர்தன் சிங்கை தங்களது தளபதியாக ஏற்றுகொண்டனர்.  இச்சமயம் மகாராஜ ராணி லட்சுமி பாய்க்கு நீண்ட மடல் எழுதியிருந்தார் அதற்கு பதில் அளிக்கும் வகையில் கீழ்கண்ட கடிதத்தை லட்சுமிபாய் எழுதினார்.

"மகாராஜாதி ராஜ மகாராஜா மர்தன் சிங் பகதூர் ஜூ தேவின் நல்வாழ்வுக்கு மகாராணி லட்சுமிபாய் ஜூ தேவி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார். நாங்களனைவரும் நலம், திவான் கௌஸ் கொண்டுவந்த கடிதம்கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தோம். ஷாஹ்கட் மன்னர், மற்றும் தாத்யா தொபே முன்னிலையில் நம்மிடையே நடந்த ஆலோசனைக் குழுவில் நமது நாட்டிலே சொந்த ஆட்சி நிலவவேண்டும் என்று முடிவு செய்தோம். இது நம்முடைய சொந்த நாடு. நாம் வேண்டிய அளவு பீரங்கிகளும், குண்டுகளும் தயாரித்துவிட்டோம். இது விஷயம் ரகசியமாகவே இருக்கட்டும். ஏனென்றால் டீகம்கர் ராணி லடய் சர்காரும் திவான் நந்தேகானும் அந்நிய நாட்டவர் பால் நாட்டம் கொள்கின்றனர். ஆகவே இவ் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். கடிதம் பெற்று விவரம் தெரிவிக்கவும். (ஐப்பசி, விக்கிரம ஆண்டு 1914 முத்திரை)

இதே நேரம் ஜான்சிராணி இலட்சுமிபாய் ஆங்கிலேயர்களை எதிர்க்கக்கூடும் என்ற அச்சம் ஆங்கிலேயர்களிடம் இருக்கவே செய்தது. இதனால், ஆங்கிலேயர்கள் 1857ஆம் ஆண்டு சூன் 8ம் தேதி ஜோக்கன் பாக்கில்  கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் ஜான்சிராணி இலட்சுமிபாய்க்கும் பங்கு உள்ளதாகக் கூறினர். பொதுமக்களும் விவசாயிகளும் ஜான்சிராணி இலட்சுமிபாய் மீது வைத்திருந்த மதிப்பைச் சீர்குலைக்கவே இவ்வாறு கூறினர்.

இதனையே காரணமாக வைத்து, 1858ஆம் ஆண்டு மார்ச்சு 23ம் தேதி ஹீ ரோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை ஒன்று ஜான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஜான்சியின் படைகளுக்கு உதவி செய்வதற்காகத் தாந்தியா தோபேயின் தலைமையில் 20,000 பேரைக் கொண்ட படை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அப்படை நவீன தொழில்நுட்பம் நிறைந்த பிருமாண்டமான ஆங்கிலேய எதிர்க்கமுடியவில்லை. இப்படை மார்ச்சு 31ம் தேதி ஆங்கிலேயர்களின் படையுடன் இணைந்த காரணத்தினால் தாந்தியா தோபேயினால் ஜான்சி ராணிக்கு உதவ முடியாமல் போனது. 

ஆனாலும் சான்சி இராணி ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்துத் தமது படைகளுடன் இணைந்து கடுமையாகப் போர் புரிந்தார். தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த ஜான்சிராணி இலட்சுமிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் போர் புரிந்தார். எனினும் மூன்று நாட்களின் பின்னர், ஆங்கிலேயர்களால் அத்துமீறி நுழைந்து நகரத்தைக் கைப்பற்ற முடிந்தது. கடுங்கோபத்திலிருந்த ஆங்கிலேயர்கள், அரண்மனையைச் சூறையாடிப் பொருட்களைக் கொள்ளையடித்தனர்.

ஜான்சி இராணி 1858ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி இரவு நேரத்திலே தனது மகனுடன் மதிலிலிருந்து பாய்ந்து தப்பித்தார். அதிகம் பெண்களைக் கொண்ட பாதுகாவலர் படையணியின் பாதுகாப்புடன் ஜான்சிராணி நகரத்தை விட்டு நீங்கினார். அவர் கல்பியிலுள்ள ஏனைய புரட்சிப் படைகளுடன் இணைவதாகவே திட்டம் போட்டிருந்தார். அவர் இங்கிருந்து தபிக்க அடிப்படையாக ஒரு வீராங்கனை இருந்தாள். அவள் ஜல்காரிபாய். தான் ஜான்சிராணி போல் முன்னின்று போர் புரிவதாகவும் அச்சந்தர்ப்பத்தில் ராணி லட்சுமிபாய் கோட்டையை விட்டுத் தப்பிச் செல்ல முடியும் என்று ஒரு வேண்டுகோளை ராணி லட்சுமிபாயிடம் முன்வைத்தார். ஜல்காரிபாயும் பெண் படையைச் சேர்ந்த சிலரும் ராணி லட்சுமிபாயை கடுமையான முயற்சிக்கு பிறகு தப்பிச் செல்ல வைத்தார்கள். ராணி கோட்டையிலிருந்து தப்பித்துக் கல்பிக்கு விரைந்து சென்றார். அதே சமயத்தில், ஜல்காரிபாய் ராணி லட்சுமிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு, படைக்குத் தலைமை தாங்கியபடி ஹீ ரோசின் முகாமுக்குச் சென்றார். ஜல்காரிபாய் மிகுந்த பராக்கிரமத்துடன் ஆங்கிலேயப் படையுடன் சண்டையிட்டார். ஆனால், கடைசியில் அவர்களிடம் பிடிபட்டார். 

இந்த நேரத்தில் உயிர் பிழைக்க தப்பிக்கவில்லை மீண்டும் பெரும் போருக்கான தயாரிப்புக்காகவே அவர் சென்றார் என்பதை, அவர் மன்னர் மர்தன் சிங்கிற்கு எழுதிய கடிதம் அவரது கல்பி திட்டம் குறித்து கூறுகிறது. "மகாராஜாதி ராஜ மகாராஜா மர்தன் சிங் பகதூர் ஜூ தேவின் நல்வாழ்வுக்கு மகாராணி லட்சுமிபாய் ஜூ தேவி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார். ஷாஹ்கட் மன்னர் கடிதம் பற்றி அறிந்தோம். நீங்களும் அதுபற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் உடனடியாக சாகரை நோக்கி படையெடுத்து வரவேண்டும். வழியிலே நிற்கும் வெள்ளையர்கள் படையின் இரண்டு கம்பெனிகளை வென்று ஷாஹ்கட் மன்னருடன் சேர்ந்து முன்னேறவும். என்னுடன் தாத்யா தொபே மற்றும் நானா சாகாப் போருக்கான ஆயத்தில் முனைந்துள்ளார்கள். நீங்கள் நேராக நௌட்காட்டிலிருந்து ஹ்யூ ரோஸைத் துரத்திவிட்டு கால்பி பக்கம் விரைந்து வரவும். குவாலியரில் ஆங்கிலேயர்கள் மீது கூட்டாக தாக்குதல் நடத்துவதற்காக நாம் அனைவரும் கால்பியில் சந்திப்போம் இதில் சற்றேனும் சுணக்கம் கூடாது இக்கடிதத்திற்கு உடனடியாக மறுமடல் எழுதவும்" என அந்த கடிதம் திட்டம் வகுத்துக் கொடுத்தது. 

ஆனால் வரலாறு வேரொரு திருப்பத்தை கொடுத்தது. மன்னர் மர்தன் சிங் வழியில் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் முன்னேருவதையும், பலர் கூட்டம் கூட்டமாய் உயிரிழபததியும் அறிந்து அவநம்பிக்கையடைந்து ஜான்சிராணிக்கு உதவுவதில் விலகிக்கொண்டார். ஆனால் ஜான்சிராணி லட்சுமிபாய், தாமோதர் ராவுடனும் தமது படைகளுடனும் கல்பிக்குச் சென்று தாந்தியா தோபேயின் படையுடனும் ராவ் சாஹிப்  படையுடனும் ஏனைய புரட்சிப் படைகளுடனும் இணைந்து கொண்டார். 

இவர்கள் குவாலியருக்குச் சென்று குவாலியரின் மகாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படையைத் தோற்கடித்து, குவாலியரின் கோட்டையன்றைக் கைப்பற்றிக் கொண்டார்கள். வெள்ளையரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. அங்கு கடுமையான தாக்குதலும் எதிர்தாக்குதலும் நடந்தது. கொள்ளையடிப்பதையும் இந்தியாவின் வளங்களை சுரண்டும் நோக்கம் மட்டுமே கொண்ட ஆங்கிலேயப்படை கடுமையான தாக்குதலை தொடுத்தது.
ஒப்பிட்டு நோக்கும் போது ஆங்கிலேயப் படையின் ஆயுதங்களும், அளவும் தங்கள் தேசம் காக்க போராடிய வீரர்களிடம் இருந்ததை விட மிகவும் அதிகம். இருப்பினும் அவர்கள் கடுமியாக போர் புரிந்தனர். ஆங்கிலேயர்கள் கடந்து வந்த பாதைகள் முழுவதும் கொடூரமான கொலைகளை செய்து வந்தனர். அவர்கள் வந்த பாதைகளில் உள்ள மரங்களில் எவ்வுளவு கிளைகள் இருந்தனவோ அவிவுளவு கிளைகளிலும் இந்திய சிப்பாய்களின் உடல்கள் உயிரற்று தொங்கியது. இந்தியா முழுமைக்கும் அவர்கள் ஒரு அச்சத்தை உருவாக்க திட்டமிட்டு செயலாற்றினர்.

1858ஆம் ஆண்டு ஜூன் 17ம் தேதி, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் வெள்ளையரை எதிர்த்துச் ஜான்சிராணி வீரத்துடன் போரிட்டார். கொஞ்சமும் சலைக்காமல் போரிட்ட இந்த வீராங்கனை இந்த வீரமிக்க போரின்போது படுகாயமடைந்து விழுந்தார். அவரது உயிர் அவரிடமிருந்து மெல்ல மெல்ல பிரிந்துக்கொண்டிருந்தது. அத்தினத்திலேயே வீரமரணம் அடைந்தார். எப்போதும் அந்நியருக்கு அடிபணியாத, அவர்கள் மிரட்டல்களுக்கு செவிமடுக்காத, மலையளவு பணம் தருகிறோம் இன்பமாய் ஓவ்வெடுங்கள் என்ற ஆசை வார்த்தைக்கு இணங்காத, வீழும் வரை போரிடு! விழும்போது விதையாய் விழு! என்ற வார்த்தைகளை உயர்த்தி பிடித்த அந்த மகத்தான வீரம் தனது சுவாசத்தை நிறுத்திக்கொண்டது. அன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு பின்னர் குவாலியரைக் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.

ஆங்கிலேயர்களின் படையை வழி நடத்திய ஹீ ரோஸ் "அனைத்துப் புரட்சித் தலைவர்களிலும் மிகவும் ஆபத்தானவர் என்றும் வீரத்துக்காகவும் விவேகத்துக்காகவும் விடாமுயற்சிக்காகவும் குறிப்பிடத்தக்கவர்" என்றும் ஜான்சிராணியைப் புகழ்ந்தான். இவரது வீரதீரச் செயல்களும் ஆங்கிலேயரை எதிர்த்து இவர் புரிந்த போரும் ல் இன்றும் நாட்டுப்புறப் பாடல்களாகவும் நாடகங்களாகவும் பலரால் போற்றப்படுகின்றன. அமரத்துவம் பெற்ற ஒரு வீராங்கனையாக என்றென்றும் இவர் பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது.

                                                                                  (இன்னும் பலர் எழுந்து வருவார்கள்..)

வியாழன், 27 டிசம்பர், 2012

மங்காத வீரம் கொண்ட மணிகர்னிகா


விடுதலைப்போரில் பெண்கள் - 4

மங்காத வீரம் கொண்ட மணிகர்னிகா



நமது துணைக்கண்டத்தில் நிகழ்ந்த ஆங்கிலேய எதிர்ப்புகளிலேயே சிப்பாய்க் கலகமே அளவிலும் பங்கேற்பிலும் பெரியதாகையால் அதுவே இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த போராட்டம் ஒருங்கினைக்கப்பட்ட விதமும் திரட்டுதலும் அப்படிபட்டது. ஆயினும் நாடெங்கிலும் அதற்கு முன்பே பல இடங்களிலும் பல்வேறு மன்னர்களிடமிருந்தும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு தொடர்ச்சியான எதிர்ப்புகள்  இருந்துவந்துள்ளன. 1857 இல் வெடித்த சிப்பாய்க் கலகத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பூலித்தேவன் ஆங்கிலேயருக்கு எதிராக தீரத்துடன் போரிட்டு அதில் வெற்றி பெற்றார். அதன் பின் அவர் வீழ்ந்தாலும் கூட வெள்ளையைகள் வெள்ளமுடியாதவர்கள் அல்ல என்பதை அவர் நிருபனம் செய்தார். 

அதிலிருந்து தொடங்கி 1772ஆம் ஆண்டு முத்துவடுகநாதன், வீரமங்கை வேலு நாச்சியார் தலைமையிலும், 1795ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி தலைமையிலும், 1799ஆம் ஆண்டு வீரப்பான்டிய கட்டபொம்மன் தலைமையிலும், 1801ஆம் ஆண்டு மருது பாண்டியர் தலைமையிலும் ஆங்கிலேய கடுமையாக எதிர்ப்பு எதிரொலித்தது. பின்னர் 1806ஆம் ஆண்டு திப்புவின் மகன்கள் சிறப்பட்டிருந்த வேலூர் சிறையில் சிப்பாய்க் கலகமாகவும் வெடித்து. இதுவே முதன் முதலில் ஆங்கிலேயருக்கு எதிராக ஏற்பட்ட முதல் கிளர்ச்சியாகும். அதன் தொடர்ச்சியாகவே 1857ஆம் ஆண்டு வட இந்தியச் சிப்பாய்க் கலகமாகம் மூண்டெழுந்தது. பின்னர் அது நாடு தழுவிய போராட்டமாக உருப்பெற்றது.

இந்தியாவில் வர்த்தக நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட பிரித்தானியரின் தொழில் மற்றும் தொழிற்சாலை பகுதிகளை நிருவகிக்க பிரித்தானிய கிழக்கு இந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஆனாலும் இதன் எல்லை மீறிய லாப, ஆதிக்க வெறி நடவடிக்கைகளாலும் இந்திய மன்னர்களிடையே ஓயாமல் நடந்த தகராறுகளாலும், ஒற்றுமையின்மையாலும் 1757 ல் பிளாசி போரில் பெற்ற வெற்றியால் கிழக்கு இந்தியாவில் வங்காளம் வரை அதன் ஆட்சி பரவலாக்கப்பட்டது. அவர்கள் வெற்றிக்கு இந்திய குறுநில அல்லது பெரிய நிலப்பரப்பை ஆண்ட மன்னர்களும் முக்கிய காரணமாய் இருந்தார்கள் என்பது கசப்பான உண்மைதான். பக்சர் போரில் முகலாய பேரரசர் ஷா அலாம்  தோற்றபின் 1764ல் பீகாரும் கிழக்கிந்திய கம்பெனியால் எளிதாக கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக வங்கம், பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களில் வரி வசூல் செய்யும் உரிமை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம் விரைவில் மும்பை, சென்னை போன்ற பகுதிகளில் தன்னை விரிவாக்கம் செய்தது. அதாவது இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை தன்வசம் கொண்டது.

ஆங்கில-மைசூர்ப் போர்கள் (1766-1799), ஆங்கில-மராட்டியப் போர்கள் (1772-1818), கர்நாடகப் போர்கள் ஆகியன பரந்த நர்மதா ஆற்றின் தெற்குப் பகுதியைத் ஆங்கிலேயர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வழிவகுத்தது. அதுவரை இச்செயல்களுக்கு பேரளவில் பெரிய எதிர்ப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

எதிர்ப்பை விதைக்கும் பொறிகள் ஆங்காங்கு வித்தாக கனன்றுக்கொண்டிருந்தன. அப்படி ஒரு நெருப்பு பொறி பிறந்தது. அது ஆஸ்திரேலியாவில் மெல்போர்ண் நகரம் அமைக்கப்பட்ட, சார்லஸ் டார்வின் கடல் வழியே காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று தனது உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட, அதே 1835 ஆம் ஆண்டில் பிறந்தது. அவ்வாண்டு நவம்பர் 19 இல் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்த வீரத்தின் பெயர் மணிகர்னிகா.

இவர் மனு எனவும் அழைக்கப்பட்டார். இவருக்கு நான்கு வயதாகும்போது தாயார் பகீரதிபாய் இறந்து போனார். தாயை இழந்த குழந்தை அந்த சோகத்தின் சுவடுகூட தெரியாமல் வளர்ப்பதில் மிகவும் சிரமம் இருந்ததுதான். ஆனால் அவரது தந்தை அந்த சுமையை தன் தோலில் சுமந்து பாசத்துடன் வளர்த்தார். இவர் சிறு வயதிலேயே குதிரையேற்றமும் வாள் வீச்சும் கற்றுக் கொண்டார். மணிகர்ணிகாவின் தந்தை மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா மன்னரின் நீதிமன்றத்தில் வேலை செய்தார். பித்தூரின் பேஷ்வா மணிகர்ணிகாவைத் தனது சொந்த மகள் போல வளர்த்தார். வளர்த்தது மட்டுமல்ல அவளது திருமணத்தையும் அப்படியே செய்துவைத்தார்.

ஜான்சியை ஆண்ட ராஜா கங்காதர ராவ் நெவல்கர் என்பவருக்கு 1842இல் மணிகர்ணிகாவைத் திருமணம் செய்து வைத்தார் அவரது தந்தை. அதிலிருந்து, மணிகர்ணிகா இராணி இலட்சுமிபாய் என அழைக்கப்பட்டதுடன் ஜான்சியின் ராணியாகவும் பதவியேற்றார். 

1851இல் அவர்களுக்குப் பிறந்த மகனான தாமோதர் ராவ் உடல்நல குறைவால் நான்கு மாதங்களில் இறந்து போனான். தாமோதர் ராவின் இறப்பின் பின் சோகம் அவர்களை வாட்டியது, நாடு, நகரம், அதிகாரம், போதுமான அளவு செல்வம் எல்லாம் இருந்தும் சொல்ல முடியாத வெறுமை அவர்களை வாட்டியது. எனவே ராஜா கங்காதர ராவ் நெவல்கரும் இராணி இலட்சுமிபாயும் கலந்து பேசி  ஆனந்த் ராவைத் என்கிற குழந்தையை தத்தெடுத்தனர். பின்னர், அக்குழந்தைக்குத் தங்களுடைய இறந்த குழந்தையான தாமோதர் ராவ் எனற பெயரை சூட்டினர். இருப்பினும் தனது மகனின் இழப்பின் துயரரம் ராஜாவை துரத்திக்கொண்டே இருந்தது. அந்த கொடுந் துயரத்திலிருந்து மீளாத ராஜா கங்காதரராவ் நவம்பர் 21, 1853இல் உடல் நலமிழந்து குறைந்து இறந்தார். அது பேரிடியாக ஜான்சிரானியை தாக்கினாலும் அவரது மனஉறுதி மட்டும் குறையவே இல்லை. அவர் மன உறுதியை சோதிக்கும் பல நிகழ்வுகள் இனிதான் நடக்க இருந்தது.

அதே காலத்தில்தான் இந்திய நாடு முழுவது பல மாற்றங்கள் நடந்துவந்தது. அந்நிய ஆட்சியின் மீது கடுமையான கோபம் ஆங்காங்கே மூன்டுக்கொண்டிருந்தது. காரணம் அவர்கள் கொண்டுவந்த கடுமையான சட்டங்கள்தான். ஒருபக்கம் அவர்களது படையில் இந்திய நாட்டு சிப்பாய்களை அதிக அளவு சேர்த்துக்கொண்டே வந்தார்கள். அதிலும் குறிப்பாக இந்திய கிராமங்களில் சாதியின் பெயரால் ஒடுக்கிவைக்கப்பட்ட சமூகத்தினர் சேர்க்கப்பட்டனர். இந்த ராணுவ வாய்ப்பை பெருமையாகவும் ஒருவித விடுதலையாகவும் கருதினர். அது ஒருவிதத்தில் உண்மையும் கூட இதுகுறித்து பின்னர் பார்க்கலாம். ஆங்கிலேயரின் படை விஸ்தரிப்பு அவர்களது ஆட்சியை இங்கு முழுமையாக நிறுவிட உதப்வியது. அதே நேரம் அவர்களுக்கான எதிர்ப்பும் இதனாலேயே அதிகரித்ததையும் மனதில் வைப்போம். இந்தியாவில் எழுந்த கிளச்சிகளை இந்தியர்களை வைத்தே அடக்குவது என்ற தந்திரம் எப்போதும் பலிக்காதுதனே!  

இந்த சம்பவங்களூடாக மன்னர் கங்காதர ராவ் மறைந்த பின், தங்களின் வளர்ப்பு மகன் தாமோதர் ராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினார் ஜான்சி ராணி. ஆனால், அப்போதைய ஆங்கியேல ஆளுனர் டல்லவுசி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் கொள்கையின்படி, தத்துப்பிள்ளையை ஆட்சியின் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வந்த ஆங்கிலேயர்கள் ஜான்சி நாட்டைத் தமது ஆட்சிக்குட்படுத்த முடிவெடுத்தனர். இப்படி பல இடங்களில் செய்தும் இருந்தனர். இது அவரகளது செல்வாக்கு விரவில் பல இடங்களுக்கு பரவ வழிவகை செய்தது. தங்களது அடகுமுறையை மிகவும் இயல்பாக செய்தனர். ஆங்கிலேயர்கள் 1854ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஜான்சிராணி லட்சுமிபாய்க்கு 60,000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து ஜான்சிக் கோட்டையை விட்டு வெளியேறச் சொன்னார்கள்.

ஒன்று பனத்துடன் ஓய்வெடு அல்லது நாட்டைவிட்டு வெளியேறு இதுதான் அவர்கள் கொடுத்த வாய்ப்பு. இரண்டில் ஒன்றல்ல, ஒன்றில் ஒன்றை தேர்ந்தெடு. ஜான்சி ராணி தனது வாழ்வில் முக்கியமான சவாலை சந்திக்கும் காலக்கட்டதில் இருந்தார். பெண்தானே எளிதில் அடக்கிவிடலாம் என்று நினைத்த ஆங்கிலேயர்களை தீரத்துடன் எதிர்த்து நிற்க எழ வேண்டிய கட்டாயத்தி இருந்தார்.

அப்போது ஆங்கிலேயர்கள் செய்த செயலே அவர்களுக்கு எதிராக எழுத்தது. இந்தியாவில் எழுந்த கிளச்சிகளை இந்தியர்களை வைத்தே அடக்குவது என்ற தந்திரம் எப்போதும் பலிக்காது என்பது மிக விரைவில்  நிருபணம் ஆனது. ஆம் இந்தியாவில் உள்ள இந்து மற்றும் இஸ்லாமிய சிப்பாய்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராய் திரளும் காலம் வந்தது. அது ஜான்சி ராணியின் ஆட்சிக்கும், பல மன்னரகளை ஒன்று திரட்டவும், மன்னகள் மூலமாக மக்கள் திரளை திரட்டவும் பயன்பட்டது. இனிதான் ஜான்சியின் போர்களம் துவங்கியது.  
(போராட்டம் தொடரும்)