மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


விடுதலை போரில் பெண்கள் - 5



வீழும் வரை போரிடு! விழும்போது விதையாய் விழு!

இந்தியாவை மெல்ல மெல்ல ஆக்ரமித்த ஆங்கிலேயர்கள் ஒன்று பணத்துடன் ஓய்வெடு அல்லது நாட்டைவிட்டு வெளியேறு என்றனர். இரண்டில் ஒன்றல்ல, ஒன்றில் ஒன்றை தேர்ந்தெடு, இதனால் ஜான்சி ராணி தனது வாழ்வில் முக்கியமான சவாலை சந்திக்கும் காலக்கட்டதில் இருந்தார். பெண்தானே எளிதில் அடக்கிவிடலாம் என்று நினைத்த ஆங்கிலேயர்களை தீரத்துடன் எதிர்த்து நின்ற வீரத்தை பார்த்து மிரண்டனர். நேரடி வாரிசு இல்லாத அரசுகளை தங்கள் ராஜியத்துடன் சேர்த்துக்கொள்வது என்ற ஆங்கிலேயரின் இந்த சதியை எதிர்த்து மற்ற மன்னர்களை அணிதிரட்ட துவங்கினார். மிகவும் தேசபக்தி மிகுந்த மகாராஜா மர்தன் சிங்குடன் தொடர்ந்து விவாதித்து வந்தார். உதாரணமாக அம்மன்னருக்கு அவர் எழுதிய கடிதம் கீழே உள்ளது.

"மகாராஜாதி ராஜ மகாராஜா மர்தன் சிங் பகதூர் ஜூ தேவின் நல்வாழ்வுக்கு மகாராணி லட்சுமிபாய் ஜூ தேவி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார். இங்கு அனைவரும் நலம். தாமோதர் ராவின் தத்து எடுத்தல் குறித்த நடவடிக்கைகளின் முன்னேறம் பற்றி நீங்கள் இங்கு வந்திருந்த சமயத்தில் நாம் பேசிக்கொண்டோம். ஆனால், இந்த தத்தெடுப்பை அங்கீகரிப்பதற்கான எண்ணம் எதுவும், பிரிட்டிஷாருக்கு இருப்பதாக தெரியவில்லை. அந்த அயல்நாட்டவர்கள் யாருக்குமே நண்பர்கள் அல்ல. தால்பேஹத் கோட்டையில் ஏற்கனவே இந்த விஷயம் பற்றி பேசினோம் அல்லவா? புந்தேலா வீரர்களின் தலைவரான உங்களை முழுமையான அளவுக்கு நம்புகிறோம். ஒவ்வொரு முறையும் உங்கள் அறிவுரையை நாடுகிறோம். தயைகூர்ந்து இந்தக் கடிதம் கண்டு மறு மடல் எழுத வேண்டுகிறோம்.(விக்ரம ஆண்டு 1914 முத்திரை)"  

இந்த நேரத்தில் 1857ஆம் ஆண்டு மே 10ம் தேதி இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமாகியது. போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசு மற்றும் பன்றி ஆகியவற்றின் கொழுப்புப் பூசப்பட்டதாகப் பரவிய செய்தியையடுத்தே இக்கிளர்ச்சி ஏற்பட்டுப் பரவத் தொடங்கியது. ஏற்கனவே புழுங்கிக்கொண்டிருந்த இந்திய சிபாய்களுக்கு இது ஒரு சரியான காரணமாய் இருந்தது. இச்சந்தர்ப்பத்தில், ஆங்கிலேயர்கள் இந்தியக் கிளர்ச்சி சம்பந்தமாகவே அதிகம் கவனம் செலுத்தினர். ஜான்சி பற்றி அதிகக் கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக, இராணி இலட்சுமிபாய் தனியாகவே ஜான்சியை ஆட்சி செய்தார். வடமத்திய இந்தியாவிலே ஜான்சி அமைதியான பிரதேசமாக இருந்தமையைக் காட்டுவதற்காகவும் ஜான்சி எந்த விதமான முற்றுகையை எதிர்கொள்வதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதனைத் தெளிவுபடுத்துவதற்காகவும் இராணி இலட்சுமிபாயால் ஹால்டி குங்குமப் பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டது.

1857ம் ஆண்டு ஜூன் மதம் 4ம் தேதிக்குள்  ஆங்காங்கு சிப்பாய்கள் கலவரம் செய்யும் செய்தி சாகர் மற்றும் லலித்பூரில் இருந்த சிப்பாய்களுக்கு எட்டியது. அங்கிருந்த ஆங்கிலேயர்களை கொன்று மர்தன் சிங்கை தங்களது தளபதியாக ஏற்றுகொண்டனர்.  இச்சமயம் மகாராஜ ராணி லட்சுமி பாய்க்கு நீண்ட மடல் எழுதியிருந்தார் அதற்கு பதில் அளிக்கும் வகையில் கீழ்கண்ட கடிதத்தை லட்சுமிபாய் எழுதினார்.

"மகாராஜாதி ராஜ மகாராஜா மர்தன் சிங் பகதூர் ஜூ தேவின் நல்வாழ்வுக்கு மகாராணி லட்சுமிபாய் ஜூ தேவி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார். நாங்களனைவரும் நலம், திவான் கௌஸ் கொண்டுவந்த கடிதம்கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தோம். ஷாஹ்கட் மன்னர், மற்றும் தாத்யா தொபே முன்னிலையில் நம்மிடையே நடந்த ஆலோசனைக் குழுவில் நமது நாட்டிலே சொந்த ஆட்சி நிலவவேண்டும் என்று முடிவு செய்தோம். இது நம்முடைய சொந்த நாடு. நாம் வேண்டிய அளவு பீரங்கிகளும், குண்டுகளும் தயாரித்துவிட்டோம். இது விஷயம் ரகசியமாகவே இருக்கட்டும். ஏனென்றால் டீகம்கர் ராணி லடய் சர்காரும் திவான் நந்தேகானும் அந்நிய நாட்டவர் பால் நாட்டம் கொள்கின்றனர். ஆகவே இவ் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். கடிதம் பெற்று விவரம் தெரிவிக்கவும். (ஐப்பசி, விக்கிரம ஆண்டு 1914 முத்திரை)

இதே நேரம் ஜான்சிராணி இலட்சுமிபாய் ஆங்கிலேயர்களை எதிர்க்கக்கூடும் என்ற அச்சம் ஆங்கிலேயர்களிடம் இருக்கவே செய்தது. இதனால், ஆங்கிலேயர்கள் 1857ஆம் ஆண்டு சூன் 8ம் தேதி ஜோக்கன் பாக்கில்  கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் ஜான்சிராணி இலட்சுமிபாய்க்கும் பங்கு உள்ளதாகக் கூறினர். பொதுமக்களும் விவசாயிகளும் ஜான்சிராணி இலட்சுமிபாய் மீது வைத்திருந்த மதிப்பைச் சீர்குலைக்கவே இவ்வாறு கூறினர்.

இதனையே காரணமாக வைத்து, 1858ஆம் ஆண்டு மார்ச்சு 23ம் தேதி ஹீ ரோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை ஒன்று ஜான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஜான்சியின் படைகளுக்கு உதவி செய்வதற்காகத் தாந்தியா தோபேயின் தலைமையில் 20,000 பேரைக் கொண்ட படை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அப்படை நவீன தொழில்நுட்பம் நிறைந்த பிருமாண்டமான ஆங்கிலேய எதிர்க்கமுடியவில்லை. இப்படை மார்ச்சு 31ம் தேதி ஆங்கிலேயர்களின் படையுடன் இணைந்த காரணத்தினால் தாந்தியா தோபேயினால் ஜான்சி ராணிக்கு உதவ முடியாமல் போனது. 

ஆனாலும் சான்சி இராணி ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்துத் தமது படைகளுடன் இணைந்து கடுமையாகப் போர் புரிந்தார். தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த ஜான்சிராணி இலட்சுமிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் போர் புரிந்தார். எனினும் மூன்று நாட்களின் பின்னர், ஆங்கிலேயர்களால் அத்துமீறி நுழைந்து நகரத்தைக் கைப்பற்ற முடிந்தது. கடுங்கோபத்திலிருந்த ஆங்கிலேயர்கள், அரண்மனையைச் சூறையாடிப் பொருட்களைக் கொள்ளையடித்தனர்.

ஜான்சி இராணி 1858ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி இரவு நேரத்திலே தனது மகனுடன் மதிலிலிருந்து பாய்ந்து தப்பித்தார். அதிகம் பெண்களைக் கொண்ட பாதுகாவலர் படையணியின் பாதுகாப்புடன் ஜான்சிராணி நகரத்தை விட்டு நீங்கினார். அவர் கல்பியிலுள்ள ஏனைய புரட்சிப் படைகளுடன் இணைவதாகவே திட்டம் போட்டிருந்தார். அவர் இங்கிருந்து தபிக்க அடிப்படையாக ஒரு வீராங்கனை இருந்தாள். அவள் ஜல்காரிபாய். தான் ஜான்சிராணி போல் முன்னின்று போர் புரிவதாகவும் அச்சந்தர்ப்பத்தில் ராணி லட்சுமிபாய் கோட்டையை விட்டுத் தப்பிச் செல்ல முடியும் என்று ஒரு வேண்டுகோளை ராணி லட்சுமிபாயிடம் முன்வைத்தார். ஜல்காரிபாயும் பெண் படையைச் சேர்ந்த சிலரும் ராணி லட்சுமிபாயை கடுமையான முயற்சிக்கு பிறகு தப்பிச் செல்ல வைத்தார்கள். ராணி கோட்டையிலிருந்து தப்பித்துக் கல்பிக்கு விரைந்து சென்றார். அதே சமயத்தில், ஜல்காரிபாய் ராணி லட்சுமிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு, படைக்குத் தலைமை தாங்கியபடி ஹீ ரோசின் முகாமுக்குச் சென்றார். ஜல்காரிபாய் மிகுந்த பராக்கிரமத்துடன் ஆங்கிலேயப் படையுடன் சண்டையிட்டார். ஆனால், கடைசியில் அவர்களிடம் பிடிபட்டார். 

இந்த நேரத்தில் உயிர் பிழைக்க தப்பிக்கவில்லை மீண்டும் பெரும் போருக்கான தயாரிப்புக்காகவே அவர் சென்றார் என்பதை, அவர் மன்னர் மர்தன் சிங்கிற்கு எழுதிய கடிதம் அவரது கல்பி திட்டம் குறித்து கூறுகிறது. "மகாராஜாதி ராஜ மகாராஜா மர்தன் சிங் பகதூர் ஜூ தேவின் நல்வாழ்வுக்கு மகாராணி லட்சுமிபாய் ஜூ தேவி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார். ஷாஹ்கட் மன்னர் கடிதம் பற்றி அறிந்தோம். நீங்களும் அதுபற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் உடனடியாக சாகரை நோக்கி படையெடுத்து வரவேண்டும். வழியிலே நிற்கும் வெள்ளையர்கள் படையின் இரண்டு கம்பெனிகளை வென்று ஷாஹ்கட் மன்னருடன் சேர்ந்து முன்னேறவும். என்னுடன் தாத்யா தொபே மற்றும் நானா சாகாப் போருக்கான ஆயத்தில் முனைந்துள்ளார்கள். நீங்கள் நேராக நௌட்காட்டிலிருந்து ஹ்யூ ரோஸைத் துரத்திவிட்டு கால்பி பக்கம் விரைந்து வரவும். குவாலியரில் ஆங்கிலேயர்கள் மீது கூட்டாக தாக்குதல் நடத்துவதற்காக நாம் அனைவரும் கால்பியில் சந்திப்போம் இதில் சற்றேனும் சுணக்கம் கூடாது இக்கடிதத்திற்கு உடனடியாக மறுமடல் எழுதவும்" என அந்த கடிதம் திட்டம் வகுத்துக் கொடுத்தது. 

ஆனால் வரலாறு வேரொரு திருப்பத்தை கொடுத்தது. மன்னர் மர்தன் சிங் வழியில் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் முன்னேருவதையும், பலர் கூட்டம் கூட்டமாய் உயிரிழபததியும் அறிந்து அவநம்பிக்கையடைந்து ஜான்சிராணிக்கு உதவுவதில் விலகிக்கொண்டார். ஆனால் ஜான்சிராணி லட்சுமிபாய், தாமோதர் ராவுடனும் தமது படைகளுடனும் கல்பிக்குச் சென்று தாந்தியா தோபேயின் படையுடனும் ராவ் சாஹிப்  படையுடனும் ஏனைய புரட்சிப் படைகளுடனும் இணைந்து கொண்டார். 

இவர்கள் குவாலியருக்குச் சென்று குவாலியரின் மகாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படையைத் தோற்கடித்து, குவாலியரின் கோட்டையன்றைக் கைப்பற்றிக் கொண்டார்கள். வெள்ளையரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. அங்கு கடுமையான தாக்குதலும் எதிர்தாக்குதலும் நடந்தது. கொள்ளையடிப்பதையும் இந்தியாவின் வளங்களை சுரண்டும் நோக்கம் மட்டுமே கொண்ட ஆங்கிலேயப்படை கடுமையான தாக்குதலை தொடுத்தது.
ஒப்பிட்டு நோக்கும் போது ஆங்கிலேயப் படையின் ஆயுதங்களும், அளவும் தங்கள் தேசம் காக்க போராடிய வீரர்களிடம் இருந்ததை விட மிகவும் அதிகம். இருப்பினும் அவர்கள் கடுமியாக போர் புரிந்தனர். ஆங்கிலேயர்கள் கடந்து வந்த பாதைகள் முழுவதும் கொடூரமான கொலைகளை செய்து வந்தனர். அவர்கள் வந்த பாதைகளில் உள்ள மரங்களில் எவ்வுளவு கிளைகள் இருந்தனவோ அவிவுளவு கிளைகளிலும் இந்திய சிப்பாய்களின் உடல்கள் உயிரற்று தொங்கியது. இந்தியா முழுமைக்கும் அவர்கள் ஒரு அச்சத்தை உருவாக்க திட்டமிட்டு செயலாற்றினர்.

1858ஆம் ஆண்டு ஜூன் 17ம் தேதி, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் வெள்ளையரை எதிர்த்துச் ஜான்சிராணி வீரத்துடன் போரிட்டார். கொஞ்சமும் சலைக்காமல் போரிட்ட இந்த வீராங்கனை இந்த வீரமிக்க போரின்போது படுகாயமடைந்து விழுந்தார். அவரது உயிர் அவரிடமிருந்து மெல்ல மெல்ல பிரிந்துக்கொண்டிருந்தது. அத்தினத்திலேயே வீரமரணம் அடைந்தார். எப்போதும் அந்நியருக்கு அடிபணியாத, அவர்கள் மிரட்டல்களுக்கு செவிமடுக்காத, மலையளவு பணம் தருகிறோம் இன்பமாய் ஓவ்வெடுங்கள் என்ற ஆசை வார்த்தைக்கு இணங்காத, வீழும் வரை போரிடு! விழும்போது விதையாய் விழு! என்ற வார்த்தைகளை உயர்த்தி பிடித்த அந்த மகத்தான வீரம் தனது சுவாசத்தை நிறுத்திக்கொண்டது. அன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு பின்னர் குவாலியரைக் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.

ஆங்கிலேயர்களின் படையை வழி நடத்திய ஹீ ரோஸ் "அனைத்துப் புரட்சித் தலைவர்களிலும் மிகவும் ஆபத்தானவர் என்றும் வீரத்துக்காகவும் விவேகத்துக்காகவும் விடாமுயற்சிக்காகவும் குறிப்பிடத்தக்கவர்" என்றும் ஜான்சிராணியைப் புகழ்ந்தான். இவரது வீரதீரச் செயல்களும் ஆங்கிலேயரை எதிர்த்து இவர் புரிந்த போரும் ல் இன்றும் நாட்டுப்புறப் பாடல்களாகவும் நாடகங்களாகவும் பலரால் போற்றப்படுகின்றன. அமரத்துவம் பெற்ற ஒரு வீராங்கனையாக என்றென்றும் இவர் பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது.

                                                                                  (இன்னும் பலர் எழுந்து வருவார்கள்..)

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark