செவ்வாய், 22 ஜூலை, 2025

அந்த மகத்தான தலைவனை சந்தித்தேன்..

2018 ஆம் ஆண்டு அகில இந்திய மாநாட்டில்..


 2018 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை கட்சி எனக்கு வழங்கியது....

 மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சிகள் கடந்து, கொடியேற்றி முடித்த பின்பு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த சென்று கொண்டிருந்தோம்... 

 எனக்குப் பின்னால் ஒரு சிறு சலசலப்பு

ஒரு கேரள தோழர் என்னை கொஞ்சம் நகர்ந்து நிற்கும்படி சொன்னார். பின்னால் திரும்பிப் பார்த்தேன்...

 அந்த மகத்தான தலைவர் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தார்.

 விடுதலை வேள்வியில் இந்த நாட்டுக்காக தியாகம் செய்த..


 உழைக்கும் மக்களின் ஒப்பற்ற தலைவன்...

 கேரளாவின் முன்னாள் முதலமைச்சர்..

 எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வந்து கொண்டிருந்தார்..

 அவருக்கு முன்னால் வந்த தோழர்கள் என்னை ஒதுங்க சொன்னது பார்த்து 

தோழர் போகட்டும் என்றார்.

நான் அவரோடு நிற்கும் நொடிகளை இழப்பேனா...

Pls come comrade என்றேன்..

 என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே  முன் நகர்ந்தார் 

தியாகிகள் நினைவு சின்னத்தின் முன் நின்று கைகளை உயர்த்தி வீர வணக்கம் செலுத்தினார்.

 அந்த இமயம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் அதுதான் கம்யூனிஸ்டுகளில் மகத்தான பண்பு.

வீர வணக்கம் தோழர் அச்சுதானந்தம்

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

 


தலைமுறைகளின் தலைவர்!

தோழர் ‘வி.எஸ்.’ இந்த இரண்டெழுத்து கேரளாவின் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத -மறைக்க முடியாத பெயராக மாறிவிட்டது. நிலப்பிரபுத்துவத்தையும் முடியாட்சியையும் ஆங்கிலேய ஆட்சியையும் எதிர்த்துப் போராடிய ஒரு மகத்தான தலைவர் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன். ‘வாழ்க்கை ஒரு போராட்டம்’ என்ற தனது சுய சரிதையின் தலைப்புக்கு ஏற்றவாறு வாழ்ந்து மறைந்தவர் அவர்.  

போராட்டத்தின் நிழலில்

தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்து உயர்ந்து கேரளாவின் முதலமைச்சரானவர். 100 வயதை நெருங்கிய நாட்களிலும் அவர் மிகவும் கவர்ச்சிகரமான மக்களை ஈர்க்கும் பேச்சாளர்களில் ஒருவராக இருந்தார். அச்சுதானந்தன் 1923  அக்டோபர் 20 அன்று ஆலப்புழா மாவட்டத்தில் புன்னப்புரா அருகே பரவூரில் அக்கம்மா மற்றும் வேலிக்கக்காத்து சங்கரன் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அவர் தனது தந்தையின் போராட்ட மனப்பான்மையை ஏற்றுக்கொண்டவர். நிலப்பிரபுத்துவமும் தீண்டாமையும் எளிய மக்களின் வாழ்க்கையை நரகமாக்கிய அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மிக மோசமான கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தின் நிழலில் வளர்ந்தவர்.  

அச்சுதானந்தன் எதையும் கடந்து செல்லவிடாதவர். அவர் சிறுவயதில் பள்ளிக்குச் செல்லும் போது  உயர் சாதி ஆதிக்க  மக்கள் வசிக்கும் ஒரு பகுதியைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. ஒரு நாள், உள்ளூர் சிறுவர்கள் சிலர் அவரை சாதிப் பெயரைப் பயன்படுத்தி அவமானப்படுத்தினர். இதனால் கோபமடைந்த  விஎஸ் தன்னை கேலிசெய்தவர்களை  கடுமையாகத்  திட்டிவிட்டு வீட்டிற்குத் திரும்பினார். உயர்சாதி சிறுவர்களை திட்டி விட்டேனே, தந்தை கண்டிப்பார் என்று அவர் நினைத்தார். ஆனால் அவரது தந்தை  எதுவும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் காலை, அவரது தந்தை ஒரு தடிமனான உலோக இடுப்புப் பட்டையை பரிசாக அளித்தார். அது எப்போதாவது ஒரு ஆயுதமாகப் பயன்படும். உயர் சாதி சிறுவர்கள் அச்சுதானந்தனை பழிவாங்குவ தற்காகக் காத்திருந்தனர். அப்போது அச்சுதானந்தன் தனது தந்தையின் பரிசை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அந்தப் போராட்ட மனப்பான்மை அவருக்கு அரசியல் வாழ்க்கையில் வழிகாட்டியது.  அச்சுதானந்தனுக்கு நான்கு வயது இருக்கும் போது அவரது தாயாரை இழக்கவேண்டியிருந்தது. பெரியம்மை நோயால் அவரது தாயார் மரணமடைந்தார். 11 வயதில், அவரது தந்தை காலமானார். மூத்த சகோதரர் கங்காதரன் குடும்பத் தலைவராக இருந்து கவனித்துக்கொண்டார். அச்சுதானந்தன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பள்ளியை விட்டு வெளியேறினார். புத்தகங்கள் வாங்க அவரிடம் பணம் இல்லை. அவர் தனது தந்தையிடமிருந்து பெற்ற  தையல் கடையில் தனது சகோதரருடன் சேர்ந்தார். தையல் கடை, சகோதரர்களுக்கான அரசியல் கல்விப் பள்ளியாக செயல்பட்டது.

இளம் புரட்சியாளர்

நாட்டின் விடுதலைப்போராட்டம், நிலப்பிரபுத்துவம் மற்றும் உடனடிப் போராட்டம் குறித்த மக்களின் சந்திப்பு மையமாக அந்தக் கடை மாறியது. அங்கு வந்து செல்லும் தலைவர்களின் உரையாடலால் இளம் அச்சு தானந்தன் உள்பட அனைவரும் உற்சாகமடைந்தனர். தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் 17 வயதில் சேர்ந்தார். அவர் ஆஸ்பின்வால் கயிறு தொழிற்சாலை யில் தொழிலாளியாக சேர்ந்தபோது நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து தொழிற்சங்கவாதியாக மாறினார். அன்றாடம் வேலை முடிந்த பிறகு, பி.கிருஷ்ண பிள்ளை, ஆர்.சுகதன் மற்றும் சி.உன்னிராஜா போன்ற மாபெரும் தலைவர்களின் கட்சி வகுப்புகளில் பங்கேற்று தன்னை தத்துவார்த்த ரீதியாக வலுப் படுத்திக் கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு,  கோழிக்கோட்டில் நடந்த கட்சியின் முதல் மாநிலக் குழுக் கூட்டத்திற்கு ஆலப்புழாவிலிருந்து ஒரு பிரதிநிதியாக அச்சுதானந்தன் கலந்து கொண்டார்.

அவர் பல மூத்த தலைவர்களுடன் தொடர்பு கொண்டார். மாநாட்டிற்குப் பிறகு, பி.கிருஷ்ண பிள்ளை அச்சுதானந்தனை அழைத்துப்பேசி, இளம் புரட்சியாளர் இன்னும் எத்தனை நாள்தான் கயிறு தொழிற்சாலையில் வேலைசெய்வது, அந்த பணியை விட்டுவிட்டு, விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் ஒன்று திரட்ட கட்சியின் முழுநேர ஊழியராக மாற வேண்டும் என்றார். இந்த அழைப்பை வி.எஸ். நிராகரிக்கவில்லை. உடனே பணியை உதறிவிட்டு கட்சி யின் முழுநேர ஊழியரானார்.

குட்டநாட்டின் நெல் வயல்களில்

அச்சுதானந்தனின் முதல் போராட்டக் களம் குட்டநாட்டின் நெல் வயல்கள். விவசாயத் தொழிலாளர்கள் ஒரு கைப்பிடி அரிசிக்கு வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. நில உரிமையாளர்கள் அரிசியை சிறிய கோப்பைகளில் அளந்து அவற்றை மேலும் குறைத்து வழங்கி வந்தனர். வேலை முடிந்த  பிறகு முறைகேட்டை எதிர்த்துப் போராட தொழிலாளர்களை அச்சுதானந்தன் திரட்டினார். அரிசியை ஏற்க  மறுத்து  விவசாயத் தொழிலாளர்கள் முழக்கமிட்டனர். நான்கு நாட்களுக்குப் பிறகு, நில உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். தொழிலாளர்களும் அவர்களது தலைவர்களும் சட்ட நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்ததை அடுத்து, அவர்கள்  உண்மையான கூலியை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. போராட்டம் படிப்படியாக புன்னப்புரா, பரவூர் மற்றும் கலர்கோடு வரை பரவியது. பள்ளத் துருத்தியில் நில உரிமையாளர்கள் தொழிலாளர்களை தாக்கியதை அடுத்து இயக்கம் வன்முறையாக மாறியது. போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல  எட்டு உறுப்பினர்களைக் கொண்ட விவசாயத் தொழிலாளர் குழு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு பின்னர் திருவிதாங்கூர் கர்ஷக தொழிலாளர் தொழிற் சங்கம் மற்றும் கேரள மாநில கர்ஷக தொழிலாளர் சங்கம் (KSKTU) (கேரள விவசாய தொழிலாளர் சங்கம்) என மலர்ந்தது.

திவான் அடக்குமுறைக்கு எதிராக...

திருவிதாங்கூரை “அமெரிக்கா மாதிரி” மாற்றப் போகிறேன் என்று திவான் சி.பி. ராமசாமி ஐயர் சொல்லிக்கொண்டிருந்த காலகட்டம். அவரது அடக்கு முறைக்கு எதிராக போராட ஒரு சரியான தலைவரை அந்த பகுதி மக்கள் தேடிக்கொண்டிருந்தனர். சீர்திருத்தங்கள் என்ற பெயரில் திவான் செய்த கொடுமைகளுக்கு எதிராக பேசிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் காவல் துறையினரால் குறிவைக்கப்பட்டனர். ஆலப்புழாவில் நடந்த பொதுக் கூட்டத்திற்குப் பிறகு போராட்டத்திற்கு தலைமை வகித்த ஆர். சுகதன், கே.வி. பத்ரோஸ்,  ஸ்ரீகண்டன் நாயர், சைமன் அசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது அச்சுதானந்தன், பேச்சாளர்களில் ஒருவராக இருந்தார்; ஆனால் கட்சியின் அறிவுறுத்தலின் பேரில் அவர் காவல்துறையின் கண்களில் மண்ணை தூவிவிட்டு தலைமறைவானார். கட்சியின் உத்தரவுப்படி அச்சுதானந்தன் கோட்டயத்திற்குச் சென்றார். அவர் பூஞ்சார் மலைப்பகுதி பொறுப்பாளராக  நியமிக்கப்பட்டார். இருப்பினும், இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் ஆலப்புழாவுக்குத் திரும்பினார்; அங்கு காவல்துறை பயங்கர வாதத்தை கட்டவிழ்த்துவிட்டிருந்தது. அம்பலப்புழா, சேர்த்தலா, புன்னப்புரா மற்றும் கலர்கோடு (ஆழப் புழாவில் உள்ள சிறிய கிராமம்/ காசர்கோடு அல்ல)  ஆகிய இடங்களில் அடக்குமுறையை எதிர்க்க முன்னாள் படைவீரர்கள் உட்பட போராளிகளை கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிணைத்தது. தொண்டர்கள் கொரில்லாப் போரில் பயிற்சி பெற்றனர். அவர்கள் மர ஈட்டிகளால் மட்டுமே ஆயுதம் ஏந்தியிருந்தனர்.

அச்சுதானந்தனும் பிற இளம் தலைவர்களும் தன்னார்வலர்களுக்கு அரசி யல் கல்வியை வழங்கும் பணியை மேற்கொண்டனர். புன்னப்புரா மற்றும் கலர்கோட்டில் தலா 400 தன்னார்வலர்கள் கொண்ட மூன்று முகாம்களுக்கு அச்சுதானந்தன் பொறுப்பேற்றார். காவல்துறையினர் அடக்குமுறை ஆட்சியை முடுக்கிவிட்டு, தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று திவானையும் அவரது சீர்திருத்தங்களையும் வாழ்த்தும்படி கட்டாயப் படுத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அனைவரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

மன்னருக்கு எதிராக  எழுச்சிப் போராட்டங்கள்

1946 அக்டோபர் 23, திருவிதாங்கூர் மன்னர் தனது பண்டிகையை பல காவல் நிலையங்கள் மற்றும் முகாம்கள் திறப்பு விழாவாக கொண்டாடினார். ‘அமெரிக்க மாதிரி ஆட்சியை அரபிக்கடலில் தூக்கி எறியுங்கள்’ என்று மக்களுக்கு, கம்யூனிஸ்டுகள் அழைப்பு விடுத்தனர். நூற்றுக்கணக்கான மக்கள், கூடுதலாக காவல்துறை முகாம்களைத் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அச்சுதானந்தன் புன்னப்புரா தன்னார்வலர்களின் முகாமுக்குச் சென்றபோது, அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால், கட்சியினர் அவரை தலைமறைவாகச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அவர் கரிம்பாவு வளவிலில் உள்ள ஒரு கட்சி உறுப்பினரின் வீட்டிற்குச் சென்றார். தொழிலாளர்களின் போராட்டம் காவல் முகாமை அடைந்ததும், ஆய்வாளர்  வேலாயுதன், போராட்டக்காரர்கள் மீது சுட உத்தரவிட்டார். தொழிலாளர்கள் ஆயுதமேந்திய காவலர்களை நோக்கி தங்கள் துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 50 பேர் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் குறைந்தது 10 போலீசார் இறந்தனர். தொழிலாளர்களில் ஒருவர் ஆய்வாளரின் தலையை துண்டிக்கும் அளவுக்கு நிலைமை மிக மோசமாக இருந்தது.

செத்துப் பிழைத்தார்’

அக்டோபர் 28 அன்று பூஞ்சாரில் அச்சுதானந்தன் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் அவர் கொடூரமான சித்ரவதைக்கு ஆளானார். ஒரு காவலர் அச்சுதானந்தனின் கால்களை துப்பாக்கி முனையால் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார். போலீசார் அச்சுதானந்தன் இறந்து விட்டதாகக் கூறி விட்டுச் சென்றனர். அவர்கள் அவரது உடலை அருகிலுள்ள காட்டில் வீச முடிவு செய்தனர்.  சிறுசிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்த ஒரு திருடனிடம் அவரது  உடலை கொடுத்து போலீஸ் ஜீப்பில் எடுத்துச் செல்லுமாறு காவல்துறையினர் கூறினர். ஜீப்பிற்குள், அச்சுதானந்தன் உயிருடன் இருப்பதை உணர்ந்த திருடன் கைதியை பாலாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசாரை வற்புறுத்தினான். இதனால் அச்சுதானந்தன் உயிர்பிழைத்தார். அதன் பின்னர் தன்னை மருத்துவமனைக்கு அனுப்பி காப்பாற்றிய தனது மீட்பரை சந்திக்க முடியாமல் போனது குறித்து அச்சுதானந்தன் வருத்தப்பட்டார். அச்சுதானந்தன் பிப்ரவரி 1948 இல் விடுதலை செய்யப்பட்டார். துப்பாக்கி தாக்குதலால் சுமந்த வடுவை அவர் தனது வாழ்க்கையில் சுமக்க வேண்டியிருந்தது. அதே  கால்களுடன் அவர்  கேரளாவின் அனைத்து பகுதிக ளுக்கும் சென்று மக்கள் பணியாற்றினார். சுற்றுச்சூழல் பிரச்சனைகளை அரசியலுடன் இணைத்தார். முதல்வராக பதவியேற்கும் முன்பு அவர் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார். அவரது கட்சி வாழ்க்கை பல தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கக் கூடியது.

செவ்வணக்கம் தோழர் வி.எஸ்!

---------------------------------------------------------------------------------

தோழர் .விஜயகுமார் இன்று தீக்கதிரில் எழுதிய கட்டுரை இது

1 கருத்து:

  1. அருமை தோழர் அந்த மாநாட்டில் நானும் இருந்தேன்...

    பதிலளிநீக்கு