நடந்து முடிந்துள்ள தமிழகச் சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய தடம் பதித்துள்ளது. 1967 முதல் தமிழகத்தை ஆண்டு வந்த திராவிட இயக்கங்களின் ஆட்சிகளுக்கு இப்போது ஒரு இடைவேளை வந்துள்ளது. த.வெ.க வெற்றியை ஏதோ விசிலடிச்சான் பிஞ்சுகள் / மாணவர்கள் விபரம் இல்லாமல் ஆதரித்தால் வந்தது எனப் பலர் கடந்து செல்ல நினைக்கின்றனர். 60 ஆண்டுகள் கடந்து இரு துருவ ஆட்சி முடிவுக்கு வந்து மூன்று துருவ அரசியல் துவங்கி உள்ளது. அதுவும் எந்த வித அமைப்பு ரீதியான கட்டமைப்பும் முழுமையாக இல்லாமல், வாக்கு சாவடிகள் முகவர்கள் இல்லாமல், வேட்பாளர்கள் யாரென்றே தெரியாமல், வீடுவீடாக வாக்கு சேகரிக்காமல் ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்தது விபரமாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
திமுக ஆட்சியைப் பிடித்த பின்னணி என்ன?
1967 வெற்றிக்கு வித்திட்டவர்கள் யார் என்ற வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் பல சுவராசியமான தகவல்கள் கிடைக்கும்.
1. 1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழக மாணவர்களைப் பெரிய அளவில் அரசியல் இயக்கங்களுடன் இணைத்தது. இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் தெருக்களில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான மனநிலையை உருவாக்கின.
2. 1967 தேர்தலின் போது கிராமம் முதல் நகரம் வரை இளைஞர்கள் சைக்கிள் ஊர்வலங்கள், தெருக்கூட்டங்கள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் போன்ற வழிகளில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். அக்காலத்தில் சமூக ஊடகங்கள் இல்லாததால் இளைஞர்களின் நேரடி பங்கேற்பு மிகவும் முக்கியமாக இருந்தது.
3. சமூக நீதி, சாதி எதிர்ப்பு, தமிழர் அடையாளம், மாநில உரிமை போன்ற புதிய அரசியல் மொழியை அதன் கருத்துகளை மாணவர் மற்றும் இளைஞர் குழுக்கள் மக்களிடம் கொண்டு சென்றனர்.
4. அண்ணா அவர்களின் எளிய பேச்சு நடை, தமிழ் உணர்வு, மேடைப் பேச்சுகள் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன.
5. கல்லூரிகள் அரசியல் விவாத மையங்களானது பல கல்லூரிகளில் மாணவர் அமைப்புகள் உருவாகி, அங்கிருந்து திமுகவுக்கு ஆதரவான கருத்துகள் பரவின.
6. எல்லாவற்றையும் தாண்டி வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற திமுகவின் முழக்கம் பிராந்திய முதலாளிகளை திமுகவின் பக்கம் திருப்பியது.
1967 வெற்றி என்பது திமுகவின் வெற்றி மட்டுமல்ல; மாணவர் எழுச்சி, மொழி உரிமைப் போராட்டம், இளைஞர் இயக்கம் ஆகியவை ஒன்றிணைந்து உருவாக்கிய அரசியல் மாற்றமாகவும் பார்க்கப்படுகிறது. இது தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக்க கருதப்படுகிறது.
அது வெறும் தேர்தல் பிரச்சார ஆதரவு மட்டுமல்ல; சமூக, மொழி, அரசியல் போராட்டங்களின் தொடர்ச்சியாக உருவான சக்தியாகும். முழுக்க முழுக்க இளைய பட்டாளமே இதை சாத்தியப்படுத்தியது. திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு 138 தொகுதிகளை வென்றது. அதன் வாக்கு சதவிகிதம் சுமார் 40.8% ஆகும். 1977 ஆம் ஆண்டு அதிமுக 200 தொகுதிகளில் போட்டியிட்டு 130 தொகுதிகளை வென்றது. அதன் வாக்கு சதவிகிதம் சுமார் 30.4% ஆகும்.
2026ல் நடந்தது என்ன?
சென்னை, காஞ்சிபுரம், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, அரியலூர், சிவகங்கை ஆகிய 11 மாவட்டங்களில் திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதுவும் திராவிட இயக்கத்தை அரசியல் பாதையில் திருப்பிய அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மண்ணில் இரண்டு கழகங்களும் அவர்கள் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஒரு இடம்கூட பிடிக்கமுடியவில்லை என்பது சுவராசியம்தான். பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தில் திமுக ஒரு தொகுதியும் கைப்பற்றவில்லை என்பது கூடுதல் தகவல்.
சரி
த.வெ.க
எல்லா மாவட்டங்களிலும்
வென்றுவிட்டாதா என்று பார்த்தால்
அதுவும் இல்லை.
கன்னியாகுமரி,
தென்காசி,
திருவாரூர்,
நாகப்பட்டினம்,
மயிலாடுதுறை,
அரியலூர்,
நீலகிரி,
விழுப்புரம்
ஆகிய 8
மாவட்டங்களில்
த.வெ.க
ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
தனிப்பட்ட
கட்சிகளாக விஜய் கட்சி
1,72,26,209
வாக்குகள்
(34.92),
திமுக
1,19,29,144
வாக்குகள்
(24.19),
அதிமுக
1,04,62,146
வாக்குகள்
(21.21)
பெற்றுள்ளன.
வாக்களித்த
ஒட்டு மொத்த வாக்காளர்களில்
சுமார் 65
சதமானவர்கள்
விஜய் கட்சிக்கு எதிராக
வாக்களித்துள்ளனர்.
இன்னொரு
கோணமும் உள்ளது.
திமுக
அரசு வேண்டாம் என சுமார் 76
சதமானவர்களும்,
அதிமுக
வேண்டாம் என சுமார் 79
சதமான
வாக்காளர்களும் இந்த இருவரும்
வேண்டாம் என சுமார் 55
சதமான
வாக்காளர்களும் வாக்களித்து
உள்ளனர்.
1949 ஆண்டு துவக்கப்பட்ட திமுக 18 ஆண்டுகள் போராடி 1967 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது. 1953 ஆண்டு திமுகவில் இணைந்த எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு அதிமுகவைத் துவக்கி 5 ஆண்டுகளில் 1977 ஆண்டு ஆட்சியைப் பிடித்தார். ஆனால் 2024 ஆம் ஆண்டு கட்சியைத் துவக்கிய ஜோசப் விஜய் இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தார்.
சமூக வலைத்தளங்கள் மட்டுமே த.வெ.க வெற்றியை சாத்தியப்படுத்தியதா?
தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்களில் சுமார் 2.38 கோடி பேர் 18–40 வயதுக்கு பட்டவர்கள். இவர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதால் அவர்கள்தான் த.வெ.க ஆட்சியை அமைத்ததாக ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இதுவே முழு உண்மை இல்லை.
1. 59 ஆண்டுகளாக நடந்துவந்த திராவிட இயக்க ஆட்சிகளில் பல முன்னேற்றங்கள் இருப்பினும், ஊழல் மயமான நிர்வாக சீர்கேடுகளும், எல்லா பக்கங்களிலும் புரையோடிப்போன லஞ்சமும் இளைய சமூகத்தை அசூசை கொள்ளச் செய்தது. மக்களை ஊழல் மயமாக்க வாக்கு அளிக்க பணம் கொடுப்பது புதிய பரிணாமத்தை தொட்டுள்ளது. அதாவது தாங்கள் அடிக்கும் கொள்ளையில் மக்களை பங்குதாரராக மாற்றுவதுதான் வாக்கிற்குப் பணம் கொடுப்பது.
2. வேலையின்மை, பாதுகாப்பற்ற பணிச்சூழல், புலம் பெயர்ந்து வேலைக்குச் செல்லும் அவலம். நிரந்தர பணிகள் முற்றிலும் அழிப்பு, எல்லாவற்றிலும் ஒப்பந்த முறை என்பதெல்லாம் இளம் தலைமுறையின் எதிர்காலம் குறித்த கேள்வியை உருவாக்கியது.
3. ஒப்பீட்டளவில் அரசின் சுகாதாரத்துறை மேம்பட்டது என்றாலும் மருத்துவ மபியாக்கள் கொள்ளை உச்சக்கட்டம் என்பதும் தமிழகத்தில்தான். தனியார் மருத்துவமனைகளில் கொள்ளை சொல்லி மாளாது. இவையெல்லாம் நீண்ட நாட்களாக மனதில் உழன்று வரும் பிரச்சினைகள்.
4. சமூகத்தை அரசியல் மயப்படுத்தும் சூழலை முற்றிலும் அழித்தது மிக முக்கிய காரணம். கல்லூரிகளின் மாணவர் பேரவை தேர்தல்களை நிறுத்தியது, அவர்களை அரசியலிலிருந்து முற்றிலும் அந்நியப்படுத்தியது. இது போதாதென பள்ளிகளில் விளையாட்டு, ஓவியம், நீதி போதனை, கைவினை வகுப்புகள் முற்றிலும் நீக்கப்பட்டது. மதிப்பெண் மட்டுமே கல்வி எனவே படிப்பை தவிர வேறெந்த கவனமும் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என டியூஷன் கலாச்சாரத்தை வளர்த்தது.
5. செய்தி தாள்கள் படிக்கும் பழக்கமற்ற இளம் பட்டாளம் இணையமே வாழ்க்கை என வாழத்துவங்கி இரு பத்தாண்டுகள் ஆகிறது. இணையத்தில் ஒவ்வொரு அலைபேசியும் ஒரு ஊடகமாக மாறியது. கார்ப்ரேட்டுகள் தங்களது லாபத்திற்காக புது புது யுக்திகளை உருவாக்கிக்கொண்டே வந்தனர். ரீல்ஸ் வரை வந்துள்ள இணைய உலகம் சாதி, மத, இன குழுக்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. கட்டற்ற காம காட்சிகள் இலவசமாக கிடைக்கும் சூழலில் சமூக ஒழுங்குகள் எல்லாம் கேள்விக்குறிக்கு உள்ளாகி இருக்கிறது.
6. அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாமல், கள்ள சந்தையில் விற்கப்படும் சாராய போத்தல்களும், பள்ளி கல்லூரி வரை விரித்து பரந்துள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும் பெற்றோர்களை அதிர வைத்துள்ளது.
7. அமைப்புகள், போராட்ட வரலாறுகள், தியாகங்கள் எதுவும் அறிந்திடாத ஒரு பெருந்திரள் கூட்டம், இந்த மோசமான சூழலை மாற்ற ஒரு நாயகன் தேவைப்படுகிறான் என்று நம்புகிறது. அதைத்தான் உலகமயம் தொடர்ந்து போதிக்கிறது. நபர்கள் மாறினால் வாழ் நிலை மாறும் எனவே கொள்கை, கோட்பாடு எல்லாம் தேவையில்லை. இத்தனை ஆண்டுகள் நீங்கள் என்ன செய்து கிழித்துவிட்டீர்கள், அவர் வந்து ஆட்சி செய்யட்டுமே என்ற மனநிலை ஆழமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இவையெல்லாம் இனைந்ததுதான் இந்த மாற்றம்.
பொய்களின் உலகத்திலிருந்து த.வெ.க வெளிவரவேண்டும்:
உண்மையில் அமைச்சரவையில் 7 பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 4 பெண்களும் அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பாராட்டுக்குரியதுதான். ஆனால் த.வெ.க கட்சியின் இணையக் கூட்டம் கட்டமைக்கும் பொய்யான உலகம் தனி உலகமாக உருவாகி வருகிறது.
தமிழக தேர்தல் வரலாற்றில் அதிகமான பொதுத்தொகுதியில் பட்டியலினத்தவரை த.வெ.க நிறுத்தியது (26 தொகுதி என சிலர் பதிவு செய்துள்ளனர்) என ஒரு பொய்யை கட்டமைத்தனர். ஆனால் உண்மையில் சங்கராபுரம் என்ற ஒரு பொதுத் தொகுதியில் மட்டும்தான் த.வெ.க தலித் வேட்பாளரை நிறுத்தியது. அவரும் தோல்வி அடைந்தார். ஆனால் நாம் தமிழர் கட்சி 8 தலித்துகளை பொதுத் தொகுதியில் நிறுத்தியது அதில் ஒருவர் எஸ்.டி (பழனி தொகுதி) அனைவரும் தோல்வி அடைந்தனர். பொது தொகுதியில் நின்று வென்ற ஒரே தலித் வேட்பாளர் மேலூர் தொகுதி விஸ்வநாதன் (காங்கிரஸ்) மட்டும்தான். உண்மை இப்படி இருக்க மீண்டும் மீண்டும் த.வெ.கவினர் இந்த பொய்யைப் பரப்பி வருகின்றனர்.
அடுத்து த.வெ.க வேட்பாளர்கள் மிகவும் ஏழைகள். இதுவரை திமுக/அதிமுக கோடீசுவரர்களை மட்டுமே நிறுத்தின. தேர்தல் வரலாற்றில் முதன் முதலாக மிகவும் எளிய குடும்பத்தை சேர்ந்தவர்களை த.வெ.கதான் நிறுத்தியது என்று பதிவுகளை இணையம் முழுவதும் பரப்பினர். ஆட்டோ ஓட்டுநர் என்று ஒருவரையும், காலில் செருப்பில்லாதவர் என்று ஒருவரையும், அடுத்த வேலை உணவுக்கு வழியில்லை என்று ஒருவரையும் பின்னணி இசையுடன் அறிமுகம் செய்தனர். உண்மை என்ன த.வெ.க நிறுத்திய வேட்பாளர்களில் 74 வேட்பாளர்கள் கோடீசுவர வேட்பாளர்கள்.
அதேபோல கல்வி தகுதி குறித்து த.வெ.கவினர் பரப்பும் செய்திகளும் மிகவும் மோசமானவை. யாரும் அவர்களது கல்வித் தகுதி குறித்து கேள்வி எழுப்பாத சூழலில் பலரும் தங்களை மருத்துவர்கள் என்றும் மெத்தப் படித்த மேதாவிகள் எனவும் காட்டிக்கொள்ள மிகவும் முயற்சி செய்து அம்பலப்பட்டு நிற்கின்றனர். இதன் உச்சம் தமிழக கல்வி அமைச்சர் த.வெ.க இணைய தளத்தில் தான் பி.டெக் படித்ததாகப் பதிவேற்றம் செய்ததுதான். ஆனால் அவர் உண்மையில் அவர் படித்தது பி.ஏ தான். இன்னும் நிறையச் சொல்லிக்கொண்டே செல்ல முடியும் நமது நோக்கம் இப்படியெல்லாம் பொய் உலகில் மக்களைத் தள்ளாமல் நேர்மையாக அரசாள வேண்டும் என்பதே!
முதலாளித்துவத்திற்கு முதலாளித்துவம் மாற்றல்ல..
புதிய அரசு என்ன செய்யப் போகிறது? பொறுத்துத்தான் பார்க்க முடியும். ஆனால் ஒன்று இன்று உள்ள சமூகச் சூழலை, கார்ப்ரேட் அரசியலை, நில குவியலை ஒரு கீற்று கூட இவர்களால் மாற்ற முடியாது என அறுதியிட்டுக் கூறமுடியும். திமுக மற்றும் அதிமுகவை விட கவர்ச்சியான பல திட்டங்களை அறிவித்ததிலிருந்தே இவற்றைப் புரிந்துகொள்ள முடியும். உண்மையான மாற்றின் அடிப்படை என்ன?
சாதிவாரி சமூக பொருளாதார கணக்கெடுப்பு 2011ன் படி தமிழக கிராமங்களில் 73 சதமான மக்களிடம் நிலம் கிடையாது. நில ஏகபோகத்தைத் தகர்க்கும் முழுமையான நில சீர்திருத்தம் என்பது அடிப்படைத் தேவையாகும். இதனைச் சாதிப்பதன் மூலம்தான் கிராமங்களில் நில உடமை அடிப்படையில் ஆதிக்க சக்திகளாக விளங்கும் பணக்கார ஆளும் வர்க்கங்களின் பிடியை தளர்த்த முடியும். விவசாயத்தில் உற்பத்தி சக்திகள் வேகமாகவும் ஜனநாயகத் தன்மையுடனும் வளர முடியும். சாதி ஆதிக்க சக்திகளைத் தகர்க்கவும் இது மிகவும் அவசியமான நடவடிக்கை. உள்நாட்டு சந்தை விரிவடையவும் ஊரகப்பகுதிகளில் வேலை வாய்ப்பு பெருகவும் இது அவசியம்.
மொத்த சமூகத்தையும் உயர்த்தும் இந்த துவக்கட்ட பணியை எந்த முதலாளித்துவ அரசும் செய்திடாது. அதற்கு புது அரசும் விதி விலக்கல்ல. அவர்களது தேர்தல் அறிக்கையில் இது குறித்து ஒரு எழுத்தும் கிடையாது. அதை நாம் எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் ஒன்று சோசலிசம் ஒன்றுதான் முதலாளித்துவத்திற்கு மாற்று அதை நோக்கி தமிழக மக்களை திரட்டுவதுதான் நிரந்தர தீர்வின் ஒரே வழி!
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு


