 |
நேற்று நடந்த போராட்டம் |
கடலூர்
மாவட்டம் குறிஞ்சிப்பாடி
ஒன்றியத்தில் உள்ள கொடுக்கன்
பாளையத்தில் 150 ஏக்கர்
பரப்பளவில் தோல் அல்லாத காலணி
தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல்
பாதிப்பில்லாமல் அமைக்கப்படும்
எனவும், அதில்
12 ஆயிரம்
பெண்களுக்கு வேலை கிடைக்கும்
எனவும் தமிழக முதவர்
அறிவித்துள்ளார்.
நூற்றாண்டு
அனுபவ உரிமை!
கடலூர்
மாவட்டம் கடலூர் வட்டம்
வெள்ளக்கரை மதுரா கொடுக்கன்பாளையம்
ஊராட்சிக்குட்பட்ட மலையடிகுப்பம்,
கீரப்பாளையம்,
கொடுக்கன்பாளையம்,
பெத்தாங்குப்பம்,
கட்ராசாவடி
உள்ளிட்ட கிராமங்களில் சர்வே
எண் 207/2 இல்
உள்ள 164 ஏக்கர்
நிலங்களில் 155க்கும்
மேற்பட்ட குடும்பங்கள் கடந்த
5 தலைமுறைகளாக
மலைகளை திருத்தி முந்திரி,
வாழை,
மா,
பலா,
பூச்செடிகள்
உள்ளிட்ட பயிர்களை சாகுபடி
செய்து வந்தனர். இந்நிலையில்
கடந்த ஜனவரி மாதம் 29 ஆம்
தேதி எவ்விதமான முன்னறிவிப்பும்
இல்லாமல் 9 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட முந்திரி மரங்கள்
வேரோடு பிடுங்கி எறியப்பட்டன.
விவசாயிகளின்
வேளாண் பயிர்களை அழிப்பதைத்
தடுத்திடக்கோரியும்,
பாதிக்கப்பட்ட
விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு
வழங்கிட வேண்டும் என்றும்,
சாகுபடி
செய்யும் விவசாயிகளின்
நிலங்களுக்கு பட்டா வழங்கிட
வேண்டும் என்றும் கோரி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி, தமிழ்நாடு
விவசாயிகள் சங்கம் சார்பில்
தொடர் போராட்டங்கள் நடந்து
கொண்டிருக்கின்றன.
மேலும் சென்னை
உயர்நீதிமன்றத்தில் ரிட்
மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை
உயர்நீதிமன்றம் மாவட்ட
ஆட்சியரிடம் மேல்முறையீட்டு
மனு மீது பரிகாரம் தேடிக்கொள்ள
வழிகாட்டல் உத்தரவு கொடுத்தது.
மேலும் மாவட்ட
ஆட்சியர் விவசாயிகளுக்கு
விரோதமான முடிவை மேற்கொண்டால்
சீராய்வு மனுவைத் தாக்கல்
செய்யலாம் என்று விவசாயிகளுக்கு
வழிகாட்டியது.
அப்பகுதி
விவசாயிகளிடம் விசாரணை
மேற்கொள்ளப்பட்டது.
விவசாயிகளின்
நில உரிமைக்கான ஆதாரங்களைத்
தாக்கல் செய்தும்,
ஆட்சியரின்
முடிவு விவசாயிகளுக்கு பெரும்
அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது;
அவர்களுக்கு
எதிராக இருந்தது. அந்த
மக்களின் அனுபவ நிலங்கள்
எப்போதும் பறிபோகலாம் என்ற
நிலையில் முதல்வர் அப்பகுதியில்
அறிவித்துள்ள தொழிற்சாலை
இந்த மக்களை வெளியேற்றும்
அபாயத்தை ஏற்படுத்தும்
என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்
மலையடிகுப்பம் கிராமத்தில்
காலவரையற்ற காத்திருப்புப்
போராட்டத்தை தமிழ்நாடு
விவசாயிகள் சங்கத்தின்
தலைமையில் மக்கள் துவங்கியுள்ளனர்.
சுற்றுச்சூழல்
மிகுந்த பகுதி
கேப்பர்
மலை என்பது உண்மையில் ஒரு
மலையே அல்ல. கடலூர்
மாநகரம் முழுவதும் சமவெளிப்பகுதியில்
அமைந்துள்ளதால், அருகில்
உள்ள செம்மண் மேட்டுப்பகுதி
மலையாக அழைக்கப்படுகிறது.
இது செம்மண்
கலந்த செங்கல் மலையாகும்.
கேப்பர்
மலையில் கற்களே கிடையாது.
மேலே சிவந்த
நிறத்தில் செம்மண் குன்றுகள்,
அதன் கீழே
மணற்பாறைகள் காணப்படுகின்றன.
இது கடலூர்
துறைமுகத்திற்கு மேற்கேயும்,
திருவந்திபுரத்திற்கு
தெற்கேயும் அமைந்துள்ளது.
திருவந்திபுரம்
மலைக்குன்றுகளும் இதன்
தொடர்ச்சியாகும். கடலூர்
துறைமுகம் அடுத்த கேப்பர்
குவாரி அருகே அகழ்ந்தெடுக்கப்பட்டு
சாலைகள் போட பயன்படுத்தப்பட்டது.
ஆங்கிலேயர்
ஆட்சிக்காலத்தில் கி.பி.
1796 ஆம் ஆண்டு
வண்டிப்பாளையத்திற்கு அருகே,
இந்த
மலையின் மீது ஆங்கிலேய
படைத்தளபதி பிரான்சிஸ் கேப்பர்
என்பவர் மாளிகை ஒன்றைக் கட்டி
வாழ்ந்து வந்தார். அதன்
பின் அவரது பெயரால் இந்த
மலையை கேப்பர் மலை என்று
அழைக்கத் துவங்கினர்.
கி.பி.
1815 ஆம்
ஆண்டு இந்த மாளிகை அரசுக்கு
சொந்தமானது. மாளிகையில்
சில மாற்றங்கள் செய்யப்பட்டு,
சிறைச்சாலையாக
மாற்றப்பட்டது.
அழிவின்
விளிம்பில் கொண்டங்கி ஏரி
கேப்பர்
மலை மத்திய சிறைச்சாலை எதிரே
உள்ளது கொண்டங்கி ஏரி.
18.72 மில்லியன்
கன அடி வரை தண்ணீரை தேக்கி
வைக்கப்படும் கொண்டங்கி
ஏரியின் பரப்பளவு 188
ஏக்கர் ஆகும்.
கொண்டங்கி
ஏரியின் நீரை கடலூர் மக்களின்
குடிநீர் தேவையை நிறைவு செய்ய
1870 மற்றும்
1880இல்
கடலூர் மாவட்ட மருத்துவ
மற்றும் சுகாதார அலுவலராக
இருந்த மருத்துவர் ஜி.
ராபர்ட்சன்
திட்டமிட்டு செயல்படுத்தினார்.
கொண்டங்கி
ஏரியின் முப்புறங்களிலும்
செம்மண் மலைகள் சூழ்ந்துள்ளன.
மழைக்காலங்களில்
மலைகளிலிருந்து வழிந்தோடி
வரும் நீரால் நிரம்பும்
கொண்டங்கி ஏரிக்கு,
கெடிலம்
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட
திருவந்திபுரம் அணைக்கட்டில்
இருந்து பிரியும் ஒரு
கிளைக்கால்வாய் வழியாகவும்
நீர் கிடைக்கிறது. மேலும்
இந்த ஏரிக்குள்ளே இயற்கையான
பல நீரூற்றுகளும் அமைந்துள்ளன.
இதன்
சுற்றுப்புறக் கிராமங்களின்
முக்கிய நீர்ப்பாசன ஆதாரமாக
உள்ள கொண்டங்கி ஏரி,
கடலூர்
மாநகராட்சியின் முக்கிய
குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
இந்த ஏரியில்
உள்ள 10-க்கும்
மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள்
மூலமாக கடலூர் புதுநகர்
மற்றும் முதுநகர் பகுதிகளுக்கும்
குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
தோல்
அல்லாத காலணி தொழிற்சாலைகள்
இப்படி
இயற்கை கொடுத்த கொடை போன்ற
பகுதியை நான்கு வழிச் சாலை
கொஞ்சம் அழித்தது; சட்ட
விரோதமாக மண் எடுத்து கயவர்கள்
அழித்தனர்; குவாரி
என்ற பெயரில் அரசு அழித்தது;
புதிய பேருந்து
நிலையம் எனக் கொஞ்சம் அழிந்தது.
இதோ இறுதியாக
அந்த பகுதி முழுமையாக அழிக்கும்
ரசாயன அபாயம் ஏற்பட்டுள்ளது.
தோல்
இல்லாமல் எப்படியெல்லாம்
காலணிகளை தயாரிக்கலாம்?
சமையல்
தழை (Canvas), நைலான்
(Nylon), பிளாஸ்டிக்,
பிவிசி (PVC),
ரப்பர்
(Rubber), செயற்கை
தோல் (Synthetic leather / Faux leather),
பியூ (PU
– Polyurethane), காப்பு
உருக்கப்பட்ட நூல் (Knitted
fabrics) என பல
வகைகள் இருந்தாலும் அதிகம்
காலணிகள் தயாரிக்கப்படுவது
ரப்பர், நைலான்,
பிளாஸ்டிக்
ஆகிய பொருட்களில்தான்.
ஆனால் இவை
அனைத்தும் சுற்றுச்சூழலை
மொத்தமாக நாசப்படுத்தும்
தன்மை கொண்டவை.
ரப்பர்:
ரப்பர்
தயாரிக்கும் போது பயன்
படுத்தப்படும் ரசாயனங்கள்
(Vulcanizing agents, dyes, adhesives) நீரில்
கலந்து மண்ணையும் நீரையும்
மாசுபடுத்தும். உற்பத்தி
நிலையங்களில் இருந்து வெளியேறும்
காற்றில் உள்ள வேதியியல்
வாயுக்கள் சுவாசத்திற்கு
ஆபத்தாகும். உற்பத்தியில்
ஏற்படும் பிழைகள்,
கழிவுகளாகும்
காலணிகள், மீள்சுழற்சி
செய்யமுடியாத வகை ரப்பர்கள்தான்.
பெரும்பாலான
செயற்கை ரப்பர்கள் இயற்கையாக
கரையாதவையாக இருப்பதால்
நீண்டகாலம் நிலைத்திருந்து
நிலத்தை பாழாக்கும்.
ரசாயனங்கள்
மண்ணில் ஊறி நிலத்தடி நீரை
மாசுபடுத்தும். இது
விவசாயம் மற்றும் குடிநீருக்கு
தீங்கானது. இயற்கை
ரப்பரைப் பெற மரங்கள் வளர்க்கப்பட
வேண்டி, பெரும்பாலான
நேரங்களில் பழைய வனங்கள்
அழிக்கப்பட்டு ரப்பர் பண்ணைகள்
உருவாக்கப்படுகின்றன.
ரப்பர்
காலணிகளின் உற்பத்தியின்
போது வெளியாகும் பொருட் களை
எரிப்பது, கரியமில
வாயுக்களை நேரடி யாக அதிகரிக்கும்.
பல வகைப்
பொருட்கள் சேர்ந்து
தயாரிக்கப்படுவதால்,
பூரணமாக
மீளச்சுழற்சி செய்ய இயலாது.
நைலான்:
நைலான்
உற்பத்தி என்பது ஒரு ரசாயனச்
செய்முறை ஆகும். இதில்
அதிகம் பயன்படுத்தப்படும்
மூலப்பொருட்கள் அடிபிக்
அமிலம் மற்றும் நிறமற்ற
திரவ வேதிப்பொருளான ஹெக்ஸா
மெத்திலின் டயமின் ஆகியவை
ஆகும். இதன்
உற்பத்தி நடவடிக்கையில்
நைட்ரஸ் ஆக்சைடு என்ற கடுமை
மிகுந்த கரியமில வாயு
வெளியேறுகிறது. இது
கார்பன் டைஆக்சைடைவிட 300
மடங்கு
தீவிரமான காற்றை மாசுபடுத்தும்
தன்மை கொண்டது. நைலானைப்
பூசும், கலரிங்
செய்யும் பயன் பாட்டுப்
பொருள்கள் நீரில் கலந்து
விவசாயம் மற்றும் குடிநீருக்கு
பாதிப்பை ஏற்படுத்தும்.
நைலான்
காலணிகள் நீண்ட காலம் கரையாதவை.
குப்பையில்
போடப்பட்ட பின் பூமியில் பல
ஆண்டுகள் கரையாமல் மிச்சமாக
இருக்கும். சிக்கலான
அமைப்பு கொண்டதால் மீள்சுழற்சி
கடினம். நைலான்
காலணிகள் அழுகும் போது சிறிய
நைலான் துகள்கள் மண்ணிலும்
நீரிலும் கலந்து மைக்ரோபிளாஸ்டிக்
மாசுபாடு ஏற்படுகிறது.
இது மீன்கள்
மற்றும் நீர் உயிர்களுக்கு
ஆபத்தாகும், உணவுச்
சங்கிலியிலும் புகுந்துவிடும்.
காலணிகள்
தயாரிக்கும் மற்றும் வெட்டும்,
பாலிஷ்
செய்யும் நேரங்களில் வெளியேறும்
நைலான் தூசிகள் சுவாசக்
கோளாறுகளை ஏற்படுத்தலாம்.
தொழிலாளர்களுக்கு
ஆஸ்துமா, அலர்ஜி
போன்ற பிரச்சனைகள் ஏற்பட
வாய்ப்பு உள்ளது.
பிவிசி
பிளாஸ்டிக்: பிவிசி
உற்பத்தியில் பயன்படுத்தப்படும்
முக்கிய வேதிப்பொருள் வினைல்
குளோரைடு மோனோமர் (VCM)
என்பது புற்று
நோயை உண்டாக்கும் வாயு ஆகும்.
காலணி உற்பத்தி
மற்றும் எரிப்பு நேரத்தில்
வெளியேறும் டயாக்சின்கள்
சுற்றுச்சூழலுக்கு மற்றும்
மனித உடலுக்கு மிகவும் தீங்கு
விளைவிக்கும். ஹைட்ரோ
குளோரைடு வாயு காற்றில்
கலந்தால் அமில மழையை ஏற்படுத்தும்.
உற்பத்தியில்
பயன்படுத்தப்படும் பல பிளாஸ்டி
சைசர்கள், பசைகள்,
கலரிங்
ரசாயனங்கள் நீரில் கலந்து
குடிநீர் மற்றும் கடல்நீரை
மாசுபடுத்தும். சில
வேதிப்பொருட்கள் நீர்ச்சூழலிலும்
பாதிப்பை ஏற்படுத்தும்.
பிவிசி
செருப்புகள் இயற்கையில்
கரையாதவை. குப்பையில்
போடப்பட்ட பின் பூமியில்
நூற்றாண்டுகளுக்கும் அழியாமல்
இருக்கும். மீள்சுழற்சி
செய்யப்படுவதற்கு மிகவும்
சிக்கலான பொருள். காரணம்:
பல வேதிப்பொருட்கள்
சேர்ந்திருப்பதால் அவற்றைப்
பிரிக்க முடியாது. பழைய
பிவிசி செருப்புகள் உடைந்து
நுண்ணிய துகள்களாக மாறும்.
இவை நிலத்திலும்,
நீரிலும்
மைக்ரோபிளாஸ்டிக்குகளாகப்
பரவி உணவுச் சங்கிலியில்
புகுந்துவிடும். மனிதர்கள்,
விலங்குகள்
இவை மூலம் நோய்களுக்கு
ஆளாகிவிடலாம். உற்பத்தியில்
வரும் வேதியியல் கழிவுகள்
சுத்திகரிக்கப்படாமல்
வெளியேற்றப்பட்டால்,
நிலம்,
நீர்,
சுற்றுச்சூழல்
அனைத்தும் பாதிக்கப்படும்.
தொழிலாளர்கள்
அலர்ஜி, சுவாசக்
கோளாறு, வயிற்றுப்
புற்றுநோய் போன்ற ஆபத்துகளுக்கு
ஆளாகிறார்கள்.
தொழிற்சாலையே
வேண்டாமா?
இத்தகைய
மோசமான பின்விளைவை ஏற்படுத்தும்
தொழிற்சாலைகளைத்தான் முப்பயிர்
விளையும் மகத்தான விவசாயப்
பிரதேசத்தில் துவங்க அரசு
முயற்சி செய்கிறது.
அப்படியெனில்
தொழிற்சாலைகளே வேண்டாமா?
வேலைவாய்ப்பு
வேண்டாமா என்ற கேள்வி
முக்கியமானதுதான்.
தொழிற்சாலைகளை
வேண்டாம் என்று யாரும்
சொல்லவில்லை. அது
துவங்கப்படும் இடமும் மக்கள்
வாழ்வாதாரமும் முக்கியமல்லவா?
இதே கடலூரில்
ஏற்கனவே மூன்று சிப்காட்
பகுதிகளுக்கு 2500 க்கும்
மேற்பட்ட ஏக்கர் நிலங்கள்
எடுக்கப்பட்டுள்ளன.
இந்த இடங்களில்
20 ஆண்டுகளுக்கு
மேலாக உற்பத்தி செய்யாத
நிறுவனங்கள் தங்கள் இடங்களை
நிலங்களாக வைத்துள்ளனர்.
தொழிற்சாலை
நில எடுப்பு சட்டப்படி ஒரு
நிறுவனம் 20 ஆண்டுகளாக
உற்பத்தியில் ஈடுபடவில்லை
என்றால் அந்த நிலங்களை அர
சிடம் திரும்பி ஒப்படைக்க
வேண்டும். நாகார்ஜுனா
உள்ளிட்ட பல நிறுவனங்கள் 20
ஆண்டுகளைக்
கடந்து எந்த விதமான உற்பத்தியும்
துவக்காமல் நூற்றுக்கணக்கான
ஏக்கர் நிலங்களை சிப்காட்
பகுதியில் வைத்துள்ளனர்.
அரசு
அத்தகைய சிப்காட் பகுதி யில்
இத்தகைய நிறுவனங்களைத்
துவங்குவது தான் சரியான
நிலைபாடாக இருக்க முடியும்.
மேலும்,
பல்லாயிரம்
பேருக்கு வேலை கிடைக்குமா
என்பதை பொறுத்திருந்து தான்
பார்க்க முடியும்.
1200 ஏக்கரில்
பரங்கிப்பேட்டை அருகில்
அனல்மின் நிலையம் உருவான
போது பல்லாயிரம் பேருக்கு
வேலை கிடைக்கும் என வார்த்தை
ஜாலம் காட்டியது அன்றைய அதிமுக
அரசு. ஆனால்
வெறும் 300 பேர்தான்
அங்கு வேலை செய்கின்றனர்.
அதில் நிலம்
கொடுத்த விவசாயிகள் குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் யாரும் இல்லை
என்பது பெரும் வேதனை.
எனவே
மலை வளத்தை, விவசாய
நிலத்தை, மக்கள்
வாழ்வாதாரத்தை காக்க தமிழக
அரசு முன்வர வேண்டும் என்பதுதான்
மக்களின் அடிப்படைக் கோரிக்கை.
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு
19.07.2025
தீக்கதிர்
கட்டுரை
--------------------------------------------------------------------------------------------------------
போராட்டம் குறித்த தீக்கதிர் செய்தி-
-
மலையடிக்குப்பத்தில்
முந்திரி மரங்களை அழிக்க
முயற்சி சிபிஎம்,
விவசாயிகள்
சங்கம் தடுத்து நிறுத்தி
மறியல்
கடலூர்,
ஜூலை 18
- கடலூர்
அருகே மலையடிக்குப்பம்
கிராமத்தில் மீண்டும் ஜேசிபி
எந்திரத்தின் மூலம் முந்திரி
மரங்களை அழிக்கும் முயற்சியை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி மற்றும் விவசாயிகள்
சங்கம் தடுத்து நிறுத்தி
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது.
கடலூர் அருகே
மலையடிக்குப்பம் கிராமத்தில்
164 ஏக்கர்
அரசு நிலத்தில் ஐந்து தலை
முறையாக 300-க்கும்
மேற்பட்ட குடும்பங்கள்
விவசாயம் செய்து வாழ்ந்து
வருகின்றனர். இந்த
நிலையில் தங்களுக்கு பட்டா
வழங்கக் கோரி பல ஆண்டுகளாக
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மற்றும் தமிழ்நாடு அரசிற்கும்
மனு அளித்தனர்.
ஆனால்,
மாவட்ட
நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல்
தொழிற்சாலைக்காக ஏராளமான
போலீசாரை வைத்துக் கொண்டு,
விவசாயம்
செய்து வந்த 9 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட முந்திரி மரங்களை
ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு
அகற்றினர். இது
தொடர்பாக நீதிமன்றத்தில்
வழக்கு தொடுக்கப்பட்டு,
முந்திரி
மரங்களை அகற்ற இடைக் கால தடை
விதித்து, விசாரணையில்உள்ளது.
இந்நிலையில்,
ஜூலை 15
ஆம் தேதி
தமிழ்நாடு முதலமைச்சர்
சிதம்பரத்தில் நடந்த
நிகழ்ச்சியில் மலையடிக்குப்பம்
கிராமத்தில் ரூ.75 கோடி
மதிப்பீட்டில் தோல் அல்லாத
காலணி தொழிற்சாலை அமைக்கப்படும்
என அறிவித்தார்.
காத்திருப்புப்
போராட்டம்
காலணி
தொழிற்சாலை எங்களுக்கு
வேண்டாம்; உடனடியாக
கிராம மக்களுக்கு பட்டா வழங்க
வேண்டும் என வலியுறுத்தி
கடந்த மூன்று நாட்களாக
மலையடிக்குப்பம் கிராமத்தில்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும்,
கிராமமக்களும்
இணைந்து காத்திருப்புப்
போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
ஏற்கனவே,
100 ஏக்கர்
பரப்பளவில் முந்திரி மரங்களை
மாவட்ட நிர்வாகம் அழித்த
நிலையில், மீதமுள்ள
50 ஏக்கர்
விவசாய நிலத்தில் உள்ள மரங்களை
அழிக்க 10-க்கும்
மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களுடன்
200-க்கும்
மேற்பட்ட காவல்துறையினர்
உதவியுடன் வருவாய்த் துறையினர்
வியாழக் கிழமை காலை வந்தனர்.
அவர்களை
தடுத்து நிறுத்தியும்,
ஜேசிபி
எந்திரங்களை உள்ளே விடாமலும்
விவசாயிகள் சங்க மாநிலத்
தலைவர் டி.ரவீந்திரன்
தலைமையில் மறியல் போராட்டம்
நடைபெற்றது. போராட்டத்தின்
போது வருவாய் கோட்டாட்சியர்
அபிநயா, வட்டாட்சியர்
மகேஷ் உள்ளிட்ட வருவாய்
துறையினர் மற்றும் காவல்துறை
உயர் அதிகாரிகள் போராட்டக்காரர்களை
அப்புறப்படுத்த கடும் முயற்சி
மேற்கொண்டனர். நீதிமன்றத்தில்
விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணை
முடிந்த பிறகு நீதிமன்ற
உத்தரவுக்கு கட்டுப்படுகிறோம்
என்று மக்கள் பலமுறை
வலியுறுத்திக் கூறினர்.
ஆனால்,
போராடும்
மக்கள் சொல்வதை காது கொடுத்து
கேட்காமல், “எங்களைத்
தடுக்காதீர்கள், நாங்கள்
முந்திரி மரங்களை அகற்ற
வேண்டும்” என்று பிடிவாதமாக
கோட்டாட்சியர் தெரிவித்தார்.
நீதிமன்றத்தை
அவமதிக்கும் அதிகாரி
நீதிமன்றம்
கண்டனம் தெரிவித்தாலும்
பரவாயில்லை என்றும்,
அதை நாங்கள்
சந்திக்க தயார் என்றும்,
நீதிமன்ற
அவமதிப்பு வழக்கு தொடுத்தாலும்
கவலையில்லை என்றும் ஆக்ரோஷமாக
கோட்டாட்சியர் அபிநயா
தெரிவித்தார். இதனால்
இரண்டு மணி நேரத்திற்கு
மேலாக கடும் வாக்குவாதம்
ஏற்பட்டது. “எங்கள்
மீது பொக்லைன் இயந்திரங் களை
ஏற்றிவிட்டு முந்திரி மரங்களை
அப்புறப்படுத்தச் செல்லுங்கள்’
என்று கூறிய நிலையில்,
வியாழக்கிழமை
மதியம் 2:30 மணி
வரை நீதிமன்ற உத்தரவுக்கு
கால அவகாசம் கொடுத்தனர்.
இதனையடுத்து
அமைதியான முறையில் காத்திருப்புப்
போராட்டத்தை தொடர்ந்தனர்.
போராட்டப்
பந்தலிலேயே சமைத்தும்
சாப்பிட்டனர். இந்தப்
போராட்டத்தில் சிபிஎம்
மாவட்டச் செயலாளர் கோ.மாதவன்,
மாநிலக்குழு
உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு,
விவசாயிகள்
சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.
ரவிச்சந்திரன்,
மாவட்டச்
செயலாளர் ஆர்.கே.சரவணன்,
மாவட்டப்
பொருளாளர் ஆர்.ராமச்சந்திரன்,
போராட்டக்குழு
ஒருங்கிணைப்பாளர்கள்
ஜெ.ராஜேஷ்கண்ணன்,
எஸ்.தட்சிணாமூர்த்தி,
லோகநாதன்,
செல்வகுமார்,
விவசாயத்
தொழிலாளர்கள் சங்க மாவட்டச்
செயலாளர் எஸ்.பிரகாஷ்,
மாநிலக்குழு
உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன்,
சிபிஎம்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
பி.கருப்பையன்,
வி.சுப்புராயன்,
ஆர்.அமர்நாத்,
மாவட்டக்குழு
உறுப்பினர்கள் பஞ்சாட்சரம்,
ராஜா,
ஸ்டீபன்
ராஜ், ஜெயபாண்டியன்,
முத்துக்குமரன்,
கே.பி.சௌமியா
மற்றும் கிராம மக்கள் திரளாக
பங்கெடுத்தனர். கோரிக்கைகள்
வெல்லும் வரை காத்திருப்புப்
போராட்டம் தொடரும் என்று
போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
விவசாயிகளை
அப்புறப்படுத்த நீதிமன்றம்
இடைக்கால தடை
சென்னை
உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை
(ஜூலை
18) அவசர
வழக்காக விசாரிக்க வேண்டும்
என வழக்கறிஞர் திருமூர்த்தி
முறையீடு செய்தார்.
நீதிபதிகள்
சுந்தர் மற்றும் சுரேந்தர்
அமர்வு, அவசர
வழக்காக மதியம் விசாரிப்பதாக
அறிவித்தனர். அதன்படி,
இந்த வழக்கு
பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டது. அப்போது,
அரசின்
கூடுதல் தலைமை வழக்கறிஞர்
ஜெ.ரவீந்திரன்
ஆஜராகி, “அரசின்
பொது திட்டத்திற்கு இந்த
நிலங்கள் கையகப்படுத்தப்
படுவதாகவும், இந்த
பகுதியில் உள்ள விவசாயிகள்
அனைவரும் வசதி உள்ள விவசாயிகள்தான்”
என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு
மனுதாரர் தரப்பில் ஆஜரான
வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி,
“இது தொடர்பாக
விவசாயிகள் சார்பில் பேரிடர்
மேலாண்மை முதன்மைச் செயலாளரிடம்
மறு ஆய்வு கோரி கோரிக்கை மனு
கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் தடை
விதிக்குமாறு கேட்டுள்ளோம்”
என்றும் வாதிட்டார்.
இரு
தரப்பு வாதங்களையும் கேட்ட
நீதிபதிகள், “பேரிடர்
மேலாண்மை துறை முதன்மைச்
செயலாளர் முடிவெடுக்கும்
வரை விவசாயிகளை அந்தப் பகுதியில்
இருந்து வெளியேற்றக் கூடாது”
என இடைக்கால தடைவிதித்து
உத்தரவிட்டனர். மேலும்,
விவசாயிகளுக்கு
எதிராக முடிவு எடுக்கப்பட்டால்,
அதற்கு
மேல்முறையீடு செய்வதற்கு
பத்து நாட்கள் கால அவகாசம்
வழங்கியும் நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
முடிவுக்கு
வந்த காத்திருப்பு போராட்டம்
நீதிமன்ற
உத்தரவைத் தொடர்ந்து,
மலையடிக்
குப்பத்தில் நடைபெற்று
வந்த காத்திருப்பு போராட்டம்
முடிவு பெற்றது. தமிழ்நாடு
விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்
தலைவர் டி.ரவீந்திரன்
போராட்டத்தை நிறைவு செய்து
பேசினார். நீதிமன்றம்
உத்தரவு மாவட்ட நிர்வாகத்திற்கு
தெரிய வந்ததை அடுத்து,
போராட்டக்
களத்தில் குவிக்கப்பட்டிருந்த
10-க்கும்
மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள்,
200-க்கும்
மேற்பட்ட காவல் துறையினரை
திரும்பப் பெற்றது.