திங்கள், 27 அக்டோபர், 2025

ஒரு பாலஸ்தீன அகதியின் அறிவியல் பயணம்


ஓமர் யாஹி

சுதந்திர பாலஸ்தீனம் அமையவும், இஸ்ரேல் நடத்தி வரும் காசா இனப் படுகொலைக்கு எதிராகவும், இனவெறி இஸ்ரேல் அரசுடனான இந்திய அரசின் அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்யவும் வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில்  அக்டோபர் 8 அன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை கொடைக்கானலிலிருந்து நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தேன்.

காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்கு தலைக் கண்டித்தும், அங்கு உடனடி யாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும்; அதற்கான முயற்சிகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும்  தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது என அலைபேசிக்கு ஒரு செய்தி வரும் ஓசை கேட்டது.

நானோமெக்கானிக்ஸ், நானோமெனுபாக்சரிங், ஒப்டோ எலக்ட்ரானிக்ஸ், எரிசக்தி சேமிப்பு, எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் இந்திய இளம் ஆராய்ச்சியாளர், ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மண்டி (IIT Mandi) இயற்பியல் பேராசிரியர், முனைவர் விஸ்வநாதன் பாலகிருஷ்ணன் அவர்களிடமிருந்து ஒரு செய்தி குறிப்பு வந்திருந்தது.

இருட்டில் பிறந்த ஒளி

அந்த குறிப்பில் 2025-ஆம் ஆண்டு இரசாயனவியல் துறையில் நோபல் பரிசு பெற்ற ஓமர் யாஹி குறித்து அவரது மகிழ்ச்சி இருந்தது. அதில் முக்கியமாக கீழ்க்காணும் வரிகள் இருந்தது.

"ஓமர் யாஹி என்ற பெயர் இன்று உலகம் முழுவதும் அறிவியல் உலகில் ஒலிக்கிறது. ஆனால், இந்த வெற்றி ஒரு தங்கக் கோப்பையில் வந்தது அல்ல. அது தண்ணீர் இல்லாத சிறிய அறையில் பிறந்த ஒரு சிறுவனின் கனவில் இருந்து தொடங்கியது.”

“1965-ஆம் ஆண்டு, ஜோர்டானின் அம்மானில் ஓமரின் பெற்றோர் பாலஸ்தீன அகதிகள். பத்து பேர் கொண்ட குடும்பம் ஒரு சிறிய அறையில் வாழ்ந்தது. தண்ணீர் அரிது, மின்சாரம் அடிக்கடி போய்விடும். ஆனால் அந்த இருட்டில் கூட ஒரு ஒளி இருந்தது - கல்விக்கான ஆசை. அவரின் தாய் எழுத்தறிவு இல்லாதவராக இருந்தாலும், "புத்தகங்கள் உன்னை ஒருபோதும் வஞ்சிக்காது" என்று சொல்லி அவரை ஊக்குவித்தார்.”

பாலஸ்தீனத்தின் மீது அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் நடத்திவரும் கொடூர தக்குதல் அங்கி கொத்து கொத்தாக இறந்து மடியும் குழந்தைகளில் எத்தனை அறிஞர்களை உலகம் இழக்கிறதோ. ஓமர் யாஹி கண்டுபிடிப்பு குறித்து படிக்க, படிக்க வியப்பின் எல்லைக்குச் செல்வீர்கள் நீங்கள்?

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் சென்னையில் போராட்டம் நடந்துகொண்டிருந்த போதுதான் ஓமர் யாஹி அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. என்ன ஒரு ஆச்சரியமான ஒற்றுமை!

2025 ஆம் ஆண்டிற்கான ‘வேதியியல் நோபல் பரிசு’ ஜப்பானைச் சேர்ந்த கியோட்டோ பல்கலைக்கழக பேராசிரியர் சுசுமு கிடகாவா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெல்பேர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் ராப்சன், அமெரிக்காவை சேர்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ஓமர் எம்.யாகி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. "உலோக - கரிம கட்டமைப்புகளின் மேம்பாட்டு வளர்ச்சிக்கான" பரிசு இது.

பாலைவன காற்றிலும் தண்ணீர்?

சுட்டெரிக்கும் சூரியன் வாட்டியெடுக்கும் வறண்டப் பாலைவன காற்றிலிருந்து தண்ணீர் எடுக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? சிரித்துவிட்டு கடந்து செல்வீர்கள். ஆனால் அறிவியல் அதை மெய்ப்பித்துள்ளது. ஆம் ஓமர் யாஹியின் கண்டு பிடிப்பு அதுதான். கலிபோர்னியா பல்கலைக் கழக பேராசிரியராக பணியாற்றி வரும் ஓமர் யாகியின் மிகச் சிறந்த மற்றும் நோபல் பரிசை பெற்ற கண்டுபிடிப்பு Metal-Organic Frameworks (MOFs) ஆகும். அதாவது உலோக – கரிம கட்டமைப்புகள் ஆகும். உலகின் எதிர்கால தேவைகளைத் தீர்க்கும் வகையில் உருவான இவரது கண்டுபிடிப்பு இன்று உலகம் முழுவதும் பல துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 

.MOFs என்னவென்றால்? 

உலோக அணுக்கள் (metal ions) மற்றும் கரிம மூலக்கூறுகள் (organic linkers) இணைந்து உருவாகும் முப்பரிமாண (3D) கட்டமைப்புகள். இதில் இடைவெளிகள் (pores) மிக அதிகமாக உள்ளன, அதாவது “துளைகள் நிறைந்த கட்டமைப்புகள்”. ஒரு கிராம் MOF என்பது, ஒரு கால்பந்து மைதானத்தைவிட அதிக பரப்பளவைக் கொண்டிருக்கும் அளவுக்குத் துளைகள் கொண்டிருக்க முடியும்! உதாரணமாக ஒரு தேன்கூட்டைக் கற்பனை செய்து கொள்ளுங்கள் ஒரு தேன் கூட்டை நூலாக மாற்றினால் அது ஒரு கால் பந்து மைதானத்தின் எல்லை கோடாக மாறும் அவ்வுளவு அடர்த்தி அது. 

MOFs எப்படி பயனளிக்கின்றன? 

புவியின் வெப்பமயமாதல் காரணமான CO₂ வாயுவை கைப்பற்றி, பாதுகாப்பான முறையில் சேமிக்க உதவுகிறது. பனிக்கட்டிகளோ, மின் சக்தியோ இல்லாமல், வளையில்லா பகுதிகளில் காற்றிலிருந்து குடிநீரை உருவாக்கும் தொழில்நுட்பத்திற்கு வாய்ப்பு. சுத்தமான எரிசக்தியாக ஹைட்ரஜனை சேமிக்க மிகச் சிறந்த வழி. நோய்வாய்ப்பட்ட உறுப்புகளில் மருந்துகளை நேரடியாகச் செலுத்த உதவுகிறது. கழிவுகளை சுத்தப்படுத்துதல், பசுமை தொழில்நுட்பங்களை உருவாக்குதல் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.இது வெறும் ஒரு அறிவியல் வெற்றியாக அல்ல, உலகத்தின் எதிர்கால சக்தி, சுற்றுச்சூழல் மற்றும் மருத்துவத் துறையில் ஒரு புதிய வழியைத் திறந்த சாதனையாகும். 

ஹைர்டஜன் புகும் போது :

 ஹைட்ரஜன் மிக மெதுவாகச் சூழலில் பறக்கும் மிகச் சிறிய அணுக்கள் கொண்ட வாயு. இதை சுருக்கி பாதுகாப்பாகச் சேமிப்பது மிகக் கடினம். உயர் அழுத்தத் தொட்டிகளில் (high-pressure tanks) வைத்தால், அதிர்ச்சி, வெடிப்பு அபாயம் ஏற்படும். ஆகவே, அதனை பாதுகாப்பாக, திறனாக சேமிக்க புதிய வழிகள் தேவைப்படுகின்றன. அந்த புதிய வழியைத் திறந்தவர் ஓமர் யாஹி.

 ஹைட்ரஜன் அணுக்கள் MOF கட்டமைப்பின் உள்ளே புகும். அந்த இடைவெளிகள் (pores) ஹைட்ரஜனை ஊக்கமுடன் தக்க வைத்துக்கொள்கின்றன. தேவைப்படும் நேரத்தில், அந்த ஹைட்ரஜன் வெளியேற்றப்படும். உதாரணமாக, ஒரு ஹைட்ரஜன் இஞ்சின் அல்லது fuel cell க்கு செல்லும். இதனால் குறைந்த வெப்பநிலையில் கூட அதிக அளவு ஹைட்ரஜனை சேமிக்க முடிகிறது. அழுத்தம் இல்லாமலே சேமிக்க முடிகிறது. இது மிகவும் பாதுகாப்பானதாகும். இந்த அற்புத கண்டுபிடிப்பைத்தான் ஓமர் யாஹி செய்துள்ளார் 

ஓமர் யாஹியின் சொற்கள்: 

"நாம் உருவாக்கும் ஒவ்வொரு பொருளும் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்க வேண்டும்." இதுதான் இந்த கண்டுபிடிப்புக்கு பின்னால் அவர் சொன்ன சொற்கள். ஓமர் யாகி போன்றவர்கள் தான் அறிவியல் உலகின் உண்மையான கதாநாயகர்கள். இவர் உருவாக்கிய MOFs போன்ற தொழில்நுட்பங்கள், உலகின் சக்தி சிக்கல்கள், நீர் தட்டுப்பாடு, வாயுக் களைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் புதிய வழிகாட்டிகளாக அமைந்துள்ளன. இளைய தலைமுறையின் அறிவியலாளர்களுக்கு இவர் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். அறிவியலை ஆர்வத்துடன் கற்கவும், உலக நன்மைக்காக பயன்படுத்தவும் அவரின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறது.

 ஒன்றை மறந்த்விடாதீர்கள்! இந்த பாலஸ்தீனியனின் கண்டுபிடிப்பை இனவெறி இஸ்ரேல் கண்டிப்பாக பயன்படுத்தும். தங்களால் அகதியாக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்த ஒருவன் கண்டுபிடிப்பு இதுவென அலட்சியம் செய்யாது.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

----------------------------------------------------

எஸ் .ஜி .ரமேஷ்பாபு 

____________________________________

பின் குறிப்பு : நான் அறிவியல் முற்றிலும் புரிந்த விற்பன்னன் இல்லை.  எனக்கு புரிந்ததை எழுதி உள்ளேன். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும் . நன்றி! 

ஞாயிறு, 12 அக்டோபர், 2025

விளையாட்டை போர்களமாக்கு போர்க்களத்தை விளையாட்டாக்கு

 


ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர். அதன் விளைவு ஒன்றுதான். இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்”  - பிரதமர் மோடி  

இதுவொரு அற்புதமான வெற்றி. எங்கள் வீரர்களின் சக்தி வாய்ந்த ஆற்றல் எதிரிகளை மீண்டும் தகர்த்தெறிந்துள்ளது. எந்த துறையாக இருந்தாலும் பாரதம் வெல்வதற்கே விதிக்கப்பட்டுள்ளது.”  - அமித்ஷா  

இந்துக்களை இராணுவமயமாக்கு, இராணுவத்தை இந்துமயமாக்கு என்று முழக்கமிட்டவர்கள் இப்போது விளையாட்டை போர்க்களமாக்கு - போர்க்களத்தை விளையாட்டாக்கு என உருமாறி நிற்கின்றனர்.

இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு ஏமிரேட்ஸ், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங், இலங்கை ஆகிய 8 அணிகள் பங்கேற்ற  19 போட்டிகளுடன் முடிவடைந்த ஆசிய கோப்பை  கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிகொள்ளும் முதல் ஆசியக் கோப்பை ஆட்டம் இது. பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி தனது  9 ஆவது ஆசியக் கோப்பையை வென்றது.  

கிரிகெட்டை கைப்பற்றுதல்

இந்த வெற்றியைத்தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையுடன் ஒப்பிட்டு மோடி பேசியுள்ளார். விளையாட்டையும் தனது மதவெறி நிகழ்ச்சி நிரலில்  இணைத்து ஆனந்தக் கூத்தாடி உள்ளனர். இதற்கு  அச்சாரம் இப்போது போடப்பட்டதல்ல மோடி ஆட்சிக்கு வந்த மறு ஆண்டு அதாவது 2015 இல் அனுராக் தாக்கூர் என்ற பாஜக தலைவர் இந்திய  கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதில் துவங்கியது.

அதன் பின் 2019 இல் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றதும் பல முறை கிரிக்கெட் வீரர்களின் சட்டை வண்ணம் காவியை நினைவூட்டத் துவங்கியது.காவிக்கூட்டத்தின் திட்டங்களை அமலாக்க ஒரு நல்ல பயிற்சியாளர் தேவைப்பட்டார். அப்போது தான் கட்சியின் இணைந்து உடன் 2019 தேர்தலில் கிழக்கு தில்லி தொகுதியில் மக்களைவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுதம் கம்பீர் 2024  இல் களத்தில் இறக்கப்பட்டார். ஆம் அவர் இந்திய  அணியின் தலைமை கோச்சாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விராட் கோலி எனும் மனிதன்  

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில், ஹரிஸ்  ரவூப் பந்தில் அடித்த ஒரு ஹிமாலய சிக்சர் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத தருணத்தை உருவாக்கினார். 19 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தில், ஹரிஸ் ரவூப் பந்துவீசும்போது, கோலி ஒரு நேரடி சிக்சரை அடித்தார், அது ரவூப்பின் தலை மேல் சென்று மைதானத்தின் எல்லையைக் கடந்தது.

இந்த சிக்சர், “Fan Craze Greatest Moment” என்ற விருதைப் பெற்றது, இது உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய தருணமாகக் கருதப்படுகிறது. அந்த நாள் இந்தியா பாகிஸ்தானை வெற்றி கொண்டது. அதைத் தொடர்ந்து, இயல்பிலேயே மிகவும் ஆக்ரோஷமாக விளையாடும் குணம் படைத்த விராட் கோலி களத்தின் எல்லையில் செய்த  சிறந்த சம்பவம் என்ன தெரியுமா?  பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாமை கட்டி அணைத்து அன்பை விதைத்தார். தனக்கு எதிராக கோபம் கொண்டு பந்துகளை வீசிய ஹரிஸ் ரவூப் கைகளை இறுக்க அணைத்து தனது நேசத்தை வெளிப்படுத்தினார். விளையாட்டு மைதானம் என்பது இரு அணிகள் மோதிக்கொள்ளும் இடம்.  மைதானத்தின் எல்லையைக் கடந்தால் நாம் நண்பர்கள். விளையாட்டு என்பது அன்பை விதைக்க  எனப் பாடம் நடத்தினார்.

ஜாகிர்கானும் வாசீம் அக்பரும்  

அது அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலம்.  கார்கில் போரும், பாராளுமன்ற தாக்குதலும் முடிந்த  சூழல். ”எப்போது எல்லை கோட்டை விட்டோம் என சொல்லாமல்” கார்கிலை மீட்டோம் என முழக்கம் எழுந்த சூழல். இந்தியா, பாகிஸ்தான் பரம எதிரிகளாக முட்டிக்கொண்டு இருந்த சமயம்.

 2003 உலக கோப்பையின் முக்கியமான ஆட்டம்  அது. அந்த சமயத்தில் இந்திய அணியின் தலைவர் சவுரவ் கங்குலி பாகிஸ்தான் அணியின் தலைவர் வக்கார் யூனுஸ். முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 273/7 ரன்களை எடுத்தது. பின்பு டெண்டுல்கர் அடித்த 98 ரன் உதவியுடன் இந்தியா 276/4  என்ற கணக்கில் வென்றது. அந்தப் போட்டியில் ஜாகிர்கான் 8 ஓவர்கள் பந்து வீசி 46 ரன்கள்  மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார். துவக்க பவுலராக பாகிஸ்தானின் ரன்களை கட்டுப்படுத்த உதவினார்.  

ஆனால், இந்தப் போட்டிக்கு முதல் நாள் நடந்த சம்பவம் மிகவும் பிரச்சனைக்குரியதாக பாகிஸ்தான் பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது. அதாவது போட்டிக்கு முதல் நாள் வலைப் பயிற்சியின் போது இந்திய பந்து வீச்சாளர் ஜாகிர்கான் பாகிஸ்தானின் சிறந்த பந்து வீச்சாளரான வாசீம் அக்பரிடம் பந்து வீச்சு சந்தேகங்களைக் கேட்டு தன்னை தயார் செய்து கொண்டிருந்தார். இது  பாகிஸ்தான் ஊடகங்களால் பெரிய பேசு பொருளாக மாற்றப்பட்டு பாகிஸ்தான் தோல்விக்கு இதுதான் காரணம் போல சித்தரிக்கப்பட்டது.

கேள்விகளுக்கு வாசீம் அக்பர் மிக நிதானமாக பதில் சொன்னார் ‘விளையாட்டு வீரர்கள்  நுணுக்கங்களை பரிமாறிக்கொள்வதும் - தெரியாததை தெரிந்தவர்கள் சொல்லி கொடுப்பதும் விளையாட்டின் ஒரு பகுதி. இதில் நாடுகள் என்ற எல்லைகள் ஏதும் கிடையாது”

காவிகளின் கோட்பாடு  

இன்னும் இப்படி நிறையச் சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகலாம். விளையாட்டு மனிதர்களை ஒருங்கிணைக்க. பேதங்களை கடந்து ஒன்றிணைய. ஆனால் காவிகள் விளையாட்டுத் துறையை கைப்பற்றியதும் நிலைமை தலைகீழாக மாறுகிறது

தற்போது நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் மூன்று  முறை பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோதியது. ஆனால் ஒரு  முறைகூட இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. அதை பெருமையாக சங்கிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.  ஆசிய கிரிக்கெட் வாரியத் தலைவர் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்  மொஹ்சின் நக்வி அவர்களிடம் இருந்து வெற்றிக் கோப்பையை ஏற்க  மறுத்தனர். துபாய் மைதானத்திலிருந்து ஆசியக் கோப்பையுடன் வாரியத் தலைவர் வெளியேறினார்!  

ஆனால் ஆசியகோப்பை துவக்க விழாவில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மொஹ்சின் நக்வி, இந்தியா உட்பட அனைத்து அணித் தலை வர்களுடனும் நின்றார். அன்று இந்திய அணித்தலைவர் கைகுலுக்காமலோ, புகைப்படத்திற்கு போஸ் கொடுக்காமலோ இருக்கவில்லை.  பின்னர் அவரிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்தது எது?

அங்கு தான் கவுதம் கம்பீர் உள்ளிட்ட சங்கிக் கூட்டம் தனது வேலை களை காட்டியது.  இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து முதலாவது வெற்றி பெற்ற போது, அந்த வெற்றியை இந்திய ஆயுத படைக்கும், மற்றும் பஹல்காம் தாக்குதலில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய அணி தலைவர் சூர்யகுமர் யாதவ் கூறினார். எல்லையில் இராணுவ வீரர்கள் இந்த வெற்றியை கொண்டாடிய வீடியோக்கள் பரப்பப்பட்டது.  

போர்களத்தில் சோட்டாபீம்

இந்தியா - பாகிஸ்தான் போர்க்களத்தை சோட்டாபீம் உட்பட பல வீடியோ கேம்களாக மாற்றி நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் இளம் நெஞ்சுகளில் பாகிஸ்தான் வீரர்களை கொன்றழிக்க பயிற்சி கொடுக்கின்றனர். அதே பணிகளை பாகிஸ்தானும் செய்கிறது. உதாரணமாக இந்தியாவிலும் பாகிஸ்தானில் மத அடிப்படைவாத அறிவு ஜீவிகள் வீடியோ கேம் மூலம் இளம் தலைமுறையினரை தங்கள் பக்கம் ஈர்க்கின்றனர்.

இரு நாட்டிலும் உள்ள வீடியோ  கேம்களை பார்த்தால் தெரியும்.  1971: Indian Naval Front 1971 இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின் கடல் மேடையை மைய மாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு போர்க் கேம். Yoddha: இந்தியாவின் கார்கில் யுத்தத்தை சார்ந்த வீடியோ கேம். War Ahead 1947  “Pakistan Vs India War” என்ற தலைப்பில் மொபைல் சூட்டிங் கேம்.  Army Commando Mission: India vs Pakistan War - இந்தியா vs  பாகிஸ்தான் போர் பின்னணியில் உள்ள ஒரு 3D ஷூட்டர் கேம். FAU-G (Fearless and United Guards) இந்த கேம் குல்வான் மோதலை  கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.  

Pak vs India Surgical Strike – Air Force Encounter: இந்த  கேம் பாகிஸ்தான் பார்வையில் தேவைப்படும் “சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்”  மற்றும் வான் போர் காட்சிகளை கொண்டதாக விளக்கப்பட்டுள்ளது. PK‑India Real Tank War 2016: இந்த கேமில் நீங்கள் பாகிஸ்தானில் டேங்க் இயக்கி இந்திய அணியின் டேங்க்களை அழிக்க  வேண்டும் என்று கூறப்படுகிறது. Pakistan Army Retribution: இது  பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட ஒரு First‑Person Shooter கேம்,  2014 பீசவர்ந் பள்ளி தாக்குதலை அடிப்படையாக கொண்டு உள்ளது.  

மற்றொரு பக்கம் கிரிகெட் விளையாட்டை போர்க்களத்துடன் இணைத்து விளையாட்டைக் காவிமயமாக மாற்றுகின்றனர். இதற்கு  எதிர்வினையாக பாகிஸ்தானில் கிரிக்கெட் பச்சைமயமாகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. பஹல்காம் தாக்குதலை யாரும் ஆதரிக்க முடியாது. ஆனால் அதை வைத்து அரசியல் செய்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?  தேசபக்தி வேறு, தேசவெறி வேறு என்ற எல்லைக் கோட்டை அழித்து விளையாட்டை காவிமயமாக்கும் நிலையை எதிர்த்து நிற்பது  இந்தியர்களின் கடமையாக முன்னெழுகிறது

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

(12.10.2025 - தீக்கதிர் - வண்ணக்கதிர் இணைபில் வெளி வந்த கட்டுரை) 

 

மேற்கண்ட கட்டுரைக்காக எனது மகன் சத்யகுமார் ஜெமினியில் உருவாக்கிய ஓவியம்   

சாட் ஜிபிடியில் நான் உருவாக்கிய ஓவியம்
 

சனி, 4 அக்டோபர், 2025

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்

 



உயிரற்றுக் கிடந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையின் கன்னத்தைத் தடவிக்கொண்டிருந்தார் அந்தத் தாய். குழந்தையின் உதட்டையும் தனது கன்னத்தையும் மாறி மாறித் தொட்டுக் கொண்டிருந்தார். அவரால் பேச முடியவில்லை; இல்லை, அவரால் பேச முடியாது. அவர் ஒரு மாற்றுத்திறனாளி. தனது மாமியார் குழந்தையுடன் நடிகர் விஜய்யைக் காண சென்றபோது அவர் ஏதும் செய்ய இயலவில்லை. இப்போது “ஐயோ, என் பேரன் சாவுக்கு நானே காரணமாகிவிட்டேனே” என்று  அவரது மாமியார் கதறித் துடிக்கும்போது அவரால் ஏதும் செய்ய இயலவில்லை. 41 உயிர்கள், தன்னை அரசியல் கட்சியின் தலைவன் என நம்பும் ஒரு நடிகரின் அலட்சியத்தால் பலியாகியுள்ளன.

யார் காரணம்?

கரூரில் நடந்த கோரமான 41 உயிர்களின் ‘அரசியல் மரணங்கள்’ குறித்து நிறைய ஆதாரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அவரது ரசிகர்கள் அல்லது அந்தப் போர்வையில் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது மனிதத்தன்மையற்ற விவாதங்களை முன்வைக்கின்றது. “இந்தச் சம்ப வத்திற்கும் நடிகர் விஜய் அவர்களுக்கும் எந்தச் சம் பந்தமும் இல்லை” என்பன போன்ற விவாதங்களும், முழுக்க முழுக்க இது திமுக அரசின் அலட்சியப் போக்கு என ஒப்பாரி வைக்கின்றன.

பகல் 12 மணிக்கு விஜய் பேசுவதாக அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று காலை 9 மணி முதலே மக்கள் சம்பவ இடத்தில் குவியத் தொடங்கினர். குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏற்பாடு ஏதும் இல்லை. இரவு 7 மணிக்கு மேல் விஜய்  வந்தார். வரும்போதே தன் பின்னால் ஆயிரக்கணக் கானோரை அழைத்து வந்தார்; இல்லை, இல்லை, இழுத்து வந்தார். ஆம், ஊரின் எல்லையில் அவர் வாகனத்தின் மீது ஏறித் தனது ரசிகர்களைச் சந்தித்திருந்தால் கூட்டம் இத்துணை முண்டியடித்து வந்திருக்காது. வாகனத்தில் உள்ளே விளக்குகளை அணைத்து இருட்டில் அமர்ந்து, கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அனைவரையும் இழுத்து வந்த கேவலம்தான் அடுத்த சம்பவங்களுக்குக் காரணம்.

ஒரே நேரத்தில் கூட்டம் அதிகமாகச் சேர்ந்து நெரிசல் ஏற்பட்டுச் சமாளிக்க முடியாமல் கூட்டத்தில் சிக்கித் தவித்த சோகத்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் சொல்லும்போது அந்த வெப்பம் நம்மைத் தாக்குகிறது. விஜய் பேசத் தொடங்கும் முன்னே நூற்றுக்கணக்கானோர் மயக்க நிலைக்குச்  சென்றனர். பலர் மரணத்தைத் தழுவினர். இறந்தவர்கள் உடலுடன் தொண்டர்கள் ஆம்புலன்ஸை நோக்கி ஓடும் காணொலிகள் நெஞ்சை அடைக்கச் செய்கின்றன.

காலை முதல் இரவு வரை உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் நெடுநேரம் காத்திருந்ததே இக்கொடூரச் சம்பவத்திற்கு முக்கியமான காரணமாக, மரணத்தின் அருகில் சென்று பிழைத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

திட்டமிட்ட தாமதம்:

மரங்கள் உடைந்து, கூரைகள் பிய்ந்து, கடைகள் நொறுங்கி, சாலையோர வியாபாரிகளின் எளிய விற்பனைப் பொருட்கள் நொறுங்கி, வீட்டின் உரிமையாளர்கள் கதறும் சம்பவங்கள் பெரம்பலூர், அரியலூர்,  நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நடந்துள்ளன. உண்மையில் விஜய்யின் பயணத் திட்டப்படி செப்டம்பர் 27 அன்று திருவள்ளூர் மற்றும் வடசென்னை ஆகிய இடங்கள்தான் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் எதற்காக அந்தத் தேதிகளில் நாமக்கல்லும் கரூரும் தேர்ந்தெடுக்கப் பட்டன? 25ஆம் தேதி எடப்பாடியின் பிரச்சாரம் முடிந்த சூழலில், முழுக்க முழுக்கத் தனது பலத்தைக் காட்ட வேண்டும் என்ற ஈகோ மட்டுமே காரணம். கரூருக்கும் முன் நாமக்கல்லில் மரணங்கள் நிகழ அதிக வாய்ப்பிருந்ததைப் பல காணொலிகள் இப்போது வெளியாகி வருகின்றன.

தனது கட்சியினர் () ரசிகர் கூட்டத்தினர் பலர் இதற்கு முன்னர் விபத்தில் மரணமடைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்காக அக்கட்சியின் கொடி இறங்கியதே இல்லை. ஒரே நேரத்தில் 41 பேர் மரணமடைந்தும்கூட அந்தக் கொடி இறங்க மறுக்கிறது. அதைவிடக் கொடுமை, அவர்கள் தலைமை அலுவலகம் ஆயுத பூஜை கொண்டாடுவதுதான்.

அவர் இல்லை என்றாலும் அவரது கட்சிக் கொடிக் கம்பம்கூடப் பலி கேட்கும். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க பிரச்சா ரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு 38 நாட்களுக்கு முன்பு, அதாவது  ஆகஸ்ட் 19 அன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப் புத்தூர் அருகில் உள்ள வன்னியம்பட்டியில்  பட்டதாரியான கே.காளீஸ்வரன் என்ற மாணவர் த.வெ.க கொடி கட்டும் முயற்சியில் மின்சாரம் தாக்கி அநியாயமாகத் துடிக்கத் துடிக்க உயிரிழந்தார். இந்த மரணம் குறித்த எந்த விதமான அசைவும் விஜய்யிடம் கிடையாது.

வாய் பிளந்து நிற்கும் பாஜக:

அதிமுக, பாஜக இரண்டும் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடுமா என்ன? மணிப்பூர் கொடுமை நிகழ்ந்து 2 ஆண்டு கடந்தாலும் அப்பக்கம் முகத்தைத் திருப்பப் பாஜகவால் முடியாது. அங்கு நடந்த நூற்றுக்கணக்கான துயர மரணங்கள் குறித்து ஒரு குழு அமைத்து விசாரணை செய்ய இயலாது. ஆனால் சம்பவம் நடந்த ஓரிரு நாட்களில் தில்லியிலிருந்து விசாரணைக்குழு கரூர் வந்து நாடகம் ஆடுகிறது. ‘பாசிச பாஜக’ எனப் பேசும் நடிகர் விஜய்க்குக் கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய அரசின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, துப்பாக்கி ஏந்திய 8 முதல் 11 பேர் வரையிலான போலீசார் மற்றும் கமாண்டோக்கள் அவரது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்போது அவர்களிடம் விஜய் பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என அறிக்கை கேட்டுள்ளது ஒன்றிய அரசு.

ஏற்கெனவே அதிமுகவை விழுங்கியுள்ள பாஜக, இந்த மரணங்களை முன்வைத்து விஜய்யை விழுங்கத் தொடங்கியுள்ளது. தமிழக அரசின் ஒற்றில் அல்லது முன் அனுமானத்தில் அல்லது அரசின் பாதுகாப்பில் இருக்கும் முரண்களை ஆதாரத்துடன் சுட்டாமல், மொத்தச் சம்பவத்திற்கும் திமுக அரசுதான் காரணம் என எடப்பாடி கூவி வருவது அவரது தில்லி தலைமை இடும் கட்டளை என்பதைத் தமிழக மக்கள் அறிந்தே இருக்கின்றனர். பாவம், அவர் என்ன செய்வார்?

ஓடி ஒளிந்த விஜய் கூட்டம்:

மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்காக, அரசியல் பிரச்சனைகளுக்காக, பொருளாதாரப் பிரச்சனைகளுக்காக எப்போதும் போராடிப் பழக்கமற்ற கூட்டம் இது. காவல்துறையின் நெருக்கடிகளுக்கோ, அவசர சூழலில் செயல்படும் பாங்கோ தெரியாத கூட்டம் இது. விஜய் என்ற ஒற்றைப் பிம்பத்தை ஆராதிக்கும் அரசியலற்ற திரள் இது. இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் மேட்டிமை ஆலோசனைக் குழுவுடன் கார்ப்பரேட் அரசியல் செய்யும் கலாச்சாரத்தை விஜய் தொடங்கியுள்ளார்.

அதன் விளைவுதான் மரணங்கள் நிகழ்ந்ததும் விஜய் கட்சியின் மொத்தத் தலைமையும் ஓடி ஒளிந்தது. தன்னைக் காண வந்த ரசிகனின் மரணங்கள் அவர்களை உலுக்கவில்லை. மரணமடைந்த குடும்பங்களுடன் இணைந்து நிற்க வேண்டும் என்ற அற உணர்வு சிறிதும் இல்லாமல் தலைமறைவானார். இரண்டு தினங்கள் கடந்து, கொஞ்சமும் வெட்கமின்றி தமிழக அரசுக்கு எதிராக ஒரு வீடியோவை விஜய்யால் வெளியிட முடிகிறது. மாதம் ஒரு கட்சி மாறும் ஆதவ் அர்ஜுனால் அரசுக்கு எதிராகப் ‘புரட்சி’ உருவாக வேண்டும் எனப் பதிவிட முடிகிறது. தங்களின் குற்றம் இன்னும் இவர்களுக்கு உறைக்கவே இல்லை.

ஒன்று மட்டும் உண்மை: “அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்.” அரசியலில் வெற்றி பெற்ற ஒருவர், அறத்தை (நீதி, தர்மம்) பின்பற்றாமல், தன்னலம், மோசடி, சுரண்டல், பொய்ச் செயல்கள் செய்து வந்தால், அது அவருக்கே எதிராக மாறி, அவரை அழிக்கும் என்பதே இதன் பொருள்.

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

மாநிலக்குழு உறுப்பினர், சிபி()எம்

(04.10.2025 தீக்கதிர் நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரை)


புதன், 30 ஜூலை, 2025

தோழர் ஆர்.முத்துசுந்தரம்: ஒரு நினைவு குறிப்பு


நேற்று தோழர் ஆர்.முத்துசுந்தரம் நினைவு தினம் என முகநூலில் தோழர்கள் இட்ட பதிவுகளை பார்த்தேன். அந்த மகத்தான ஆளுமை குறித்த நினைவுகள் சுழல துவங்கியது. அதில் ஒரு நினைவுக் குறிப்பு இது.

1991 ஆம் ஆண்டு நான் இந்திய மாணவர் சங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த காலம், அது. அப்போது கடலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஒரு நிகழ்வில் தோழர் ஆர்.எம்.எஸ் பேச வந்திருந்தார். தலைப்பு ”வெள்ளிப் பணி மலை மீது உலாவுவோம். அவர் நன்றாகப் பேசுவார் என்று தோழர்கள் சொன்னார்கள். கடலூர் சென்றேன். கூட்டம் துவங்கும் முன்பு ஒரு பெட்டிக்கடை வாசலில் ஒரு மெல்லிய உருவம் சிகிரெட் பிடித்தபடி நின்றது. அவருடன் சில அரசு ஊழியர் சங்க தோழர்கள் பேசிக்கொண்டிருந்தனர். ஆர்.எம்.எஸ் எனத் தோழர்கள் அடிக்கடி பேசியதை கேட்டு பெரிய தலைவர் என்ற பிம்பம் எழுந்தது. அங்கு நின்று கொண்டிருந்த தோழர்களிடம் எப்போது நிகழ்ச்சி துவங்கும் உங்கள் தலைவர் வந்துவிட்டாரா என்று கேட்டேன். அங்கு சிகெரெட் பிடித்துக்கொண்டிருந்த மெல்லிய உருவம் சிரித்துக்கொண்டே சொன்னது “வந்துகொண்டே இருக்காரு தோழர் சீக்கிரம் ஆரம்பிக்கலாம்”

எங்களுக்கு தலைவர்கள் என்றால் கே.பாலகிருஷ்ணன், சி.கோவிந்தராஜன், எஸ்.துரைராஜ், ஜி.கலியபெருமாள், டி.ராஜாராமன், மூசா போன்றோர்கள்தான். எல்லோரும் ஆஜானுபாகுவான உருவங்கள். அந்த கற்பனையில் ஆர்.எம்.எஸ் அவர்களை எதிர்ப்பாத்துக்கொண்டிருந்தேன். கூட்டம் துவங்கியது தோழர் டி.புருஷோத்தமன் கணீர் குரலில் பேசி ஆர்.எம்.எஸ் அவர்களை மேடைக்கு அழைத்தார். எனக்கு ஆச்சரியத்தை அடக்கவே முடியவில்லை. சிகிரெட் பிடித்த அந்த மெல்லிய உருவம் மேடை ஏறியது. மைக் ஸ்டேண்டைவிட கொஞ்சம் சதை பிடிப்போடு இருந்த அந்த உருவமா ஆர்.எம்.எஸ்? இவர் பேசுவாரா?

மனிதர் பேச பேசக் காதே இல்லாத பாம்பு மகுடிக்கு தலை ஆடும் சூட்சுமம் போல அந்த அந்த மனிதர் அந்த அரங்கத்தைக் கட்டிப் போட்டார். எனக்கு உடல் சிலிர்த்தது. அப்படி ஒரு குரலும் அதிலிருந்து தெளித்த சொற்களும், சொல்ல வந்ததை மிக எளிதாகக் கோபம் கொப்பளிக்க சொல்லும் வல்லமை அந்த மனிதனுக்கு இயல்பாய் வாய்த்ததா அல்லது இயக்கம் அளித்த கொடையா என தெரியவில்லை. ஆளும் வர்க்கத்தின் மீது இருந்த கோபத்தை அவர் பேசுவதைக் கேட்போர் மீது மிக எளிதாக அவரால் மடை மாற்றம் செய்ய முடிந்தது. பிறகு அவரது நிகழ்வுகளை நான் தவற விட்டதே இல்லை.

1993 – 94 கல்வியாண்டில் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் நடந்த தேர்தலில் பொருளியல் துறையின் செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்திற்கும் பா..க மாணவர் அணிக்கும் நடந்த சுவராசியமான சம்பவங்களை தனியாக எழுதலாம். ஒவ்வொரு வேலை நிறுத்தத்தின் போது இரு அமைப்புகளுக்கும் தகராறு நடப்பது அங்கு இயல்பாக இருந்தது. இந்த சூழலில் ஒவ்வொரு துறை பேரவை நிறைவு விழாக்களும் வெட்டி நிகழ்வுகளாக நடைபெறும். மாணவர்களிடம் வசூல் செய்து கும்மாளம் அடிக்கும் நிகழ்வாக நடந்துகொண்டிருந்தது.

பொருளியல் பேரவை நிறைவு விழாவை மிகவும் பயன் உள்ள நிகழ்வாக நடத்த அங்கிருந்த மாணவர் சங்க தோழர்களும் எனது நண்பர்களும் திட்டமிட்டோம். ஒரு நல்ல பேச்சாளரை அழைத்து நிகழ்வை நடந்த திட்டமிட்டோம். எங்கள் துறை தலைவர் பேரா.ஜெயராமன் மிகவும் மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார். எனக்கு யோசனை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் மனதில் தோன்றிய பெயர் தோழர் ஆர்.எம்.எஸ். அரசு ஊழியர்கள் சங்க தோழர்கள் மூலம் அவரது தேதியை வாங்கி அழைப்பிதழ் போட்டாகிவிட்டது.

நிகழ்ச்சி அன்று தோழர் ஆர்.எம்.எஸ் குறித்த நேரத்தில் கல்லூரிக்கு வந்துவிட்டார். கல்லூரியின் எதிரில் உள்ள ”பெருசு” தேநீர்க்கடையில் அமர்ந்து ஒரு சிகிரெட் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் அருகில் அவருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது பேரவை எற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த எனது நண்பர்கள் அஸ்லாமும், சங்கரும் வேகமாக வந்து ”மச்சான், எப்படா உங்க தோழர் வருவாரு” என்றனர். நான் சிரித்துக்கொண்டே கொஞ்சம் நேரத்தில் வந்துவிடுவார். நீங்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டைப் பாருங்கள் என்றேன். அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர், சிறந்த பேச்சாளர் என நாங்கள் செய்த பில்ட் அப்பை பார்த்து அவர்கள் ”பெரிய்ய்ய்ய்ய்ய தலைவரை” எதிர்பார்த்திருந்தனர். ஆனால் என்னை விட குள்ளமாக என்னைப் போல ஒல்லியாக சிகெரெட் பிடிக்கும் ஒரு உருவத்தை அவர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லைதான்.

முதலில் எங்கள் கல்லூரி முதல்வர் அனந்தபத்மநாபன் அவர்கள் அறைக்குச் சென்று அறிமுகம் செய்தேன். அவர் இவர் உருவத்தை ரசித்ததாக தெரியவில்லை. பிறகு நிகழ்வு நடைபெறும் அரங்காம் சென்றோம். நான் வரவேற்புரை ஆற்றிவிட்டு தோழர் ஆர்.எம்.எஸ் அவர்களைப் பேச அழைத்தேன். அளவுதான் கூச்சல் துவங்கியது. கூட்டத்தை கலைக்க ஒரு கூட்டம் திட்டமிட்டிருந்தது தெரிந்தது. நானும் எனது சகாக்களும் ஆத்திரத்துடன் எழுந்தோம். ஆர்.எம்.எஸ் சிரித்துக்கொண்டே என் கையை பிடித்து அமரச் சொன்னார்.

மைக் அருகில் சென்றார். ”ஏய்” என ஒரு ஓசை எழுப்பினார். கூச்சல் இட்ட அனைவரும் திரும்பினர். ”தோ பார், இஷ்டம் இருந்தால் உள்ளே இரு. இல்லை என்றால் வெளியே போ. நான்கு பேர் இருந்தாலும் நான் பேசுவேன்.” என ஆக்ரோஷமாக முழங்கினார். யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. சட்டென ஒரு மயான அமைதி. அந்த இடத்தை பிடித்து ஏறத்துவங்கினார் அப்படி ஒரு உரை வீச்சு அது. ஒரு மணி நேரம் பதினைந்து நிமிடம். உரைந்து நின்றது அரங்கம். அவர் நன்றி என்று முடித்த போது எழுந்த கரவொலி அடங்க நேரமானது. எனது கல்லூரி முதல்வர் அங்கு நடந்த ரசவாதம் புரியாத திகைப்பில் இருந்தார். அவரை அறிமுகம் செய்த போது அவர்கள் கண்களில் இருந்த அலட்சியம் இப்போது மரியாதை மிகுந்து காணப்பட்டது. எங்கள் துறைத் தலைவர் மிகவும் பெருமிதம் மிக்க நன்றியை ஆர்.எம்.எஸ் அவர்களுக்குச் சொன்னார். எனது சகாக்கள் ”மாப்ள .. உண்மையில் அவரு பெரிய்ய்ய்ய்ய்ய தலைவர் தாண்டா” என்றனர்

ஒரு நட்சத்திரம் மேகங்களுடன் கடந்து செல்வது போல நானும் எனது சகாக்களும் அவரை கல்லூரியிலிருந்த வெளியே அழைத்து வந்தோம்.

தன்னுடைய பேச்சாற்றலால், எழுத்தாற்றலால், சங்க செயல்பாட்டினால் மாநில செயலாளர், மாநில பொதுச்செயலாளர் மற்றும் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன தலைவராக உயர்ந்த ஆர்.எம்.எஸ் என்ற ஆளுமையிடம் அதற்குப் பிறகு மிக நெருக்கமாகப் பழக வாய்ப்புகளை மாணவர் மற்றும் வாலிபர் சங்கம் எனக்கு வழங்கியது.

உங்கள் நினைவுகள் உரமேற்றும் நினைவுகள் தோழர் ஆர்.எம்.எஸ்.

 

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு