மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!




2010 டிசம்பர் மாதம் டுனீஷியவின் நகரமொன்றில் வறுமையாலும்,வேலையின்மையாலும் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் போலீசாரால் அநியாயமாக தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார். அவர் பற்றவைத்த நெருப்பு எகிப்த், அல்ஜீரியா, மொராக்கோ, சூடான், சிரியா, யேமன், ஜோர்டான், லிபியா, பாலஸ்தீன மேற்குகரைப் பகுதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் உடன் சுழன்று அடித்தது. அரபு நாடுகளில் நடந்த போராட்டங்களில் அல்லது சமீபத்தில் எழுந்த எழுச்சிகளில் மதவாத கோரிக்கைகளும் அதன் சாயல்சார்ந்த தன்மைகளும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜனநாயக மற்றும் பொருளாதார கோரிக்கைகளை முன்வைத்து முழங்கியபடி இஸ்லாமிய இளைஞர்கள் வீதிகளில் அணிவகுத்தனர். பொருளாதார கோரிக்கை போல இங்கு நடந்த எழுச்சிகளில் தவராமல் இடம் பிடித்தது சே குவேராவின் படங்கள்.

ஆம், சே எழுச்சியின் அடையாளமாய் மாறிப்போனான். அவனை வியாபாரமாக மாற்ற முதலாளித்துவ சக்திகள் முயற்சி செய்துகொண்டே இருக்கின்றன. செருப்பில் சே வின் படத்தைப் போட்டு அவனை அவமானப் படுத்த முயல்கின்றனர். இந்த எல்லா முயற்சிகளிலும் அவன் போராட்டங்களைதான் இளைஞர்களுக்கு கற்றுத் தருகிறான். 

பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கையால்  சே கைது செய்யப்பட்டான். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் அக்டோபர் 9, 1967 இல் கொல்லப்பட்டான் அந்த புரட்சிகாரன். காலில் குண்டடி பட்டிருந்தத நிலையில், தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்ற மாவீரன் அவன்.

இன்று சே குவேராவின் பிறந்த தினம். வாழ்நாள் முழுவதும் ஆஸ்த்துமா நோயுடன் போரடிக்கொண்டே உலகை மாற்ற கனவு கண்ட அந்த மருத்துவனின் நினவுகளை நெஞ்சில் சுமப்போம். அவனது சாகசங்கள் மட்டுமல்ல அல்ல எம்மை ஈர்த்தது, அவனது தத்துவமும் ஆகும். அவனை முழு அர்த்தத்தில் நேசிக்க அவனது ததுவத்தை கற்க வேண்டும்.

உலகம் முழுவதும் சோசலிசம் என்பது அவனது கனவாய் இருந்தது. நாமும் அந்த கனவை அடைகாத்து அதற்காக போராட சேவின் நினைவுகளில் உத்வேகம் கொள்வோம். 

சோசலிசமே எதிர்காலம்! எதிர்காலம் நமதே!

அவனது வாழ்வின் துளிகள்..

1928 ஜூன் 14 - பிறப்பு

1947 - மருத்துவப்படிப்பை மேற்கொள்ளுதல்

1950 - சிறு மோட்டர் பொருத்திய சைக்கிள் 3000 மைல் தூரம் அர்ஜென்டீனா முழுவதும் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பிக்கிறார்

1952 - தனது நண்பன் அல்பெர்த்தோ கிரனடாவுடன் பெரு, கொலம்பியா, வெனிசூலா, ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்லுகிறார். பெருவில் தொழுநோயாளர் குடியிருப்பில் பணிபுரிதல்

1953 ஜூன் 12 - மருத்துவராக பட்டம் பெறுதல்.

ஜூலை 6 - லத்தீன் அமெரிக்கா பயணத்தை மேற்கொள்ளுதல்

1955 ஜூலை - ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தல். கொரில்லா போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.

ஆகஸ்ட் 18 - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹில்டா காடியாவை மணந்துகொள்கிறார்.
1956 பெப்ரவரி 15 - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.

ஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.
1958 ஜூலை - புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.

டிசம்பர் 28 - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.

1959
ஜனவரி 1 - சாண்டா கிளாரா சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.

ஜனவரி 2 - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.

ஜனவரி 3 - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்

ஜனவரி 8 - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.

மே 17 - உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.

ஜூன் 2 - சேவும் அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

ஜூன் 12 - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பா, ஆபிரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்கிறார்.

அக்டோபர் 7 - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.
நவம்பர் 26 - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

1960 
அக்டோபர் - சோவியத் கூட்டமைப்பு, கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவேகியா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இரண்டுமாத சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுதல்

நவம்பர் 24 - சே - அலெய்டாவின் முதற்குழந்தை அலேய்தித்தா பிறக்கிறாள்.

1961 
ஜனவரி 3 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.

பெப்ரவரி 23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.

ஆகஸ்ட் 8 - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.

1962
மே 20 - சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்

ஆகஸ்ட் 27 - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்

1963
ஜூன் 14 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் சிலியா பிறக்கிறாள்.

ஜூலை 3 - பிரான்சிடமிருந்து அப்போதுதான் சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்.

1964
பெப்ரவரி 24 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.

மார்ச் 14 - சே கியூபா திரும்புகிறார்.

அக்டோபர் 31 - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார்.

டிசம்பர் - காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.

1966
நவம்பர் - சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.

1967
மார்ச் 23 - முதல் கொரில்லா தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.

ஏப்ரல் 16 - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 4 - ஒரு துரோகி பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.

செப்டெம்பர் 26 - கொரில்லா வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.

அக்டோபர் 8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.

அக்டோபர் 9 - சே கொலைசெய்யப்படுகிறார்

1968
ஜூலை 1 - ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னுரையுடன் சேவின் பொலிவிய நாட்குறிப்பு கியூபாவில் வெளியிடப்படுகிறது.

1995 - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.

1997
ஜூன் 28 - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.

ஜூலை 14 - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.

அக்டோபர் 13 - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.

அக்டோபர் 14 - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark