மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

பெங்களூருவிலும், அகமதாபாத்திலும் வெடித்த குண்டுகள் இந்த தேசத்தை அதிர வைத்துள்ளது. வெடித்து சிதறிய உடல்களும், அதிர்ச்சியில் மரணமடைந்தவர்களும், காயம்பட்டு மருத்துவமனையில் இருந்தவர்களும், என்ன நடக்கிறது என்று ஊகிக்க முடியாமல் பிரம்மை பிடித்து நின்ற குழந்தைகளையும் தொலைக்காட்சியில் பார்த்தபோது கண்ணீர் துளிர்த்தது.
குண்டுகளை எந்த அமைப்பு வைத்தாலும் அந்த அமைப்பினரை தண்டிப்பது, அவர்களின் ஆணிவேரை கண்டுபிடித்து வேரடி மண்ணோடு பிடிங்கி எறிவது அவசர அவசியம். மத்திய, மாநில அரசுகள் உண்மையை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுக்க வேண்டும். வெடிகுண்டை யார் பயன்படுத்தினாலும் அது கண்டிக்கத்தக்கது. அவர்கள் நமது பொது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்து மதவெறி அமைப்பா அல்லது இஸ்லாமிய மதவெறி அமைப்பா என்பதெல்லாம் கேள்வி அல்ல.... ஆனால் முற்றிலும் இதைத் தடுக்க என்ன வழி என்பதுதான் தற்போது உள்ள பிரச்சனை.


நேரு, சொன்னது போல், “பெரும்பான்மை வகுப்பு வாதம் சிறுபான்மை வகுப்பு வாதத்தை வளர்க்கும்” என்று சொன்னதை மனதில் நிறுத்த வேண்டிய நேரம் இது. ஏனெனில் பாபர் மசூதி இடிப்பும், அதை தொடர்ந்து நடந்த கலவரங்களையும், குஜராத்தில் நடந்த இன அழிப்பு பிரச்சனையும் நமது தேசத்தில் சிறுபான்மை இளைஞர்களை தீவிரவாத பாதையை நோக்கி தள்ளியதை யாரும் மறுக்க முடியாது. நமது நாட்டில் உள்ள தீவிரவாதிகளுக்கு வெளிநாட்டில் உள்ள சீர்குலைவு சக்திகளும், உள்நாட்டில் உள்ள சமூக விரோத சக்திகளும் உதவி செய்வதும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு செயலாக மாறி உள்ளது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து அரசியல் மாற்றம் நடந்துள்ள இந்தச் சூழலில் நடந்த வெடிகுண்டு நிகழ்வுகள் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.
அதே போல் நமது நாட்டின் உளவு அமைப்புகளின் தோல்வி மிகப்பெரிய அதிர்ச்சிக்குரிய ஒன்று. தீவிரவாதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று மார்தட்டும் மத்திய, மாநில அரசுகள் இப்படி கோட்டை விடுவது மக்கள் மனதில் அவநம்பிக்கையை விதைக்கும். மத்தியில் தொடர்ந்து ஆட்சிக்கு வரும் ஆளும் வர்க்கங்கள் பெரும்பான்மை வகுப்புவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பது சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை விதைக்கிறது.


இதன் விளைவு பாதுகாப்பு உணர்வுடன் ஒன்று கூடும் சிறுபான்மை மக்கள் மத்தியில் தீவிரவாத இயக்கங்கள் விதைக்கும் நச்சு கருத்து இளைஞர்களை கவ்விப்பிடித்து சிறுபான்மை மதவெறிக்கு தூபம் இடுகிறது. எனவே, இந்த தேசத்தில் உண்மையில் மதச்சார்பின்மை என்ற சொல்லுக்கு அர்த்தம் கிடைக்கும்போதுதான் தீர்வு கிடைக்கும். அதற்கு அடிப்படை நமது ஆட்சியாளர்களின் கொள்கை மாறுவதுதான்.


சச்சார்குழு பரிந்துரைகள் சொல்லியது போல சிறுபான்மை சமூக மக்களுக்கு கல்வி, வேலை, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை முன்னேற்றுவது அவர்கள் மத்தியில் ஊடுருவும் தீவிரவாதத்தை தனிமைப்படுத்தும் அந்த தனிமைப்படுத்துதல் பெரும்பான்மை தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும்.

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark