Pages

வெள்ளி, 25 அக்டோபர், 2024

ஏகாதிபத்தியங்களின் வேட்டை காடாக ஒரு நாடு

மக்கள் சீன புரட்சி அறிமுகம்  - 4

1841 ஜனவரி 7 முதல் அபினி யுத்தத்தில் ஒரு காட்சி
 
  

       வெ.சாமிநாத சர்மா தனது சீன வரலாறு நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். “சீனா என்பது அந்நியர்கள் அழைக்கின்ற பெயர். சீனர்கள் தங்கள் நாட்டை இந்தப் பெயரிட்டு அழைப்பதில்லை; சுங்-ஹுவா அல்லது சுங்-குவோ என்று தற்பெருமையோடு அழைக்கிறார்கள். பெரும்பாலும் இரண்டு பெயர்களையும் சேர்த்தே, அதாவது சுங் ஹுவாமின் - குவோ என்று அழைக்கிறார்கள். சுங் என்றால் மத்தியிலுள்ள, ஹுவா என்றால் புஷ்பம் அல்லது புகழ் நிறைந்த வாழ்வையுடைய, குவோ என்றால் நாடு. பூமியின் மத்தியிலுள்ள புஷ்பம் போன்ற அல்லது புகழ் நிறைந்த நாடு என்று பொருள். அதாவது, இயற்கையோடு உறவு கொண்ட  நல்வாழ்வு நடத்துவதற்கேற்ற இடம் என்று சொல்லலாம். தங்கள் தாய்நாட்டைப் பற்றி எந்த மனிதனுக்கும் பெருமை இருப்பது இயல்புதான்.

இப்பொழுது சீனாவின் வடமேற்கிலுள்ள கான்ஸு, ஷென்ஸி” என்ற இரண்டு மாகாணங்களும் சேர்ந்த ஒரு  பிரதேசத்தை ஒரு காலத்தில் செள என்ற ஒரு வமிசத்தினர் ஆண்டு வந்தனர் . இந்தப் பிரதேசத்திற்கு அப்பொழுது சின் என்று பெயர், மேற்படி. வமிசத்தினர், தங்கள் புயவலியால், சுற்றுப்புறமுள்ள பிரதேசங்களைத் தங்கள் சுவாதீனப்படுத்திக்கொண்டனர். அனைத்தையும் சேர்த்து சின்  என்ற பெயரால் அழைத்தனர். நாளாவட்டத்தில் இந்தப் பெயரானது மருவி சீனாவென்று  அந்நியர்களால் அழைக்கப்பட்டது.  வெகு காலமாக இந்தச் சீனா என்ற பெயரே நிலவி வருகிறது. நமது ராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்களிலும், சங்க நூல்களிலும் சீனம் என்றும் சீனர் என்றும் வழங்கப்படுகின்றன.”

சீன விடுதலையின் போது அதன் எல்லைகளாகக் கிழக்கே பசிபிக் மகா சமுத்திரமும் கொரியாவும், தெற்கே தென் சீனக்கடலும் தாய்லாந்தும் பர்மாவும் , மேற்கே திபேத்தும் நேபாளமும் பூட்டானும் இந்தியாவும் ஆப்கனிஸ்தானமும், வடக்கே ரூஷ்யாவும் மங்கோலியாவும். முறையே அமைந்திருந்தன.

ஆனால் இப்போது 14 நாடுகள் சீனாவில் எல்லையை பகிந்துகொள்கின்றன. கிழக்கில் வட கொரியாவும் வடக்கில் மங்கோலியாவும் உள்ளன. வடகிழக்கில் ரஷ்யா, வட மேற்கில் கஜகிஸ்தான்ம் கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. மேற்கிலும் தென் மேற்கிலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளும் தெற்கில் மியான்மர், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளும் உள்ளன.

 

மூன்று வகையான சிறப்பு மண்டலங்கள்: 

இருபதாவது நூற்றாண்டின் முற்பகுதி வரையில் சினாவில், சிறப்பு மண்டலங்கள் என்ற பெயரால் மூன்று வகையான மண்டலங்கள் இருந்தன. இது குறித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானது. அப்போதுதான் சீன குடியரசு மற்றும் சீன மக்கள் குடியரசு ஆகியவைகளின் மாற்றங்களை புரிந்துகொள்ள முடியும். 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை ஒன்றுபட்ட  வல்லரசு நாடுகள்கள்,  சீனாவை எப்படியெல்லாம் சூரையாடின, எப்படியெல்லாம்  சீர்குலைத்தன,  தங்கள் ஆதிக்கத்தை எப்படி செலுத்தின என்பதை பார்க்க வேண்டும். 1.சர்வதேச துறைமுகப் பட்டினங்கள்  (international trade ports), 2.அந்நியர்கள் சலுகை பெற்று வாழ்ந்த பிரதேசங்கள்  (Foreign Concessions), 3.குத்தகைக்கு விடப் பெற்ற பிரதேசங்கள் (Leased Territories) என்ற பெயர்களால்  சீன மண் சூரையாடப்பட்டது. சீனாவின் நிலப்பரப்பு இப்படி துண்டாடப்பட காரணம் இருக்கிறது.

அது ஒரு நாள் நிகழ்வல்ல. பல போர்கள் சீனாவிலிருந்த மன்னர்கள் ஆட்சி காலனித்துவ சலுகைகளை உருவாக்க வழிவகுத்தன. உதாரணமாக, முதல் அபினி போர் (1839-1842), இரண்டாம் அபினி போர் (1856-1860), சீன-பிரெஞ்சுப் போர் (1884-1885), முதல் சீன-ஜப்பானியப் போர் (1894-1895), மற்றும் மஞ்சூரியா மீதான ரஷ்ய படையெடுப்பு (1900) ஆகியவை இதில் அடங்கும். இந்த போர்கள் எல்லாம் பல வகைகளில் எண்ணற்ற ஒப்பந்தங்களில் கையொப்பம் இட சீன ஆட்சியாளர்களை  நிர்பந்தம் செய்தன. அதில் இரண்டு யுத்தங்கள்  முக்கியமானதாகும்

அபினிப் போர் :

முதல் அபினி யுத்தத்திற்கு காரணமான கான்டன் துறைமுகம்

 
 

சீனாவில் போதைக்கு உள்ளானோரின் இறப்பால் ஏற்பட்ட மனித இழப்பின் அளவு எல்லையை மீறியபோது சட்டத்திற்குப் புறம்பான அபினி வியாபாரத்தை ஒடுக்க சீன அரசு முயன்றது. பிரிட்டிஷ் வணிகர்களே சீனாவில் அபினி விநியோகத்தின் முதன்மை ஆதாரமாக இருந்தனர். முதலாம் அபினிப் போரின் (1842) இறுதியில் கையெழுத்திடப்பட்ட நான்கிங் உடன்படிக்கை பிரிட்டனுக்கு சீனாவின் கதவுகளைத் திறந்துவிட்டது. சீனா ஹாங்காங்கை விட்டுக் கொடுத்ததோடு இழப்பீடாக ஒரு தொகையையும் வழங்கியது.

 முதல் போர் சீன அதிகாரிகள் கான்டன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரிட்டனின்ரின் பதிவுசெய்யப்பட்ட ஆரோ (Arrow) என்ற கப்பல் ஒன்றின் மாலுமிகளை கள்ள கடத்தல் குற்றத்திற்காக கைது செய்தமைக்காகவே மூண்டது. கப்பல் சீனர்களுக்கு சொந்தமானது என்பதோடு அதில் இருந்த மாலுமிகளும் சீனர்களே. ஆனால் ஹாங்காங் அரசுகொடுத்த அனுமதியின் பெயரில் பிரிட்டிஷ் கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. அனுமதி அளிக்கப்பட்டிருந்த காலவரம்பும் முடிவடைந்திருந்தது. ஆனபோதிலும் ஏதாவது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி போர் நெருக்கடி கொடுத்தால் அதன் வாயிலாக அதிக சலுகைகள் பெற்றுவிடலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிரிட்டன் இந்நிகழ்வின் எதிரொலியாக தனது போர்கப்பல் ஒன்றை அனுப்பியது.  

போர் மூண்ட காலகட்டத்தில் தனது நாட்டின் சமய போதகர் ஒருவர் சீனாவில் கொல்லப்பட்டதாக (பிப்ரவரி 1856) காரணம்காட்டிய பிரான்சும் பிரிட்டனோடு இணைந்து தாக்குதல் தொடுத்தது. இம்முறை பிரிட்டன் - பிரெஞ்சு வீரர்களை  உள்ளடக்கிய படை பீகிங்கின் கோடைக்கால அரண்மனையை அழித்தது. இறுதியாக 1860இல், சீனா பிரிட்டனின் உயர்வான படைபலத்திற்கு கட்டுப்பட்டு பெய்ஜிங் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. அது சீனாவின் துறைமுகங்கள் வியாபாரத்திற்கு திறக்கப்படவும், யாங்ட்சே வரை வெளிநாட்டுக் கப்பல்கள் செல்லவும், சமய போதகர்கள் தடையின்றி தங்களுடைய பணியை மேற்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. மிக முக்கியமாக அது சீனாவில் பிரிட்டனின்  சட்டத்திற்கு உட்பட்டு அபினி வியாபாரம் மேற்கொள்ள வசதி செய்தது.

 பாக்ஸர் யுத்தம்: 

பாக்ஸர் போராளிகள் வீதிகளில் 1901 


 
ஒழுங்கமைக்கப்பட்ட படையாக மாறுகின்றனர்






வீதிகளில் தூக்கிலிடப்படும் போராளிகள்

முதல் சீன - ஜப்பானியப் போரைத் தொடர்ந்து, வட சீனாவில் உள்ள கிராமவாசிகளவெளிநாட்டு செல்வாக்கு மண்டலங்களின் விரிவாக்கத்திற்கு அஞ்சினர் மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு சலுகைகள் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்தனர். 1898 ஆம் ஆண்டில், வட சீனா பல இயற்கை பேரழிவுகளை சந்தித்தது, மஞ்சள் நதி வெள்ளம் மற்றும் வறட்சி, இதனால் மக்கள் வாழ் நிலை மோசமடைந்தது. ஆனால் சீனாவில் உள்ள சிறப்பு மண்டலங்களில் இருந்த அன்னிய நாட்டினர் சுகபோகங்களில் திகழ்ந்தனர். கொண்டாட்டங்களில் திளைத்தனர். இது உட்பட பல காரணங்களால் அன்னிய சக்திகளுக்கு எதிராக சீன மக்கள் கிளர்ந்தெழுந்த சிறந்த எழுட்சியாக பாக்ஸர் யுத்தம் (1899–1901) திகழ்ந்தது. 

1899 ஆம் ஆண்டு தொடங்கி, இந்த இயக்கம் ஷான்டாங் மற்றும் வட சீன சமவெளி முழுவதும் பரவியது, இரயில் பாதைகள் போன்ற வெளிநாட்டு சொத்துக்களை அழித்தது மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் சீன கிறிஸ்தவர்களைத் தாக்கியதும் தொடர்ந்தது, எட்டு நாடுகள் உள்ளடங்கிய கூட்டணி படை இந்த யுத்தத்தை கொடூரமாக அடக்கியது. குத்துச்சண்டை கிளர்ச்சி எனும் பாக்ஸர் யுத்தம் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாகும். இது சீனாவிலிருந்த வெளிநாட்டினரை வெளியேற்றவும், வெளிநாட்டார்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் ஒப்பந்த துறைமுகங்களில்  அமைப்பை முடிவுக்கு கொண்டுவரவும் முயன்றது.

 சீன தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்ற ஆனால் கையில் வெறும் வாள்களையும், ஈட்டிகளையும் மட்டுமே வைத்துக்கொடிருந்த விவசாயிகளால் பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, இத்தாலி, பிரான்ஸ், ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய எட்டு நாடுகளின் கூட்டு பாடையின் நவீன துப்பாக்கி, பீரங்கி போன்ற நவீன ஆயுதங்களுக்கும் முன்னால்  தாக்குபிடிக்க முடியவில்லை. தேசத்திற்காக போராடிய சீன போராளிகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். தெருக்களில் நிற்க வைத்து தூக்கிலிடப்பட்டனர், இவர்களுக்கு ஆதரவாக இருந்த அரசு அதிகாரிகள் தூக்கிலிடப்படனர். இந்த மோதலுக்குப் பின் வந்த ஆண்டுகளில், கிங் வம்ச ஆட்சியாளர்கள் இதில் ஈடுபட்ட நாடுகளுக்கு வேறு வழியின்றி பல சலுகைகள் வழங்கினர். 

இத்தகைய பேரழிவு போர் நடக்க காரணமாக இருந்த சிறப்பு மண்டலங்கள் எத்தகைய தன்மை கொண்டது. பார்க்கலாம்,

புகைப்படங்கள் உதவி : விக்கிபீடியா 

(தொடர்ந்து பயணிக்கலாம்)

 மக்கள் சீன புரட்சி ஒரு அறிமுகம் - 1
மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 2 
மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 3 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக