மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

இந்தியாவில் நடந்துமுடிந்த தேர்தலுக்கு பின்பு இடதுசாரிகள் ஆளும் வர்க்கத்தாலும், முதலாளித்துவ ஊடகங்களாலும் கருத்து ரீதியாக மிகக் கடுமையாகக் தாக்கப்படுகின்றனர். காரணம் தொடர்ச்சியாக மக்கள் நலன் சார்ந்து நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராடி வருவதுதான். உலகமயத்தை எதிர்த்தும், இந்திய நாட்டின் நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சக்திகளை எதிர்த்தும் சமரசமற்றப் போராட்டத்தை நடத்தி வருவதால், இவர்களின் முக்கிய எதிரியாக இடதுசாரிகள் பார்க்கப்படுவது தவிர்க்க முடியாததாக மாறுகிறது.
மற்றொரு பக்கம் இந்தியாவில் உள்ள இடது அதிதீவிரவாதிகள் மற்றும் மத, இன அடிப்படைவாதிகளால் தொடர்ந்து தாக்கப்படும் சக்தியாகவும் இடதுசாரிகளே இருக்கின்றனர். ஒரு முற்போக்கான சமூக மாற்றத்திற்காகப் போராடும் இடதுசாரிகளுக்கு ஆதரவாய் நிற்பதும், தேசத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதும் தொடர்புள்ள சம்பவங்கள் என்பதால், இடதுசாரிகளின் எதிர் சக்திகள் எவையென அடையாளம் கண்டு அந்த சக்திகளை எதிர்த்த கருத்துப் பிரச்சாரத்தையும், களப்போராட்டத்தையும் நடத்த வேண்டியது இடதுசாரி இளைஞர் அமைப்புகளின் கடமையாகும். எதிர் சக்திகள் எவையெவை என பார்ப்போம்.
இடது அதிதீவிர வாதிகள்:
“வர்க்க எதிரியை கொலை செய்வது வர்க்கப் போராட்டத்தின் உயர்ந்த வடிவமாகும். அதே நேரத்தில் கொரில்லா போராட்டத்தின் மூலம் வர்க்க எதிரியை கொல்லுவது கொரில்லா போராட்டத்தின் ஆரம்ப கட்டமாகும். முதல்கட்ட நடவடிக்கையுடன் நெருங்கியத் தொடர்புடையது இரண்டாவதுகட்டம், நிலப்பிரபுத்துவ சக்திகளின் வெள்ளை பயங்கரத்திற்கு எதிராக சிவப்பு பயங்கரத்தை உருவாக்க வேண்டும். நமது அரசியலின் அடிப்படை, வர்க்க விரோதிகளை அழித்தொழிப்பதுதான். அவர்களை துன்புறுத்துவதோ, பகைத்து கிராமத்தைவிட்டு விரட்டுவதோ அல்ல. ஏனெனில் கொலை செய்வதன் மூலமாகவே எதிரியின் மனஉறுதியை குலைக்க முடியும்” - சாரு மஜும்தார் என்ற நக்சல் தலைவரின் சித்தாந்தம்தான் இது. (கம்யூனிஸ்ட் கட்சியும் தனிநபர் பயங்கரவாதமும் நூலிலிருந்து) இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் இயங்கியவர்களை மக்கள் ஒதுக்கித் தள்ளியதன் விளைவு இன்று பல நக்சல் இயக்கங்கள் மறைந்து விட்டன, சில இன்னும் இந்தப் பாதையிலேயே பயணிக்கின்றன.
நல்சல்பாரி என்ற இடத்தில் துவக்கப்பட்ட இடது அதிதீவிரவாத இயக்கம், தங்களுக்குள் ஏற்பட்ட பல கருத்து வேறுபாட்டால் பல நூறு குழுக்களாக பிளவுபட்டு பல பெயர்களில் செயல்பட்டு வருகின்றனர். மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள், மற்றும் புரட்சிகர பெயரை வைத்துள்ள பல அமைப்புகள் இந்த பிரிவை சார்ந்தவைதான். காரல்மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போன்ற புரட்சியாளர்களின் தத்துவங்களை இந்திய சூழலுக்கு பொருத்திப்பார்க்காமல் பயன்படுத்துபவர்கள். இவர்கள் புற சூழலை கணக்கில் எடுக்காமல் உடனடியாக புரட்சியை நடத்த வேண்டும் என பேசி வருபவர்கள். தீவிரவாத எண்ணத்தால் உந்தப்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள்.
தன்னுடைய எதிரி நிலப்பிரபுக்களும், பெரும் வட்டிகாரர்களும் என்பதை தத்துவரீதியாக சுட்டும் இவர்கள் நடைமுறையில் அவர்களிடம் சமரசம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு சிறந்த உதாரணம் மேற்குவங்கம். அங்கு பெரும் நிலப்பிரபுக்களும், முதலாளிகளும் அதிகமாக தஞ்சம் புகுந்துள்ள அரசியல் இயக்கங்கள் மம்தாவின் திரினாமுல் காங்கிரஸ் கட்சியும், இந்திய தேசிய காங்கிரஸசும்தான், ஆனால் இப்படிப்பட்ட உழைப்பாளி வர்க்கத்திற்கு எதிரான கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு இடதுசாரிகளையும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் சாதாரண மக்களையும் படுகொலை செய்து வருகின்றனர். அதைவிட கேவலம் அத்வானி போன்ற மத அடிப்படைவாதியை ‘மாவோயிஸ்டுகள்’ என்று தம்மை அழைத்துக் கொள்பவர்கள் மாலை அணிவித்து வரவேற்றதுதான். இவர்கள் படுகொலை செய்த ஆயிரக்கணக்கான மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களும், பொதுமக்களும் இவர்களின் வறட்சித்தத்துவம் குறிப்பிடும் நிலப்பிரபுக்களோ, பெருவட்டிக்காரர்களோ அல்ல. அப்பாவிகளாய் அன்றாடம் வயிற்றுப் பாட்டுக்கு உழைக்கும் மக்கள்தான்.
1967களிலுருந்து இதை செய்பவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களோடு இணைந்து நிற்கும் மார்க்சிஸ்டுகளை அரசியல் ரீதியாக வெல்ல முடியாத விரக்தியில் படுகொலை பாதையில் பயணம் செய்கின்றனர். நந்திகிராமும், லால்கரும் இவர்களின் தற்போதைய இலக்கு. பொய் பிரச்சாரங்களை அப்பாவி மக்களிடம் சொல்லி அவர்களின் பின்னால் நின்று ஆயுதம் தூக்கித் திரிகின்றனர். இந்தியாவில் உள்ள உழைப்பாளி மக்களின் குரலை அரசியல் அரங்கில் ஒலிக்கச்செய்யும் இடதுசாரி சக்தியை அழித்திட ஏகாதிபத்திய சக்திகளுக்கு அப்பட்டமாய் இவர்கள் துணைப்போகின்றனர்.
அடிப்படைவாதிகள்
சாதி, மத, இன, மொழி, வட்டாரம் என்ற அடையாள அரசியலை நடத்திவரும் பல அடிப்படைவாத அமைப்புகளும் இன்று இந்தியாவில் இடதுசாரிகளையே குறிவைத்து தாக்குதல் தொடுக்கின்றனர். ஏதோ ஒரு அடையாளத்தை முன்வைத்து அந்த அடையாளம் சார்ந்த மக்களை திரட்டும் இத்தகைய சக்திகள், தங்களது நோக்கம் என்று ஒன்ரை அறிவித்தாலும் அவர்களுக்கு உள்ளுக்குள் ஒரு நோக்கம் இருக்கும். உதாரணத்திற்கு ஆர்.எஸ்.எஸ் என்ற மத அடிப்படைவாத அமைப்பு தன்னை ஒரு கலாச்சார அமைப்பு என்று அறிவித்துக்கொண்டாலும் அவர்களது நோக்கம் அகண்ட பாரதம் என்கிற இந்துமத அடிப்படைவாத தேசத்தை உருவாக்குவதுதான்.
அதேபோல அல்-உமா என்கிற இஸ்லாமிய மத அடிப்படை வாதத்தை போதிக்கின்ற அமைப்பும் மற்றும் இன, மொழி, சாதி அடையாளங்களை வைத்து செயல்படும் அமைப்புகளும் தங்கள் உள்ளார்ந்த நோக்கங்களை வெளிப்படையாக அறிவிப்பதில்லை. ஆனால் இவர்கள் இந்திய நாட்டின் ஆளும் வர்க்க நலனை பாதுகாப்பதிலும், அமெரிக்க ஏகாதிபத்திய நலனை பாதுகாப்பதிலும் சொல்லிவைத்தார் போல ஒரே நிலைப்பாட்டை எடுப்பார்கள்.
வாழ்க்கை மிகக்கொடுமையான சூழலுக்குத் தள்ளப்பட்ட, இந்திய நாட்டில், மக்கள் தொகையில் 80 சதமான உழப்பாளி மக்கள் தங்கள் வாழ்க்கை நெருக்கடிகளை உடைத்தெரிந்திட ஒன்றுபட்ட தொழிலாளி வர்க்கமாய் அணிதிரள்வது அவசியம். ஆனால் இந்த நாட்டின் ஆளும் வர்க்கத்திற்கும், உலக பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்ளூர் முதல் தேசத்தின் பல பகுதிகள் வரை நிலங்களை குவித்து வைத்திருக்கும் நில உடைமையாளர்-களுக்கும், இந்தியநாடு சுதந்திரம் பெற்றதும் “வந்தே மாதரம்.......” விளம்பரம் செய்து தேசத்தை சுரண்டிக்கொண்டிருக்கும் ‘’பில்லியன் டாலர்’’ தேசிய முதலாளிகளுக்கும் தொழிலாளி வர்க்கம் ஒன்று திரள்வது ஆபத்தானது. எனவே இந்த உழைக்கும் வர்க்கம் ஒன்றாய் இணைந்திடாமல் தடுத்திட காலகாலமாய் கலாச்சாரம் என்ற பெயரில் மக்களுக்கு எதிரான கருத்துக்கள் மக்களது மனங்களில் விதைக்கப்பட்டுள்ளது. அதுவே பல பெயர்களில் மக்களை பிளவுபடுத்தி சிதறிட வைக்கிறது.
இந்த கலாச்சாரம் என்ற கருவியை மேற்கண்ட சக்திகள் தங்களுடைய திரட்சிக்கு பயன்படுத்துகின்றனர். உழைக்கும் மக்கள் ஒற்றுமை சீர்குலைவதால் ஆளும் வர்க்கமும் இதை வளர்ப்பதில் அக்கரை கொள்கினறன.ஆக இந்த அடையாள அரசியலை யார் எதிர்த்தாலும் அவர்களுக்கு எதிராக இத்தனை சக்திகளும் ஒன்று திரண்டு தாக்குதல் தொடுப்பது எந்த வர்க்க நலனின் அடிப்படையில் என்பது சொல்லாமலே புரியும்.. ஆனால் இந்த சக்திகளை சமரசமற்ற முறையில் எதிர்ப்பது யார் என்ற கேள்வி முக்கியமானது. ஏனெனில் நமது நாட்டில் இன்றும் பல அரசியல் இயக்கங்கள் புதிது புதிதாக துவக்கப்படுகின்றது. துவங்கும் போது அவர்கள் அறிவிப்பவை எல்லாம் மிகவும் புரட்சிகரமாக இருக்கிறது. சில மாதங்களில் அவர்கள் சாயம் மெல்ல, மெல்ல வெளுத்து அவர்களது வர்க்கச் சார்பு வெளிப்படுகிறது. ஆனால் இடதுசாரிகள் இவர்களை எதிர்த்தும், உழைப்பாளி மக்களை அணிதிரட்டி, தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால்தான் இவர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.
பிரஷர் குக்கர் அமைப்புகள் மற்றும் ஊடகங்களின் தாக்குதல்
தங்களை அதிநவீனர்களைப் போல காட்டிக்கொள்ளும் பல அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் பரபரப்பாக செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளும்.. உலகமய தாக்குதலால் நெருக்-கடிக்குள்ளான வாழ்வியல் பிரச்சனைகளுக்குள்ளான இம்மக்களை முற்போக்காக பேசி, பிரச்சனையின் உண்மையான பகுதியை காட்டாமல் மக்களுக்கு ‘’சேவை’’’ செய்யும் பல அமைப்புகள் மக்கள் வாழ்வியல் பிரச்சைனைகளுக்கு உதவி என்ற பெயரில் மக்கள் மனதை பாழ்படுத்துகின்றனர்.
இவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் கோடிக்கணக்கான ரூபாய் பணம் மிகவும் திட்டமிட்டு விளிம்புநிலை மக்கள் மீது திருப்பிவிடப்படுகிறது. வேலையில்லாமல் அலையும் பல இளைஞர்கள்: தங்களை அறியாமலே இவர்களின் முகவர்களாக மாறுகின்றனர்.
2004 ஆண்டு சுனாமி வந்தபோது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கடற்கரையோற கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது உழைப்பு சக்திகள் அனைத்தையும் பயன் படுத்தி தனது கடமையை செய்தது. சுனாமி பாதித்த ஒர் ஆண்டு இறுதியில் அந்த மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளின் கோரிக்கைக்காக வாலிபர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடந்த போது பலகிராம மக்கள் அந்த போராட்டங்களில் பங்கெடுத்தனர். ஆனால் அந்த கிராமப்புற உழைப்பாளி மக்களிடையே தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பணியாற்றத் துவங்கியதும், அம்மக்களின் மனநிலையில் நிறைய மாறுதல்கள் உருவாகத் துவங்கியது. சுனாமியால் பாதிக்கப்பட்டத் தங்களை பாதுகாப்பது அரசின் கடமை என்ற எண்ணம் மாற்றப்பட்டது. தங்களது அடிப்படை உரிமைகளை சலுகைகளாக பார்க்கத் துவங்கினர்.“புராஜெக்டுடன்” களமிறங்கிய பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வலை, வீடு, பணம், என வாரிவழங்கி போராட்ட குணத்தை மழுங்கடித்து, அம்மக்களை யார் கிராமத்திற்கு வந்தாலும் என்ன தருவார்கள் என்று எதிர்பார்க்க வைத்தனர். இத்தகைய அமைப்புகள் ‘கொதிக்கும் குக்கரினுள் உள்ள வெப்பம் வெடித்தெழாமல் இருக்க விசில் எப்படி உதவுகிறதோ’ அப்படி சமூகத்-தினுள் எழும் நெருக்கடி, இந்த ஆளும் வர்க்கத்துக்கு எதிராக எழாமல் இருக்க உதவுகின்றன.
இவர்கள் போராட்டப் பாதைக்கு மக்கள் திரும்பாமல் பாதுகாக்கின்ற வேலைகளை மட்டுமல்ல, எந்தப் பாதைக்கு எதிராகவும் மக்களை எளிதாக திசைதிருப்புகின்றனர். இவர்கள் இடதுசாரிகள் பக்கம் இந்திய நாட்டின் மக்கள் சென்றுவிடக்கூடாது என்பதில் மிக கவனமாய் இருக்கின்றனர். இடதுசாரிகளை எதிர்த்த பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
அதேபோல இந்திய நாட்டின் பெருமுதலாளிகளின் ஊடகங்களும், பன்னாட்டு நிறுவனங்களின் ஊடகங்களும் இடதுசாரிகளுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த காங்கிரஸ் ஆட்சியை வெளியிலிருந்து ஆதரித்த இடதுசாரிகள் அந்த ஆட்சியாளர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார்கள் என்ற பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்பட்டது.
நூறு நாள் வேலை உறுதிச் சட்டமும், வன பாதுகாப்பு சட்டமும், தகவல் பெறும் உரிமைச் சட்டமும், பொதுத்துறையை பாதுகாக்க வேண்டும் என்று சொன்னதும், உணவு பாதுகாப்புக்கு குரல் கொடுத்ததும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்படக்கூடாது என்று சொன்னதும் நெருக்கடி என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.இப்போது இடதுசாரிகளின் கடிவாளம் இல்லாததால் மக்களின் மீது தொடர்தாக்குதலை காங்கிரஸ் துவங்கி உள்ளது. ஆனால் இடதுசாரிகள் தோற்றதால் இந்தியா ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நடை போடப்போவதாக அறிவித்து மகிழ்ந்தனர். ஆனால் பட்டினி சாவுகளும், வேலையின்-மையும் முன்பைவிட அதிகரித்துள்ளது. ஆனாலும் இந்திய நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வோம் என்று பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாய் காங்கிரஸ் செயல்படுவதை எந்த பத்திரிகையும் சொல்வதில்லை அவர்கள் எதிர்பார்த்ததும் இதைத்தானே.ஆக இன்று இந்தியாவில் உழைப்பாளி மக்களின் உண்மையான குரலாய் ஒலிக்கும் இடதுசாரிகள், பில்லியன் டாலர் முதலாளித்து-வத்தை எதிர்த்து, நிலப்பிரபுத்துவ சக்திகளை எதிர்த்து, அடிப்படை வாதத்தை எதிர்த்து, முடைநாற்றம் அடிக்கும் சாதிய அடக்கு முறைக்கு எதிராக, புரட்சி என்று பம்மாத்து செய்து உண்மையான புரட்சிகர இயக்கங்களுக்கு இடையூறாக இருக்கும் சக்திகளை எதிர்த்து போராடுவதால்தான், இடது அதிதீவிரவாதிகள், அடையாள அரசியலை முன் நிறுத்தும் சக்திகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் என அனைத்தும் ஓரணியாய் அணிவகுத்து இடதுசாரிகளை பழிதீர்க்க நிற்கின்றனர். ஆனால் இந்தியாவில் உள்ள இடது-சாரிகள் மக்களிடம் உள்ள நம்பிக்கை காரணமாக தளராத உறுதியுடன் போராட்டப் பாதையில் முன்செல்கின்றனர். இந்த கூட்டை முறியடித்து முன்னேறுவர்.

2009 செப்டம்பர் "இளைஞர் முழக்கம்" ----------- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

6 comments

  1. Unknown Says:
  2. why fight maoist's against marxist?

     
  3. vimalavidya Says:
  4. NOW only 32 ML groups are in India and functioning including MAOISTS.VIMALAVIDYA

     
  5. Unknown Says:
  6. ML is critisized CPM But u not critisized there.U said difference between ML And CPM

     
  7. இப்பதிவின் மீதான எனது கருத்துக்களை வரிசையாகத் தொகுத்திருக்கிறேன். நேரமிருந்தால் தங்களது மறுப்பை அவசியம் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    1. இடதுசாரிகள் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது உமது கட்சியான ‘மார்க்சிஸ்ட்’கட்சியைத்தான் என்பது தெரியவருகிறது. மத்திய அரசில் அங்கம் வகித்தாலும், நாடாளுமன்றத்தில் மட்டும் அங்கம் வகித்தாலும், இந்த மக்கள் விரோத அரசுகள் மக்கள் மீது திணிக்கின்ற அனைத்து கொடூர அடக்குமுறையிலும் பங்கெடுப்பதாகத்தானே அர்த்தமாகிறது. இந்த அரசு என்பதும் அதன் அதிகாரங்களை பிரயோகிக்கின்ற நாடாளுமன்றம் என்பதும் மக்கள் மீதான அடக்குமுறைக் கருவிதான் என்பது கம்யூனிசத்தின் அடிப்படையான கூற்று.

    அரசு என்கிற அந்த அடக்குமுறைக்கருவி இராணுவம், போலீசு, நீதிமன்றம், சிறைச்சாலை என்கிற நான்கு அடக்குமுறை எந்திரங்களை வெளிப்படையாக வைத்துக்கொண்டு அடிப்படை வாழ்நிலைக்காகப் போராடுகின்ற மக்களை ஒடுக்கிவருகிறது. அப்படிப்பட்ட அரசமைப்பில் எதிர்கட்சியாக அங்கம் வகித்தலும் கூட இந்தப் போலிஜனநாயக கட்டமைப்பைச் சார்ந்து நிற்பதாகத்தான் இருக்குமேயொழிய, உண்மையான ஜனநாயகத்திற்காக போராடுவதாக அர்த்தமாகாது.

    எனவே, நாடாளுமன்றம் என்பதே ஒரு வலதுசாரி ஒடுக்குமுறை அமைப்பு. அதில் எந்தவிதமான ஆட்சேபனையுமின்றி பங்கெடுப்பதுடன், அந்த நாடாளுமன்றத்தின் மான்புகளைத் தாங்கள்தான் காப்பாற்றுவதாகவும் மார்தட்டுகின்றனர், உங்கள் கட்சியின் முன்னணித்தலைவர்கள். அத்தகைய மான்பைக் காக்கத்தவறியதற்காக சோம்நாத்தை விலக்கிவைப்பதாகவும் சொல்லிக்கொண்டனர். ஆக, நாடாளுமன்றம் என்கிற வலதுசாரி நிறுவனத்தில் பெருமிதத்துடன் பங்கேற்பதோடு, அதனை விமர்சிக்கின்ற புரட்சியாளர்களுக்கு துரோகிப்பட்டம் சுமத்திடத் துடிக்கின்ற உமது கட்சி, தன்னை ஒரு இடதுசாரிக் கட்சி என்று அழைத்துக்கொள்ளத் தகுதியற்றது. இது எனது மிகத்தாழ்மையான கருத்து.

    அரசு என்பது ஒரு ஒடுக்குமுறைக் கருவி என்கிற தோழர் லெனினின் கூற்றை நீங்கள் இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் மறுக்கிறீர்கள். முதலாளித்துவ (டுமா) நாடாளுமன்றத்தில் பங்கெடுக்கச் சொல்லி லெனின் வற்புறுத்துவதால்தான் தாங்கள் இந்த நாடாளுமன்ற செட்டப்புக்குள் பங்கெடுப்பதாகவேறு தத்துவார்த்த விளக்கம் கொடுக்கிறீர்கள். அதே தோழர் லெனின், நாடாளுமன்றத்தில் பங்கெடுப்பதன் மூலமாக அந்தக் கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக மக்கள் விரோதத் தன்மையோடு கட்டியமைக்கப்பட்டுள்ளதை அம்பலப்படுதிட வேண்டும் என்றும், அவ்வமைப்பைத் தகர்த்து உண்மையான ஜனநாயக அரசமைப்பைக் கட்டியமைக்கவேண்டும் என்றும் வற்புறுத்தினாரே அதனை நீங்கள் மறந்துவிட்டது எவ்வாறு? நாடாளுமன்றத்திற்கு ஏதோ மான்புகள் இருப்பதாகவும், இத்தகைய இழிந்த நாடாளுமன்றக் கட்டமைப்பைச் சிந்தாமல் சிதறாமல் கட்டிக்காப்பாற்றும் ஆகப்பெரும் பொறுப்பைச் சுமந்திருப்பதாகவும் கூறிக்கொள்ளும் நீங்களா நாடாளுமன்றக் கட்டமைப்பை அம்பலப்படுத்திவிடப்போகிறீர்கள்? ஆக ‘மார்க்சிஸ்ட்’ கட்சி நாடாளுமன்றத்தில் பங்கெடுத்திருப்பது மக்கள் ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து எழவில்லை. மாறாக, தனது கட்சி அணிகளின் பிழைப்புவாதத்தை ஊக்குவிப்பதிலிருந்து எழுகிறது.

    எனவே, உமது கட்சி தன்னை மார்க்சிஸ்ட் கட்சி என்றும் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் இடதுசாரிக் கட்சி என்றும் அழைத்துக்கொள்வது ஒரு ஏமாற்று நாடகம் என்பது தெளிவாகிறது. பாஜக இந்துமக்களை இரட்சிப்பதற்காக அவதாரம் எடுத்திருப்பதாகச் சொல்லிக்கொள்கிறது. பா.ஜ.க.வின் இக்கூற்று எந்த அளவிற்கு போலியானதோ அதைவிடப் போலியானது உமது மார்க்சிஸ்ட் கட்சி.

     
  8. நண்பர் ரமேஷ் பாபு மன்னிக்கவேண்டும். மேற்கண்ட எனது பின்னூட்டம் பதிப்பிக்கும் போது ஏற்பட்ட இண்டெர்நெட் கோளாறால் தவறுதலாக இரண்டுமுறை பதிப்பிக்கப்பட்டுவிட்டது.

     
  9. ////che Says:
    September 19, 2009 6:02 PM
    why fight maoist's against marxist/////

    நண்பர் சே அவர்களே,

    மாவோயிஸ்டுகளுக்கும் ‘மார்க்சிஸ்டு’களுக்கும் இடையிலான சண்டை என்பது வர்க்க மோதல்தான். “மாவோயிஸ்டுகளின் வர்க்க எதிரியா நாங்கள்? எங்களை ஏன் அவர்கள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்?” என்று கேட்கிறார்கள் மார்க்சிஸ்டு கட்சியின் தலைவர்கள். தீக்கதிர் உள்ளிட்ட அக்கட்சியின் ஏடுகள் அனைத்திலும் இத்தகைய கேள்விகளே எதிரொலிக்கின்றன. ஆனால், மேற்குவங்கத்தின் போர்க்களமாக மாறியுள்ள சிங்கூரிலும் நந்திகிராமத்திலும் லால்காரிலும் மக்களிடமிருந்து எதிரொலிக்கும் குரல்கள், மேற்கண்ட கேள்வியைக் கேட்ட மார்க்சிஸ்டு தலைமைக்கு உரிய பதில்களை வழங்கிவிடுகின்றன.

    மாவோயிஸ்டுகளுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கும் இடையே நடக்கின்ற மோதல் ஒருபுறமிருக்கட்டும். சிங்கூரில் மார்க்சிஸ்டு அரசுக்கும் அப்பாவி விவசாயிகளுக்கும் இடையே நடந்த மோதலாகட்டும், நந்திகிராம விவசாயிகளைத் துப்பாக்கிமுனையில் ஒடுக்கிய அந்த அரசின் நடவடிக்கையாகட்டும் அது எந்த வர்க்கத்தின் நலனுக்காக எந்த வர்க்கத்துக்கு எதிராக நடத்தப்பட்ட அரச பயங்கரவாத தாக்குதல் என்று பார்த்தால் உண்மை விளங்கும். மாவோயிச அரசியல் படி பார்த்தால் மார்க்சிஸ்டுகள் வர்க்க எதிரிகள்தான் என்பது தெளிவாக உணர்த்தப்படும் இடம்தான் இது.

    அரச பயங்ரவாத போலீசையும் கட்சியின் குண்டர்படையான ‘ஹிம்மத் வாஹினி’யையும், தங்கள் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த மக்கள் மீது ஏவியது மேற்குவங்கத்தின் மார்க்சிஸ்டு அரசு. அந்த அப்பாவி விவசாயிகள் மார்க்சிஸ்டுகளுக்கு வர்க்க விரோதிகளா? தங்கள் உடைமைகளைக் காப்பாற்றிக்கொள்ள முற்படும் மக்களை அக்கட்சி ஏன் துப்பாக்கி முனையில் போலீசைக்கொண்டு ஒடுக்குகிறது? என்கிற கேள்வியும் இயல்பாக எழுகிறது.

    மாவோயிஸ்டுகள் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய, உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். மாறாக அம்மாநிலத்தை கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சிசெய்துவரும் மார்க்சிஸ்டு அரசோ முதலாளிகளுக்கும் ஏகாதிபத்திய நிறுவணங்களுக்கும் ஆதரவாக களத்தில் நிற்கிறது. இவ்விரு தரப்பினரிடமும் ஆயுதம் இருக்கிறது. ஒன்று மக்களுக்கு ஆதரவாக அரச பயங்கரவாதத்தைக் குறிபார்த்து நிற்கிறது. மற்றொன்று அரச பயங்கரவாதத்தை நிலைநிறுத்தி முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவையாற்றும் பொருட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த எதிரெதிர் ஆயுதங்களுக்கு இடையே இருக்கும் பிரதான முரன்பாடு வர்க்க முரன்பாடுதான் என்பதில் ஐயமில்லை. எனவே, மாவோயிஸ்டுகளுக்கு மட்டுமல்ல மக்கள் தரப்பிலிருந்து பார்த்தாலும் மார்க்சிஸ்டு அரசின் முதலாளித்துவ-ஏகாதிபத்திய வர்க்க ஆதரவு நிலைப்பாட்டை எதிர்ப்பது தவிர்க்கவியலாததாக மாறிவிடுகிறது.

    மாவோயிஸ்டுகளுக்கும் மக்களுக்கும் இருக்கும் வர்க்கரீதியான பிணைப்பையும், மார்க்சிஸ்டுகளுக்கும் பன்னாட்டு பகாசூர முதலாளிகளுக்கும் இடையிலான வர்க்கரீதியான பிணைப்பையும் புரிந்து கொண்டால், இந்த மோதலின் பின்னணி எளிதில் புரியவரும். இதனை மறைக்க மார்க்சிஸ்டு தலைமை ‘தொழில்வளர்ச்சி’ என்கிற தேய்ந்து போன ரெக்கார்டைத் தவிர வேறெந்த உருப்படியான, நேர்மையான காரணத்தையும் மக்கள் முன் எடுத்துவைக்க முடியவில்லை. நன்றி!

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark