மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

தோட்டாக்களால் முடியாது..

Posted by நட்புடன் ரமேஷ் Tuesday, February 26, 2008



ஆந்திராவில் நிலம் கேட்டு போராடிய மக்கள் மீது காங்கிரஸ் அரசு நடத்திய துப்பாக்கிச்சூடு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. அங்கு மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் நிலம் கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சி கடந்த பல மாதங்களாக தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு, தெருத்தெருவாக மக்களை சந்தித்து, அவர்களுடன் களத்தில் நின்று போராடி வருகிறது. அறிக்கை விட்டு குளுகுளு அறையில் அமர்ந்துக் கொள்ளும் தலைவர்கள் அல்ல இடதுசாரி தலைவர்கள். மாநிலச் செயளாலர் முதல் கிளைச் செயளாலர் வரை தொடர் உண்ணாவிரதம், தர்ணா, ஆர்ப்பட்டம் என அனைத்து களங்களிலும் நிற்கின்றனர்.

இப்போராட்டங்களின் தொடர்ச்சியாக அம்மாநிலம் முழுவதும் நடந்தப் போராட்டத்தின் மீது காவல்துறையினர் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை தொடுத்தனர், கம்மம் மாவட்டத்தில் அத்துமீறி அவர்கள் நடத்திய தாக்குதல் துப்பாக்கிச்சூட்டில் முடிந்துள்ளது. எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர் இதில் ஒரு பள்ளி மாணவனும், பெண்னும் உள்ளனர்.

கோடி கோடியாய் கொள்ளையடிப்பவர்களுக்கு பாதுகாப்பாய் உள்ள அரசு சாமானிய மக்கள் போராடினால் துடைத்தெறியுமா?. துப்பாக்கித் தோட்டாக்களால் போராட்டத்தை நசுக்கிவிட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த தோட்டாக்கள் போராட்டத்தை நிறுத்தமுடியாது என அங்கு தொடரும் போராட்டம் நிரூபிக்கிறது.
நிலம் என்ற கோரிக்கை நிலமற்ற மக்களால் முழங்கப்படும் போது, ஆளும் வர்க்கங்கள் மக்களை அடக்க முற்ப்படுவது இந்திய வரலாற்றில் புதிதல்ல. உழுபடை நிலங்கள் உழுபவனுக்கே என பகதூர்ஷா தலைமையில் 1857ல் நடந்த சுதந்திரப்போரில் முதன் முதலாக எழுப்பப்பட்ட போது நிலமில்லா மக்கள் திரண்டனர்.

அதன் பின் நடந்த இந்திய சுதந்திரப் போரிலும் இந்த முழக்கம் மக்களை ஆர்த்தெழ வைத்தது. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றதும் மக்கள் ஆனந்த கூத்தாடினர்.ஏனெனில் சுதேசி அரசு மக்களை காக்கும் என கனவு கண்டனர். ஆனால் 60 ஆண்டு சுதந்திரம் நிலம் கேட்ட மக்களுக்கு துப்பாக்கி தோட்டாக்களை பரிசாக கொடுக்கிறது.

குடியிருக்க இடம் கேட்டதற்காக சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த அப்பாவி மக்கள் இந்த தேசத்தின் நிலமற்ற மக்களின் குறியீடு அல்லவா? மாறி மாறி ஆட்சியதிகாரத்தில் வருபவர்கள் இருக்கின்ற நிலங்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்க ஏன் மறுக்கின்றனர்?

இந்நாட்டின் நில பிரபுக்களின், பெரு முதலாளிகளின் கைக்கூலிகளால் இது முடியாது. ஆனால் இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது.

இதற்கு அடிப்படையில் அரசியல் உறுதி அவசியமாகிறது. இடதுசாரிகளின் அரசியல் உறுதியில் ஒரு துளிக்கூட இல்லாத வெத்து வேட்டுக்கள் இந்த பிரச்சினையை நந்தி கிராம் சம்பவத்துடன் இணைத்து அறிக்கை விடுகின்றனர்.இருக்கின்ற அனைத்து தரிசு நிலங்களையும் மக்களுக்கு நிலச்சீர்திருத்தம் மூலம் பிரித்துக் கொடுத்துள்ள மேற்கு வங்க அரசினை, தொழில் துறையில் பின்தங்கிய மாநிலம் என்று பழிகூறினர்.

நிலங்கள் கொடுத்த பிறகு தொழில் துறையில் கவனம் செலுத்தத் துவங்கிய அந்த அரசை பார்த்து மிரண்டு போனது எதிர் சக்திகள். காரணம் 30 ஆண்டுகளாக இடதுசாரிகளை அசைக்க முடியவில்லை. தொழில் துறையிலும் அந்த மாநிலம் முன்னேறினால் இனி தங்களுக்கு அங்கு எதிர்காலம் இல்லை என்பதை தெரிந்துக்கொண்ட சக்திகள் திட்டமிட்ட கலவரத்தை தூண்டின. ஆயுதங்களோடு பலகொடுமைகள் புரிந்தனர். ஆளும் கட்சி ஊழியர்கள் மீதும் அப்பாவி மக்கள் மீதும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். வேறு வழியின்றி அந்த அரசு மக்களை தாக்கிய ரௌடிகளுக்கு எதிராக நடத்திய தவிர்க்க முடியாத சம்பவம் அது.

ஆனால் ஆந்திர அரசு அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளது. இருக்க இடமில்லாமல் வஞ்சிக்கப்பட்ட மக்கள் மீது தோட்டாக்களை பாய்ச்சியுள்ளது. ஆனால் தோட்டாக்களால் அடக்கிவிட நினைத்த ஆந்திரத்தில் போராட்டம் முன்பைவிட வேகமாய் உத்வேகம் கொள்ளத் துவங்கியுள்ளது. அனைத்து எதிர் கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளனர்.

முன்பு மின்சார கட்டண உயர்வை எதிர்த்து நடந்தப் போராட்டத்தில் சந்திரபாபு நாயுடு அரசு நடத்திய துப்பாக்கிச் சூடு அந்த அரசை வீழ்த்தியதில் போய் முடிந்தது. இப்போது மீண்டும் அதே தவறை காங்கிரஸ் அரசு செய்துள்ளது. கோபம் கொண்ட மக்களை தோட்டாக்கள் எதுவும் செய்ய முடியாது. அம்மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும், ஆதரவு இயக்கம் நடத்துவதும் தமிழக இளைஞர்களின் கடமை.

--------------------------------------------------------------------------------ஆகஸ்ட் 2007

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark